.
காலிலே செருப்புமின்றி
கனதியாய் உடுப்புமின்றி
வேலியால் வந்தமுள்ளு
விரலிலே குத்திநிற்கும்
நாமதைப் பார்த்திடாமல்
நடந்திடுவோமே அங்கு
வேர்வையால் நனைந்ததேகம்
வெளியிடும் கள்ளந்தன்னை
ஊரெலாம் நடந்தேசெல்வோம்
உரமுடை தேகத்தோடு
நீர்நிலை கண்டேவிட்டால்
நீச்சலே நீளும்நாளும்
பள்ளிக்கும் நடந்தே சென்றோம்
பலவிடம் நடந்தே நின்றோம்
நல்லன நடந்த தன்று
நாமெலாம் நலமாய் நின்றோம்
கண்டதை உண்டு நின்றோம்
களிப்புடன் உலவி வந்தோம்
நண்பர்கள் ஒன்று சேர
நாளெலாம் மகிழ்ந்து நின்றோம்
மரத்தினில் ஏறி நிற்போம்
வாய்க்காலில் குதித்து நிற்போம்
உரத்துமே கத்தி நிற்போம்
ஒன்றுக்கும் அஞ்ஞமாட்டோம்
வருத்தமே வந்திடாது
வந்தாலும் ஓடி நிற்கும்
தெருக்களின் புழுதியெல்லாம்
தினமும் எம் உடலிலேதான்
அடிக்கடி முழுகினாலும்
அணுகிடா தெம்மைக்காய்ச்சல்
துடிப்புடன் ஓடிநாளும்
துள்ளிநாம் இருந்தோமன்று
விருப்புடன் விருந்து உண்போம்
வீட்டிலும் நல்லாய் உண்போம்
தெருக்களில் திரிந்து நிற்போம்
சிரிப்புடன் வாழ்ந்தோம் நாளும்
ஊரினை விட்டு நாங்கள்
உதறியே வந்த பின்னர்
பேரினை மாற்றி நின்றோம்
பித்தமும் பிடித்து நின்றோம்
வேரினை விட்டதாலே
வீரியம் குறைந்தே போச்சு
ஆரிடம் சொல்வோம் நாங்கள்
அக்காலம் வருமா என்று
ஊரிலே இருந்தபோது
உலகமே ஊராய் ஆச்சு
தேரிலே சாமி வந்தால்
தெருவெலாம் சொர்க்கம் ஆச்சு
உறவுகள் வந்து நிற்பர்
ஊரவர் உடனும் நிற்பர்
அருமையாய் இருந்த அந்த
பெருமைகள் வருமா இங்கு
துலாவிலே நீர் இறைத்தோம்
நிலாவிலே உலவச் சென்றோம்
இலையிலே பொங்கல் உண்டோம்
ஏக்கமாய் இருக்கு திப்போ
வண்டிலைப் பூட்டிக் கொண்டு
வயல் வெளி எங்கும்போனோம்
உண்டிடும் உணவு எல்லாம்
உவப்புடன் இருந்த தப்போ
கோலாட்டம் கும்மி என்று
குதூகலம் எங்கள் வாழ்வில்
நூல்கொண்டு பட்டம் விட்டு
ஜாலியாய் இருந்தோம் அப்போ
சைக்கிளில் ஓடி ஓடி
சந்தியை சுற்றி பார்ப்போம்
தெருக்களில் வருவோர் எல்லாம்
திகைத்துமே பார்த்து நிற்பர்
உவப்புடன் பார்ப்போம் நாளும்
உரிமையாய் சிரித்து நிற்போம்
நினைத்துமே பார்த்து விட்டால்
நிம்மதி வருமா மீண்டும் !
No comments:
Post a Comment