சீரற்ற காலநிலை : விரைவில் புதிய தேசிய அடையாள அட்டை
சீரற்ற காலநிலை : இதுவரை 92 பேர் பலி
நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்
உணவு கிடைக்கின்ற போது சிலவற்றை வெளிப்படையாக கேட்க முடியாமல் உள்ளது: கண்ணீர் சிந்தும் பாதிக்கப்பட்ட மக்கள்
லலித் வீரதுங்க பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு
ரோஹிதவுக்கு பிணை.!
யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த துரிதகதியில் நடவடிக்கை
வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு தோல்வி : நாளை ஆர்ப்பாட்டம்
ஜப்பான் பறந்தார் ஜனாதிபதி.!
அரநாயக்க பகுதியில் : அமெரிக்க தூதுவர்.!
கிழக்கு மாகண முதலமைச்சருக்கு தடை.!
கடற்படை அதிகாரி சம்பவம் : மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கை
வடமாகாண சபை முன் சமூக சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு.!
நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு
ஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் இரு இலங்கையர் உட்பட நால்வர் இந்தியாவில் கைது
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வாளர்கள் அணியை வழிநடத்திய ஆதவன் மாஸ்டர் கைது
ஜீ - 7 மாநாட்டில் பல நாட்டு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி ( மேலதிக படங்கள் இணைப்பு )
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்
சீரற்ற காலநிலை : விரைவில் புதிய தேசிய அடையாள அட்டை
23/05/2016 நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டு தேசிய அடையாள அட்டைகளை பறிக்கொடுத்தவர்களின் தகவல்களை விரைவாக பெற்று தருமாறு, கிராம சேவகர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடம் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், காணாமல் போன தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்கவுள்ளதாகவும் அதற்கான வேலைத்திட்டங்களை இன்றே ஆரம்பிக்கவுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
சீரற்ற காலநிலை : இதுவரை 92 பேர் பலி
23/05/2016 நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய தினம் வரைக்கும் 92 பேர் உயிரிழந்துள்ளதுடன், 109க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
அத்துடன் 71 ஆயிரத்து 97 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 88 ஆயிரத்து 768 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 933 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் 506 வீடுகள் முழுமையாகவும் 3 ஆயிரத்து 995 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
நாமல் பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்
23/05/2016 முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமா மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கல்கிசை பகுதியில் வாங்கிய காணியொன்று தொடர்பில் வாக்கு மூலம் அளிக்கவே பாரிய நிதி மோசடி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
உணவு கிடைக்கின்ற போது சிலவற்றை வெளிப்படையாக கேட்க முடியாமல் உள்ளது: கண்ணீர் சிந்தும் பாதிக்கப்பட்ட மக்கள்
23/05/2016 வீடு, சொத்து, சுகம், பிறப்புச்சான்றிதழ் என அனைத்தையும் இழந்து நடு வீதியில் அகதிகளாக நிற்கிறோம். நாங்க கனவுல கூட நினைக்கல இப்படி ஒரு துயரத்தை அனுபவிப்போம் என்று. கடந்த ஆறு நாட்களாக ஒரே உடுப்போட இருக்கிறோம். சில பொருட்களை வெளிப்படையாக வாய் திறந்து கேட்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கூலித்தொழில் செய்து கஷ்டப்பட்டு குருவி போன்று கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த அனைத்தும் இன்று இல்லாமல் போய்விட்டது என வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீதிகளிலும் விகாரைகளிலும் முகாம்களிலும் தங்கியிருக்கும் மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்றகால நிலை காரணமாக இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக கொழும்பில் மாத்திரம் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 666 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் கொழும்பின் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் விகாரைகளிலும் பாடசாலைகளிலும் என 84 இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் நிலவி வந்த சீரற்ற காலநிலை கடந்த மூன்று நாட்களில் வழமைக்கு திரும்பியுள்ள போதும் மக்களின் வடுக்கள் இன்னமும் மாறவில்லை. வீடுகள் இன்னமும் 6 அடி நீர்மட்டத்துக்குள் மூழ்கியுள்ளன.
வீடு, சொத்து, சுகம் என அனைத்தையும் இழந்த இம் மக்கள் இன்று நடு வீதிக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர். இந்த இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிவதற்காக நாம், கொலன்னாவ மீதொட்டுமுல்ல, சேதவத்த, வெல்லம்பிட்டி, லன்சிவத்த, பெரண்டியா வத்த, நவகம்புர மற்றும் களனி உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தோம். களனி கங்கையின் நீர்மட்டம் படிப்படியாக குறைவடைந்துள்ளது. கடந்த இரு நாட்களாக கொழும்பில் கடுமையான வெயில் காணப்படுகின்றது. எனினும் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் 6 அடிக்குமேல் தண்ணீர் நிற்பதோடு குறித்தப் பகுதிகளில் கழிவு நீர் கலந்து கருநிறத்துடன் காணப்படுவதோடு கடுமையான துர்நாற்றமும் வீசுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
என்னுடைய பெயர் நியாஸ். மீதொட்டுமுல்ல பகுதியில் சுமார் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றோம். கடந்த சில நாட்களாக பெய்த மழை எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. இதுவரையில் அரசாங்கத்துல இருந்து வந்து எங்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யல. உணவு கிடைப்பதுல எந்த பிரச்சினையும் இல்ல. எங்கட பெண்கள் எல்லாம் இன்று வீதிக்கு தள்ளப்பட்டு இருக்காங்க. எங்கட பெண்கள் ரொம்ப கஷ்டத்தை எதிர்கொள்ளுறாங்க. நாங்க எப்படியும் இருந்துட்டு போயிருவோம். ஆனால் இந்த பெண்கள் படும் துயரத்தை வார்த்தையால சொல்ல முடியாது. எங்கட வீடு மட்டும் இல்ல பிறப்புச் சான்றிதழ் விவாகப் பத்திரம் பொருட்கள் என அனைத்தும் இல்லாமல் போய்விட்டன. தண்ணீரால சேதமான எங்கட வீடுகள் மீள திருத்தி அமைக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். நாங்க எதிர்பார்க்கல இப்படி எல்லாத்தையும் இழப்போம் என்று. இந்த வான்கதவுகள திறக்கப்போறாங்கனு முன்னாடி சொல்லியிருந்தா உடுத்த உடுப்புகள சரி எடுத்துகிட்டு வெளியாகி இருப்போம். ஆனால் போட்ட உடுப்போட இன்னமும் இருக்கிறோம். இது ஒரு அனர்த்தம். நாங்கள் யார் மீதும் குற்றம் சுமத்த விருப்பம் இல்ல. இருந்தாலும் அரசாங்கம் எங்களுக்கு பதில் ஒன்ற சொல்ல வேண்டும் என கவலையுடன் தெரிவித்தார்.

சரீபா என்ற பெண் கருத்து தெரிவிக்கையில். சுமார் 25 வருடங்களுக்கு மேலாக நான் இங்கு இருக்கின்றேன். இதுவரைக்கும் இந்தமாதிரி ஒரு நிலைமை எங்களுக்கு ஏற்பட்டது இல்ல. நான் ஆப்பம் சுட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்துல தான் இந்த வீட்ட கட்டி பொருட்கள வாங்குனேன். ஆனால் இன்றைக்கு எல்லாம் ஒன்றும் இல்லாம போயிருச்சு என்று கண்கலங்குகின்றார்..! என்னால கூட கதைக்க முடியல. அரசாங்கம் தான் எங்களுக்கு நல்ல தீர்வை பெற்றுதரனும்.
காந்தி என்ற சிங்கள பெண்மணி கருத்து தெரிவிக்கையில், நான் பஸ் டிப்போவுக்கு பக்கத்துல தான் இருக்கின்றேன். எனது வீடு முற்றாக நீரில் மூழ்கியிருச்சு. பொருட்கள் எல்லாமே இல்லாமல் போய்விட்டது என தழுதழுத்த குரலில் கதைக்க ஆரம்பித்த அவர் தன்னை அறியாமலே அழுகிறார். கண்ணீரை துடைத்துகொண்டு மீண்டும் கதைக்க ஆரம்பிக்கின்றார்.
தண்ணீர் கறுப்பு நிறமாக இருக்கின்றது. பக்கத்துல இருக்க இந்த குப்பை கொட்டும் இடத்துல இருந்து வந்த தண்ணீர்தான் எங்கட வீட்டுக்குள்ள இருக்கு. பொருட்களை எல்லாம் மீள எடுக்க முடியாது. சரியான துர்நாற்றம் அடிக்கின்றது. அந்த கிருமிநாசினிகள் நிறைந்த வீட்டுக்குள்ள போய் எவ்வாறு தங்க முடியும். கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த எல்லாமே அழிந்து போய் விட்டது. நாங்க தேங்காய் துருவியில் இருந்து எல்லாமே புதிதாக எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

வசந்தி சந்தியானி ஜெயவர்தன என்ற பெண் கருத்து தெரிவிக்கையில், பாய், படுக்கை என எல்லாம் இழந்து விட்டோம். இப்போது சாப்பிடுவதற்கு ஒரு பீங்கான் கூட எங்களிடம் இல்லை. எங்களது குறைய தீர்க்க யார் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருக்கின்றோம். நான் நோயாளி. இந்த தண்ணீர பார்க்கும் போது உங்களுக்கு தெரிகிறது எவ்வளவு துர்நாற்றம் அடிக்கின்றது என்று. இதனால எங்களுக்கு நோய் தான் அதிகரிக்கின்றது. எங்களுக்கு சாப்பாடு மூன்று நேரமும் கிடைக்கின்றது. ஆனால் படுப்பதற்கு பாய், தலையணை மற்றும் மருந்து பொருட்கள் தான் கூடுதலாக தேவைப்படுகின்றது. நாங்க இப்ப நடு வீதில நிற்கிறோம். எங்களால தொழிலுக்கும் செல்ல முடியாமல் உள்ளது. எங்களுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது என நொந்துகொள்கிறார்.
சேதவத்தை பகுதியைச் சேர்ந்த விமலசேன கருத்து தெரிவிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டு வரப்படும் நிவாரண பொருட்களை இடைநடுவே மறித்து பாதிக்கப்படாத நபர் எடுத்து செல்கிறார்கள். இது தொடர்பில் நகர சபை அவதானம் செலுத்த வேண்டும் என்கிறார்.

சரிபா என்ற பெண் கூறுகையில் தண்ணீர் வழிந்தோடிய பின்னர் எங்கட வீட்டை கழுவுவதற்கு டெட்டோல், சவர்க்காரம் இது போன்றவற்றையும் தந்து உதவ வேண்டும். இந்த தண்ணீர்ல நிறைய கிருமிகள் இருக்கின்றன என்கிறார்.
தண்ணீரால் நிறைந்திருக்கும் தனது வீட்டை பார்த்தவாறு இருந்த ரசேனி வின்துனி என்ற பாடசாலை மாணவி கூறும் போது, நான் தரம் 7இல் கல்விகற்கிறேன். எங்க வீடு முற்றாக நீர்ல மூழ்கிவிட்டது. எனது பாடசாலை புத்தகம், சப்பாத்து என எல்லாமே ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. நான் இப்ப பாடசாலைக்கு போககூட வழியில்லாமல் இருக்கின்றேன். இந்த துயரத்துல இருந்து எப்ப மீளப்போகின்றோம் என்று எங்களுக்கு தெரியல என்றார்.
மிகவும் பரிதாப நிலையில் காணப்பட்ட சுவர்னா என்ற வயோதிப பெண் தனக்கு ஏற்பட்ட நிலைமையை விளக்கும் போது நான் தூங்கிகொண்டிருந்த போது விடியற்காலை 3 மணியிருக்கும். திடீரென காலில் தண்ணீர் படுவது போல இருந்தது. உடனே எழும்பி பார்த்த போது வீட்டுக்குள் வெள்ளம். நான் ஒரு சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நோயாளி. எனக்கு காலிலும் வருத்தம் உள்ளது. என்னால் எனது பொருட்களை பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். இன்று நடுவீதியில் உடுத்த உடையின்றி அநாதையாக நிற்கிறேன். எனது காலில் உள்ள வருத்தம் மேலும் கூடியுள்ளது. என்னால் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது என கூறியவாறு அழுதார். கன்னத்தில் கையை வைத்துகொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்த ஜரீனாவை நாம் அணுகிய போது, கண்ணீர் சிந்துகின்றார். அழுத வண்ணம் இதற்கு முன்னர் இவ்வாறு ஒரு மழை பெய்தது இல்ல. இப்படி ஒரு வெள்ளம் ஏற்படும் என நாங்க கனவுலையும் நினைக்கல. மீதொட்டுமுல்ல பகுதியில் 20 வருடத்துக்கு மேல இருக்கிறேன். இப்படி ஒரு வெள்ளம் வீடுகளுக்குள்ள வந்ததே இல்ல. இப்ப ஆறு நாட்கள் ஆகின்றது. வீட்டுல இருந்து வெளியேறிய போது உடுத்திருந்த உடுப்போட தான் இன்னமும் இருக்கின்றோம். அழுகின்றார்...! எங்களுக்கு சாப்பாடு கிடைக்குது. சில பொருட்கள எங்களாள வெளிப்படையாக கேட்க முடியாது. ஏன் என்றால் பெண்கள் வெட்கப் படுவார்கள். இவைகள வாயால கேட்டுகொள்ள முடியாது. என்ன செய்வது என அழுதுகொண்டே தனது பேச்சை நிறுத்தினார். தண்ணீர் வழிந்தோடிய பின்னர் தனது வீட்டை கழுவிக்கொண்டிருந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தண்ணீரால மூழ்கிய எங்கட வீட இப்பதான் கழுவிகிட்டு இருக்கின்றோம். வீட்டுக்குள்ள ஒரே நாற்றம். சுமார் நான்கு மணித்தியாலமாக கழுவிகிட்டு இருக்கிறோம். ஆனாலும் நாற்றம் போகல. வீட்டுக்குள்ள அட்டை மற்றும் சில கிருமிகள் இருந்தன. இதை சுத்தப்படுத்த முடியாமல் உள்ளது என்றார்.
தண்ணீர் நிறைந்து காணப்பட்ட ஒரு பகுதியில் அங்கு இங்கும் ஏதோ ஒன்றை தொலைத்தவர் போல தேடிக்கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரை நாம் அணுகி எதனை தேடுகின்றீர்கள் என கேட்ட போது, நான் எனது கோழிகளை தேடிகொண்டிருக்கின்றேன். செல்லப் பிராணிகள் போல இரண்டு கோழியையும் சேவல் ஒன்றையும் வளர்த்தேன். இவைகள் எனது உயிர். கழுத்தளவு தண்ணீர் இருந்த போதும் கோழி இரண்டையும் தூக்கிகொண்டு வந்து விட்டேன். ஆனால் எனது சேவலை காணவில்லை. எனது உசுரு மாதிரி அந்த சேவல். இப்ப எங்க இருக்கோ தெரியல என்கிறார் 60 வயதுடைய அய்சா. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அபயசிங்கராம விகாரையில் தங்கியிருக்கும் கொலன்னாவ நாகமுல்ல பகுதியைச் சேர்ந்த அந்தோனியம்மா தனக்கு ஏற்பட்ட நிலையை விளக்கியபோது, எங்கட வீடு முற்றாக நீரில் மூழ்கிவிட்டது. துர்நாற்றம் அடிக்கும் இந்த தண்ணீர்ல பாதிக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் மீள கழுவி எடுப்பது பொய்யான விடயம். அனைத்தையும் இழந்து அகதிகளாக இருக்கும் எங்களுக்கு அரசாங்கம் நல்லதொரு தீர்வை பெற்றுத் தரவேண்டும். அதை விடுத்து எம்மை பார்த்து விட்டு செல்வதால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. இந்த தண்ணீர் வற்ற இன்னும் ஒரு கிழமையாகும் என்றார்.

உணவு வேண்டாம் உடை தாருங்கள்
வெள்ளம் ஏற்பட்டுள்ள குறித் பிரதேசத்து மக்களுக்கு அன்றாட உணவு சுத்தமாக குடிநீர் என்பன கிடைக்கப்பெற்றுள்ளன. இருந்த போதிலும் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துக்கொண்டிருக்கும் போது உயிரை காப்பாற்றினால் போதும் என ஓடிய மக்கள் தங்களுக்கான மாற்றுடைகளை பற்றியோ அல்லது உடைமைகளை பற்றியோ சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் அரசாங்கமும் பல தொண்டு நிறுவனங்களும் தங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இருந்த போதிலும் அவர்கள் அனைவரும் உணவை மட்டுமே கொடுத்து விட்டு செல்கின்றனர். இதனால் ஒரு வாரத்துக்கு மேலாக மாற்றுடை இல்லாமல் தவித்து வருவதாக மக்கள் கூறினர். எனவே நிவரண உதவிகளை வழங்க முன்வருவோர் தங்களுக்கான உடைகளை கொடுத்துதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
தொற்று நோய் அபாயம்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் அனைத்தும் கழிவுநீர் தேங்கியுள்ள பிரதேசமாக துர்நாற்றத்துடன் காணப்படுகின்றது. சிறுவர்கள், முதியோர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு நோய்கள் பரவுமோ என்ற அச்சத்துடன் மருத்துவ உதவிகளை எதிர்ப்பார்த்திருந்தனர். மேலும் தற்போது நீர் வடிந்து செல்கின்றமையினால் சிறு நீர்நிலைகளில் நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அதிகளவிலான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. நன்றி வீரகேசரி
லலித் வீரதுங்க பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர்
24/05/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க பாரிய நிதி மோசடி குற்றப் புலனாய்வு பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் பாரிய நிதி மோசடி குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். நன்றி வீரகேசரி
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு
24/05/2016 நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை 2 இலட்சத்து 88 ஆயிரத்து 768ஆக குறைவடைந்துள்ளது. அத்துடன் 41ஆயிரத்து 460 குடும்பங்களை சேர்ந்த ஒரு இலட்சத்து 85 ஆயிரத்து 933 பேர்கள் இன்னும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாடளாவிய ரீதியில் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 93ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒருவார காலமாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலைமைகள் தொடர்பில் தகவல்கள் வெளியிடும் வகையில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நேற்று முக்கிய ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட துறைசார்ந்த அதிகாரிகள் மேற்கண்டவாறு கூறினர்.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் தொகை இந்தவாரம் வெகுவாக குறைவடைந்துள்ளது. குறிப்பாக முதல் மூன்று நாட்கள் முடிவில் பாதிக்கப்பட்டோரின் தொகை 3 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் இப்போது அது 2 இலட்சத்து 88 ஆயிரத்து 768 குறைவடைந்துள்ளது. இப்போது 71 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 288768 நபர்கள் நாடளாவிய ரீதியில் பாதிக்கப் பட்டுள்ளனர். 1 இலட்சத்துக்கு அண்மித்த தொகையிலான மக்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிகமாக அமைத்துக் கொடுக்கப்பட்ட முகாம்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைவடைந்துள்ளது. இப்போது நாடளாவிய ரீதியில் 1 இலட்சத்து 85 ஆயிரத்து 933 நபர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலைமையில் அனைத்து பகுதிகளிலும் அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 93 ஆகும். கேகாலையில் அரநாயக பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரநாயக மண்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்கும் நடவடிக்கை மாத்திரம் இன்னும் இடம்பெற்று வருகின்றது.
காலநிலை
மேலும் தற்போதிருக்கும் நிலைமையில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கடந்த ஒருவாரகாலமாக நாட்டில் நிலவிய மோசமான காலநிலையில் இருந்து விடுபட்டு இப்போது சாதகமான நிலைமைக்கு திரும்பியுள்ளது. எனினும் மலையகம், சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணத்தில் மழைவீழ்ச்சி பதியப்பட்டுள்ளது. இந்த நிலைமைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையாது.
வடிகாலமைப்பு
அதேபோல் அதிக மழைவீழ்ச்சி காரணமாக கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் தற்போது வெள்ள நீர் வழிந்தோடும் நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக களனி பிரதேசத்தில் வெள்ளநீர் குறைவடைந்துள்ளது. எனினும் சில பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதனால் அவற்றை வெளியேற்றும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
கல்விசார் உதவிகள்.
மேலும் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையில் பல பாகங்களிலும் கல்வி சார் நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கொழும்பில் சில பகுதிகளிலும் பாடசாலை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. அதேபோல் பல பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. மாணவர்களின் சீருடைகள், புத்தகங்கள் என்பன சேதமடைந்துள்ளன. எனவே மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான அனைத்து நிவாரணப்பணிகளும் அரசாங்கத்தின் மூலமாக செய்துகொடுக்கப்பட்டு வருகின்றன. இலவச பாடசாலை சீருடைகள், புத்தகங்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளை புனரமைக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படுகின்றது.
சட்டம் மற்றும் ஒழுங்கு.
அதேபோல் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களின் சொத்துக்கள் களவாடப்படும் நிலைமை உள்ளதாக மக்கள் தெரிவித்துவருகின்றனர். எனினும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. மக்களின் சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. அதேபோல் முகாம்களின் உள்ள மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையையும் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். முகாமில் இருக்கும் இறுதி நபர் தனது இருப்பிடத்துக்கு செல்லும் வரையில் பொதுமக்களுக்கான பூரண பாதுகாப்பை பாதுகாப்பு வழங்கும்.

நிதி விவகாரம்.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அனர்த்தத்தில் இதுவரையில் நான்காயிரம் வீடுகள் முற்றாகவும் 3ஆயிரம் வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. எனவே முற்றாக சேதமடைந்த வீடுகளுக்கு 25இலட்சம் ரூபாய் பெறுமதியும் பகுதி அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 1 இலட்சத்தில் இருந்து சேதாரத்திற்கு ஏற்ற வகையில் பணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடளாவிய ர்தியில் இருந்தும் சர்வதேச ரீதியில் இருந்தும் பல்வேறு நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதேபோல் அரசாங்கம் பதிக்கப்பட்ட மக்களுக்கு 145 மில்லியன் ரூபாய் தொகையை ஒதுக்கியுள்ளது. அதேபோல் சர்வதேச நாடுகள் நிதியுதவி செய்ய விரும்பும் பட்சத்தில் அதற்கான வசதிகளையும் மத்திய வங்கி செய்து கொடுத்துள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த நபர்கள் தாம் விரும்பும் பணத்தை அவர்களின் நாட்டு பணமாகவே செலுத்தும் வகையில் ஐந்து வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு.
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற உதவிகளையும், மீட்புப்பணிகளையும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒருவாரகாலமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது முப்படைகளை கொண்டே சசல நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான நிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு தரப்பின் மூலமாக சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
ரோஹிதவுக்கு பிணை.!
24/05/2016 அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபயகுணவர்தனவுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஒரு இலட்சம் ரொக்கப் பிணையிலும் 100 இலட்ச நான்கு சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முறைக்கேடான முறையில் சொத்து திரட்டியுள்ளார் என்ற குற்றஞ்சாட்டில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால், அவருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
யாழில் அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த துரிதகதியில் நடவடிக்கை
25/05/2016 யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச் செயல்கள் மற்றும் வன்முறைச்சம்பவங்கள் உடன்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படுவதோடு சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் உள்ளிட்ட புத்திஜீவிகள் குழுவிடம் மேற்குறித்த உறுதியளிப்பை பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர நேற்று வழங்கியுள்ளார்.
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவிற்கும் அமைச்சர் டி.எம்.சுவாமிநதான் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் உள்ளிட்ட குழுவினருக்குமிடையிலான இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பின்போது யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டுச்சம்பவங்கள் ஆவா உள்ளிட்ட குழுக்களின் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைச்சம்பவங்கள் போன்றவற்றை உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருதல், பொதுமக்கள் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, குறித்த விடயங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்துவதாக தெரிவித்ததோடு சம்பவங்களுடன் தொடர்புபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டினார். அத்துடன் வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.
இச்சந்திப்பு தொடர்பாக கருத்து வெ ளியிட்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பொலிஸ்மா அதிபருடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்தது. யாழில் இடம்பெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் எமது கருத்தோடு பொலிஸ்மா அதிபரும் இணங்கியுள்ளார். அத்தோடு பொலிஸ் மா அதிபர் இவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றபோது பொதுமக்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்க கூடிய வகையிலான தமிழ் மொழியிலான துரித தொலைபேசி அழைப்பு வசதிகளை ஏற்படுத்தவேண்டுமெனக் கோரியுள்ளேன் என்றார். நன்றி வீரகேசரி
வற்றியது கொழும்பில் வெள்ளம் : வீடுகள் அலங்கோலமானது : மனம்நெகிழ வைக்கும் புகைப்படங்கள்
25/05/2016 கொழும்பில் நிலவிய சீரற்ற காலநிலையால் களனி, வெல்லம்பிட்டிய, கொலனாவ, சேதுவத்த உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.
வீடுகள், வீதிகள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின. தற்போது காலநிலை வழமைக்கு திரும்பியுள்ளதால் வீடுகளை மூழ்கியிருந்த வெள்ளம் வற்றியுள்ளது.
தனது சிறிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேர்த்து கட்டிய வீடுகள் சேர்த்த சொத்துக்கள் ஆவணங்கள் வாகனங்கள் என அனைத்தும் அலங்கோலமான நிலையில் காணப்படுகின்றன.
இவற்றில் ஒன்றை கூட மீள பாவிக்க முடியாத நிலைக்கு இந்த அப்பாவி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.





































நன்றி வீரகேசரி
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு தோல்வி : நாளை ஆர்ப்பாட்டம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது குறித்த பேச்சவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. இதனால் தமிழ் முற்போக்கு முன்னணியினர் நாளை திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் குறித்த கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி காலாவதியாகியிருந்தது. இந்த ஒப்பந்தம் காலாவதியாகி ஒருவருடமும் 2 மாதங்களும் ஆகின்றபோதிலும் இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு ரூபா கூட சம்பள உயர்வு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இயற்கை அனர்த்தம் ஒரு பக்கம் அவர்களை வாட்டிவருகின்றது. மறுபக்கம் விலைவாசி ஏற்றம் அவர்களை படாத பாடுபடுத்துகின்றது. இந்த நிலையில் விலைவாசிக்கு ஏற்ற சம்பள உயர்வு இன்மையினால் அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கடந்த வருடம் மார்ச் மாதம் கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டுமென்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துவந்தன. இந்த விடயம் குறித்து முதலாளிமார் சம்மேளனத்துடன் இந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்தியிருந்தன. 7 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதிலும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் இணக்கம் தெரிவிக்கவேயில்லை.
சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை வீழச்சியடைந்துள்ளதாகவும் இதனால் தாம் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் சம்பள அதிகரிப்பு விவகாரமானது இழுபறி நிலைக்கு சென்றிருந்தது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத் தேர்தலும் நடைபெற்றிருந்தது. இந்தத் தேர்தலின்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டுமென்றும் தாம் ஆட்சிக்கு வந்தால் இதனை பெற்றுக்கொடுப்போம் என்றும் மலையகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் உறுதிவழங்கியிருந்தன.
தேர்தல் பிரசாரக்கூட்டங்களின் போது சம்பள உயர்வு விடயம் தொடர்பில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிய மலையக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆட்சிக்கு வந்ததும் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தன. இதனால் தேர்தலின் பின்னர் தமக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என்று தோட்டத் தொழிலாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்த பின்னரும் சம்பள உயர்வு என்பது வெறும் கானல்நீராக மாறியிருக்கின்றது. இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதுடன் விரக்திநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் மறுப்பு தெரிவித்ததையடுத்து தொழிலமைச்சர் ஜோன் செனவிரட்ணவின் தலைமையில் தொழிற்சங்கத்தினரும் முதலாளிமார் சம்மேளனத்தினரும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அதிலும் எந்தவித இணக்கப்பாடுகளும் ஏற்படவில்லை. அரசாங்கம் இருதரப்பையும் இணங்கச்செய்வதற்கு முயற்சித்த போதிலும் அந்த முயற்சியும் தோல்வியடைந்திருந்தது.
இதனையடுத்து கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் தனியார்துறையினருக்கு வழங்கப்படவேண்டுமென பரிந்துரைக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கவேண்டுமென்று அரசாங்கம் அறிவித்திருந்தது. பாராளுமன்றத்தில் உரையாற்றிய தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண இதற்கான பரிந்துரையைச் செய்ததுடன் இது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.
ஆனாலும் 2500 ரூபா சம்பள அதிரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாத சம்பளத்துடன் இந்தத் தொகை அதிகரிக்கப்படவேண்டுமென்றும் இல்லையேல் சட்டநடவடிக்கை எடுக்கவேண்டியநிலை ஏற்படும் என்றும் தொழில் அமைச்சு அறிவித்திருந்தது. இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்த ஏப்ரல் மாத சம்பளத்துடனாவது 2500 ரூபா அதிகரிப்பு சேர்க்கப்படுமென்று தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
இந்தப் பின்னணியில் கடந்த 10 ஆம் திகதிக்குள் இந்த சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டுமென்றும், இல்லையேல் தொழிற்சங்க போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு முன்ணணியினர் அறிவித்திருந்தனர். கடந்த மே தினத்தன்று தலவாக்களையில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக்கூட்டத்தில் உரையாற்றிய முன்ணணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் உபதலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம், ஆகியோர் இந்த அறிவிப்பினை விடுத்திருந்தனர். ஆனால் அவர்கள் வழங்கிய காலக்கெடுவும் தற்போது முடிவடைந்திருக்கின்றது. இதனாலேயே இன்றைய தினம் தொழிற்சங்க ரீதியிலான போராட்டத்தை தமிழ் முற்போக்கு முன்னணியினர் ஆரம்பிக்கவுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்களான மனோ கணேசன், பி. திகாம்பரம் ஆகியோருக்கும் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ண, பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அபிவிருத்தி உபாய முறைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஆகியோருக்குமிடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்தே முதலாளிமார் சம்மேளனத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டபின்னரே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனத்தின் இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் மாறாக தொழிலாளர்களுக்கு தோட்டங்கள் தோறும் 2 ஏக்கர் நிலமளவில் வழங்கி அதில் உப பயிர்ச்செய்கைகளை தொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு வசதி செய்வதாகவும் இதன் மூலம் தோட்டத்தொழிலாளர்கள் வருவாயை தேட முடியும் என்று முதலாளிமார் சம்மேளனத்தினர் யோசனை முன்வைத்ததாகவும், அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றார்.
முதலாளிமார் சம்மேளனத்தினரின் இந்த யோசனையை சாதகமாக பரிசீலிக்க முடியும் என்றும் ஆனால் முதலில் இடைக்கால நிவாரணமாக 2500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டுமென்று தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதற்கு சாதகமான பதில் கிடைக்காமையினால் பேச்சுவார்த்தை இழுபறியில் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து இன்றைய தினம் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்துவது என்று தமிழ் முற்போக்கு முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.
உண்மையிலேயே 1000 ரூபா சம்பள அதிகரிப்பு என்பது தற்போதைய நிலையில் சாத்தியப்படாத ஒரு விடயமாக இருக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு 100 ரூபா சம்பள அதிரிப்பை வழங்குவதற்குக்கூட தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் பின்னடிப்பதும் அதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது நழுவல்போக்கை கடைப்பிடிப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு அல்ல.
எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு நா .ௌான்றுக்கு 100 ரூபா வீதம் 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அழுத்தங்களை மலையக அரசியல் தலைமைகளும் தொழில்சங்க தலைமைகளும் ஒன்றிணைந்து வழங்கவேண்டும். முதலில் தற்காலிக நிவாரணமாக இந்த 2500 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுத்துவிட்டு பின்னர் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முயற்சிக்கவேண்டும். இதனைவிடுத்து அரசியல் போட்டா போட்டிகளில் அரசியல் தலைமைகள் ஈடுபடுமானால் இறுதியில் பாதிக்கப்படப்போவது மலையக தோட்டத் தொழிலாளர்களேயன்றி வேறு யாருமில்லை என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம். நன்றி வீரகேசரி
ஜப்பான் பறந்தார் ஜனாதிபதி.!
25/05/2016 ஜப்பானில் இடம்பெறும் ‘ஜீ 7’ நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் EK 348 விமானத்தினூடாக ஜப்பான் பயணமானார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் ஜப்பான் இசெசிமாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
அரநாயக்க பகுதியில் : அமெரிக்க தூதுவர்.!
25/05/2016 இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உட்பட ஒரு குழுவினர் இன்று காலை அரநாயக்க பகுதியிற்கு விஜயம் செய்துள்ளனர்.
இதன்போது, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபையின் உறுப்பினரான பய்சல் முஸ்தப்பா மற்றும் பேரிடர் அபாய குறைப்பு தெற்காசிய பிராந்திய ஆலோசகர் டாக்டர் மைக்கல் ஜே அர்னஸ்ட் போன்ற உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.
அமெரிக்கா அரயாக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கிய நன்கொடையை அவர்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே இவ்வாறானதொரு விஜயத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர். நன்றி வீரகேசரி
கிழக்கு மாகண முதலமைச்சருக்கு தடை.!

திருகோணமலை - சாம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் கிழக்கு மாகாண சபை முதல்வர் நஷீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை “ இந்த இடத்தில் இருந்து அகன்று செல்லுமாறு ” திட்டிய காணொளி இணையத்தளங்களில் வெளியானது.
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பிலான அறிக்கை பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
கடற்படை அதிகாரி சம்பவம் : மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கை
26/05/2016 கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரியொருவரிடம் தரக்குறைவாக நடந்த சம்பவம் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச அதிகாரிகள் படையினரிடம் இவ்வாறு தரக்குறைவாக நடந்துக்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது அறிக்கையில்,
திருகோணமலை - சாம்பூர் மகா வித்தியாலயத்தில் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் கிழக்கு மாகாண சபை முதல்வர் நஷீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை அவ மரியாதையாக பேசியமை கண்டிக்கத்தக்கதாகும்.
அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டிருக்கும்போது இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நடந்துக்கொண்டமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.
இவ்வாறு படையினரை வடக்கு அரசியல்வாதிகள் அவமதிப்பது முதற்தடவையல்ல. சில நாட்களுக்கு முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் அனுமதியின்றி இராணுவப்படை முகாமுக்குள் பிரவேசித்திருந்தனர்.
குறித்த விடயத்தில் தற்போதைய அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டது.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அரசாங்கம் அமைதியாக செயற்பட முடியாது. முறையான விசாணையை மேற்கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கெதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
வடமாகாண சபை முன் சமூக சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
26/05/2016 யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் பணியாற்றும் சமூக சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்து , வடமாகாண சபையின் முன்பாக இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்ற வேளையில் அங்கு வந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
'வடமாகாணத்தில் 750 சுகாதார தொண்டர்களுக்கு நியமனம் வழங்கப்படவேண்டும் என வடமாகாண சுகாதார திணைக்களம் முன்னர் கூறியது. தொடர்ந்து 850 பேருக்கு வழங்கவேண்டியுள்ளது என்று கூறினர். அதன் பின்னர் 1,000 பேருக்கு மேல் வழங்கவேண்டியுள்ளதாக கூறுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் 350 பேர் இருக்கின்றோம். இதனைத்தவிர வடமாகாணத்தின் மிகுதி மாவட்டங்களையும் சேர்த்தால் 1000 என்ற தொகை வராது. எண்ணிக்கை எவ்வாறு கூடுகின்றது என்பது தெரியாமல் உள்ளது' என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
'ஏற்கெனவே 5 வருடம் தொடக்கம் 15 வருடங்கள் வரையில் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனத்தை தராமல், ஏன் எண்ணிக்கையை கூட்டிச் செல்கின்றார்கள் என்று தெரியாது.
மத்திய அரசாங்கத்தால் 1,000 பேருக்கான நியமனம் தரப்பட்டால், எங்களுக்கான நியமனமும் வழங்கப்படும் என்கின்றனர். முதலில் எங்களுக்குத் தாருங்கள். அதன் பின்னர் புதியவர்கள் பற்றி சிந்தியுங்கள்' என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த முதலமைச்சர், இரண்டு கிழமைக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கினார். இதனையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. நன்றி வீரகேசரி
ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு.!

26/05/2016 ஜப்பான் நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹிதேகி ஓமோசா உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.

இதன் பின்னர் ஜனாதிபதிக்கு நயோகா ஹில்டன் ஹோட்டலில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது.
அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியட்நாம் பிரதமரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளது.
இதனையடுத்து, ஜப்பானின் வெளிநாட்டு அமைப்புகளின் வர்த்தக அமைப்பின் தலைவர் மற்றும் ஒனோமிச்சி டொக்யார்ட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு
26/05/2016 மேல்மாகாணத்தின் முன்னாள் பொலிஸ் மா அதிபரும் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான அனுர சேனநாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் ஜுலை 9 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
வசீம் தாஜுதீனின் கொலை வழக்குத் தொடர்பில் இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தியபோதே கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
வசீம் தாஜூதினின் கொலை வழக்கு தொடர்பாக கடந்த திங்கட்கிழைமை (23) கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, கொழும்பு மேலதிக நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

ஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் இரு இலங்கையர் உட்பட நால்வர் இந்தியாவில் கைது
26/05/2016 அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அழைத்துச்செல்ல பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த நபர் மற்றும் இலங்கை அகதி உட்பட நான்கு பேரை இந்தியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் நால்வரையும் தமிழ்நாடு கோயம்புத்தூர் பகுதியில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொத்தூர் அகதி முகாமைச் சேர்ந்த எடிசன் எலியஸ் ராஜா ( 48), இலங்கை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த விமலன் (31), தமிழ்நாடு வலசரவாக்கத்தைச் சேர்ந்த சார்லஸ் பெட்ரிக் (27) நேசப்பாக்கம் சென்னையைச் சேர்ந்த விஜிதா (34) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச்செல்வதாக கூறி கும்புடிப்பூண்டி, கொத்தூர் அகதி முகாமைச் சேர்ந்த அறுவரிடம் தலா 70,000 ரூபா வீதம் 370, 000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பணத்தை பறிகொடுத்த கொத்தூர் அகதி முகாமைச் சேர்ந்த முத்துராஜ் என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொத்தூர் அகதி முகாமைச் சேர்ந்த முத்துராஜ் உட்பட வின்சன் ராஜ் , சிவராஜன், ராமஜெயம்,சதீஸ், ஜெயந்தன் ஆகியோரே இவ்வாறு பணத்தை பறிகொடுத்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு தற்போது சென்னை புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கோயம்புத்தூர் பொலிஸார் தெரிவித்தனர். நன்றி வீரகேசரி
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வாளர்கள் அணியை வழிநடத்திய ஆதவன் மாஸ்டர் கைது
27/05/2016 தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் எனக் கூறப்படும் ஆதவன் மாஸ்டர் எனும் அய்யாத்துரை மோகன்தாஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி - மறவன்புலவு பிரதேச வீடொன்றில் தற்கொலை அங்கி உட்பட வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதியே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இது குறித்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் இதுவரை முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் 15 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த அணியை ஆதவன் மாஸ்டரே வழி நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆதவன் மாஸ்டரின் வீட்டை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோதும் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இந் நிலையிலேயே நேற்று முன் தினம் கட்டுநாயக்க ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முற்பட்டபோது ஆதவன் மாஸ்டர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
போர் நடைபெற்ற காலத்தில் மன்னார் மற்றும் வன்னி பிரதேசங்களில் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டு வந்த ஆதவன் மாஸ்டர், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்.
சுமார் ஒன்றரை மாதம் புனர்வாழ்வு முகாமில் இருந்த இவரை பின்னர், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டனர். நன்றி வீரகேசரி
ஜீ - 7 மாநாட்டில் பல நாட்டு அரச தலைவர்களுடன் ஜனாதிபதி ( மேலதிக படங்கள் இணைப்பு )
27/05/2016 ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு பல நாட்டு அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









நன்றி வீரகேசரி
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்

28/05/2016 கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்டமைக்கு எதிராக நுவரெலியா நகரசபை வளாகத்தில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்கள் மதகுருமார்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது கடற்படை அதிகாரியிடம் தரக்குறைவாக நடந்தமைக்கு முதலமைச்சருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது படையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், “யுத்த வெற்றி வீரர்களை பாதுகாப்போம்' போன்ற பல பதாதைகளை ஏந்தியிருந்தனர். அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகவும் பதாதைகள் ஏந்தப்பட்டிருந்தன. நன்றி வீரகேசரி