சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் திருமணம்
லொறியின் பின்னால் மறைந்திருந்த 26 சட்டவிரோத குடியேற்றவாசிகள்
பெண்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட தம்பதியினர் கைது : கொலை செய்த பெண்ணின் குழந்தைக்கும் உணவு உண்ண கொடுத்த அதிர்ச்சி
10 வருட இராணுவ சேவையிலிருந்து விடைபெற்றார் இளவரசர் ஹரி
சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் திருமணம்
15/06/2015 சுவீடன் இளவரசர் கார்ல் பிலிப் முன்னாள் தொலைக்காட்சி நட்சத்திரமும் மொடல் அழகியுமான சோபியா ஹெல்க்விஸ்ஸுடன் ஸ்டொக்ஹோமிலுள்ள அரண்மனை தேவாலயத்தில் சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார்.
சோபியா (30 வயது) தொண்டு ஸ்தாபனமொன்றை உருவாக்குவதற்கு உதவுவதற்கு முன்னர் மேலாடையின்றித் தோன்றும் மொடல் அழகியாகவும் யோகா ஆசிரியராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கார்ல் பிலிப் (36 வயது) அந்நாட்டின் முடிக்குரிய வாரிசுகள் வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.திருமணத்திற்கு பின்னர் மேற்படி புதுமணத் தம்பதியினர் குதிரை வண்டியில் நகரினூடாக ஊர்வலமாக சென்றனர். இந்த திருமணத்தையொட்டி 21 மரியாதை வேட்டுகள் தீர்க்கப்பட்டன.
மேலும் இந்தத் திருமணத்தில் ஜப்பானிய இளவரசி தகமடோ மற்றும் பிரித்தானிய இளவரசர் எட்வார்ட் உள்ளடங்கலான அரச குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 550 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். சுவீடன் அரச குடும்பத்தின் பிரபலம் வீழ்ச்சியடைந்து வருவதாக கருத்துக்கணிப்பு வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்ற போதும், பெருந்தொகையான மக்கள் ஊர்வலமாக சென்ற அரச குடும்ப புதுமணத் தம்பதியைக் காண வீதிகளில் கூடியிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இளவரசர் கார்ல் பிலிப்பும் சோபியாவும் 2010 ஆம் ஆண்டில் உணவகமொன்றில் முதன் முதலாக சந்தித்தனர். அந்த சந்திப்பு பின்னர் காதலாக மலர்ந்தது. நன்றி வீரகேசரி
லொறியின் பின்னால் மறைந்திருந்த 26 சட்டவிரோத குடியேற்றவாசிகள்
18/06/2015 பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்த லொறியொன் றின் பின்புறத்தில் 26 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மறைந்திருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அந்த லொறியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி லொறி தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து அது கேம்பிரிட்ஜிலுள்ள ஏ 1 நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது.
அந்த லொறியில் பயணித்த குடியேற்றவாசிகளில் ஐவர் நீரின்றி மயக்க நிலைக்கு உள்ளான நிலையில் காணப்பட்டனர். அவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட் டனர்.
தொடர்ந்து டோவர் பிராந்தியத்தைச் சேர்ந்த 54 வயது லொறி யின் சாரதி சட்டவிரோத ஆட் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட் டில் கைதுசெய்யப்பட்டார். நன்றி வீரகேசரி
பெண்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட தம்பதியினர் கைது : கொலை செய்த பெண்ணின் குழந்தைக்கும் உணவு உண்ண கொடுத்த அதிர்ச்சி
18/06/2015 பிரேசில் நாட்டில் 3 பெண்களை கொலை செய்து அவர்களை சமைத்து சாப்பிட்ட ஒரு கணவனும் இரு மனைவி மார்களும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கொலை செய்யப்பட்ட பெண்களில், ஒரு பெண்ணின் மாமிசத்தை அப் பெண்ணின் குழந்தைக்கும் உண்பதற்கு கொடுத்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
பிரேசில் நாட்டின் குவாரன்ஹன்ஸ் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஜோர்ஜ் பெல்ட்ரோவ் நீகுரோமாண்ட் மற்றும் 54 வயதுடைய அவருடைய மனைவி இசபெல் ஆகியோருக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக குழந்தை இல்லை.
இந்நிலையில் ஜோர்ஜ் மற்றொரு பெண்ணை 2ஆவது மணம் முடிப்பதற்கு அவரது மனைவி இசபெல் உதவி செய்துள்ளார்.
இதனையடுத்து இளம் மனைவி (வயது 28) புரூனா மற்றும் முதல் மனைவி இசபெல் ஆகியோருடன் ஜோர்ஜ் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
எனினும், புரூனா வழியாகவும் கடந்த சில வருடங்களாக ஜோர்ஜுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், வீட்டிற்கு முன் உள்ள வீதி வழியே செல்லும் இளம்பெண்களை அவர்கள் தங்களது பேச்சாற்றலால் ஈர்த்து தங்களது வீட்டிற்கு அழைத்து வந்து பழகியுள்ளனர்.
இதன்பின்பு ஜோர்ஜ் மற்றும் அவரது 2 மனைவிகளும் சேர்ந்து குறித்தப் பெண்களை கொலை செய்து சமைத்து உண்டுள்ளனர். பெண்களை கொலை செய்தபின் அவற்றை வெங்காயம், பச்சை காய்கறிகளை சேர்த்து சமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவர்களது பேச்சாற்றலுக்கு ஈர்க்கப்பட்டு கொலையான அனைவரும் 17, 20 மற்றும் 21 வயது கொண்ட இளம்பெண்கள் ஆவர்.
கொலை செய்தவர்களில் 17 வயதுடைய ஜெசிகா என்ற இளம்பெண்ணுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையை அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்து பாசம் காட்டி வளர்த்து வந்துள்ளனர். அதனை தங்களது குழந்தையாக மாற்ற முயற்சி செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாகவே ஜெசிகாவை அவர்கள் கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளனர்.
இதற்கு அடிப்படை காரணம் 2ஆவது மனைவி புரூனா என ஜோர்ஜ் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் சமைத்த பின் ஜெசிகாவின் மாமிசத்தை அவரது குழந்தைக்கும் ஊட்டியுள்ளனர்.
ஜோர்ஜின் முதல் மனைவி இசபெல் மாமிசத்தை சந்தேகப்படாமல் கடைகளில் விற்று வந்துள்ளார். 3ஆவது பெண்ணை கொன்ற பின் அவரது கடன் அட்டையை பயன்படுத்தியபோது பொலிஸாரிடம் குறித்த 3 பேரும் அகப்பட்டனர்.
ஜோர்ஜ் கைது செய்யப்பட்டு 23 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். ஜோர்ஜ், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியவர். இதேவேளை கராத்தேவில் கறுப்பு பட்டியும் வாங்கியுள்ளதோடு இக்கலை தொடர்பாக மாணவர்களுக்கு வகுப்புகளையும் நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
10 வருட இராணுவ சேவையிலிருந்து விடைபெற்றார் இளவரசர் ஹரி
21/06/2015 இளவரசர் ஹரி பிரித்தானிய இராணுவத்தில் இருந்து நேற்றுமுன்தினம் விடைபெற்றார் என்று அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பிரித்தானிய இராணுவத்தில் பணியாற்றிவந்த இளவரசர் ஹரி நேற்றுமுன்தினம் விடைபெற்றார்.
இதையடுத்து, அவர் விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான திட்டங்களுக்காக ஆபிரிக்கா செல்லவுள்ளார். அங்கு அவர் மூன்று மாதங்கள் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைதளமான கென்சிங்க்டன் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது. ஹரி முழுமையாக தனது பணிகளை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், அவரது தந்தை சார்ள்ஸ் மற்றும் அவரது அண்ணன் வில்லியம்ஸை போல் அவரும் வனவிலங்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதாகவும், எதிர்வரும் 3 மாதங்கள் அவர் ஆபிரிக்காவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment