லைப்ரரி சேர் காட்டிய ராஜம் கிருஷ்ணன் இன்னும் பலர் - கானா பிரபா

.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் நினைவில்


மூத்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் காலமான செய்தி எட்டியிருக்கிறது.
என் சிறு வயதுகால வாசிப்பில் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் நாவல்கள் தவிர்க்க முடியாதவை. நீண்ட பல வருடங்களுக்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டில் அவர் அவள் விகடனில் கொடுத்த பேட்டி உலுக்கிப் போட்டது. எவ்வளவு பெரிய எழுத்தாளர் கைவிட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார் என்ற கவலை மேலிட அவரின் நினைவைத் தாங்கிய நனவிடை தோய்தலை அப்போது எழுதினேன் அதை மீள் பகிர்வாக இங்கே தருகின்றேன்.

"லைப்ரரி சேர் காட்டிய ராஜம் கிருஷ்ணன் இன்னும் பலர்"

வேலைக்குப் போவதற்காக ரயிலில் ஒவ்வொரு நாளும் இரண்டு மணித்தியாலத்துக்குக் குறைவில்லாத பயணம். அந்த நேரம் காதுகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு கண்களுக்கு மட்டும் தீனி தேடவேண்டும். எனவே வழக்கம் போல் வாரப்பத்திரிகைகள் வாங்கும் கடைக்குப் போகின்றேன். அங்கே "அவள் விகடன்" சஞ்சிகையின் பதினோராவது ஆண்டு மலர் இருந்தது. புரட்டிப் பார்த்து விட்டு அதையும் எடுத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் நாஞ்சில் நாடனின் தொடர் கட்டுரையைத் தவிர ஆனந்த விகடனில் உருப்படியாக ஒன்றும் வருவதில்லை என்பது என் பல ஆண்டு விகடன் வாசிப்பில் நான் எடுத்த அனுமானம். அதனால் தான் அவள் விகடனில் ஆவது ஏதாவது சமாச்சாரங்கள் கிட்டுமே அதை வாங்கிக் கொண்டேன். அடுத்த நாள் ரயில் பயணத்தில் பிரிக்கின்றேன் அதன் பக்கங்களை. அதில் வந்த முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் பேட்டியை வாசித்ததும் மனம் கனக்கின்றது. மெல்ல என் மடியில் புத்தகத்தை வைத்து விட்டு பழைய நினைவுகளுக்கு என் மனம் தாவுகின்றது.


"பிரபாகர்! புதுப் புத்தகங்கள் கொஞ்சம் வந்திருக்கு, புக் ரெஜிஸ்டரில் போட்டு விட்டேன், வந்து பாரும்" எமது கல்லூரி நூலகத்தைக் கடக்கும் என்னைக் கூப்பிடுகின்றது தனபாலசிங்கம் சேரின் அழைப்பு. எங்கள் கல்லூரி நூலகத்துக்கு அவர் வந்து கொஞ்ச நாளுக்குள்ளேயே என்னை நட்புப் பாராட்டியவர். அதற்குக் காரணமும் இருந்தது. என் பள்ளிப் பிராயத்தில் "கடலைச் சரைப் பேப்பரைக் கூட உவன் விடமாட்டான்" என்று என் மீது ஒரு விமர்சனம் இருந்தது. நடந்து போகும் போது றோட்டில் ஏதாவது பேப்பர் இருந்தாலோ அல்லது கச்சான் கடலையைப் பொதி பண்ணும் பேப்பர் சரை இருந்தாலோ அதைப் பிரித்து அதில் என்ன சமாச்சாரம் இருக்கு என்று ஆர்வக் கோளாறோடு படித்த காலமது. கல்லூரி நூலகத்தை மட்டும் விடுவேனா? பாட இடைவேளைக்கும் கூட அங்கேயே தஞ்சமாகிப் போன காலம் அது.எங்கள் கொக்குவில் இந்துக் கல்லூரி நூலகம் மிகவும் பழமையானது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் இருக்குமாற் போல பல அரிய நூல்களைச் சேமித்து வைத்த அறிவுக் களஞ்சியம் அது.

