பட்டம் விடுவோம் பாலா ஓடிவா --வந்தியத்தேவன்

.
"பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா" சின்ன வயதில் ஆடிப்பாடிய பாடல். பட்டம் என்பது எங்கள் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த இன்னொரு விசயம். வாலாக்கொடி, கொடி என இடத்துக்கு இடம் பெயர் மாறுபட்டாலும் பொதுவாக பட்டம்(காற்றாடி) என்றே அழைப்பார்கள்.



பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பெரும்பாலான பெற்றோருக்கு பட்டம் காலம் வந்தால் கரைச்சல்தான். டிசம்பரில் பாடசாலை விடுமுறை என்பதாலும் பட்டக் காலம் என்பது மாணவர்களிடையே சந்தோஷமான நாட்கள். எப்படியும் பொங்கல் வரை பட்டம் ஏற்றி பட்டதாரியாகிவிடுவார்கள்.


ஆயகலைகள் அறுபத்து நான்கில் பட்டக்கலை இருக்கோ இல்லையோ ஆனால் இதுவும் ஒரு கலைதான். செங்கை ஆழியானின் முற்றத்து ஒற்றைப் பனையில் பட்டத்தைப் பற்றி நிறையவே சொல்லியிருப்பார். கொக்கர் மாரிமுத்தர் அம்மான் தான் கதாநாயகன் ஆள் கொக்குப்பட்டம் கட்டுவதில் விண்ணன்(கெட்டிக்காரன்). இவருக்கும் பொன்னு ஆச்சிக்கும் நடக்கும் பட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அம்மானுடன் சூலாயுதம் என்ற வேலாயுதம் என்கிற பொடியன் சேர்ந்து செய்யும் ரகளைகள் அலம்பல் காசியின் வில்லத்தனம் என ஒரு மண்ணின் வாழ்க்கையை அழகாக படம் பிடித்துக்காட்டியுள்ளார். செங்கை ஆழியான்.

பட்டத்தில் பல வகைகள் உண்டு.

கடதாசிப் பட்டம் :
சாதாரண கடதாசிப் பட்டம் சில இடங்களில் இதனை வாலாக்கொடி என்பார்கள். இதனை உருவாக்க ஈர்க்கும் சாதாரண கடதாசி அல்லது ரிசூப் பேப்பர் போதும்.ஆரம்ப கால சிறுவர்கள் பெரும்பாலும் ஏற்றுவது இதுதான். சாதாரண தையல் நூல் இதற்க்குப் போதும் பட்டத்தில் வாலாக பழைய பருத்திச் சீலைகள் சறம் அல்லது சாரம்(கைலி) போன்றவற்றின் துண்டுகள் வாலாகப் பயன்படுத்தப்படும். இதற்க்கு விண் பூட்டமுடியாது.

நான்குமூலைப் பட்டம் :
சில இடங்களில் படலம் அல்லது பெட்டிப்பட்டம் என அழைப்பார்கள். ஒரு செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும். இதனை பனைமட்டையை இணக்கி இல்லையென்டால் மூங்கில் தடிகளை இணக்கி செய்வார்கள். ரிசூப்பேப்பரில் விதம்விதமான டிசைன் போட்டு ஒட்டுவார்கள். இதன் மேற்பக்கத்தில் விண் பூட்டுலாம். வாலாக கயிறுபயன்படுத்தப்படும். சிறிய ஒரு அடிக்கு ஒரு அடி சைஸிலிருந்து ஆளுயர சைஸ்வரை செய்யமுடியும். சைஸைப் பொறுத்து நூலின் தடிப்பும் மாறும். கூடுதலாக நைலோன் நூலே பயன்படுத்தப்படும். பட்ட ஏற்றலில் விண்ணர்களான சில சிறுவர்களும் பல பெரிய ஆட்களும் ஏற்றுவார்கள். பட்டத்தின் சைசுக்கு ஏற்ப ஏற்றுபவர்களின் மவுசு கூடும். அதிலும் ஒருவன் நல்ல சத்தமுள்ள‌ விண் பூட்டி தன்னைவிட உயரப்பட்டம் ஏற்றினால் அவந்தான் அந்த வட்டாரத்தில் ஹீரோ.

கொக்குப் பட்டம் :
கொக்கைப்போல் வடிவம் உடையது. பெரும்பாலும் மூங்கில் கொண்டு செய்யப்படும். இதற்க்கும் விண் பூட்டமுடியும். கொக்குப்பட்டத்திற்க்கு வால் பெரும்பாலும் தேவைப்படாது. அழகான குஞ்சங்கள் எல்லாம் வைத்து செய்தால் வானில் பறக்கும் போது மிகவும் அழகாகவும் இருக்கும். எல்லாரும் இலகுவில் செய்யமுடியாது. கொக்கர் மாரிமுத்தர் போல் கொக்குப் பட்டம் கட்ட தனித் திறமை வேண்டும். சில இடங்களில் ரெடிமேட்டாக செய்து விற்பார்கள். அதனை வாங்கி ஏற்றும் சிறுவர்கள் உண்டு.

பிராந்துப் பட்டம் :
பருந்தையே நம்ம ஊரில் பிராந்து என்பார்கள். பிராந்து வடிவத்தில் செய்யப்படும் பட்டம் இதுவும் எல்லோராலும் செய்யமுடியாது. மூங்கில் கொண்டே வடிவமைக்கப்படும். விண் பூட்டலாம். கொக்குப்பட்டம் போல் அழகானது.

எட்டுமூலை :
நட்சத்திரப்பட்டம் எனவும் சொல்வார்கள். எட்டுமூலைகள் இருப்பதால் இந்தப்பெயர்.

இதனை விட வேறு வகைகள் இருந்தால் தெரிவிக்கவும். படங்கள் தேடினேன் கிடைக்கவில்லை. முற்றத்து ஒற்றைப் பனையிலிருந்து ஸ்கான் பண்ணித்தான் போடவேண்டும்.

பட்டக் கலையில் பாவிக்கப்படும் சில் அருஞ்சொற்கள்.

விண் : 
விண் என்பது "கொய்ங்ங்ங்" என்ற சத்தத்தை கொடுக்கும் பனை ஓலை நாரில் செய்யப்பட்ட ஒரு ஒலிஎழுப்பி. சிலர் பார்சல்கள் கட்டிவரும் பிளாஸ்டிக் நாரிலும் செய்வார்கள். சிம்பிளான விண் என்றால் யூரியா பாக்கிலிருக்கும் (உரம் வரும் பை)அந்த மெல்லிய நைலோன் நாரையும் பாவிப்பார்கள். விண்ணை மட்டையில் கட்டி பார்ப்பதற்க்கு வில்லுப்போல இருக்கும் இரண்டு தொங்கல் பக்கத்திலும் இரண்டு கட்டைகள் போட்டு பின்னர் அதனை கொக்குப் பட்டத்துடனோ இல்லை நான்குமூலையுடனோ எட்டுமூலையுடனோ இணைத்து ஏற்றுவார்கள். சிலகாலம் விண் பூட்டி ஏத்துவது தடைசெய்யப்பட்டிருந்தது காரணம் குண்டுவீச்சு விமானத்தின் சத்தம் கேட்காது அல்லது விமானச் சத்தத்தை விண் பூட்டிய பட்டம் என சனம் சும்மா இருப்பார்கள் என்றபடியால்.

முச்சை கட்டுதல் :
பட்டத்திற்க்கு முக்கியமான ஒரு செயல்பாடு. பட்டத்தை நூலுடன் சாதாரணமாக தொடுத்துவிட முடியாது. இதற்காக ஒரு ஸ்பெசல் செயல்தான் முச்சைகட்டுதல். பட்டத்தின் ஒரு தொங்கலையும்(அந்தம்) இன்னொரு தொங்கலையும் நூலினால் இணைத்தல். கொக்குப்பட்டம் நான்குமூலை எட்டுமூலை போன்றவற்றிற்கு இன்னொருவகையான முச்சை கட்டப்படும். சாதாரண முச்சை மூன்று முச்சை நான்கு முச்சை என பல வகை உண்டு.

பட்டம் தொடுத்தல் :
ஒரு பட்டத்தின் பின்னால் இன்னொரு பட்டம் தொடுத்தல். இப்படி பல பட்டங்களை தொடுக்கமுடியும். எங்கட ஊரிலை என் நண்பன் ஒருவன் ஆகக்கூட 10 பட்டம் தொடுத்து ஒரு பொங்கலுக்கு ஏற்றினான். அந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.

லைட்பூட்டி ஏற்றுதல். 
இரவு வேளைகளில் பட்டத்தில் நூலில் சிலர் பட்டத்திலையே பற்றரி அல்லது மின்சாரம் துணைகொண்டு விதம்விதமான கலர் லைட்ஸ் போடுவார்கள். அழகாக இருக்கும். பற்றரி என்றால் பட்டத்துடன் இணைத்திவிடலாம். மின்சாரம் என்றால் வயரும் நூலுடன் சேர்த்துக் கட்டப்படும். மின்சாரத்தில் ஏற்றுதல் கொஞ்சம் ஆபத்தானது காரணம் தற்செயலாக பட்டம் இரவில் அறுத்துக்கொண்டு போனாலோ அல்லது படுத்துவிட்டாலோ அது விழுகின்றபகுதி மக்களுக்கு மின்சாரம் தாக்கும் ஆபத்து உண்டு.

அறுத்துக்கொண்டுபோதல் :
பட்டம் பாரம் தாங்கமுடியாமல் அல்லது காற்று அதிகமாகி சில நேரத்தில் அறுத்துக்கொண்டுபோய்விடும். சிறந்த உதாரணம் சர்வம் படத்தில் நம்ம திரிஷா இப்படி அறுத்துக்கொண்டுபோன பட்டத்தின் நூல்பட்டுத்தான் இறந்துபோவார். சிலவேளைகளில் அடுத்த ஊரில் கூட பட்டம் அறுத்துக்கொண்டுபோய் விழும். சில பனை தென்னை மரங்களில் தொங்கிப்போய்விடும். திரும்ப எடுப்பது கஸ்டம்.

பட்டம் படுத்தல் :
இரவு வேளைகளில் பட்டத்தை ஏற்றிவைத்திருக்கும்போது காற்று குறைந்துவிட்டால் பட்டம் அப்படியே தரைக்கு வந்துவிடும். இதுவே பட்டம் படுத்தல் எனப்படும்.

பருத்தித்துறையில் பொங்கல் நேரம் பட்டம் விடும் போட்டி நடத்தப்படும். முனைக் கடற்கரையில் பாக்கு நீரிணையின் அருகில் இந்தப்போட்டிகள் நடத்தப்பட்டன. பட்டகாலம் தொடங்கினால் பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில் பலதரப்பட்ட பட்டங்களும் நூலும் வீதியோரக் கடைகளில் விற்கப்படும்.

பட்டம் பற்றி நம்ம கானா அண்ணை எழுதிய பதிவு ஒன்றும் இருக்கின்றது.
பட்டம் விட்ட அந்தக் காலம்

பட்டத்தைப் பற்றி இவ்வளவு விபரமாக எழுதியபடியால் என்னைப் பட்டதாரி என நினைக்கவேண்டாம். இதுவரை சாதாரண கடதாசிப் பட்டம் மட்டுமே ஏற்றியிருக்கின்றேன். என் மாமாக்களும் சித்தப்பாக்களும் இதில் விண்ணர்கள். எத்தனையோ விழுப்புண்கள் கூட பட்டத்தினால் பெற்றிருக்கின்றார்கள். அவர்களுடன் இருந்த அனுபவமே இது.
nantri eelamlife.blogspot

No comments: