அருணாசல அற்புதம் 2: கிரிவலம் தரும் பெருநலம்


ரமணாச்ரமத்திலிருந்து அண்ணாமலை தரிசனம்

சென்ற ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று ஆருத்திரா தரிசனம் என்னும் திருவாதிரை நாள் வந்தது. அது சிவபெருமானுக்கு விசேடமான நாட்களில் ஒன்று. மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுதையே!என்றுதான் சிவபக்த சிரோமணியான நந்தனார் சிதம்பரத்துக்குப் போய்த் திருச்சிற்றம்பலவனைத் தரிசிக்க ஆசைகொண்டு பாடினார்.
ஆனால் 1879ஆம் ஆண்டில் ஆருத்திரா தரிசனம் டிசம்பர் 29ஆம் தேதியன்று வந்தது. அன்றிரவு மணி ஒன்று இருக்கும். திருச்சுழி என்ற ஊரில் அழகம்மாள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும் அவ்வூர்க் கோவிலுக்குள் பூமிநாதர் நுழையவும் சரியாக இருந்தது. இப்போதுபோல மகப்பேறு வசதிகள் இல்லாத காலத்தில் அவருடன் இருந்தவர் கண் தெரியாத ஒரு பெண்மணி. ஆனால், என்ன ஆச்சரியம்! குழந்தை பிறந்த அதே நேரத்தில் அவள் கண்முன்னே ஒரு மின்னல்வெட்டு தோன்றி மறைந்தது. அழகம்மை, இவன் தெய்வீகப் பிறவியாக இருக்கவேண்டும்என்றாள் அந்த முதியவள்.
அந்தக் குழந்தைதான் வெங்கட்ராமன். பின்னாளில் ரமண மகரிஷி என்ற மாபெரும் ஞானச்சுடராகத் திருவண்ணாமலையில் பிரகாசிக்கப் போகிறவன். ரமணரையே அருணாசலத்தின் அற்புதம் என்று கூறிவிட முடியும். அகிலமெல்லாம் அத்தலத்தின் மகிமை பரவியுள்ளதென்றால் அதற்கு வித்திட்டவர் ரமணர்தான். 
மலையைச் சுற்றுவதா?
பதினான்காம் வயதில் ஞானத்தைப் பெற்றுவிட்ட, அதற்குப் பிறகு எந்தவித ஆன்மீக சாதனையும் தேவைப்படாத ரமணரும்கூட செம்மலையாக நின்ற செம்மலை வலம் வருவதில் பெருமகிழ்ச்சி கண்டதுண்டு.
தேவராஜ முதலியார் என்றொரு ரமண பக்தர் இருந்தார். நல்ல அரசுப் பதவியில் இருந்த அவர் தன்னைப் பெரிய அறிவாளி என்று நினைப்பார். அதே நேரத்தில் சோம்பேறித்தனமும் அவரிடம் இருந்தது. ஜடமான அந்த மலையைச் சுற்றி வருவதில் என்ன பயன் என்று நினைத்துக் கொள்வார். பிற்காலத்தில் அவர் ரமணாச்ரமத்துக்கே வந்து தங்கிவிட்டார். அப்போது தனது சந்தேகத்தை மகரிஷியிடம் கேட்டேவிட்டார்.
அதற்கு பகவான் கூறினார், “கிரிப்பிரதட்சிணம் செய்வது எல்லோருக்கும் நல்லதே. அதில் நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமில்லை. நம்பிக்கை உள்ளவரோ அற்றவரோ ஆனாலும் எப்படி நெருப்பு தன்னைத் தீண்டியவரைச் சுடுகிறதோ, அதுபோலவே இம்மலையும் தன்னை வலம்வரும் எல்லோருக்கும் நன்மை தரும்.”
கேள்வி கேட்பதே அறிவின் அடையாளம் என்று நினைப்பவர்கள் இன்று அதிகமாகிவிட்டார்கள். தேவராஜ முதலியாரும் அப்படிப்பட்டவர்தான். சர்க்கரை இனிக்குமா?” என்று கேட்டுக்கொண்டே இருப்பவனுக்கு அதன் சுவை புரிவதே இல்லை; ஒரு துளி எடுத்து நாக்கில் வைத்துக்கொள்பவன் அதற்குப் பிறகு கேள்வி கேட்பதில்லை. தேவராஜ முதலியாரும் கிரிவலத்தின் பலனைப் பற்றி ரமணரைக் கேள்வி கேட்டுத் துளைத்தெடுப்பவராகவே இருந்தார்.
இத்தனை கேள்விகளை ஏன் எழுப்புகிறாய்? எந்தப் பலன் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் உடற்பயிற்சியாவது ஆகிவிடும், போய் வாஎன்றார் ஒருமுறை. மற்றொரு முறை ஒருமுறை சுற்றி வா. அருணாசலம் உன்னை வசீகரிப்பதை நீயே உணர்வாய்என்றார்.
இறுதியாக முதலியார் இரு வாரங்களுக்கு ஒருமுறை திருச்சுற்று வரத் தொடங்கினார். அவர் கூறுகிறார், “ஆரம்ப நாட்களில் எனது இப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடந்தன. பகவான் என்னிடம் கூறியிருந்தபடியே அருணாசலம் என்னை ஈர்க்கத் தொடங்கியது.....பிரதட்சிணம் செய்வதால் எல்லா விதத்திலும் நற்பயன் பெற்றிருக்கிறேன் என்பது என் அனுபவம்.
தமிழறிஞரும் கவிஞருமான முருகனார் பெற்ற அனுபவம் இன்னும் உயர்ந்தது. நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எனக்குத் தேகான்ம புத்தி (உடலே தான் என்னும் உணர்வு) மறைந்ததுஎன்கிறார்.
தியானம் செய்ய இயலாதவர்கள் அருணாசலத்தைப் பிரதட்சிணம் செய்வதால் தம் முயற்சியில் வெற்றி பெறுவர்என்று ரமண பகவான் பலரிடமும் சொன்னதுண்டு.
ன்றி மதுரமொழி

No comments: