ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் ஆஜராக தாய்லாந்து பிரதமருக்கு உத்தரவு
எகிப்திய இடைக்கால அரசாங்கம் இராஜினாமா : பிரதமர் திடீர் அறிவிப்பு
====================================================================
ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் ஆஜராக தாய்லாந்து பிரதமருக்கு உத்தரவு
28/02/2014 தாய்லாந்து பிரதமர் யின்லக் ஷினவட்ராவுக்கு அரசாங்க அரிசி உதவி திட்டம் ஒன்று சம்பந்தமாக அலட்சியத்துடன் செயற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் ஆஜராகி விளக்கமளிக்க அந்நாட்டு ஊழலுக்கு எதிரான அமைப்பொன்று உத்தரவிட்டுள்ளது.
மேற்படி அரிசி உதவி வழங்கல் திட்டத்தில் கடும் ஊழல் இடம்பெற்றுள்ளதான யின்லக் ஷினவட்ராவின் எதிராளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும்பட்சத்தில், அவர் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன் அரசியலில் பங்கேற்ற 5 வருட கால தடையையும் எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை தலைநகரிலிருந்து வடநகரான சியாங் ராய்க்கு சென்றுள்ள யின்லக் ஷினவட்ரா, தேசிய ஊழலுக்கு எதிரான ஆணையகத்தில் இடம்பெறும் விசாரணைகளில் ஆஜராகமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு பதிலாக அவரது சட்டத்தரணி விசாரணைகளில் ஆஜராகி விளக்கமளிக்கலாம் என தேசிய ஊழலுக்கு எதிரான ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள பிரதமர், எனினும் உண்மையை வெளிக்கொணரும் முகமாக மேற்படி ஆணையகத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக கூறினார்.
யின்லக்கின் அரசாங்கத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக விளங்கும் அரிசி உதவி திட்டம் உலக விலைகளுடன் ஒப்பிடுகையில் 50 மடங்கு அதிகமான விலைக்கு விவசாயிகளிடமிருந்து அரிசியை அரசாங்கம் கொள்வனவு செய்ய வழிவகை செய்கிறது.
விவசாயிகள் மத்தியில் ஆரம்பத்தில் பிரபலம்பெற்ற இந்தத் திட்டம் தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதியை கடுமையாக பாதித்து குறைந்தது 4.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இழப்பீட்டுக்கு வழிவகை செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிப்பை எதிர்கொள்ள நேர்ந்தது.
இந்நிலையில் மேற்படி கொள்கை உருவாக்கம் மட்டுமே தனது எனக்கூறிய யின்லக், அந்த திட்டத்தின் நாளாந்த அமுலாக்கத்திற்கு தான் பொறுப்பாக இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே யின்லக் மீதான புதிய குற்றச்சாட்டு விசாரணை தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாங்கொக்கில் கடந்த வாரம் இடம்பெற்ற வெவ்வேறு வன்முறை தாக்குதல்களில் 4 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.
அங்கு கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதி முதல் இடம்பெற்ற வன்முறைகளில் இதுவரை குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளனர்.
நன்றி வீரகேசரி
எகிப்திய இடைக்கால அரசாங்கம் இராஜினாமா : பிரதமர் திடீர் அறிவிப்பு
26/02/2014 எகிப்திய இடைக்கால பிரதமர் ஹாஸெம் பெப்லாவி தனது அரசாங்கம் பதவி விலகுவதாக திடீர் அறிவிப்புச் செய்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமையை கவனத்திற் கொண்டே இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் கூறினார்.
அந்நாட்டில் பொது பணியாளர்கள் குப்பை சேகரிப்பவர்கள் உள்ளடங்கலாக பலதரப்பட்டவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்கள் மற்றும் சமையல் எரிவாயு பற்றாக்குறை தொடர்பான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதையடுத்தே பிரதமரின் மேற்படி அறிவிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜூலை மாதம் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து பெப்லாவி அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.
முர்ஸியின் வெளியேற்றத்தை தொடர்ந்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை நசுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 1000 க்கும் அதிகமானோர் பலியானதுடன் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அதேசமயம் சினாய் தீபகற்பத்திலுள்ள போராளிகளும் அரசாங்கம், பொலிஸ் மற்றும் இராணுவ உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த ஆரம்பித்ததில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
அரசாங்கத்தின் இராஜினாமா குறித்து தொலைக்காட்சியில் உரையாற்றிய பெப்லாவி, இராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்து கருத்து எதனையும் வெளியிடவில்லை.
அமைச்சரவையானது கடந்த 6 அல்லது 7 மாதங்களாக கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேர்ந்ததாகவும் பல சந்தர்ப்பங்களில் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்ததாகவும் கூறிய பெப்லாவிஇ "நாடு பெரும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் நாட்டை பாதுகாக்க நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது" என்று கூறினார்.
இந்நிலையில் புதிய பிரதமர் ஒருவர் பெயர் குறிப்பிடப்படும் வரை பெப்லாவியை அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் அல் அஹ்ரம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய பிரதமராக வீடமைப்பு அமைச்சர் இப்ராஹிம் மிஹ்லிப் நியமிக்கப்படலாம் என
அந்தப் பத்திரிகை அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையானது தனது இராஜினாமா கடிதங்களை இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூரிடம் ஒப்படைத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மத்தியில் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment