மன்னாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 2247 பேர் இடம்பெயர்வு
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது
எம்.பி. சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு வட மாகாண சபை முதல்வர் பதில்
அமெரிக்காவின் 51 ஆவது மாநிலத்தை பார்க்க சமந்தா இலங்கை வருகிறாரா?
2000 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கி வைப்பு
திருமலையில் இரகசிய முகாம் : ஐ.நா.குழு
இலங்கை பெண்ணை கல்லால் அடித்து மரணத்தை ஏற்படுத்துமாறு தீர்ப்பு
தாய்லாந்து துணை பிரதமர் - ஜனாதிபதி சந்திப்பு
மன்னாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 2247 பேர் இடம்பெயர்வு
16/11/2015 மன்னார் மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்று மதியம் வரை 610 குடும்பங்களைச் சேர்ந்த 2247 பேர் வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளதுடன் 95 வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னாரில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக மன்னார் நகரில் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியதுடன் அரச அலுவலங்களுக்குள் வெள்ள நீர் உட்புகுந்து அலுவலக உபகரணங்களை சேதமாக்கியுள்ளன.
மன்னார் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ச்சியான மழை பெய்தபோதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையைத் தொடர்ந்து மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது.
இதன்படி இன்று மதியம்வரை கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 118 குடும்பங்களைச் சேர்ந்த 401 நபர்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்தள்ளனர். இதில் 52 குடும்பங்களைச் கார்ந்த 204 பேர் இடம்பெயர்ந்து மூன்று நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1824 பேர் இடம்பெயர்ந்து 12 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு நலன்புரி நிலையங்களிலுள்ள இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வெள்ளாங்குளம் கோவில் தேவன்பிட்டி கோவில் பாலியாறு பொது மண்டபம் மூன்றாம்பிட்டி பொது மண்டபம் எழுத்தூர் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் செல்வநகர் சிறுவர் பாடசாலையிலும் பள்ளிமுனை பாடசாலை போன்ற நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை பெய்த மழையின்போது மன்னார் நகரில் பெரும் மழைநீர் நிரம்பி அதிகமான வீடுகளுக்கு உட்புகுந்தது மட்டுமல்ல அரச திணைக்கள மற்றும் மன்னார் மாவட்ட செயலகம் வட மாகாண போக்குவரத்து மீன்பிடி கிராமிய அமைச்சரின் மன்னார் கிளை அலுவலகத்துக்குள்ளும் உட்புகுந்த வெள்ள நீர் அங்கு இருந்த அலுவலகங்களுக்குள்ளும் நீர் நிரம்பி தரையில் பதிவான இடங்களிலிருந்த கணனனி உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.
ஞாயிறுவிடுமுறை தினமாக இருந்தபடியால் பொருட்களை பாதுகாக்க முடியவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மன்னார் பகுதிகளிலுள்ள பெரும்பாலன முக்கிய வீதிகள் உள் வீதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதால் போக்குவரத்துக்களும் பாதிப்பு அடையும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாலியாறு நீர் தொடர்ந்து வீதியை மேவி ஓடுவதால் மன்னார் சங்குப்பிட்டி ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் போக்குவரத்து தொடர்ந்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது
17/11/2015 மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை 8.30 மணியளவில் தமது உண்ணாவிரதத்தினை முடித்துக் கொண்டனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிரீநேசன், மற்றும் சீ.யோகேஸ்பரன், எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளருமான கே.துரைராஜசிங்கம் ஆகியோர் இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று அங்கு உண்ணாவிரதமிருந்த தமிழர் அரசியல் கைதிகள் 10 பேருக்கு இள நீர் வழங்கி முடித்து உண்ணாவிரதத்தினை முடித்து வைத்தனர்.
இதன் போது நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நடத்தப்பட்ட அரசாங்க உயர் மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளுக்கான பிணை மற்றும் சில அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளிப்பது போன்ற விடயங்களை இதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகளிடம் எடுத்துக் கூறினர்.
இதையடுத்து இவர்களின் உண்ணாரதம் முடிவுக்கு வந்தது. கடந்த பத்து தினங்களாக இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 தமிழ் அரசியல் கைதிகள் இருந்த நிலையில் ஒருவர் அன்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
எம்.பி. சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு வட மாகாண சபை முதல்வர் பதில்
17/11/2015 வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. சுமந்திரன், தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்களுக்கு வடக்கு முதலமைச்சர் அறிக்கை ஒன்றின் மூலம் பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு,
இனப்படுகொலையும் நாமும்
எனது அன்பிற்குரிய மாணவன் சுமந்திரன் அவர்கள் பல குற்றச் சாட்டுகளை அண்மைக் காலமாக முன்வைத்து வந்துள்ளார். அவை அனைத்திற்கும் பதில் கூற வேண்டிய காலம் கனிந்துள்ளது. முதலில் அவர் இனப்படுகொலை பற்றிய வடமாகாண சபைத் தீர்மானம் பற்றி விமர்சித்தார். உண்மையில் இந்தத் தீர்மானத்தைத் தயாரித்துத் தரவேண்டும் என்று திரு.சுமந்திரன் அவர்களிடம் கோரிய போது அதற்கு அவர் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
ஆனால் ஜனாதிபதி தேரிதலின் பின்னர் எதுவும் சொல்லாமல் வெளிநாடு சென்று விட்டார் என்று நினைக்கின்றேன். அவரோடு தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவேதான் கடைசி நேரத்தில் நானே தயாரிக்க வேண்டிய கடப்பாடு என்னைச் சார்ந்தது. தீர்மானம் வெளிவந்தவுடனே அதனை வரவேற்று அறிக்கை தந்த அவர் பின்னர் அப்பேர்ப்பட்ட தீர்மானம் பிழையானது என்றார். காரணம் அதன் ஊடாக எவரையும் சட்டப்படி குற்றவாளிகள் ஆக்க முடியாது என்றும் அதனால் அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
பல மக்கள் பிரச்சனைகள் தம்முன் வரும் போது சட்டத் தரணியான அவர் இந்த இந்த விடயங்களில் வழக்குப் பதிய முடியாது, சாட்சியங்கள் போதாது என்றெல்லாம் கூறியிருப்பார். அதற்காகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீங்கு இழைக்கப்படவில்லை என்றோ பாதிப்பு ஏற்படவில்லை என்றோ மனக் கிலேசம் ஏற்படவில்லை என்றோ அர்த்தமில்லை. எமது தீர்மானம் இந் நாட்டில் இதுவரை நடந்ததைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அத்தீர்மானம் எவ்வௌற்றை இனப்படுகொலைச் சட்டம் இனப்படுகொலையாக ஏற்றுக் கொண்டுள்ளதோ அவை எம் நாட்டில் நடைபெற்றுள்ளன என்பதைப் பிரதிபலிக்கும் தீர்மானம். அது ஒரு சமூக ஆவணம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது ஐ.நா செயலாளரினால் தீர்மானிக்கப்படவேண்டியது.
உண்மையும் நல்லிணக்கமும்
மேலும் இதனை இவ்வருடம் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் கொண்டு வந்ததும் கௌரவ சுமந்திரன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உண்மையில் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் தான் இத் தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் எழுந்தது. எம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசாங்கந்தான் நல்லிணக்கம் பற்றிக் கூறிவருகின்றது. தென்ஆபிரிக்காவில் உண்மையும் நல்லிணக்கமும் சார்ந்த ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டது. உண்மை தெரிந்தால்த்தான் நல்லிணக்கத்தை எய்தலாம். உண்மை தெரியாமல் நல்லிணக்கம் எப்படி உருவாகும்? உலகத்திற்கு மட்டும் எங்கள் தீர்மானம் உண்மையை விளம்பவில்லை. இலங்கை மக்களுக்கும் அத்தீர்மானம் உண்மையை விளம்பியது.
முக்கியமாகச் சிங்கள மக்கள் அதில் கூறப்பட்டவை உண்மை என்று தெரிந்து ஏற்றுக் கொண்டால்த்தான் நல்லிணக்கத்திற்கான அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். அவை எதுவும் நடக்கவில்லை என்று சிங்கள மக்கட் தலைவர்கள் கூறினால் நல்லிணக்கத்தை எவ்வாறு உருவாக்கப் போகின்றோம்? எனவே இனப்படுகொலை பற்றிய வட மாகாண சபையின் தீர்மானம் கௌரவ பிரதமர் இரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் அவருடன் நெருங்கிய உறவை வைத்திருக்கும் மற்றையவர்களுக்கும் கோபத்தைத் தருவதாக இருந்தாலும் அத்தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் எங்கள் உறுப்பினர்கள் அனைவரதும் ஏகோபித்த கருத்தையே வெளிக்காட்டி நின்றன. உண்மையைச் சுட்டிக் காட்டி நின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தெரிவே முதலமைச்சர் பதவி
அடுத்த குற்றச்சாட்டு என்னைத் தமது கட்சியே அரசியலுக்கு அழைத்து வந்ததென்றும் வடமாகாண சபையை நிர்வகிக்கின்ற பொறுப்பை கட்சியே கொடுத்தது என்றும் கூறியுள்ளார். இது தவறு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பல கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி. அது பதிவு படுத்தப்படாத கட்சி. என்னை வலிந்து பலரும் அரசியலுக்குள் அழைத்த போது சகல கட்சிகளும் சேர்ந்து என்னை அழைத்தால் அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாகக் கூறினேன். சகல கட்சித் தலைவர்களும் என்னை முதலமைச்சராக முன்னிறுத்துவது என்பதை ஏற்றுக் கொண்டார்கள். அதாவது இலங்கைத் தமிழரசுக் கட்சியும்இ ஏனைய கட்சித் தலைவர்களும் இணைந்து கூட்டாகவே குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தேர்தல் நடந்தது. 1இ33இ000க்கு மேலதிகமான வாக்குகள் கிடைத்தன. அதனால்த்தான் நான் வடமாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கப்பெற்றேன். ஏற்றுக் கொண்டேன். கௌரவ சுமந்திரன் கூறுவது போல் அவரின் கட்சி என்னைக் கூப்பிட்டு நாங்கள் இந்தப் பதவியை உங்களுக்குத் தருகின்றோம். எங்கள் கட்சிக்கு விஸ்வாசமாக நீங்கள் நடக்க வேண்டும் என்று நிபந்தனை இட்டு எனக்கு இப் பதவியை வழங்கவில்லை. ஆகவே கௌரவ சுமந்திரனின் 2ம் குற்றச் சாட்டு அஸ்திவாரமற்ற குற்றச் சாட்டு.
பொதுத் தேர்தலும் நிதி சேகரிப்பும்
அடுத்த குற்றச் சாட்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது கட்சிக்குச் சார்பாகச் செயற்படவில்லை என்பது. நான் ஏதாவது ஒரு கட்சியின் நடைமுறை உறுப்பினராக இருந்தால்த்தானே கட்சி என்னைக் கட்டுப்படுத்தலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதிவுபடுத்தப்படாத கட்சி. இலங்கைத் தமிழரசுக் கட்சியோ வேறேதேனுங் கட்சியோ என்னைத் தமது கட்சிக் கூட்டங்களுக்கு அழைக்கவுமில்லை. நான் போகவுமில்லை. திருகோணமலையில் நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைக்கப்பட்டேன். போனேன். என்னைப் பொறுத்த வரையில் வடமாகாண மக்களே. பெருவாரியாக எனக்கு வாக்களித்த அவர்;களேஇ எனது கட்சி. அவர்களின் நன்மையே எனது கட்சிக் குறிக்கோள். ஆகவே கட்சியே எனக்குப் பதவியைக் கொடுத்தது என்பதிலும் பார்க்க மக்களே எனக்கு அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்கள் என்பதே உண்மையாகும். நான் கேட்டு கட்சி எனக்கு ஒரு பதவியை வழங்குவதையும் கட்சி கேட்டு நான் மக்களிடம் வாக்குப்பெற்று பதவி பெறுவதையும் ஒன்றாகக் கருத முடியாது.
அடுத்து கனடா செல்லாமை பற்றிய குற்றச்சாட்டு. முதலில் பலர் கேட்ட போது எனக்கு முழங்கால் வலி இருந்தது உண்மை. எமது வைத்தியர்கள் காலக்கிரமத்தில் எனக்கு சிகிற்சை அளித்து அதிலிருந்து விடுவித்ததும் உண்மை. அதன்பின்னர் எனக்குச்; சுகமாக இருக்கவே நான் அமெரிக்கா சென்றதும் உண்மைதான். அமெரிக்கா சென்ற போது பல விடயங்களைக் கவனிக்க வேண்டியிருந்தது. அதே நேரம் இங்கிலாந்தில் உயிருடன் இருக்கும் எனது ஒரேயொரு சகோதரி நான் இங்கிலாந்து வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கிலாந்து செல்ல வேண்டி வந்ததும் உண்மை. அதனால் என்னால் கனடா செல்ல முடியாது என்று கூறியதும் உண்மை. அமெரிக்காவில் இருக்கும் போதே சில சரீர உபாதைகளுக்கு நான் உட்பட்டு இருந்தேன். எனவே கனடா சென்று வருவது என்பது எனக்குத் தேக அசௌகரியத்தையே தந்திருக்கும்.
அத்துடன் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பணம் திரட்ட வேண்டுமானால் அப்பணத்தைச் செலவழிக்கப் போகும் பாராளுமன்ற வேட்பாளர்களே அதைப் போய் கனேடிய மக்களிடம் கேட்டுப் பெற வேண்டுமே ஒளிய வடமாகாண சபையைச் சேர்ந்த நான் எப்படிக் கேட்பது? பணத்தைச் செலவு செய்யப் போகின்றவர்கள்இ அதற்குக் கணக்குக் காட்டப் போகின்றவர்கள்இ பணத்தை இலங்கைக்கு எடுத்துவரப் போகின்றவர்கள் ஒரு புறம் இருக்க என்னை அங்கு செல்ல வைப்பதற்கு கௌரவ சுமந்திரன் அவர்கள் ஊக்கம் காட்டியது எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை. உண்மையில் அவரின் கூற்றின்படி தேவையற்ற இனப்படுகொலைத் தீர்மானத்தை ஏக மனதாக வடமாகாணசபை நிறைவேற்றிய பின்னர் என்னைக் கனேடிய மக்கள் ஒதுக்கித்தள்ளியிருப்பார்கள் என்ற அவர் கருத்துப்படியான விதத்தில் அவர் என்னைக் கனடா செல்ல அழைத்ததே பிழையென்றுதான் கருத வேண்டும்.
தேர்தல்கால அறிக்கைகள்
அடுத்த குற்றச்சாட்டு கட்சிக்கு எதிராக அறிக்கை விட்டிருந்தேன் என்பது. அவ்வாறு நான் எந்தத் தருணத்திலும் அறிக்கை விடவில்லை. கட்சிகளைச் சேராத நான் நடுநிலையாக இருந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஐந்து அல்லது நான்கு கட்சிகள் சேர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அபிமானிகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்ட ஒரு தேர்தலில் நான் எவ்வாறு பாரபட்சம் காட்டி இன்னாருக்கு வாக்குப் போடுங்கள் என்று கேட்பது?
அப்படியானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கள் என்று கூறியிருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. இங்கு சில விடயங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இவ் வருடம் ஜனவரி மாதம் 8ந் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அடுத்த நாள் கௌரவ இரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார். கௌரவ சம்பந்தன், கௌரவ சுமந்திரன் சகிதம் நானும் சேர்ந்து கொழும்பு புலர்ஸ் லேனில் இருக்கும் கௌரவ மலிக் சமரவிக்கிரம அவர்களின் வீட்டில் கௌரவ இரணில் அவர்களைச் சந்தித்து அவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்தோம். அப்போது ஜேவிபியைச் சேர்ந்தவர்கள் கூட அங்கு வந்து அவருடன் கை குலுக்கினார்கள்.
வடக்கிலிருந்து இராணுவ வெளியேற்றம்
நாங்கள் அங்கிருந்து செல்கையில் கௌரவ இரணில் அவர்கள் என்னைப் பார்த்துக் கூறினார் - 'நான் நாளைக்கு மகாநாயக்க தேரருக்கு வடக்கிலிருந்து இராணுவத்தினர் எவரையும் அகற்றப் போவதில்லை என்று கூறப் போகின்றேன்' என்றார். பக்கத்தில் கௌரவ சம்பந்தன் அவர்களும் கௌரவ சுமந்திரன் அவர்களும் இருந்தார்கள். நான் அந்த நேரத்தில் எதையும் கூறவிரும்பவில்லை. சிரித்துவிட்டுத் திரும்பி வந்து விட்டேன். கௌரவ இரணில் அவர்களின் கூற்றின் தாற்பரியம் எனக்குப் புரிந்தது. அதாவது 'இராணுவத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மக்களுக்கு உதவுவதாக நான் முன்னர் உங்களுக்குக் கூறியிருந்தாலும் அதற்கு மாறாக நான் மகாநாயக்கருக்குத் தெரிவிக்கப் போகின்றேன்' என்பதே அது. அதாவது தமிழர்களுக்கு ஒரு முகம் காட்டிய நான் மகாநாயக்கருக்கு என் மறு முகத்தைக் காட்டப் போகின்றேன் என்பதே அவரின் கூற்றின் உள்நோக்கம்.
நான் அதன்பின் அதைப் பொருட்படுத்தவில்லை. அவரின் உறவினர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வடக்கு வந்து அதே கருத்தைத் தெட்டத் தெளிவாக இராணுவத்தினர் மத்தியில் கூறிய போதுதான் அதற்கு மறுமொழி கொடுத்தேன். அதாவது இந்தக் கருத்தை ஏற்கனவே எனக்குக் கௌரவ இரணில் அவர்கள் கூறிவிட்டார் என்றேன். யுஎன்பிஐ மாமன் மருமகன் கட்சி என்று முன்னர் அழைப்பார்கள். அதேபோன்று மாமன் கூறியதை வடக்கு வந்து மருமகன் கூறினார் என்றேன். ஆனால் உண்மையில் பல வயது வித்தியாசம் இருந்தாலும் கௌரவ இரணில் அவர்களின் ஒன்று விட்ட சகோதரரே தான் என்று கௌரவ ருவான் விஜேவர்தன எனக்குப் பின்னர் கூறியிருந்தார். நான் அவர் கூற்றை விமர்சித்துக் கூறியதில் கௌரவ ருவான் அவர்களுக்கு எந்தவித கோபமும் இல்லை.
கௌரவ இரணிலும் நம்மவர்களும்
அதன் பின் கௌரவ இரணிலிடம் இந்தியாவில் இராணுவம் பற்றி இவ்வாறு வடமாகாண முதலமைச்சருக்குக் கூறினீர்களா என்று கேட்டபோது என்னைத் தான் சந்திக்கவுமில்லை பேசவுமில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மறுமொழி அளித்தார். அதையுந் தாண்டி 'விக்னேஸ்வரன் ஒரு பொய்யர்' என்றும் கூறினார். அது பற்றி என்னுடன் இருந்த கௌரவ சம்பந்தனோஇ கௌரவ சுமந்திரனோ உண்மை என்ன என்பதைக் கூற முன்வரவில்லை. பேசா மடந்தைகளாக இருந்தார்கள். நான் மட்டும் இரண்டு மூன்று கிழமைகள் கழித்து 'நான் பொய்யரா இல்லையா என்பது பிரச்சனை இல்லை. இராணுவத்தினரை ஒரு திட்டத்தின் கீழ் குறைத்து வடமாகாணத்தில் இருந்து படிப்படியாக வெளியேற்றுவேன் என்று கௌரவ இரணில் அவர்கள் கூறட்டும். நான் அடுத்த நிமிடமே அவருக்குக் கைலாகு கொடுக்கின்றேன்.' என்றேன். இவ்வளவுக்கும் கட்சிக்கு நான் சார்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறும் கௌரவ சுமந்திரன் தமது கட்சி உறுப்பினர் என்று அவர் கருதும் எனக்குச் சார்பாக ஒரு வார்த்தைதானும் கூறினாரா? பணம் சேர்க்க நான் வேண்டும். பழி ஏற்கவும் நான் தான் வேண்டும் என்ற நிலையில்இ கௌரவ இரணிலின் நெருக்கமே தமக்குக் கூடிய முக்கியத்துவம் உடையதுஇ உறுப்பினர் உறவு முக்கியமில்லை என்ற நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் கௌரவ சுமந்திரனுடையதுதான்
மேலும் அண்மைய பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் கௌரவ சுமந்திரன் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் வரைவை எனக்கு அனுப்பிவிட்டு அது சம்பந்தமாக நான் எனது அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து எமது கருத்துக்களைத் தரவேண்டும் என்று நான் கூறியதன் பிற்பாடுகூட எம்மைப் புறக்கணித்து அடுத்த நாளே தனது வரைவைப் பத்திரிகைகளுக்கு 'இதுதான் எமது தேர்தல் விஞ்ஞாபனம்' என்று வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு? அத்துடன் ஐக்கிய இராஜ்யத்திற்குப் போன போது கௌரவ சுமந்திரன் அவர்கள் வடமாகாணசபையினருடன் கலந்தாலோசிக்காமல் அவர்களை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக மீள்குடியேற்றம் பற்றித் தமது கருத்துக்களை வெளியிட்ட பின் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
தான்தோன்றித்தனமான வேட்பாளர்கள் தெரிவு
மேலும் வடமாகாணசபையை உருவாக்கியபோது ஒவ்வொருவரின் திறமைகளையும் அனுபவத்தையும் தகைமைகளையும் அத்துடன் அரசியல் பின்னணிகளினால் ஏற்பட்ட சில கட்டுப்பாடுகளையும் மனதில் வைத்தே நான் எனது அமைச்சர்களைத் தெரிவு செய்தேன். அண்மைய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வேட்பாளர்களின் தகைமைகள்இ வாக்காள மக்களின் போரின் பின்னரான அவர்களின் தேவைகள், முன்னுரிமைகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அலசி ஆராய்ந்து வடமாகாணசபையினரின் இருவருட அனுபவத்தின் அடிப்படையில் எவ்வௌர்களை நியமிப்பது என்ற விடயத்தை வெறும் சம்பிரதாயத்திற்காகவேனும் எமது வடமாகாணசபையினருடன் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகவே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தச் சூழ்நிலையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
அரசியல் தீர்வு பரம இரகசியம்
மேலும் வடமாகாணசபையினருடன் கலந்தாலோசியாமல் தான்தோன்றித்தனமாக சிங்கப்பூரில் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் அரசியல் தீர்வு பற்றியும் கௌரவ சுமந்திரன் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டார். அது பற்றி இது வரையில் எந்த விதமான கருத்துப் பரிமாற்றமும் நடைபெறவில்லை. தான்தோன்றித்தனமாக அவர் நடக்கையில் நான் நடுநிலை வகித்ததில் என்ன தப்பு?
உள்ள10ராட்சி அமைச்சர் என்ற வகையில் நான் ஊழல் நிறைந்த சில உள்ள10ராட்சி மன்றங்களைச் செயலற்றதாக்க வேண்டியிருந்தது. செயலாளரைத் தாக்கிய ஒரு பிரதேசசபைத் தலைவர் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. பிழையான வேட்பாளர்களைத் தேர்தல்களில் நிறுத்துவதால்த்தான் இப்பேர்ப்பட்ட நிகழ்வுகள் நடக்க வேண்டி வந்தது. தகைமை, தரம், அறிவு, நேர்மை போன்றவை வெறும் வாய்ச் சொற்களாக இருக்கப்படாது. தகைமையுடையோரையே நாங்கள் வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும். ஆகவே அவ்வாறான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியதில் என்ன தப்பு?
மாண்புமிகு ஜனாதிபதி சிறிசேன அவர்கள்கூட பல கட்சிகள் சேர்ந்த தமது கூட்டணியினரின் தேர்தலில் நடுநிலைமை காத்தார். அதில் என்ன தப்பு?
பத்திரிகையாளர்கள் விடுத்து விடுத்து ஏன் நடுநிலைமை வகிக்கின்றீர்கள் என்று கேட்ட போது இவற்றைக் கூற விரும்பாமல்த் தான் 'நான் ஊமை' என்று கூறினேன்.
அடுத்த குற்றச்சாட்டு என்னுடைய தேர்தலின் போதான இரு அறிக்கைகள் தெளிவாக மாற்றுக் கட்சிகளைச் சுட்டிக் காட்டுபவையாக அமைந்தன என்பது.
நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், வல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது மாற்றுக் கட்சியையே சுட்டிக் காட்டியது என்றால் எமது கூட்டுக் கட்சியில் நல்லவர்களும் வல்லவர்களும் நேர்மையானவர்களும் இல்லை என்றா கௌரவ சுமந்திரன் அவர்கள் கூறுகின்றார்?
பாராளுமன்றத் தேர்தலும் நாமும்
ஒரு வேளை வீட்டில் முடங்கிக் கிடக்காது வேளைக்குச் சென்று வாக்களியுங்கள் என்று நான் கூறியதற்கு அவர் தானாக அளித்த வியாக்கியானத்தை அவர் குறிப்பிடுவதாக இருந்தால் எனக்கு அப்பேர்ப்பட்ட எண்ணம் எதுவும் அவ் அறிக்கையை வெளியிடும் போது இருக்கவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருந்திருந்தால்இ நான்; எவ்வாறு கூறியிருக்க வேண்டும்? உங்கள் வீடுகளை விட்டுச் சைக்கிளில் பிரயாணஞ் செய்து சென்று வாக்களியுங்கள் என்று கூறியிருக்க வேண்டும். கௌரவ சுமந்திரன் அவர்கள் தான் தரும் வியாக்கியானந்தான் உண்மை நான் கூறும் உண்மை உண்மையல்ல என்று அடம் பிடிப்பது அவருக்கு அழகல்ல.
ஜூலை மாதம் 17ந் திகதி இங்கிலாந்து ஹரோவில் பல தரப்புக்கள் இணைந்து என்னை அழைத்திருந்தார்கள். எனது செவ்வி படமாக்கப்பட்டு பல நாடுகளிலும் காட்டப்பட்டது. மாற்றுக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்குத் திட்டவட்டமாக நான் கூறிய பதில் 'நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை' என்பது. இது வரையில் அவ்வாறே நான் இருந்து வருகின்றேன். கட்சித் தலைமைத்துவம் தாம் எண்ணுவதே சரியென்று நினைக்கஇ அதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதென்றால் எமது கருத்து கட்சியைப் புறக்கணித்ததாக அமையாது. ஒரு வேளை கட்சி சில விடயங்ளை அபிமானிகளிடையே அல்லது அனுசரணையாளர்களிடம் ஒரு முறையான நியாயமான தீர்மானத்திற்கு விட்டால் அவர்களில் பெரும்பான்மையோர் கட்சித் தலைமையின் கருத்து பிழையென்று கூறக் கூடிய சந்தர்ப்பங்கள் கூட எழலாம். கொள்கைகளில் இருந்து பிறழாத வலுமிக்க நேர்மையான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறியது ஒரு போதும் கட்சிக்குப் பாதகமான கருத்தாக எடுக்கப்பட முடியாது. அது கட்சியை வலுவேற்றும் ஒரு அப்பியாசமாகவே கருதப்பட வேண்டும்.
உட்கட்சி ஜனநாயகமே கட்சியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்
பொதுவாகக் கட்சிகள் பற்றி எனக்குப் பல கருத்துக்கள் உண்டு. கட்சி என்பது அதன் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்க வேண்டும். சில கருத்துக்களைப் பெரும்பான்மையினரின் வாக்கின் மூலம் நிராகரிக்கலாம். ஆனால் ஒரு கட்சியானது அதன் உறுப்பினர்களின் கருத்தறிந்து நடக்க வேண்டும். கட்சியின் தலைமைத்துவம் தான்தோன்றித்தனமாக நடக்க முனைவது கட்சிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். மேலும் வடமாகாணம் பற்றிய கருத்துக்களைக் கட்சி வெளியிட முன்னர் வடமாகாணசபை உறுப்பினர்களுடன் தலைமைத்துவமானது கலந்துறவாட வேண்டிய ஒரு கடப்பாடும் அதற்கு உண்டு.
வடமாகாணசபையின் அலுவலர் நியமனங்கள் பற்றி நேரடியாக எமது அலுவலர்களுக்கு கட்சி சார்பில் கருத்துக்களை வழங்கி வடமாகாண மக்கட் பிரதிநிதிகளை உதாசீனம் செய்வதும் வரவேற்கத்தக்கதல்ல. இவை அனைத்தையும் நான் கட்சித் தலைவருக்கு எழுத்து மூலம் சென்ற ஏப்ரல் மாதந் தொடக்கம் தெரிவித்து வந்துள்ளேன். ஒரு கடிதத்திற்கு அவர் பதிலும் அளித்துள்ளார். மேலும் அண்மையில் கௌரவ சம்பந்தன் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட போது அவருக்கு என் மனமுவந்த வாழ்த்தைத் தெரிவித்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடகிழக்கு மாகாணசபைகளின் உறுப்பினர்களும் சேர்ந்து ஒருமித்துஇ எமக்கு வாக்களித்துத் தெரிவு செய்த மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்க ஆவன செய்யவேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்திருந்தேன். இப்பொழுதும் அக் கடிதங்களுக்கு அவரிடம் இருந்து பதிலை எதிர்பார்த்தே இருக்கின்றேன்.
ஆகவே கௌரவ சுமந்திரன் அவர்கள் தமக்குக் கட்சியில் இதுகாறும் இருந்த மதிப்பு குறைகின்றதே என்ற ஆதங்கத்தில் அதற்கு என்னைப் பலிக்கடாவாக்க முனைவது வருத்தத்திற்குரியது. எனினும் அவர் எனது பழைய மாணவர் என்ற விதத்தில் அவருக்கு இறைவன் ஆசி என்றென்றும் இருப்பதாக என்று பிரார்த்திக்கின்றேன். என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
அமெரிக்காவின் 51 ஆவது மாநிலத்தை பார்க்க சமந்தா இலங்கை வருகிறாரா?
18/11/2015 அமெரிக்காவின் 51ஆவது மாநிலமான இலங்கையை பார்வையிடுவதற்கு ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் வருகிறார்.
இவரது வருகைக்கு எமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கையில் புலி ஆதரவாளர்களைச் சந்திக்கும் சமந்தா பவர் ஏன் முஸ்லிம்,சிங்களத் தலைவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளவில்லையென்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உதய கம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஐ.நா.விற்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சமந்தா பவருக்கு ஐ.நா.விலும் அமெரிக்காவிலுமே கடைமைகள் உள்ளன. ஆனால் இதனைக் கைவிட்டு அவர் எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவ் விஜயத்தை அரசாங்கம் இரகசியமாக வைத்துள்ளது. வெளியில் வெளியிடவில்லை. இங்கு வரும் சமந்தா பவர் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன்இ வட மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரையே சந்திக்கின்றார்.
இவர்கள் அனைவரும் நாடு பிரிவதற்கு ஆதரவானவர்கள். சமந்தாவும் விடுதலை புலி ஆதரவாளர். மனித உரிமைகள் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்துபவர். இவ்வாறான ஒருவர் புலிகளின் அரசியல் பிரிவாக இயங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மட்டும் சந்திக்கின்றார்.
வடக்கிலிருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸை சந்திக்கவில்லை. அதேபோன்று பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் தொடர்பில் பேச சிங்களத் தலைவர்களைச் சந்திக்கவில்லை.
அத்தோடு புலிகளுக்கு எதிராக குரல்கொடுத்து பாதிக்கப்பட்ட தமிழ் தலைவர்களையும் இவர் சந்திக்கவில்லை. எனவே சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கவே அவர் இங்கு வருகிறார்.
இலங்கை இன்று அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறியுள்ளது. அரசு நாட்டை அமெரிக்காவிற்கு அடிமையாக்கியுள்ளது. எனவே தங்களது மாநிலத்தை பார்வையிடவே அவர் வருகிறார் என்றும் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார். நன்றி வீரகேசரி
2000 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கி வைப்பு
17/11/2015 வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 2000 இலங்கையருக்கு இரட்டை பிரஜா உரிமை இன்று வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெற்றது.
“ வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளை மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும் நல்லிணக்கத் திட்டம் ” என்ற தொனிப்பொருளில் இவ்வாறு 2000 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை வழங்கப்பட்டது.
1987ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கும் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் இதுவரையில் 40 000 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இரட்டை பிரஜா உரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்து.
இவ்வாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இத்திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதற்கு முன்னர் நடைபெற்ற இரு விழாக்களின் போது சுமார் 600 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
திருமலையில் இரகசிய முகாம் : ஐ.நா.குழு
19/11/2015 திருகோணமலை கடற்படை முகாமுக் குள் இரகசிய தடுப்பு முகாம் ஒன்று இருப்பதை நாங்கள் அவதானித்தோம். நாம் அவதானம் செலுத்திய பகுதியில் 12 அறை
கள், எந்தவிதமான ஏற்றுக்கொள்ளப்பட்ட வசதிகளுமின்றி காணப்பட்டன. 2010 ஆம் ஆண்டு வரை இதில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம். இது தொடர்பில் புலனாய் வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளின் முடிவுகள் தொடர்பில் நாம் அதிக கரிசனை செலுத்தியிருக்கிறோம் என்று ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் குறித்த செயற்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
2008 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்ட 11 பேர் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இந்த இரகசிய முகாமுக்கு கொண்டு
செல்லப்பட்டிருப்பார்களா என்பது தொடர்பிலும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் எனவும் காணாமல் போனோர் குறித்த ஐ.நா.வின் செயற்குழுவின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டம், சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கிவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தக்குழு வலியுறுத்தியது. அத்துடன் காணாமல் போனோர் குறித்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மூலமான விசாரணைகள் சர்வதேச பங்களிப்புடன் இடம் பெறவேண்டும். எனவும் அவர்கள் கூறினர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பான செயற்குழு பிரதிநிதிகளான . பேனார்ட் டுகைமி, டயி உம் பைக், ஏரியல் டுலுட்ஸ்கி ஆகியோர் நேற்று தமது விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டனர்.
காணாமல் போனோர் குறித்த ஐக்கியநாடுகள் செயற்குழுவின் பிரதிநிதிகள் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்:-
சந்திப்புக்கள்
நாம் இலங்கை விஜயத்தின் போது அரச அதிகாரிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள், பாதிக்கப்பட்டோர் என பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். கொழும்பு, மட்டக்களப்பு, காலி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார். மாத்தளை, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு நாங்கள் விஜயம் மேற்கொண்டோம். அத்துடன் ஜனாதிபதி , பிரதமர், அமைச்சர்கள், இராணுவத் தளபதி, பிரத நீதியரசர், சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், தேசிய புலனாய்வு சேவையின் பணிப்பாளர், சி.ஐ.டி.என். உப பணிப்பாளர், வடக்கு, கிழக்கு ஆளுநர்கள், புனர்வாழ்வு அமைப்பின் தலைவர், காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட மாத்தளை, மன்னார் பகுதிகளுக்கும் பூசா முகாமுக்கும், திருகோணமலை கடற்படை முகாமுக்கும், சி.ஐ.டி. மற்றும் டி.ஐ.டி. கட்டிடங்களுக்கும் விஜயம் செய்தோம்.
வாக்குறுதிகள் போதும்
செயற்படுத்துங்கள்
விசேடமாக எமது குழுவானது காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. பல சந்திப்புக்களை நடத்தின. இலங்கையின் புதிய அரசாங்கம் பல வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. அந்த வாக்குறுதிகள் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயலுருவாக்கம் பெறவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் உரிமையை புறம் தள்ளி நல்லிணக்கத்தை அடைய முடியாது. இலங்கையில் பலவந்தமான காணாமல் போன சம்பவங்கள் பல திட்டமிட்ட வகையில் இடம்பெற்றன. யுத்தத்தின் போதும், யுத்தத்தின் பின்னரும் பலவந்தமான ஆட்கடத்தல் இடம் பெற்றன.
இராணுவ பிரசன்னத்தை குறையுங்கள்
வடக்கு, கிழக்கில் அதிக பட்ச இராணுவப் பிரசன்னமானது சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. எனவே வடக்கு, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைப்பதன் மூலம் சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும் என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். தற்போது இந்த விடயங்களை ஆழமாக ஆராய்ந்து உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கைக்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது.
பாதிக்கப்பட்டோரின்
ஆலோசனையை பெறுங்கள்
எனவே முன்னெடுக்கப்படும் எந்தவொரு பொறிமுறையும் பாதிக்கப்பட்ட மக்களின் ஆலோசனையுடனேயே மேற்கொள்ளப்படவேண்டும். சிவில் சமூகத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டோர் காணாமல் போனோரின் உறவினர்கள், எந்தவிதமான அச்சமும் , அச்சுறுத்தலும் இன்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டும். ஆனால் இவ்வாறான தரப்பினர் மீது சில அச்சுறுத்தும் செயற்பாடுகள், பாலியல் வன்முறைகள், மேற்கொள்ளப்படுவதாக எமது குழுவிற்கு தகவல் கிடைத்தது. புலனாய்வுப் பிரிவினராலும் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக எமது ஐ.நா. குழுவை சந்தித்த பாதிக்கப்பட்ட சிலர் பாதுகாப்பு தரப்பினரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இவை ஜனநாயக சமூகத்தில் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துவதற்கும் இவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குறியதாக ஆக்கப்படுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
பாதுகாப்பு வழங்குங்கள்
எம்மை சந்தித்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பை வழங்குமாறும், அவர்களை எவ்விதமான பழிவாங்கல்களுக்கும் உட்படுத்த வேண்டாம் என அரசாங்கத்தை கோருகிறோம். உண்மையைக் கண்டறியும் செயற்பாட்டின் வெற்றியானது பாதிக்கப்பட்டோர். மற்றும் அவர்களின் உறவினர்களின் உணர்விலேயே தங்கியுள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
கடந்த சில வருடங்களாக 12 ஆயிரம் சம்பவங்கள் தொடர்பில் நாம் அரசாங்கத்தை அறிவுறுத்தியுள்ளோம். அவற்றில் 5750 சம்பவங்கள் இன்னும் நிலுவையிலுள்ளன. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் திட்டமிடப்பட்ட கடத்தல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக வெள்ளை வேன் கடத்தல்கள், மற்றும் கப்பத்திற்கான கடத்தல்கள் என்பன இடம் பெற்றுள்ளன. இலங்கையில் எமக்குக் கிடைத்த தகவல்களின் படி உலகத்திலேயே இரண்டாவது அதிகூடிய தரவை இங்கு பெற்றிருக்கின்றோம். அண்மைக்காலமாக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளை வரவேற்கின்றோம். புலிகள் தரப்பிலும் பல, கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.
உண்மையை கண்டறியும் உரிமை உள்ளது
கடத்தல்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உண்மையைத் தெரிவதற்கான உரிமை உள்ளது. எந்தவொரு செயற்பாடும் அனைத்துவகையாலும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயப்படவேண்டும். அங்கு அநீதி இடம் பெற முடியாது. காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்த போது நாம் பாரிய கவலைக்குரிய கதைகளை செவிமடுத்தோம். ஆழமான மற்றும் வருந்தத்தக்க கதைகள் நம்மை வந்து சேர்ந்தன. மிக அண்மைக்காலம் வரை இலங்கையில் கடத்தல்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இது போன்ற செயற்பாடுகள் மீண்டும் இடம் பெறாத வாறு நடவடிக்கை எடுக்கப்படுதல் மிகவும் அவசியம்.
விசாரணைகள் இல்லை
ஆயிரக்கணக்கான காணாமல்போனோர் சம்பவம் தொடர்பில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படவும் இல்லை. எனவே தற்போது அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வாக்குறுதி அளித்துள்ளவாறு காணாமல் போனோர் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டியது அவசியமானதாகும்.
வாக்குறுதி அளித்தது போதும் தற்போது செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். நம்பிக்கைக்குரிய நடவடிக்கைகளும் உறுதியான முடிவுகளும் தேவைப்படுகின்றன. அதற்கு உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. காணாமல் போனோர் செயற்குழு தயாராக இருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச தரங்களுக்கு அமைவாக உருவாக்கப்படவில்லை. அந்த சட்டமானது பலவந்தமாக காணாமல் போகும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கிறது. எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு எமது குழு பரிந்துரை செய்கிறது.
இரகசிய முகாம்
எமது குழுவானது திருகோணமலை கடற்படை முகாமிற்கு விஜயம் செய்தது. அங்கு 12 அறைகளைக் கொண்ட ஒரு இரகசிய தடுப்பு முகாமை நாம் கண்டோம். 2010 ஆம் ஆண்டுவரை இதில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கிறோம். இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளின் முடிவுகள் தொடர்பில் நாம் அதிக கரிசனை செலுத்தியிருக்கிறோம் 2008 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்ட 11 பேர் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இந்த இரகசிய முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பார்களா என்பது தொடர்பிலும் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
நீதிக்காக நீண்டகாலம்
காணாமல் போனோரின் உறவினர்கள் நீதிக்காக நீண்டகாலம் காத்திருந்து விட்டனர். எனவே அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும். எனவே காணாமல் போனோர் குறித்து அரசாங்கம் உடனடியாக கொள்கை ஒன்றை தயாரித்து மிகவும் சுயாதீனமாக விசாரணைகளை புதிய நிறுவனமொன்றின் ஊடாக முன்னெடுக்கவேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் காணாமல் போனோர் குறித்த அலுவலகம் ஒன்றை அமைக்கவுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு ஐ.சி.ஆர்.சி. உதவி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகத்தின் ஊடாக முறையான மற்றும் உண்மையைக் கண்டறியும் விசாரணைகள் நடத்தப்படவேண்டும். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையைக் கண்டறிய வேண்டும். விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தேவையா ன ஏற்பாடுகளை செய்து கொடுக்கவேண்டும்.
நம்பிக்கையின்மையை போக்குங்கள்
இந்த விசாரணை செய்யும் அமைப்பானது தொழில்நுட்ப ரீதியாகவும், சுயாதீனமாகவும் பக்கச்சார்பின்றி தொழிற்சார் ரீதியில் செயற்படவேண்டும். சிங்கள, தமிழ், ஆங்கிலமென அனைத்து மொழிகளிலும் செயற்பாடுகள் இடம் பெறவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிடம் பாரிய நம்பிக்கையின்மை இருப்பதை நாம் காண்கின்றோம்.இவ்வாறு நம்பிக்கையின்மை இருப்பதால் பொறிமுறையானது பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி முன்னெடுக்கப்படவேண்டும். அதுமட்டுமன்றி உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அரசாங்கம் அமைக்கவுள்ளதாக அறிந்தோம். இந்த ஆணைக்குழுவானது உண்மையைக் கண்டறியும் செயற்பாட்டில் முக்கிய வகிபாகத்தை வகிக்கும் என நம்புகிறோம்.
இலங்கையில் 91 ஆம் ஆண்டிலிருந்து 11 ஆணைக்குழுக்கள் விசாரணை நடத்தியுள்ளன. இவற்றில் அதிகமானவை சுயாதீனத் தன்மை குறித்து விமர்சனங்களை கொண்டிருந்தன. சில ஆணைக்குழுக்கள் முன்வைத்த பரிந்துரைகள் கூட அறிமுகப்படுத்தப்படவில்லை. இதை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும்.
பரணமகம ஆணைக்குழு
நாங்கள் பரணகம ஆணைக்குழுவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்த ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் அரசாங்கத்தின் காணாமல் போனோர் குறித்து உருவாக்கவுள்ள அலுவலகம் தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த ஆணைக்குழுவின் அனைத்து கோப்புக்கைளயும் அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்து அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் மிகவும் வலிமையாக பரிந்துரை செய்கின்றோம்.
மாத்தளை மன்னார் எழும்புக்கூடுங்கள்
எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்ட மன்னார், மற்றும் மாத்தளைப் பகுதிக்கு நாம் விஜயம் செய்தோம். இந்த விடயத்தில் தடையவியல் விசாரணைகளில் முன்னேற்றம் தேவைப்படுகின்றது. குறித்த பகுதிகளை உரிய முறையில் பாதுகாக்கவேண்டும். இந்த விடயத்தில் தொழில் சார் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இந்த விடயத்தில் மேற்கொள்ளப்படும் டி.என்.ஏ. பரிசோதனை தொடர்பில் கரிசனை கொள்கிறோம். பரிசோதனைகளை மேற்கொள்ளும் அமைப்புக்கள் பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிஸாரின் அழுத்தத்திலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.
விசாரணை பொறிமுறை
நம்பிக்கையளிக்கவேண்டும்
இலங்கையின் போர்க்குற்ற விடயத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டு கலப்பு நீதிமன்றதை அமைத்து விசாரணை நடத்துமாறு ஐ.நா. மனித உரிமை பேரவை பரிந்துரை செய்திருந்தது. இந்த நீதி விசாரணை தொடர்பான எந்தவொரு தீர்மானமாக இருந்தாலும் அது அனைத்து இலங்கை மக்களுக்கும் நம்பிக்கையளிப்பதாக இருக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் அதில் நம்பிக்கை கொள்ளவேண்டும். சர்வதேச மனித உரிமை சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் என்பவை மதிக்கப்படவேண்டும்.
எமது குழுவிற்கு சாட்சியமளித்த மக்கள் நீதி நிர்வாகம் தொடர்பில் தமது நம்பிக்கையின்மையை வெளியிட்டனர். எனவே விசாரணைகள் நிபுணத்துவ வழக்கறிஞர்களால் தொழில்சார் ரீதியில் முன்னெடுக்கப்படவேண்டும்.
பாதுகாப்பு தரப்பினரின் தலையீடு வேண்டாம்
இந்த விசாரணை செயற்பாடுகளில் பாதுகாப்பு தரப்பினரின் தலையீடு இருக்கக்கூடாது. விசாரணை செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்யும் பாதிக்கப்பட்டவர்கள் சி.ஐ.டி. மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல்போன சம்பவங்களினால் அதிகமான பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் பல்வேறு சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். மனைவிமார், தாய்மார், சகோதரிகள், மகள் மார் என பலர் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் தமது வேதனைகளையும், பொருளாதார கஷ்டங்களையும் எம்மிடம் தெரிவித்தனர். இலங்கையின் நீதி முறைமை மற்றும் வழக்காடும் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அரசாங்கம் மேற்கொள்ளும் செயற்பாடு நம்பிக்கைக்குரியதாக இருக்கவேண்டும்.
கேள்வி:- திருமலை இரகசிய முகாமில் சித்திரவதைகள் இடம் பெற்றுள்ளனவா?
பதில்:- அது பற்றி எம்மால் கூற முடியாது. இந்த இரகசிய முகாம் குறித்து சி. ஐ.டி. விசாரிக்கிறது. இரகசிய முகாமில் ஒரு அறையின் சுவரில் 2010 என எழுதப்பட்டிருந்தது. எனவே 2010 ஆம் ஆண்டுவரை இங்கு ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இப்பகுதியில் நிலக்கீழ் அறைகளும் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. நாம் 12 அறைகளை பார்த்தோம். அந்த அறைகள் ஒரு தடுப்பு முகாமுக்கு இருக்கக்கூடிய எவ்விதமான அடிப்படை வசதிகளை கொண்டிருக்கவில்லை.
கேள்வி:- அண்மைக்காலத்தில் இந்த இரகசிய முகாமில் ஆட்கள் தடுத்து வைக்கப்படவில்லையா?
பதில்:- அவ்வாறு நாம் அவதானிக்கவில்லை. அண்மைக்காலத்தில் யாரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கமாட்டார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.
கேள்வி:- எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என கருதுகிறீர்கள்?
பதில்:- அது எமக்குத் தெரியாது. ஆனால் 2008 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து கடத்தி செல்லப்பட்டவர்கள் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த கோணத்திலும் விசாரணை இடம் பெறுகின்றன.
கேள்வி: நீங்கள் யாருடைய அழைப்பில் இங்கே வந்தீர்கள்?
பதில்:- நாங்கள் அரசாங்கத்தின் அழைப்பில் வந்தோம். நாங்கள் விசாரணை நடத்த வரவில்லை. மாறாக மதிப்பிடவே வந்துள்ளோம். எனவே அரசியல் அறிக்கைகளை நாம் விடுக்கமாட்டோம். எனவே நாங்கள் மனித உரிமை பேரவையின் ஒரு அங்கமல்ல. மாறாக ஐ.நா. வின் சுயாதீனமான ஒரு அமைப்பு. நன்றி வீரகேசரி
இலங்கை பெண்ணை கல்லால் அடித்து மரணத்தை ஏற்படுத்துமாறு தீர்ப்பு
19/11/2015 கள்ளக் காதல் விவகாரம் ஒன்றில் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கை பணிப் பெண்ணொருவருக்கு கல்லால் அடித்து மரணத்தை ஏற்படுத்துமாறு சவூதி அரேபிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணொருவருக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பை சவூதி அரேபிய நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் அவருடன் பாலியல் ரீதியாக உறவு வைத்திருந்ததாக கூறப்படும் விவாகமாகாத பிறிதொரு இலங்கை இளைஞருக்கு 100 கசையடிகள் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் சவூதி நீதிமன்றில் இடம்பெற்ற போது இந்த இலங்கை பெண் தான் குறித்த இளைஞருடன் உறவு கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்ய அவகாசம் உள்ள நிலையில், மேன்முறையீட்டினைச் செய்து தேவையான சட்ட உதவிகளை வழங்கி குறித்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டதண்டனையை குறைக்க அல்லது ரத்துச் செய்ய சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான ஆலோசனைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் ஆலோசனை தூதரகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது. நன்றி வீரகேசரி
தாய்லாந்து துணை பிரதமர் - ஜனாதிபதி சந்திப்பு
19/11/2015 இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து துணை பிரதமர் விஸானு க்ரேயா நகாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்துத்து கலந்துறையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்றுமாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment