தமிழ் சினிமா



சேட்டை

கைமாறிப் போகும் கடத்தல் வைரமும் அதைக் கண்டு பிடிக்க நடக்கும் சுவாரசியம் தான் சேட்டையின் கதை.
இதை கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் முகச் சுழிப்பு, கொஞ்சம் சேட்டை கலந்த கலவையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.
இந்தியில் வெளியாகி ஒரு சாராரின் வரவேற்பை மட்டுமே பெற்ற டெல்லி பெல்லி படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். மும்பையில் வெளியாகும் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றுபவர் ஆர்யா.
அவருடன் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்க்கிறார் பிரேம்ஜி. பின்னர் நடுப்பக்கம் நக்கி என்ற கிசுகிசு எழுத்தாளராக வருகிறார் சந்தானம்.
ஆர்யாவின் பணக்காரக் காதலி ஹன்சிகா, ஏர் ஹோஸ்டஸ் ஆக பணிபுரிகின்றார். ஒன்சைட் காதலி அஞ்சலி. ஆங்கிலப் பத்திரிகை நிருபர். ஒரு நாள் ஹன்சிகா ஒரு பார்சலை ஆர்யாவிடம் கொடுத்து, அதை தன் தோழியிடம் கொடுக்கச் சொல்கிறார்.
ஆர்யா அதை சந்தானத்திடம் கொடுக்கிறார். போகும் வழியில் இலியானா சிக்கன் என்ற பாஸ்ட் புட் அயிட்டத்தை ஏக மசாலாவோடு சேர்த்துத் தின்றதால் சந்தானம் பாத்ரூமே கதியென கிடக்கிறார்.
மருத்துவமனையில் அவரது மோஷன் சாம்பிள் கேட்கிறார்கள். ஒரு பெரிய டப்பாவில் அதை அடைத்து லேபில் தரச்சொல்லி பிரேம்ஜியிடம் தருகிறார். கூடவே அந்த பார்சலையும் கொடுத்து அனுப்புகிறார். பார்சல் மாறிப் போகிறது.
ஹன்சிகா கொடுத்த பார்சலில் ரூ 2 கோடிக்கு கடத்தல் வைரங்கள் இருப்பது தெரியாமல், அதை லேபிலும், சந்தானத்தின் பார்சலை கடத்தல் கும்பல் தலைவன் நாசரின் அடியாளிடமும் பிரேம்ஜி சேர்த்துவிட, இந்த வைரங்கள் கடைசியில் யார் கைக்குப் போகின்றன என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நாசர்தான் வில்லன். கிட்டத்தட்ட தமாஷ் வில்லன். பஞ்சு சுப்பு, அலி, மனோபாலா, சாயாஜி ஷிண்டே, சுஜா வருணி ஆகியோரும் வந்து போகின்றனர்.
வசனம், இசை, ஒளிப்பதிவு ஜான் மகேந்திரன் வசனம் எழுதியிருக்கிறார். இந்தக் காலத்துக்கேற்ப சின்னச் சின்ன உரையாடல்கள். கொமெடிப் பகுதிக்கு மட்டும் சந்தானமே எழுதியுள்ளார். தமனின் இசை, பாடல்கள் இரண்டுமே சுமார்தான். ஒளிப்பதிவு பிஜி முத்தையா.