பொ.கருணாகரமூர்த்தி யுடன் ஒரு மாலைப் பொழுதில்

.



"சிதிலமடைந்து கிடந்த அந்த வீட்டின் இடிந்த சுவர்களும் வீட்டுத் திறப்பும்தான் மீந்திருந்தன." தனது வீட்டைப் பற்றி ஒருவர் சொல்லியது அது.

மிக அழகாகவும் நுணுக்கமாகவும் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளின் பின்னால் மறைந்திருந்த ஆழ்துயரை விளங்கிக் கொள்ள முடியாத இலங்கைத் தமிழன் எவனும் இருக்க மாட்டான். போர் அந்தளவிற்கு ஒவ்வொருவனையும் கசக்கிப் பிழிந்திருந்தது.
ஆனால் இந்த வீடு சிதிலடைந்து கிடந்ததற்குக் காரணம் போரையோ அந்நிய இராணுவத்தையோ குறைசொல்ல முடியாதுதான் மிகப் பெரிய அவலம்.





அந்த வீட்டிலிருந்து களவாடப்பட்ட தளபாடங்களும் கதவுகளும் நிலைகளும் ஓடுகளும் தெற்கு நோக்கிப் பயணிக்கவில்லை. 'உள்ளிருந்து கொல்லும் நோய் போல' இந்த இனத்திலேயே பிறந்தவர்களின் ஈனச் செயலாக இருந்தது. அவர்கள் வீட்டிற்கு மிகத் தொலைவில் இல்லாத வீடுகளில்தான்  அவை சங்கமமாகியிருந்தன என்பதை அறிந்து போது மனம் வெதும்பியது.



ஜேர்மனியிலிருந்து வரும் முன்னரே தான் வருவது பற்றியும் தனது நூல் அறிமுக விழாக்களை வடக்கிலும் கிழக்கிலும் செய்ய இருப்பதாகக் கூறிய புலம்பெயர் எழுத்தளரான பொ.கருணாகரமூர்த்தி அவர்களை, அவர் மீண்டும் ஆகாய விமானத்தில் ஜேர்மன் புறப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர்தான் சந்திக்க முடிந்தது.


ஒரு சில மணி நேர கால அவகாசத்துடன் கூடிய அறிவிப்பை ஏற்று சில நண்பர்களே நிகழ்வில் கலந்து கொண்டார்கள். மேமன்கவி, கே.எஸ்.சிவகுமாரன், ஜின்னா ஷெரிபுதீன், சுதாராஜ், தயாபரன் வசந்தி தம்பதிகள், சோமசுந்தரம், சக்திவேல், போன்றவர்கள் கலந்து கொண்ட ஒன்று கூடல் நிகழ்வில் நானும் இணைந்து கொள்ள முடிந்தது.


மேமன் கவியின் சுருக்கமான தலையுரையைத் தொடர்ந்து ஆரோக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது. அந்த நேரத்திலேயேதான் முதலில் குறிப்பட்ட விடயம் சொல்லப்பட்டது.

புலம்பெயர்வு ஆரம்பமாகி  மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. புலம் பெயர்ந்த பல மூத்த எழுத்தாளர்கள் இன்று இல்லை. புலம் பெயர்ந்த போது தமது தாய் மண்ணின் நினைவுகளை இலக்கியமாக்கிய காலம் மறைந்து செல்கிறது.  புலம் பெயர்ந்த மண்ணில் எதிர்நோக்கும் பண்பாட்டு கலாசார முரண்களை படைப்பது பரவலாக வரவேற்பைப் பெறுகிறது.


புலம்பெயர்தவர்களின் இளவல்கள் தாம் சேர்ந்த நாட்டின் மொழியில் பாண்டித்தியம் பெற்று அவற்றிலேயே எழுதுவது அங்கொன்று இங்கொன்றாக கண்ணில் படுகிறது.

'புலம் பெயர் தமிழ் இலக்கியம்' என்று இப்பொழுது போற்றப்படுவது இனிவரும் காலங்களில் 'புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கியமாக' வேற்று மொழிகளில் வெளிவருவதைப் பார்த்து திருப்திடைய வேண்டியிருக்கும் என்ற கருத்து அந்தக் கலந்துரையடல் ஊடாக மேலெழுந்து வந்தது.

புலம் பெயர்ந்தவர்களின் பரம்பரையில் வந்த இளம் பிள்ளைகள் பெரும்பாலும் தாய் மொழியான தமிழைப் பேச முடியாது இருப்பதுடன் தமிழ் பண்பாடு பாரம்பரியம் போன்றவற்றை அறியாமல்  கடைப;பிடிக்காமல் இருக்கிறார்கள் என்ற கவலையை பலர் வெளிப்படுத்தினார்கள்.

மாறாக, வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்தபோதும் தமிழ் மொழியைப் பேசுவதுடன் பண்பாட்டு அம்சங்களையும் அச்சொட்டாகப் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள் என உதாரணத்தோடு சொல்லப்பட்டது.

மேலைத்தேயத்தின் வாழ்க்கை முறையும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் மிகுந்த சுதந்திரமும் அங்குள்ள சட்டங்களும் பெற்றோர்களால் ஓரளவிற்கு மேல் பிளள்ளைகளுக்கு அவற்றை திணிக்க முடியாததாக இருப்பதும் சுட்டிக் காட்டப்படது.

இன்று கொழும்பிலேயே தமிழ் பேச முடியாத புதிய பரம்பரை சர்வதேசப் பாடசாலைகள் ஊடாக உருவாகி வருகையில் காலத்துடன் ஒட்டி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது பற்றியும் குறிப்பிட்டார்கள்

இன்று படைப்புலகில் பல "இசங்கள்" பற்றிப் பேசப்படுகின்றவே. உங்கள் படைப்புகள் எந்த வகையைசச் சாரும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.



"நான் எந்தக் கருத்து நிலையையும் முன் நிறுத்திப் படைப்பாக்கம் செய்வதில்லை. எனது மனதைப் பாதித்தித்தவற்றை அது மற்றவர்களுக்கச் சொல்லப்பட வேண்டும் என்று எண்ணம் எழும் இடத்து மட்டும் எழுதுகிறேன். அது எந்த வகையான படைப்பாக இருக்க வேண்டும் என்று முற்கூட்டித் திட்டமிடுவதில்லை. எதையும் வாசகனிடம் திணிக் வேண்டும் என்றும் எழுதுவதில்லை" எனப் பொருள் படும் வண்ணம் சொன்னார்.

"ஆனால் அவை அறத்தை மீறக் கூடாது" என்பதில் கவனம் கொள்கிறேன்" என்றார்.

தனது சமூகத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர் அவர். அதன் முன்நோக்கிய நகர்வுக்கு தன்னால் ஆன பங்களிப்பை சிறப்பாகச் செய்யும் ஒரு படைப்பாளி பொ.கருணாகரமூர்த்தி என்ற எமது எண்ணம் பொய்யானதல்ல.

"பெர்லின் நினைவுகள்" "அனந்தியின் டயறி" ஆகிய அவரது இரு புதிய நூல்களை முன்வைத்தே கலந்துரையடல் நடைபெற்றது.காலச்சுவடு வெளியீடுகளான அவை மிக நேர்த்தியான அமைந்துள்ளன. பெர்லின் நினைவுகள் நூலில் பொருத்தமான புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Nantri:http://suvaithacinema.blogspot.com.au/

No comments: