இலங்கை வந்தார் சீன ஜனாதிபதி
வடமாகாண காணி அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு
விபத்தில் ஒருவர் பலி: செந்தில் தொண்டமான் உட்பட 31 பேர் வைத்தியசாலையில்
'இலங்கை சிங்கள பௌத்தர்களின் தேசம் என்பதை ஏற்போருக்கே வாக்களிக்க வேண்டும்"
ஆசிரியையின் சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டது
===================================================================
இலங்கை வந்தார் சீன ஜனாதிபதி
16/09/2014 இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பின் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
நாளை வரை இலங்கையில் தங்கியிருக்கும் சீன ஜனாதிபதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் டி.டிம். ஜயரத்ன மற்றும் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இதேவேளை, இந்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்குமிடையில் சுமார் 20 இருதரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.
மேலும் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கான விஜயத்தை 28 ஆண்டுகளின் பின்னர் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
வடமாகாண காணி அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு
16/09/2014 வடமாகாண காணி அபிவிருத்தி அமைச்சினால் வடமாகாணத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 13 காணி அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண பிரதம செயலாளர் விஐயலட்சுமி ரமேஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வடமாகாண ஆளுநர் மேஐர் nஐன்ரல் ஐP.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு 13 காணி அபிவிருத்தி வெளிகள உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார். வடமாகாணத்தில் போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டு சித்தி பெற்ற 13 பேர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் செ.திருவாகரன் மற்றும் ஆளுநர் செயலக உயர்அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நன்றி வீரகேசரிவிபத்தில் ஒருவர் பலி: செந்தில் தொண்டமான் உட்பட 31 பேர் வைத்தியசாலையில்
18/09/2014 பண்டாரவளை பகுதியில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாண சபை வேட்பாளர் செந்தில் தொண்டமான் சென்று கொண்டிருந்த வாகனம் விபத்துக்குள்ளகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் 31 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய சாரதி தப்பிச்சென்றிருந்த நிலையில் குறித்த சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று மாலை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் பின்னரே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்தில் காயமடைந்தவர்கள் தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,செந்தில் தொண்டமான் மேலதிக சிகிச்கைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி
'இலங்கை சிங்கள பௌத்தர்களின் தேசம் என்பதை ஏற்போருக்கே வாக்களிக்க வேண்டும்"
17/09/2014 இலங்கை சிங்கள பௌத்தர்களின் தேசம் என்பதை ஏற்றுக்கொள்பவர்களுக்கே ஊவா மாகாண சபைத்தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவ்வாறான வேட்பாளர் தமிழராக, சிங்களவராக, முஸ்லிமாக இருந்தாலும் பிரச்சினையில்லையென பொதுபல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன் தெனியே நந்ததேரர் தெரிவித்தார்.
சட்ட விரோத வர்த்தகங்களில் ஈடுபடுவோருக்கு மக்கள் வாக்களிக்க கூடாது என்றும் தேரர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விதாரன்தெனியே நந்த தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
தேரர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
உலகில் எங்கும் இல்லாத தேர்தல் கலாசாரம் இங்கு காணப்படுகின்றது. ஒருவருக்கொருவர் சேறுபூசிக்கொள்வதும் வன்முறைகளும் கொலைகளும் என கீழ்த்தரமான தேர்தல் கலாசாரமே காணப்படுகின்றது.
எந்தவொரு தொழிலுக்கு இணைய வேண்டுமானால் அதற்கு கல்வித்தகைமை உட்பட வேறு தகுதிகள், குடும்ப பின்னணி தேவை. ஆனால், இங்கு அரசியல் செய்வதற்கு எந்தவிதமான கல்வி அறிவோஇ தகுதியோ, குடும்ப பின்னணியோ தேவை இல்லை. கசிப்பு வியாபாரம் அல்லது போதைப்பொருள் வியாபாரம் என எந்தவிதமான சட்டவிரோத வர்த்தகம் செய்பவர்களாக இருந்தாலும் அவர்களால் இங்கு அரசியல் செய்ய முடியும். தேர்தலில் போட்டியிட முடியும்.
இந்நிலை மாற வேண்டும். அதனை மக்களாலேயே மாற்ற முடியும். எனவே, ஊவா மாகாண சபைத்தேர்தலில் தகுதியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு என்றும் எமது கலாசாரம் வரலாறு தெரிந்தவர்கள் எவராக இருந்தாலும் அவ்வாறான வேட்பாளர்கள் தமிழராக, சிங்களவர்களாக, முஸ்லிம் ஆக இருக்கலாம். இந்த நிலைப்பாடு கொண்ட வேட்பாளர்களை இத்தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் தேரர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
ஆசிரியையின் சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டது
17/09/2014 மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு, பசறை மீதும்பிற்றிய, நாக தேவாலயத்திற்கு அருகாமையில் புதைக்கப்பட்ட கோணகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியையின் சடலம் நேற்று மீள தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
பதுளை பதில் நீதிமன்ற நீதிவான் சுமணா அமரசிங்க மற்றும் பதுளை மருத்துவ மனையின் சட்ட மருத்துவ அதிகாரி ஆகியோர் முன்னிலையில் கோணகலையைச் சேர்ந்த 41 வயதான அலங்காரம் சரஸ்வதி என்ற பெண்ணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
கடந்த முதலாம் திகதி பணிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பாத நிலையில், அவரின் கணவரினால் காவல் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
அதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் மரணமான பெண்ணின் தொலைபேசியில் பதிவாகியிருந்த இலக்கங்களை காவல்துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதற்கு அமைய நாக தேவாலயத்தின் பூசகர் கைது செய்யப்பட்ட நிலையில் தேவாலய வளாகத்தில் குறித்த பெண் புதைக்கப்பட்டிருந்த இடத்தையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
வாக்கு மூலத்தை பெறுவதற்காக குறித்த சந்தேக நபர் காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போது, அவர் பேரூந்து முன்பாக பாய்ந்து தற்கொலை செய்ய முனைந்துள்ளார்.
அவர் தற்போது காயமடைந்த நிலையில், பதுளை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனார்.
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment