விலகல் -- எம். ரிஷான் ஷெரீப்

.


அடைமழை பெய்தோய்ந்த
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
பனியை விரலிலேந்தி கடைசிப் பேரூந்திலிருந்து இறங்கினாய்

பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன
பல்லாயிரம் விழிகள்
அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து
தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை
தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி
இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது

பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்


நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
விடிகாலையில்
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
உன்னைப் போலவே

No comments: