ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 1 - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

.


தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் என்ற எனது நூல் மறுபதிப்பு பெற்றபோது நூலுக்கு அணிந்துரை தருமாறு நீண்டகால நண்பர் ரோசிரியர் மௌனகுருவை நாடினேன் அவர் “ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் என்று எழுதியது மட்டுமல்லாது எனது நீண்ட கால நாட்டிய அனுபவத்தைத் திரட்டி ஒரு பாரிய நூலாக எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாரிய நூலாக எழுதும் எண்ணம் எனகில்லாத போதும் எனது அனுபவங்கள் பதியப்பட வேண்டியதே. நான் ஏனையோரில் இருந்து வேறுபடக் காரணமாக இருந்த எனது சிந்தனை சமூகக் கண்ணோட்டம் எனது நாட்டியத் தயாரிப்பில் நான் கையாண்ட வழிவகைகள் யாவும் நாட்டிய உலகின் வளர்ச்சிக்கு வேண்டியதே என்பதை உணர்ந்தேன்.

நாட்டிய கலாகேசரி பத்மபூசன் வளுவூர் இராமையா பிள்ளை அவர்களிடம் நாட்டியத்தை முறையாக கற்று அவர் நட்டுவாங்கத்துடன் பல கச்சேரிகள் செய்து பலரின் அபிமானத்தைப் பெற்றவள் நான். முதலிலே உலகம் என்னை திரும்பிப் பார்க்க காரணமாக இருந்தது எனது முதல் தயாரிப்பான கானகம் ஏகிய ராகவன் என்ற நாட்டிய நாடகமே. கொழும்பு St Bridgats Convent  கல்லூரி நிகழ்ச்சிக்காக 1974இல் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக கானகம் ஏகிய ராகவன் என்ற நாட்டியத்தை தயாரித்தேன். இராமாயணத்தில் பால இராமன் தவறுதலாக மந்தரையைத் தாக்கியது முதல் கைகேயி வரத்தால் தசரதன் உயிர் பிரிதல் தொடர்ந்து இராம இலக்குவர் சீதையுடன் கானகம் ஏகல் இதுவே நாட்டிய நாடகம். பரத நாட்டியத்தைக் கற்றவர் நளினம் மிகுந்த பெண்மை பொருந்திய பரதம் ஆண்பாத்திரத்தைப் படைப்பதற்கு உதவாது என்பதை உணர்ந்திருந்தேன்.



எனது நாட்டிய தயாரிப்பின் முன் நண்பர் மொனகுருவின் சங்காரம் என்ற கூத்தைப்பார்த்து வியந்தேன். அது என்னுள் ஒரு புதிய விளிப்பை ஏற்படுத்தியது. ஆண்பாத்திரத்தைப் படைப்பதற்கு எம்மிடையே சிறந்த ஆடல் வகை உண்டு என உணர்ந்த நான் வட மோடி நாட்டுக்கூத்தைக் கற்று பயன்படுத்த எண்ணினேன். மௌனகுருவின் உதவியை நாடினேன் மனமுவந்து மகிழ்ச்சியுடன் கைகொடுத்தார். தசரதன் சபைக்கு வருதல் விசுவாமித்திரருடன் இராம இலக்குமணர் காட்டுக்குச் செல்லும் காட்சி குதிரையில் செல்வதாக அமைத்து வடமோடியின் ஆடலைப் பயன்படுத்தினேன்
யாகம் காத்தல் பால இராம லக்குவர் காப்பதற்கு ஆரம்பித்து வேகமாக மேடையை வளைத்து ஆடிவரும்போது உள்ளே செல்ல கணப்பொழுதில் வளர்ந்த இளைஞராக இராமஇலக்குவர் தோன்றுவது பலத்த கரகோசத்துடன் ரசிக்கப்பட்டது. அத்தனையும் வடமோடி ஆடலே. இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் பல இராமாயண நாட்டியங்களைப் பார்த்துள்ளேன். எதுவும் இத்தனை அருமையாக அமையவில்லை. இத்தனைக்கும் காரணம் எமது முதிசமான வடமோடி ஆடலே. நாட்டியத்தை முறையாக பலகாலம் பயிற்சி பண்ணிய நாம் வடமோடியை ஆடும்பொழுது அதன் கலை அழகு ஆடலில் வெளிப்படும். வடமோடி ஆடலுக்கான சொல்லுக்கட்டு கர்னாடக சங்கீதத்துடன் இணையும்போது மேலும் மெருகு பெறுவதை அவதானிக்கலாம். வடமோடி ஆடல் சாஸ்திரீய ஆடலே அதற்கான இசை கிராமிய மெட்டில் அமையும்போது அந்த ஆடல் செப்பனில்லாதது போன்ற எண்ணம் ஏற்பட காரணமாகிறது. எமது பாரம்பரிய சொத்தான வடமோடி ஆடலை எமது ஆடற்கலைஞர் முறையாக பயன்படுத்தாவிட்டால் அது கலைஞரின் தவறே. இதற்கு எம்மிடம் காணப்படும் அறியாமையே காரணம். பரத நாட்டியமே தெய்வீகம் என்போர் ஒரு புறம் பரதத்தின் தூய்மை கெடக்கூடாது என்போர் மறுபுறம். பெண்மைக்குரிய நளினமான பரதத்தை மட்டுமே கற்று நாட்டிய நாடகம் தயாரிப்போர் என எம்மவர் குளம்பியவண்ணமே உள்ளனர். 1974 இல் இருந்து எனது தயாரிப்புக்களில் வடமோடி ஆடலைப் பயன்படுத்தியே வருகிறேன்.

Anandarani , Damyandran 
St Bridgats Convent  மண்டபத்தில் கானகம் ஏகிய ராகவன் நாட்டியத்தைப் பார்த்த பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா தினசரி வாரமஞ்சரி 03.11.1974 இல் பரதக்கலையில் ஒரு பரிசோதனை என எழுதினார்.
நாட்டுக்கூத்து வேறு பரதநாட்டியம் வேறு என எண்ணாது இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட கலை வடிவத்திற்கு சவாலாக அமையும் வகையிலேயே சாஸ்திரீய பரதத்தையும் நாட்டுக்கூத்தினையும் இணைக்கும் இந்த துணிகர பரிசோதனையில் ( இதைச்செய்யக்கூடியவரும் கார்த்திகாவேதான்) ஒரு புதுமையையும் உறுதியையும் காணமுடிந்தது.இத்தகைய இணைப்பு பல ரசிகர்களையும் கவரும் என்பது இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் நன்கு புலப்படுகிறது. இதற்கு உதவியாக ஈழத்து இரத்தினம் இயற்றிய பாடல்கள் அமைவது குறிப்பிடத் தக்கது. கார்த்திகாவின் பரிசோதனை நம்மிடையே நாட்டிய நாடகத்தின் வடிவத்தை மாற்றுவதற்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகின்றது. நாட்டியம் எனும்போது மொழிமூலம் அவரின் இராமாயணம் எனக்கு உணர்த்தியவை அளப்பரியன.

ஈழத்து இரத்தினத்தின்பாடல் வரிகட்கு இசை அமைத்திருந்தவர் பிச்சையப்பா அவர்கள்.
அயோத்தியின் மன்னனுக்கு
அரும் புதல்வனோ நீ
அம்பினால் அடித்து என்னை
அழவைத்தது அழகுதானோ
அழகு மா நகரை நீயும்
ஆள்வதோ தர்மம் எங்கே
அடிபட்ட நோவை நானும்
ஏன்றுமே மறக்க மாட்டேன்

பிரபல எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் மகள் குந்தவி மந்தரையாகவும் யோகினி இரத்தினசபாபதி இராமராகவும் நிருபா நடராஜா சீதையாகவும் ஆடியிருந்தார்கள்.
1975 இல் முழு நீள இராமாயணம் 2 மணி நேர நாட்டியமாக தயாரித்தேன். இரண்டாவது பகுதிக்கான பாடல்கள் மௌனகுருவால் எழுதப்பட்டன.

இராமதூதனாக அனுமன் இலங்கை செல்லல்
மகேந்திர மலைக்கு மேலே மாருதி காலை ஊன்றி உலகத்தைத் திரும்பிப்பார்த்து. உதைத்ததுமே வான் எழுந்தான்
ராம ராம ராம

இராவணன் சன்னியாசியாகபிச்சை கேட்கிறான் யாரும் இல்லா நேரத்தில் நான் தனிமையில் இருக்கும்போது இங்கு வந்த நீயார் என சீதை வினவ தன் சுயருபத்தைக் காட்டிய இராவணன்
அண்ட பகிரண்ட முதல்
எண் திசையும் உள்ளவர்
அடிபணிவர் நாளும் என்னை
அற்பச் சிறுக்கி நீ
ஆர் என்று கேட்கிறாய்
ஆகா நீ அறியாதவள்
இன்றே இடம் பெயர்த்து
இலங்காபுரி கொண்டு
ஏகுவேன் உன்மீதாணை
இலங்கேஸ்வரன் நான்
இலங்கேஸ்வரன்
இன்றே அறிந்து கொள் நீ
இராவணனின் அட்டகாச சிரிப்பு மண்டபத்தை அதிரவைக்கும். எனது தங்கை உஷாவே முதலில் இராவணனாக நடித்தவர். இந்தக்காட்சி மிகப் பயங்கரமாக அமையும். ஒரு முறை உஷா கொழும்பு இராமகிறிஸ்ண மண்டபத்தில் ஆடியபோது ஒரு சிறுமி வீல் என பயத்தில் அலறத்தொடங்கிவிட்டாள். அந்த சிறுமியின் தந்தையார் சிறுமி மேடையைப் பார்கா வண்ணம் பின்பக்கமாக அழைத்துச் செல்ல இராவணனாக ஆடிய உஷா சிறிது காற்றைச் சுவாசிக்க ஒப்பனை அறை வெளியே வந்தார். அதைக்கண்ட சிறுமி மேலும் பயத்தில் அழுதாள். தந்தையார் உஷாவைக் காட்டி அவர் நல்ல அங்கிள் பயப்படாதே என்றார். எமது ஒப்பனைக்கும் நடிப்புக்கும் இது ஒரு எடுத்துக்காட்டு. சினிமா ஒப்பனைக் கலைஞர் செல்வராஜாவே எமது ஒப்பனைக் கலைஞரும்.
இந்த தயாரிப்பிலே ஆனந்தராணி ராஜரத்தினமே ( இன்று பிரபல நாடக நடிகையாக இருக்கும் ஆனந்தராணி பாலேந்திரா) இராமராக ஆடியிருந்தார். சீதையாக ஆனந்தராணி சிவசுப்பிரமணியமும் மந்தரையாகவும் அனுமனாகவும் குந்தவி கணேசலிங்கனும் கைகேயி சூர்ப்பனகையாக யோகினி ரத்தினசபாபதியும் ஆடியிருந்தனர்.இராவணன் தசரதனாக உஷா நாதன் ஆடியிருந்தார்.

Amilthan, Viyajan, Janananthan 


இராம இராவண யுத்தம் வடமோடி ஆடலாகவே அமைக்கப்பட்டிருந்தது. மௌனகுருவின் பாடல்.
உலகத்தை வென்று ஆண்ட
ஒரு தனி செம்மல் நெஞ்சில்
பலம் மிக்க அம்பு பாய்ந்து
பறித்ததே உயிரை அம்மா
புகளோடு கிளைஞரோடு புன்னகையோடு
வாழ்ந்த நிகரில்லா மன்னன் வீழ்ந்தான்
நிலமகள் தழுவிக் கொண்டாள்.
இராவணன் அம்பு பட்டு துடிப்பது பின் அம்பை கையில் பிடித்தவாறு சரிவது இராவணனுடைய கிரீடம் முதலிலே விழும் பின் முழங்காலில் அமர்ந்து துடிப்பது நிலமகள் தழுவிக்கொண்டாள் எனும் சமயம் நிலத்திலே விழவது மிக மிக சோகமான காட்சியாக அமையும்.

1974 முதல் 1983 வரை இனக்கலவரத்தால் நான் சென்னை செல்லும் வரை வருடா வருடம் இராமாயணம் மேடையேறியது. எனது மாணவியர் ஆடிவந்தனர். சிங்களப் பெண்கள் ஆண்பாத்திரத்தை ஆட விரும்புவதில்லை அதற்கமைய நானும் எனது இராமாயணத்தை ஆண்களையே ஆண்பாத்திரம் ஏற்று ஆடவைத்தேன். எனது மகன் அமிழ்தன் இராமனாகவும் தபேந்திரன் இராவணனாகவும் ஆனந்த ராணி சீதையாகவும் பல தடவைகள் மேடை ஏறினார்கள். சென்னையிலும் இராமாயணம் மேடை ஏறியது.
சிட்னியில் 2005 ம் ஆண்டும் 2010 இலுமாக இருதடவைகள் மேடையேறியது. அமிழ்தன் இராமன் பத்மஸ்ரீ இராவணன் மதுமதி சீதை சிவசம்பு பிரபாகரன் வசிட்டர் என ஆடினார்கள். பிறிசாந்தி கைகேகியாகவும் அனுமனாகவும் இரு வேடங்கள் ஏற்ரார். நிஷ்மி குணசிங்கம சர்மிலா குணசிங்கம் சகோதரிகள் பால இராம இலக்குவராக ஆடினார்கள்;. இவ்வாறு பலராலும் போற்றப்பட்டு பலதடவைகள் மேடை ஏறிய இராமாயணங்களைப்பற்றிய சில விமர்சனங்களைத் தருகிறேன்.

தினகரன் வாரமஞ்சரி 22.05.1975 இல் சரியான பாதையிலே என்ற தலைப்பில் திரு பந்துலு ஜெயவர்த்தனா எழுதியது இவர் சிங்கள நாடக ஆசிரியர். கலா விமர்சகர் பௌத்த கலைக்களஞ்சியத்தின் துணை ஆசிரியர்.
புதிய பரிசோதனையாளருள் திருமதி கார்த்திகா கணேசர் முக்கியமானவர். இவரது முயற்ச்சி கூர்ந்து கவனிக்கத்தக்கது.பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தெளிவும் நுண் அறிவும் அவரிடம் உண்டு. இவருடைய நாட்டிய நாடகங்களில் ஒன்றான இராமாயணம் புதுமையையும் பழமையையும் அர்த்த நிறைவுடன் இணைக்கும் போற்றத்தக்க ஒரு முயற்சி. மரபையும் படைப்பூக்கத்தையும் ஒன்றிணைப்பதன் மூலமாகவே புதியதொரு கலை உருவாகும் என்பதுஅவரின் நம்பிக்கை. அவருடைய எழுத்துக்கள் இதனைத் தெளிவாக காட்டுகிறது.இராமாயண நாட்டியத்திலே அவர் வடமோடி அம்சங்களைப் பயன் படுத்தியது அவரின் உன்னத அரங்க உணர்வைக் காட்டுகின்றது.
தினகரன் வார மஞ்சரி 22.05.1977இல் இராமாயணம் காலத்தை வென்றதொரு கலை வடிவம்.


பரதக் கலை வல்லுனரான திருமதி கார்த்திகா கணேசர் பரத கலையின் சிறப்பை மட்டுமன்றி எமது பண்டைய கூத்து வடிவங்களின் வலுவையும் பயனையும் எமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். கார்த்திகா தயாரித்த இராமாயணத்திலே நாடகத்திற்குரிய இயல்புகள் துல்லியமாக தெரியும் வண்ணம் ஆடல் வகைகளும் இசையும் பாடல்களும் முக்கூட்டாக நின்று வெற்றியுடன் இயங்கின. இங்கு பரத நாட்டிய ஆடல் முறைகளும் வடமோடி ஆடல் வடிவங்களும் ஒரே சுருதியுடன் இயல்பாக இணைந்து காணப்பட்டமை போற்றுதற்குரிய தொன்றாகும்.

Observer Saturday Magazine 20.12.1980
Karthiga Kanesar a student of the great Ramiahpillai of Madras is an acknowledged exponent of the age old intricate art of Barata Natyam. She has chosen to move out of the Barata Natyam and adopts elements of folk dance and drama to her dance dramas, seeing the rich heritage of dancing in the traditional theater of tamils of srilanka. She adapted dance forms of the Koothu and incorporated them in her Ramayana presented in 1974. Adapted by are exponent of a classical art. These folk elements appeared more elegant and graceful giving greater dimension to the drama. Karthiga Kanesar had made her own special contribution to the development of dance forms in this country.

இவ்வாறு ஏனையவர்களிலிருந்து நான் வேறுபடுவதற்கான பின்னணி என்ன என்பதை பின் ஆய்வோம்.
தொடரும்




1 comment:

மெளனகுரு said...

கார்திகாவின் பணிகள் முக்கியமனவை.
கார்த்திகாவோடு இணைந்து பணி புரிந்த அந்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன.கார்த்திகா தொடக்கி வைத்த மரபு
தொடராமைக்குரிய காரணம் ஆராயப் படவேண்டும்..