கென்னடி, சே குவேரா, காஸ்ட்ரோ, தொலைக்காட்சி… - ஞாநி

 




புரட்சி, ஆயுதப் போராட்டம் போன்றவற்றில் எல்லாம் ஆர்வமுடைய இளைஞர்களுக்கு உலகம் முழுவதும் ஆதர்சமான முகம் சே குவேரா. தேர்தல் அரசியல், ஜனநாயகம், நல்லாட்சி போன்றவற்றில் ஈடுபாடுடைய நடுத்தர வகுப்புக்கான சே குவேரா ஒருவர் உண்டென்றால், அது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி. இருவரும் வசீகரமான தோற்றம் உடையவர்கள் என்பதால், ஏறத்தாழ சினிமா நட்சத்திரங்களின் கவர்ச்சி அந்தஸ்தை அடைந்தவர்கள். இருவருக்குள்ளும் மற்றபடி எந்த ஒற்றுமையும் கிடையாது.
சே குவேராவும் கென்னடியும் சம காலத்தவர்கள். ஃபிடல் காஸ்ட்ரோவும் சேவும் புரட்சியை வழிநடத்தி 1957-ல் கியூபாவை விடுவித்தபோது, கென்னடி அமெரிக்க செனட்டராக இருந்தார். அடுத்த நான்கு ஆண்டுகளில் கென்னடி அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இளம் அதிபரானபோது அவருக்கு வயது 43. சேவுக்கு வயது 33.
கியூபப் புரட்சியும் கென்னடியும்!



ஜனாதிபதியான நான்கே மாதங்களில் கென்னடி கியூபா மீது ரகசியத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இது அவருக்கு முந்தைய ஜனாதிபதி காலத்திலேயே திட்டமிடப்பட்டுவிட்டது. பே ஆஃப் பிக்ஸ் தீவில் அமெரிக்க வீரர்கள் 1,500 பேர் இறக்கப்பட்டார்கள். ஆனால், அப்போது சேவின் வழிகாட்டுதலில் இயங்கிவந்த கியூப ராணுவம், அதில் சுமார் 500 பேரைக் கொன்றது. மீதி 1,000 பேரும் கைது செய்யப்பட்டார்கள். கென்னடி கியூபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை மீட்க வேண்டியிருந்தது. மொத்தம் 5 கோடி டாலர்கள் மதிப்புக்கு உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் கியூபாவுக்குக் கொடுத்துத் தன் சிப்பாய்களை மீட்டது அமெரிக்கா.
சே குவேரா 1961-ல் கென்னடிக்குக் கிண்டலான நன்றிக் கடிதம் ஒன்று அனுப்பினார். “எங்கள் புரட்சி முடிந்த பின்னர், அது நிலைகொள்ளாமல் தள்ளாடிக்கொண்டிருந்தது. நீங்கள் நடத்திய தாக்குதலின் உதவியால் இப்போது எங்கள் புரட்சி மக்களிடையே நிலைப்பட்டுவிட்டது. நன்றி.” கென்னடி இதற்கு எதுவும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை.
நன்றிக் கடிதம் மட்டுமல்ல... சே குவேராவும் அமெரிக்க அதிபர் கென்னடியின் உரைகளை எழுதுபவருமான ரிச்சர் குட்வின்னும் ரகசியமாக பிரேசிலில் சந்தித்துப் பேசினார்கள். அமெரிக்காவும் கியூபாவும் ஏதேனும் நல்லிணக்க உறவுக்கு வர முடியுமா என்று விவாதித்தார்கள். புகழ் பெற்ற ஹவானா சுருட்டுகளை கென்னடிக்குப் பரிசாக அனுப்பிவைத்தார் சே. அவரும் ரிச்சர்டும் விவாதித்தது போன்ற எந்த உடன்பாட்டுக்கும் இரு நாடுகளும் வரவே இல்லை. சுருட்டை தான் புகைப்பதற்கு முன்னால் ரிச்சர்டைப் புகைத்துக் காட்டும்படி கென்னடி ரிச்சர்டிடம் கிண்டல்செய்தார். காரணம், காஸ்ட்ரோவைக் கொல்ல அவர் புகைக்கும் சுருட்டில் குண்டுவைக்கும் ஒரு திட்டத்தை சி.ஐ.ஏ. தீட்டியிருந்தது. தொடர்ந்து, அமெரிக்க சி.ஐ.ஏ. காஸ்ட்ரோவைக் கொல்வதற்காகப் பல சதிகள் செய்தது. கியூபாவில் சோவியத் யூனியன் அமெரிக்காவை நோக்கி ஏவுகணைகளை நிறுவியது, கென்னடி அரசை மூன்றாம் உலகப் போருக்கும் முதல் அணுகுண்டு யுத்தத்துக்கும் கொண்டுவிட்டுவிடும் அளவுக்கு மூன்று நாடுகளிடையே சிக்கலை ஏற்படுத்தியது. யுத்த விளிம்பில் சமரசத்துக்கு வந்தார்கள். ஏவுகணைகள் அகற்றப்பட்டன. நான் அவற்றை அமெரிக்கா மீது நிச்சயம் பயன்படுத்தியிருப்பேன் என்று பின்னாளில் சே சொன்னார்.
எனவேதான் 1963-ல் டல்லாஸ் நகரில் திறந்த காரில் ஊர்வலமாக வரும்போது கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டதும், முதல் சந்தேகம் கியூபா மீது எழுந்தது. ஆனால், பின்னர் நடைபெற்ற பல்வேறு விசாரணை கமிஷன்களின் அறிக்கைகள் இந்தக் கொலையில் கியூபா, சோவியத் யூனியன், சி.ஐ.ஏ. ஆகியவற்றுக்கெல்லாம் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறிவிட்டன.
ஆனால், படுகொலை நிகழ்ந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் கென்னடி கொலை மர்மங்கள் நீடிக்கின்றன. எதிர்ப்புறக் கட்டட மாடியிலிருந்து சுட்ட ஆஸ்வால்ட் தனியொருவனாக கென்னடியைச் சுட்டிருக்க முடியாது என்றே கருதப்படுகிறது. ஆஸ்வால்டைச் சில தினங்களிலேயே நீதிமன்ற வாசலில் ரூபி சுட்டுக்கொன்றது, எதை மறைக்க என்பது இன்னும் விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஹாலிவுட் எட்டுத் திரைப்படங்களை எடுத்திருக்கிறது.
ஃபிடலின் சாட்சியம்
சே, கென்னடி இருவரும் கொல்லப்பட்டு விட்டார்கள். ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு இப்போது 87 வயது. கென்னடி கொலைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அண்மையில்கூடச் சொன்னார். ஆனால், சி.ஐ.ஏ-வும் கியூப எதிரிகளும் கென்னடியைக் கொல்ல சதிசெய்திருக்கலாம் என்பது அவர் கருத்து. கியூபா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருந்தபோது கென்னடி அதைச் செய்யத் தவறியதால், சி.ஐ.ஏ-வுக்கு அவர்மீது கோபம் என்பது காஸ்ட்ரோ பார்வை. நிச்சயம் ஆஸ்வால்ட் கென்னடியைக் கொன்றிருக்க முடியாது என்று சொல்லும் காஸ்ட்ரோ, கொலை செய்யப் பயன்பட்டதாகச் சொல்லும் துப்பாக்கியின் மாதிரியைக் கொண்டு தாங்கள் அதுபோலத் தொலைவிலிருந்து கொல்ல முடியுமா என்று சோதித்துப் பார்த்ததாகவும், அது சாத்தியமே இல்லை என்று தெரிவதாகவும் சொன்னார். கென்னடி கொலையில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று நிரூபிக்க காஸ்ட்ரோ, அமெரிக்க அரசு நியமித்த வாரன் கமிஷன் முன்னால் சாட்சி சொல்ல முன்வந்தார். நடுக்கடலில் ஒரு கப்பலில் கமிஷன் அதிகாரியிடம் காஸ்ட்ரோ தன் சாட்சியத்தைப் பதிவும் செய்தார். கென்னடியின் சகோதரி மகள் மரியா தொலைக்காட்சி நிருபராகப் பணியாற்றுகிறார். அவருக்கு காஸ்ட்ரோ சிறப்புப் பேட்டியும் அளித்திருக்கிறார்.
இளம் பிம்பம்
கென்னடிதான் அமெரிக்காவின் முதல் இளம் பிம்பம். 43 வயதிலேயே ஜனாதிபதி தேர்தலுக்குத் தேர்வானது மட்டுமல்ல கென்னடியின் சிறப்பு. கென்னடிதான் இன்றுவரை அமெரிக்காவின் ஒரே கத்தோலிக்கக் கிறித்தவ ஜனாதிபதி. அவருக்கு முன்னும் பின்னும் எல்லாரும் பிராட்டஸ்டண்ட் கிறித்தவர்கள்தான் உச்சமான பதவிக்கு வந்தவர்கள். கத்தோலிக்கர்கள் அமெரிக்க அரசியலில் பாரபட்சமாக நடத்தப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இன்றுவரை உண்டு.
புத்தகம் எழுதி புலிட்சர் விருது பெற்ற ஒரே அமெரிக்க ஜனாதிபதி கென்னடிதான். அதுவும் ஜனாதிபதியாவதற்கு முன்பே செனட்டராக இருந்தபோது அவர் எழுதியது. ப்ரொஃபைல்ஸ் இன் கரேஜ் என்ற அந்த நூல், கட்சிக் கொள்கையா, மனசாட்சியா என்ற போராட்டத்தில் மனசாட்சியைத் தேர்வுசெய்து வாக்களித்த செனட்டர்கள் சிலரைப் பற்றியது. கென்னடியின் அரசியல் வாழ்க்கையை அவருக்காகத் திட்டமிட்டு ஊக்குவித்து வளர்த்த அவரது அப்பாவின் செல்வாக்கால்தான் அவருக்கு புலிட்சர் விருது தரப்பட்டது என்ற விமர்சனமும் உண்டு.
கென்னடியின் கொலைதான் அமெரிக்காவின் முதல் தொலைக்காட்சி நிகழ்வு (டி.வி. ஈவெண்ட்). நாடு முழுவதும் மக்களிடையே ஒரு பிம்பத்தைக் கொண்டுபோய் பதியவைப்பதில் தொலைக்காட்சியின் செல்வாக்கு அந்த நிகழ்ச்சியில்தான் உணரப்பட்டது. அப்போது அமெரிக்காவில் கறுப்பு-வெள்ளைத் தொலைக்காட்சிதான். வண்ணத் தொலைக்காட்சி வரவில்லை. கென்னடி இறந்த செய்தி வந்தபோது, பல தொலைக்காட்சி நிலையங்களில் கேமராவே இல்லை. ஒரே கேமரா. பழுதாகியிருக்கும் அல்லது வேறு வேலைக்கு அனுப்பப்பட்டிருக்கும். எனவே, நிலையங்கள் முதல் செய்தியை ஒரு அட்டையில் எழுதிதான் தொலைக்காட்சியில் காட்டின. அடுத்த ஒரு மணி நேரத்தில் சுதாரித்துக்கொண்டு, கேமராக்கள் சம்பவ இடங்களில் குவிந்தன. அப்போது கைபேசிகள் கிடையாது. நேரலை ஒளிபரப்புக்கு வழியில்லை. மைக்குக்குப் பதில் தொலைபேசியைப் பயன்படுத்தியெல்லாம் பேட்டியைப் பதிவுசெய்து ஒளிபரப்பியிருக்கிறார்கள். ஆனால், கென்னடியின் இறுதிச் சடங்கின்போது அமெரிக்காவில் தொலைக்காட்சிப் பெட்டி இருந்த ஒவ்வொரு வீட்டிலும் மக்கள் அதன் முன்பே இருந்தார்கள்.
ஜாக்குலின்
இளம் வயதில் கொல்லப்பட்ட கென்னடி தொடர்பான பல பிம்பங்கள், புகைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் பல காலமாக ஆழப் பதிந்திருக்கின்றன. அவரது இளம் மனைவி ஜாக்குலின் கென்னடி, ரத்தக் கறை படிந்த மேலாடையை அகற்றாமலே தொலைக்காட்சியில் தோன்றினார். வெள்ளை மாளிகையில் கென்னடியின் குழந்தைகள் கென்னடியின் அலுவலக மேசையின் அடியிலும் மேசை மீதும் உட்கார்ந்திருக்க… அவர் கோப்புகளைப் பார்த்தபடி இருக்கும் புகைப்படங்கள் பிரபலமானவை.
இன்று கென்னடியின் வாரிசுகள் என்ன செய்கிறார்கள்? மனைவி ஜாக்குலின் சில வருடங்கள் பொது வாழ்க்கை சேவை நிகழ்வுகளில் பங்கேற்றார். ஆனால், கென்னடியின் சகோதரர் ராபர்ட்டும் கொலை செய்யப்பட்ட பின்னர், தனக்கும் குழந்தைகளுக்கும் கென்னடி என்ற பெயரில் இனி பாதுகாப்பு இல்லை என்று கருதினார். எனவே, கிரேக்க கோடீஸ்வரர் ஒனாசிஸை மணம் செய்துகொண்டார். ஜாக்குலினை உலக ஊடகங்கள், அழகியாக மட்டுமே சித்தரித்திருக்கின்றன. அவர் அறிவுப்பூர்வமானவர். எழுதுவதிலும், ஆசிரியராக இருந்து நூல்களைத் தொகுப்பதிலும், படிப்பதிலும் ஆர்வமுள்ளவர். பதிப்பகங்களில் வேலை பார்த்திருக்கிறார். பாரம்பரியமிக்க இடங்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஒனாசிஸ் 1975-ல் இறந்ததும் இந்தப் பணிகளை ஜாக்குலின் இன்னும் அதிகமாகச் செய்யத் தொடங்கினார்.
1994-ல் ஜாக்குலின் புற்றுநோயால் மரணமடைந்தார்.
தொடரும் அவலம்
கென்னடி ஜாக்குலின் தம்பதிகளின் முதல் குழந்தை பிரசவத்திலேயே இறந்து பிறந்தது. நான்காவது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே இறந்தது. இரண்டாவது குழந்தை கரோலினுக்கு இப்போது வயது 56. அமெரிக்கத் தூதராக ஜப்பானில் இருந்தவர். பல்வேறு அமெரிக்க அரசு நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றியவர். மூன்றாவது குழந்தை ஜான் 1960-ல் பிறந்தார். வழக்கறிஞராக, 'ஜார்ஜ்' என்ற இதழின் வெளியீட்டாளராக இருந்த ஜான் 1996-ல்தான் திருமணம்செய்துகொண்டார். மூன்றாண்டுகள் கழித்து, அவரும் அவருடைய குடும்பத்தினரும் சென்ற விமானம் கடலில் விழுந்து நொறுங்கி அனைவரும் பலியானார்கள்.
கென்னடி வாழ்ந்தது 46 ஆண்டுகள்தான். அவர் இறந்தே இப்போது 50 ஆண்டுகள் ஆகின்றன. இன்று கென்னடியின் அரசியல் மரபு என்று ஏதாவது உண்டா? கென்னடி கொல்லப்படாமல் இருந்திருந்தால், வியத்நாம் யுத்தத்தை நிறுத்தியிருப்பார் என்று சிலர் கருதுகிறார்கள். அவர், தன் பதவியின் கடைசி நாட்களில் வியத்நாமில் அமெரிக்கப் படையின் எண்ணிக்கையைக் குறைத்து திரும்பப் பெற்றார். அதனாலேயே அவர் சி.ஐ.ஏ-வால் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. கென்னடி ஆட்சிக் காலத்தில் அவர் பெரிதாக வரிக் குறைப்பு செய்ய ஒப்புக்கொள்ளவில்லை. நலத் திட்டங்களை வலுப்படுத்தினார். கடைசி ஆண்டுகளில் உலகப் பயணங்களின்போது போரை ஒழிப்பது, அமைதி, வளர்ச்சிக்குப் பாடுபடுவது என்பதில் அழுத்தம் கொடுத்துப் பேச ஆரம்பித்தார்.
கென்னடியின் அரசியல் பாதை
கென்னடியின் அரசியல் வழிமுறையை, பின்னர் வந்த யாரும் பின்பற்றவில்லை. கிளிண்டன் மட்டும் தன் பிம்ப அரசியலைக் கென்னடியைப் பின்பற்றி அமைத்துக்கொண்டார். அது அவருக்குப் பயனளித்தது. கிளிண்டனைப் போலவே கென்னடிக்கும் பெண்ணாசை பலவீனம் இருந்தது. வெள்ளை மாளிகைக்கு வந்து செல்லும் ஹாலிவுட் பிரபலங்கள் பற்றி அப்போது நிறைய கிசுகிசுக்கள் வெளியாகின. அவர் கொலைக்குக் காரணம், பெண்கள் தொடர்பாக மாஃபியா கும்பல்களுடன் ஏற்பட்ட உரசலாகவும் இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
இன்றைய அமெரிக்காவில் கென்னடியை, அவரை அறிந்தேயிராத இளம் தலைமுறை கொண்டாடுவதாகச் செய்திகள் வருகின்றன. எந்த கென்னடியைக் கொண்டாடுகிறார்கள்? வசீகரமான சே போன்ற பிம்பத்தையா? அதிபர் கென்னடியையா? அல்லது இரண்டாம் உலகப்போரில் கடற்படை வீரராகச் செயல்பட்டு, நடுக்கடலில் உடைந்த படகில் இருந்த தோழர்களைக் காப்பாற்றுவதற்காக, படகைக் கயிற்றில் கட்டி, இழுத்து நீந்தி வந்து காப்பாற்றிய கென்னடியையா? காலம்தான் பதில் சொல்லும்.
ஞாநி, மூத்த பத்திரிகையாளர், சமூக விமர்சகர். தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

No comments: