தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்
உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்
அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய நிஷா இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
வித்தியா கொலை வழக்கு : டீ.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவு
த.தே. கூட்டமைப்பு - அமெரிக்க உதவிச் செயலாளர் சந்திப்பு
ஓமந்தையில் சோதனைச்சாவடி நடவடிக்கைகள் இடை நிறுத்தம்
தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல்
24/08/2015 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில், கதிர்காமதம்பி துரைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இருவரின் பெயர்கள் இன்று தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார்.
இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்ற தமிழ் அரசுக் கட்சி,
யாழ்ப்பாணத்தில் 5 ஆசனங்களையும், வன்னியில் 4 ஆசனங்களையும் மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும் அம்பாறை மற்றும் திருகோணமலையில் தலா 1 ஆசனத்தையும் பெற்று இருந்தது.
14 ஆசனங்களை தன் வசப்படுத்திய தமிழ் அரசுக் கட்சிக்கு மேலதிகமாக 2 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களை பெற்றுள்ளது. நன்றி வீரகேசரி
உடன் பிறப்புகளை இழந்த சகோதரனின் கதறல்
25/08/2015 பாடசாலைக்கு சென்ற எனது சகோதரன் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு பலஇடங்களிலும் தேடினோம் . இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம் என கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ந.சிவலிங்கம் தமது சகோதரர் தொடர்பான விடயத்தினை கண்ணீர்மல்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளியில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது 255 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. இதன் போது பதியப்பட்ட முறைப்பாட்டிலேயே மேற்கண்ட சாட்சியம் முன்வைக்கப்பட்டது.
குறித்த சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
'நடராஜா செந்தூரன் (19) எனது இளைய சகோதரர் பாடசாலைக்கு செல்லும் போது 2000.11.19 ஆம் திகதியன்று காணமால் போயிருந்தார்.
அருகில் உள்ள கறுவாக்கேணி வித்தியாலயத்திலே கல்வி பயின்று வந்தார். காலை 8 மணிக்கு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு கவலையுற்று பல இடங்களிலும் தேடினோம் பலன் கிடைக்கவில்லை.
இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம்.
எனது சகோதரனின் சடலத்தினை ஏறாவூர் வைத்தியசாலையில் இருந்தே பெற்றுக் கொண்டோம். இது வரைக்கும் எனது சகோதரன் யாரால் கொல்லப்பட்டார் என அறியமுடியவில்லை.
அக்காலப்பகுதியில் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்களும் இருந்தன. இதேபோன்று எனது மற்றைய சகோதரர் ந.பரமேஸ்வரன் (29) 2005 காலப்பகுதியில் காணமல் போயிருந்தார்.
மாவடிவேம்பு வந்தாறுமூலைக்கு மேசன் தொழிலுக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரையும் யார் கொலை செய்திருப்பார்கள் என்று அறியமுடியாமல் போய்விட்டது.
இதேபோன்று எனது மூத்த சகோதரர் ந.விணாயகமூர்த்தி (31) 1985 இல் காணாமல் போனார். கும்புறுமூலை பகுதிக்கு வழக்கம் போல் மீன்வியாபார நடவடிக்கைக்காக சென்ற வேளை காணாமால் போயிருந்தார்.
இவரை அக்காலப் பகுதியில் அங்கிருந்த இராணுவத்தினரே பிடித்து சென்றார்கள் என அப்பகுதி பொது மக்கள் சிலர் தெரிவித்தனர்.
இது மட்டுமல்லாமல் 1989 ஆம் ஆண்டு எனக்கு 18 வயது இருக்கும் போது இரவு நேரத்தில் வீடு வந்த சிலர் வளவின் கதவினை உடைத்து அம்மாவை அழைத்து தலையில் வெடி வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
நானும் எனது சகோதரங்களும் அம்மா இல்லாமல் மிக துன்பப்பட்டு வாழ்ந்தோம். இவ்வாறன நிலையிலேயே எனது சகோதரர் 3 பேர்களையும் எனது சகோதரியின் கணவரையும் இழந்துள்ளோம்." என கவலையுடன் தெரிவித்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 1081 முறைப்பாடுகளில் ஆணைக்குழு சாட்சி விசாரணைகளை மேற்கொணடு வருகிறது.
களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளியில் இடம்பெற்ற காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது 255 புதிய முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய நிஷா இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு
26/08/2015 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரி க்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இலங்கையின் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தென்னிலங்கை தரப்புக்களை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிஷா தேஷாய் பிஷ்வால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள் ளார்.
நேற்று அதிகாலை இலங்கை வந்தடைந்த நிஷா தேஷாய் பிஷ்வால் முதல் சந்திப்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சு நடத்தினார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவும் கலந்துகொண்டார்.
இதன்போது புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணையின் அறிக்கை தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கை சில தினங்களில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அந்த விடயம் தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அரசாங்க பிரதிநிதிகளும் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஷ் வால் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்தும் இந்த சந்திப்பின்போது பிரஸ்தாபிக்கப்பட்டு ள்ளது.
இது இவ்வாறு இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நிஷா பிஷ்வாலுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதன்போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணையின் அறி க்கை குறித்தும் அரசியல் தீர்வு செயற்பாடு தொடர்பாகவும் பேசப்படும் என எதிர்பார் க்கப்படுகின்றது.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இதன்போது அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருக்கு தெளிவுபடுத்தப்படும் என் றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரியாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இல ங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேர ணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடு கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப் பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வித்தியா கொலை வழக்கு : டீ.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவு
27/08/2015 பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினதும் டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் ஊடகப் பேச்சாளருமான ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
குறித்த கொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
த.தே. கூட்டமைப்பு - அமெரிக்க உதவிச் செயலாளர் சந்திப்பு
26/08/2015 தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது, தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் கடந்த தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொழும்பில் இன்று சுமார் ஒன்றறை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கை குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
ஓமந்தையில் சோதனைச்சாவடி நடவடிக்கைகள் இடை நிறுத்தம்
30/08/2015 வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஏ–9 வீதிச்சோதனை நடவடிக்கைகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
1997ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஓமந்தையில் பிரதான வீதி ஊடான பாதை மறிக்கப்பட்டு, வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மாற்று வழியூடாக இதுவரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment