எல்லோர்க்கும் நன்மையன்றோ ! - ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ...அவுஸ்திரேலியா )

.

    தேர்தல்தனில் வெற்றிபெற்றால் தெளிந்தமனம் வரவேண்டும்
     வாக்களித்த மக்களது மனங்கோணா இருத்தல்வேண்டும்
     நோக்கமின்றிச் செயல்பட்டு நோகடிக்கா திருந்துவிடின்
     வாக்களித்த மக்களென்றும் வாய்ப்பளிக்க வந்திடுவார்  !

    சொல்லுகின்ற திட்டமெல்லாம் தொய்வின்றிச் செய்துவிடின்
    நல்லாட்சி  எனும்சான்றை நாட்டுமக்கள் வளங்கிடுவார்
    வல்லமையால் வென்றுவிட்டோம் என்றெண்ணம் வந்துவிடின்
    வாக்களித்த மக்களெலாம் மனம்நொந்தே போயிடுவார் !

     வாக்குப் பெற்றுவிட்டதனால் வாய்ப்புவந்து விட்டதென
     நாற்காலி தனைப்பிடித்து நல்லதெல்லாம் தாம்சுருட்டி
     சாக்குப்போக்கு தனைச்சொல்லி  சதிராட்டம் போட்டுநின்றால்
     வாக்களித்த மக்களெலாம் வசைபாடி நின்றிடுவார் !

     தேர்தல்தனில் செலவுசெய்த காசதனை தேடுதற்கு
     தேர்ந்தெடுத்த தேர்தல்தனை தீர்வாக்கல் முறையாமோ
     ஊர்திரிந்து சேகரித்த வாக்கினினால் வந்தவுயர்
     பேருடைந்து போகாமல் காப்பதுதான் பெரும்பொறுப்பு !

     காரும்வரும் வீடும்வரும்  கணக்கின்றி பணமும்வரும்
     ஆருமென்ன சொன்னாலும் அதைக்கேட்கா மனமும்வரும்
     ஆனாலும் அவற்றையெல்லாம் அரவணைத்து நில்லாமல்
     ஆனமட்டும் அனைவரையும் அணைத்துநிற்றல் அறமாகும் !

      வள்ளுவத்தை படித்தொழுகி வாய்மையினை வாழ்வாக்கி
      உள்ளமெலாம் நல்லஎண்ணம் உறைந்துவிடச் செய்துவிடின்
      நல்லபடி ஆட்சிசெய்யும் நல்வழியில் சென்றிடலாம்
      நாட்டிலுள்ள மக்களெலாம் நல்வாழ்த்துக் கூறிநிற்பார் !

      அறமதனை அச்சாணி ஆக்கிவிடும் ஆட்சிதனை
      ஆட்சிபீடம் அமர்ந்தவர்கள் அனுசரித்தல் அவசியமே
       இனவாதம் மதவாதம் எதையும்மனம் கொள்ளாமல்
       இணக்கமுற ஆட்சிசெய்தால் எல்லோர்க்கும் நன்மையன்றோ !