செங்கை ஆழியானின் கதைகளை ஒரு வெறியோடு படித்துக் கொண்டிருந்த என்னை இன்னும் ஒரு உலகம் இருக்கு என்று காட்டியவர் எங்கள் நூலகத்துக்கு வந்த தனபால சிங்கம் என்ற நூலகர். அவரை லைப்ரரி சேர் என்று தான் அழைப்போம். தொடர்ந்த என் வாசிப்பு ஆர்வத்தையும், குறித்த நாளுக்குள் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்கும் பண்பையும் சத்தமில்லாமல் அவதானித்திருக்கிறார் இந்த லைப்ரரி சேர் போலும்.

"பிரபாகர்! செங்கை ஆழியானின் புத்தகங்கள் எங்கட பிரதேசத்துக்குரிய வாழ்க்கையை மட்டுமே காட்டும், அதோட மட்டும் நிக்கக் கூடாது, வாசிப்பை விசாலப்படுத்தோணும், இந்தாரும் இதைக் கொண்டு போய் வாசியும்" ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் நாவலைத் தானாகவே எடுத்து வந்து என் பெயரை ரிஜிஸ்டரில் போட்டு விட்டுக் கொடுக்கின்றார்.

பிறகு மு.வரதராசனின் "கரித்துண்டு", அகிலனின் "சித்திரப் பாவை", "பால்மரக் காட்டினிலே", "வேங்கையின் மைந்தன்", ஜெயகாந்தனின் " பிரம்மோபதேசம்" அ.செ.முருகானந்தனின் "மனித மாடுகள்", பேராதனைப் பல்கலைக் கழகத்தின் முதல் தொகுதி தமிழ்மாணவர்கள் அறுபதுகளில் எழுதிய "விண்ணும் மண்ணும்" சிறுகதைத் தொகுதி என்று அவர் எனக்காக அறிமுகப்படுத்தும் பட்டியல் தொடர்கின்றது. இன்றுவரை என் ஞாபகக் கூட்டில் எஞ்சியிருக்கும் நூல்களில் ஒரு சில தான் அவை.

சஞ்சிகைகளில் அப்போதெல்லாம் கோகுலமும் அம்புலிமாமாவுமாக இருந்த என்னை, யதார்த்த உலகுக்கு கைபிடித்து அழைத்துச் சென்றார் சுபமங்களா, க்ரோதாயுகம், துளிர் போன்ற சஞ்சிகைகளைக் காட்டியதன் மூலம்.

ஐம்பது வருஷத்துக்கு முற்பட்ட சஞ்சிகைகள், குறிப்பாக "விவேகி" போன்றவை உசாத்துணைப் பட்டியலில் மிகுந்த பாதுகாப்போடு பூட்டுப் போடப்பட்டு வைக்கப்பட்டிருந்தவை.
அவற்றை மெல்ல எடுத்து வந்து "வாசிச்சிட்டு தாரும்" என்று இரகசியமாகக் கையில் திணிப்பார். அந்த சஞ்சிகையைத் திறந்தாலே அப்பளம் போல நொருங்கிப் போய்விடும் அளவுக்கு பழசானது.

"கலாநிதி நா,சுப்ரமணியனின் "ஈழத்துச் சிறுகதை வரலாறு" என்ற ஆராய்ச்சி நூல் வந்திருக்கு, இதையும் கொண்டுபோய் வாசியும்" வெறும் நாவல் என்ற வட்டத்துக்குள் நின்று விடாது என்னுடைய வாசிப்பினை இன்னும் இன்னும் எல்லை கடக்கச் செய்யவேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்தது. அதே நேரம் என் வாசிப்பு திசை திரும்பி படிக்ககூடாத சமாச்சாரங்களில் இருந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் இவராகவே எனக்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்குமோ என்ற உணர்வு இப்போது எனக்குள் வருகின்றது.

ஒருமுறை லைப்ரரி சேருக்கு என் மீது ஏனோ மனஸ்தாபம், ஏசி விடுகின்றார். நான் அந்தப் பக்கம் கொஞ்ச நாள் போகவில்லை. ஆனால் என் வகுப்புக்குப் போவதென்றால் நூலகத்தைக் கடந்து தான் போகவேண்டும்.

"சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமி நாதன் யாழ்ப்பாணம் வந்திருக்கிறார், நாளைக்கு நாவலர் மண்டபத்தில் அவரின் பேச்சு இருக்கு நீரும் வரோணும்" என்று கதவுப் பக்கமாக நின்ற அவர் அன்புக் கட்டளை போடுகின்றார் லைப்ரரி சேர்."ஒகே சேர்" என்று விட்டு அடுத்த நாள் விழாவுக்குப் போகின்றேன். இலக்கிய ஆர்வலர்கள், பெருந்தலைகள் என்று நிரம்பி வழிந்த கூட்டத்தின் காற்சட்டைப் பையனாக நானும் ஒரு ஓரத்தில். ஈழத்து மொழி வழக்கை தமிழக வாசகர்கள் புரிந்து கொள்வதன் கஷ்டத்தை "சாரம்" என்ற உதாரணத்தின் மூலம் பேச்சில் காட்டிக் கொண்டு போகிறார் கோமல். ஈழத்தில் சாரம் என்றால் தமிழகத்தில் அது லுங்கி என்று பேசப்படுகின்றது, அது போல தமிழகத்தில் சாரம் என்று அழைப்பது கட்டிடங்கள் கட்டும் போது பிணைச்சலாகப் போடுவது என்று பேசிக் கொண்டே போகின்றார் கோமல். அவரின் உரை முடிந்ததும் கேள்வி நேரம். கோமலை பலரும் கேள்வி கேட்க மேடையில் ஏறுகின்றார்கள். மேடைக்குப் நின்ற லைப்ரரி சேர் மறுகரையில் நின்ற என்னைக் கண்டு
"ஏறும் ஏறும்" என்று கண்களாலேயே ஜாடை சொல்லி என்னை மேடைக்கு அனுப்புகின்றார்.
ஏதோ ஒரு துணிவில் மேடையில் ஏறி கோமலைக் கேட்கின்றேன். "திரைப்படங்கள் சமூக நாடகங்களுக்கு சாபக்கேடு என்றீர்கள், நீங்கள் கூட "ஒரு இந்தியக் கனவு", "தண்ணீர் தண்ணீர்" கதாசிரியர், நீங்கள் எதிர்பார்க்கும் சினிமாவை நீங்களே தொடர்ந்து செய்யலாமே" என்று ஏதோ ஒரு வேகத்தில் மேடையில் ஏறிய நான் கேட்கின்றேன். அவரின் பதிலோடு மேடையில் இருந்து இறங்கிய என்னைத் தட்டிக் கொடுக்கின்றார் லைப்ரரி சேர்.

இந்திய இராணுவப் பிரச்சனை முடிந்து எமது கல்லூரிக்குப் போன முதல் நாள் கண்ட காட்சிகள் அவலமானவை. அகதி முகாமாக்கப்பட்டு அது நாள் வரை இருந்த முழுக் கல்லூரியே விதவைக் கோலத்தில் இருந்தது. நூலகத்துக்குப் போகின்றேன். எல்லா புத்தக அலுமாரிகளும் உடைக்கப்பட்டு புத்தகங்கள் திசைக்கொன்றாய் இருக்கின்றன. நூலகத்தின் கதவுப் புறங்களில் ஷெல்லடித்து உடைந்த ஓடுகளின் ஊடாக வரும் மழை வெள்ளத்தைத் தடுக்க புத்தகங்களே தடுப்பாகப் போடப்பட்டிருக்கின்றன. பல அரிய நூல் தண்ணீரில் தொப்பமாக நனைந்து அகதிகளாகி அழுது கொண்டே இருக்கின்றன. லைப்ரரி சேரைப் பார்க்கின்றேன், ஷெல் வீச்சில் இறந்த குழந்தையின் தந்தை போல இடிந்து போய் இருக்கின்றார். மெதுவாக ஒவ்வொரு புத்தகமாகக் கையில் எடுத்துத் துடைத்துக் கொண்டு வருகின்றார்.

கல்லூரி வாழ்வு கழிந்து இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து ஆண்டு பல ஓடிவிட்ட பின்னர் ஊருக்குப் போன போது தாவடியில் இருக்கும் என் மாமி வீடு போகின்றேன். மச்சாள் எங்கள் கல்லூரியில் தான் படிப்பிக்கின்றார்.
ஆர்வமாக "லைப்ரரி சேர் இன்னும் அங்கே இருக்கிறாரா" என்று கேட்கிறேன்.
"இல்லை பிரபு! அவர் இப்ப ரிடயர்ட் ஆகிட்டார்" பக்கத்திலை தான் சுதுமலையில் இருக்கிறார் இது மாமி மகள்.
"அவரை ஒருக்கால் நான் பார்க்கோணும்" என்ற என்னை மச்சாள் புருஷன் தன் மோட்டார் சைக்கிளில் இருத்திக் கொண்டு போகின்றார்.
லைப்ரரி சேரின் வீட்டுக்கு முன்னால் வந்து வண்டி நிற்கின்றது. பூக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த அவர் என்னைக் கண்டும் தெரியாத பாவனையில் உற்றுப் பார்க்கின்றார்.
"சேர்! நான் பிரபாகர், ஞாபகம் இருக்கா?"
"ஓ அப்படியா கனகாலத்துக்கு முந்தி இருக்கும் என்ன?" என்று மீண்டும் என்னை ஐயமுறப் பார்க்கின்றார்.
"முந்தி நீங்கள் தான் சேர் எனக்கு நிறையப் புத்தகம் எல்லாம் தாறனீங்கள்" என்று மீண்டும் ஆசையாகச் சொல்கிறேன்.
"இஞ்சையப்பா! எங்கட ஸ்கூல் பிள்ளை வந்திருக்கு, இஞ்சை வாரும்" என்று வீட்டுக்குள் இருந்த தன் மனைவியை அழைக்கிறார் லைப்ரரி சேர். அப்போதும் பிரபாகர் என்ற என்னை மறந்து விட்டார் என்று தொண்டைக்குள் எச்சிலை மிண்டுகின்றேன்.
தன்னுடைய மனைவி சந்திரா தனபாலசிங்கம் எழுதிய நூலை எனக்குத் தருகிறார். லைப்ரரி சேரை ஒரு போட்டோ எடுத்து விட்டு மச்சாளின் புருஷனின் மோட்டார் சைக்கிளில் அமர மீண்டும் தாவடிக்குப் போகின்றது. எதிர்த் திசையில் அலையும் காற்று முகத்தில் குப்பென்று அடிக்கின்றது.

லைப்ரரி சேருக்கு பிள்ளைகள் இல்லை, அந்தப் புத்தகங்கள் தான் அவரின் குழந்தைகள். அந்தப் புத்தகக் குழந்தைகளோடு நேசம் கொண்டு வருபவர்களை எந்தத் தந்தைக்குத் தான் பிடிக்காது? எனக்குப் பிறகு நிறைய பிரபாகர்கள் அந்த நூலகத்துக்கு வந்திருப்பினம். அந்தந்தக் காலகட்டத்தில் அவரின் புத்தகக் குழந்தைகளை நேசித்தவர்களை அவரும் நேசித்திருக்கின்றார் அவ்வளவு தான். ஆனாலும் லைப்ரரி சேரை நான் மறக்க மாட்டேன்.

இனி என் ஞாபகத்தைக் கிளறிய அவள் விகடனில் வந்த "ராஜம் கிருஷ்ணனின்" பேட்டியை அவள் விகடனுக்கு நன்றியுடன் அப்படியே தருகின்றேன்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
சென்ற தலைமுறை எழுத்தாளரான ராஜம் கிருஷ்ணன், தன் கதை, கட்டுரைகளால் அன்றைய வாசகர் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர். பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்த போராளி.
'வேருக்கு நீர்' என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
இதுபோல எண்ணற்ற விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த எண்பத்தி இரண்டு வயதான ராஜம் கிருஷ்ணன் இன்று இருப்பதோ பாலவாக்கம் விஷ்ராந்தி முதியோர் இல்லத்தில்!
குடும்ப உறவுகளின் உன்னதம் குறித்து எவ்வளவோ எழுதியவர், இன்று ஒற்றைப் பறவையாய் ஒதுங்கியிருக்கிறார். அவரை சந்தித்தோம்.
மெலிந்த தேகம்.. தொடை எலும்பு முறிவால் கையில் 'வாக்கர்'.. என்று முதுமையின் வாட்டம் தெரிந்தாலும் பேச்சின் கம்பீரம் என்னவோ அப்படியே இருக்கிறது.
''என்னை எதுக்குப் பார்க்க வந்திருக்கீங்க? ஐ'ம் ஜஸ்ட் எ டஸ்ட்'' என்றவரை ஆசுவாசப்படுத்திப் பேச்சுக் கொடுத்தோம்..
''அன்னிக்கு என் பேச்சைக் கேக்க ஆயிரம் பேர் இருந்தாங்க. இன்னிக்குப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லை'' என்றபடியே பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தார்.
''1925-ல முசிறியில பிறந்தேன். சின்ன வயசுலயே எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா, என் பெற்றோர் என்னை ஸ்கூலுக்கு அனுப்பலை. அந்தக் காலத்துல பெண்கள் வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க. எனக்கும் பதினைந்து வயதில் பால்ய விவாகம் நடந்தது.

ஒன்பது நாத்தனார், மாமியார், மாமனார்னு நான் வாழ்க்கைப்பட்டது பெரிய குடும்பம். ரொம்பவே கஷ்டப்பட்டோம். என் கணவர் கிருஷ்ணன், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர். வீட்டில் நிறைய புத்தகங்கள் வாங்கிப் போடுவார். லைப்ரரிக்குப் போயும் நிறையப் படிப்பேன்.
பதினாறு வயசுல கதைகள் எழுத ஆரம்பிச்சேன். அதெல்லாம் தொடர்ந்து பத்திரிகைகளில் பிரசுரமாகி, எழுத்தாளர்கள் வரிசையில் எனக்கு ஒரு தனி இடம் கிடைச்சது'' என்றவர் முகத்தில் மெலிதான பூரிப்பு. தொடர்ந்த ராஜம் கிருஷ்ணன்,
''தாம்பரத்துல மூணு கிரவுண்ட்ல வீடு வாங்கினோம். நிம்மதிக்குக் குறைவில்லை. நான் கதை எழுதும்போதெல்லாம் என் கணவர் பேனாவுக்கு மை போட்டுத் தருவார். என் துணிமணிகளை அயர்ன் பண்ணித் தருவதும் அவர்தான். என் கதைகளைப் படிக்கக்கூட அவருக்கு நேரம் இருக்காது. ஆனாலும், நான் எழுத அவ்வளவு ஊக்கம் கொடுத்தார்..'' என்று நெகிழ்ச்சியோடு சொன்னவர், தன் எழுத்து அனுபவங்களின் பக்கமாகப் பேச்சைத் திருப்பினார்.
''1970-ல் தூத்துக்குடி உப்பளத்துக்குப் போய் அங்கு வாழும் மீனவர்களை நேரடியாக சந்தித்தேன். அவர்களுக்குக் குடிக்கக்கூடத் தண்ணீர் கிடையாது. மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டே வாழ வேண்டிய நிலை. பரிதாபத்துக்குரிய அந்த மனிதர்களின் அவல நிலையை 'கரிப்பு மணிகள்' என்ற நாவலாக எழுதினேன். அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.
1972-ல் பீகாரில் கொள்ளையர்கள் அராஜகம் செய்து கொண்டிருந்த சமயம். அப்போ அந்த கொள்ளைக்கூட்டத் தலைவன் 'டாகுமான்சி'யை சந்தித்து பல மாதங்கள் அவர்களுடனே இருந்து பார்த்தவற்றை 'முள்ளும் மலரும்' என்ற தலைப்பில் எழுதினேன்.
பெண் சிசுக் கொலை, கோவா விடுதலை, சோவியத் நாடுகள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் என நான் எழுதாத விஷயங்களே இல்லை. பாரதியார் பற்றி நிறையப் புத்தகங்கள் வந்திருக்கு. ஆனால், 'முற்போக்குவாதியான பாரதியின் இறப்புக்குப் பின் செல்லம்மாளுக்கு மொட்டை அடித்தது ஏன்?' என்ற விவகாரத்தை ஆராய்ந்து 670 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிட்டேன். இப்படி என்னுடைய 80-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது'' என்று நிறுத்தியவர், எதையோ நினைவுக்குக் கொண்டு வந்தவர் போல மேலே பேசினார்.
''ஒரு கட்டத்தில் என் கணவருக்குப் பக்கவாதம் தாக்கி நடமாட முடியாமப் போச்சு. தன்னோட தொண்ணூறாவது வயசுவரைக்கும் எனக்குத் துணையாவும் தூணாவும் இருந்தார். எங்களுக்குக் குழந்தைகளும் இல்லை. அவர் மறைவுக்குப் பின் 'என் ஒருத்திக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு?'னு உறவுகளும், நட்புகளும் கேட்டதால வீட்டை வித்துட்டேன். நான் எழுதிய அத்தனை படைப்புகளையும் எடுத்துச் செல்ல இடம் இல்லாததால் எல்லாத்தையும் தீ வெச்சுக் கொளுத்தினேன்.
கையில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை யார் யாரோ பகிர்ந்துக்கிட்டாங்க. பாங்க்ல இருந்த பணமும் என்னாச்சுன்னு தெரியலை. பங்களாவில் வாழ்ந்த நான் சகலத்தையும் இழந்து சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில வாடகைக்குக் குடிபோனேன். அங்க இருந்தப்போ, வரதட்சணை கேட்டுப் பொண்டாட்டியைக் கொடுமைப்படுத்தறவன்.. தினமும் குடிச்சிட்டு மனைவியை அடிச்சு உதைக்கிறவன்.. இப்படிப்பட்ட ஆட்களையெல்லாம் பார்த்தப்போ இன்னும்கூட பெண்களுக்கு முன்னேற்றம் கிடைக்கலையோன்னு தோணுச்சு'' என்றவரின் குரலில் பெரும் துயர்.
''எட்டு மாசத்துக்கு முன்னால ஒரு ஆக்சிடென்ட்ல எனக்குக் கால் எலும்பு முறிஞ்சு போச்சு. ஆபரேஷன் நடந்து அஞ்சு மாசம் ஆஸ்பத்திரியில இருந்தேன். என் தோழியான திலகவதி ஐ.பி.எஸ்., பாரதி சந்துரு இருவரும் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்து விட்டாங்க. என்னால இப்ப நடக்க முடியலை. இந்த வாக்கர் உதவியா இருக்கு. எத்தனையோ பேருக்கு ஒரு கஷ்டம்னா ஓடிப்போய் உதவி பண்ணினேன். இப்போ எனக்கு உதவத்தான் யாருமில்லை. பார்ப்போம்..''
கசிந்த கண்ணீரைத் துடைத்தபடி அந்த இரும்பு மனுஷி நமக்கு விடை கொடுக்க, சமூகத்துக்காக எவ்வளவோ அக்கறையோடு யோசித்த ஒரு மனுஷிக்கு இந்த சமூகம் செய்திருக்கும் மரியாதையைப் பார்க்க பயமாகத்தான் இருந்தது.

No comments: