பிரான்சில் அன்னையர் தினம் - 29 - 05 - 2016- பத்மா இளங்கோவன் (பாரிஸ்)

.
தாலாட்டு...

அன்று நீ பாடினாய்
ஆராரோ.. ஆரிவரோ... ..
அழகான தாலாட்டு
ஆனந்தத் தூக்கமது..!

அம்மா...
நீ சென்றபின்..
இன்று வரையில்லை
அத்தூக்கம்... ..

அன்னையர் தினம்..
அன்னையர் தினமென்று
உலகெங்கும்
பாட்டுக்கள்.. பாராட்டுக்கள்
அம்மாக்களுக்காக... ..!



அம்மா..
உன்னை நினைத்துப் பார்த்தேன்..
பாடினேன் ஒரு பாட்டு..
அது
என் தாலாட்டு...
தூங்குவாயா அம்மா...
என் தாலாட்டுக் கேட்டு... ..
முடியுமா உன்னால்... ..?

ஏனெனில்..
இன்று நானும்
ஓர் அன்னையாகிவிட்டேன்...
இப்போது..
என்னால் தூங்கமுடிவதில்லை..!

அம்மா..
நீ தான் வேண்டும்..
என்னைத் தாலாட்ட...
உன்னால் தான் முடியும்
என்னைத் தூங்கவைக்க... ..

மீண்டும்
உன் மடியில்..
நான் வளர வேண்டும்...
கண் வளர வேண்டும்... ..!

உனக்கென
எதையும் வேண்டாத
தியாக தீபமே... ..
உனக்காக ஒரு நாள்...
ஓ... .. அம்மா... ..!

ஒவ்வொரு விடியலும்
உனக்கு
நன்றி சொல்வதற்காகவல்லவா... ..
விடிய வேண்டும்..!

அம்மா... ..
என் நன்றிக்கடன் தீர்க்க
மீண்டும்...
உன் மடியில் நான்... ...
என்னைத்
தாலாட்ட வருவாயா... ..?

- பத்மா இளங்கோவன்
    (பாரிஸ்)