இலங்கைச் செய்திகள்

.
வெலிக்கடைச்சிறையில் தமிழ் கைதியொருவரும் மூன்று முஸ்லிம் கைதிகளும் உயிரிழப்பு

கோயிலில் பெருந்தொகையான பணம், தங்கநகைகள் திருட்டு

புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டவர்களில் 21 பேருக்கு பிணை: 4 பேருக்கு விளக்கமறியல்

மதுபானசாலை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

 இராணுவ நினைவுத்தூபிக்கு உகண்டா ஜனாதிபதி மரியாதை

பரிதியின் மரணம்: இன்னும் ஏன் இந்த கொலை வெறி?

தமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும் மதீந்திரன்; புலிகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தில் பலியானார். (1)


ஐ.நா. தனது பொறுப்பை சரிவர செய்யவில்லை: பான் கீ மூன்

  யாழ்.- கொழும்புக்கான புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
   
திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் கைது




வெலிக்கடைச்சிறையில் தமிழ் கைதியொருவரும் மூன்று முஸ்லிம் கைதிகளும் உயிரிழப்பு


2012-11-13

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அசம்பாவிதத்தில் தமிழ்க்கைதி ஒருவரும் முஸ்லிம் கைதிகள் மூவரும் உயிரிழந்துள்ளனர். 


வெலிக்கடைச் சிறையில் பலியான கைதிகளின் விரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. 


இதில் பண்டாரவளையைச் சேர்ந்த ராமநாதன் பாலபெருமான் என்ற தமிழ்க்கைதியொருவரும் அடங்குகின்றார்.அத்துடன் முஸ்லிம் கைதிகள் மூவரும் பலியாகியுள்ளனர். 


இதே வேளை இந்த 27 பேரினதும் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 22 பேரின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 


பிரேத பரிசோதனைகளின் பின்னர் அச்சடலங்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். 
இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள சடலங்களின் விபரங்கள் வருமாறு, 
01. தொன் கயந்த புஷ்பகுமார (நுகேகொடை)
02. கமகே சமந்த பெர்ணான்டோ
03. குலவெல விதானகே தொன் சமீர மலித் விஜேசிங்க (தெஹிவளை)
04. தேவராஜா மல்வரகே சுகத் குமார (களுபோவில)
05. ரணசிங்க ஆராச்சிகே ஜனக வசந்த (ஹொரண)
06. அசித்த சஞ்ஜீவ திஸாநாயக்க (கிராண்ட்பாஸ்)
07. திலுக் சஞ்ஜீவ ராஜபக்ஷ (கல்கிசை)
08. ராமநாதன் பாலபெருமான் (பண்டாரவளை)
09. அசரப்புலிகே ஜோதிபால எனும் கபில (கிராண்ட்பாஸ்)
10. மலிந்த நிலேத்திர பெல்பொல எனும் மாலன் (கோட்டை)
11. ஹர்ஷ சி.மணிகீர்த்தி பெரேரா எனும்  மஞ்ஜூ ஸ்ரீ (பிலியந்தலை)
12. நிர்மல அத்தபத்து (பிலியந்தலை)
13. துஷார சந்தன எனும் களு துஷார (நாவின்ன)
14. சுசந்த பெரேரா (ரத்மலானை)
15. மொஹமட் விஜேரோஹன எனும் குண்டு (பொரளை)
16. மலித் சமீர பெரேரா எனும் கொன்ட அமித் (தெஹிவளை)
17. திஸ்ஸ குமார (கேகாலை)
18. லெஸ்ட டி சில்வா (ஹிக்கடுவ)
19. சலால்திஸ் மொஹமட் அஸ்வதீன் (கொழும்பு 12)
20. வெலிகம துப்பெஹிகே அசங்க உதயகுமார
21. வல்லகே லலத்த விஜேசிறி (காலி)
22.  ரத்னவீர படபெதிகே வெஸ்லி (காலி)
23. சரத் விஜேசூரிய (கல்கமுவ)
24. சபு பிரசன்ன டி சில்வா (இரத்மலானை)
25. மொஹமட் ரம்சதீன் தௌபர் (அக்கரைப்பற்று)
26. கன்னலு பெருமாராச்சிகே பிரியந்த (கரத்தெனிய)
27. லியனாராச்சிகே அநுர (பொரலஸ்கமுவ)
இதே வேளை சிறையிலிருந்து தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கையை சிறைஅதிகாரிகள் இன்னும் சரியாக அறிவிக்கவில்லை. ஆயினும் தமிழீழ விடுதலை புலிகளான சந்தேக நபர்கள் தப்பிச் செல்லவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 
வெலிக்கடை சிறைச்சாலையின் சப்பல் வார்ட் மற்றும் எல் மண்டபம் ஆகியவற்றில் விசேட அதிரடிப்படையினர் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை முடிந்து இரண்டொரு நிமிடங்களில் கலவரத்தை தூண்டி விட்டவர்களை கண்டறிவதற்காக விசேட அதிரடிப்படையினருக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன. 
சிறையிலிருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்ற போது அவ்விடத்துக்கு முச்சக்கர வண்டியும் வேனும் எவ்வாறு வந்தன என்பதையிட்டும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் இந்த முயற்சிகள் தோல்வி கண்டன. 
கலவரத்தின் தப்பி சென்றவர்களில் ஏழு பேர் 
பொலிஸில் சரணடைந்துள்ளனர். அத்துடன் தப்பிச் சென்றவர்களை தேடும் நடவடிக்கைகளை பொரளை மற்றும் தெமட்டகொடை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. 
எல்மண்டபத்திலிருந்த கைதிகள் சுவரில் துவாரத்தையிட்டு அதனூடாக தப்பி போனதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இதுவே ஆயுத மோதலுக்கு வழி வகுத்துள்ளது என கூறப்படுகின்றன. 
இங்கிருந்து  கடுங்குற்றமிழைத்த பலர் தப்பி சென்றுள்ளனர். அதே சமயம் இவர்கள் றைபில் ரக துப்பாக்கிகள் 82 யையும் அரை தன்னியக்க துப்பாக்கிகளையும் கைப்பற்றினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி

 





கோயிலில் பெருந்தொகையான பணம், தங்கநகைகள் திருட்டு
By General
2012-11-14
மட்டக்களப்பு சந்திவெளி ஸ்ரீ புதுப்பிள்ளையார் ஆலயத்தில் இரண்டு உண்டியல்கள் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளன.

ஆலயத்தின் பிரதான வாயிலில் உள்ள உண்டியல் மற்றும் அங்குள்ள முருகன் ஆலய உண்டியல் என்பனவற்றின் பூட்டுக்கள் வெட்டப்பட்டு கொள்ளை கொள்ளையிடப்பட்டுள்ளன.

கேதார கௌரி விரத நாட்களின் பின்னர் இந்த உண்டியல்களில் பெருந்தொகைப் பணம் மற்றும் நேர்த்திக்காக வந்த தங்க ஆபணரங்களும் சேர்ந்திருந்ததாக ஆலய நிர்வாகத்தினர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.         நன்றி வீரகேசரி








  புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டவர்களில் 21 பேருக்கு பிணை: 4 பேருக்கு விளக்கமறியல்
By General
2012-11-14
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குச் சென்று புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு திருப்பியனுப்பட்டவர்களில் 21 பேரை பிணையில் செல்ல நீர்கொழும்பு பிரதான நீதிவான் ஏ.எம்.என்.பி. அமரசிங்க உத்தரவிட்டுள்ளார். இதேவேளை நான்கு பேரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

புகலிடம் கோரி படகு மூலம் சட்டவிரோதமாகச் சென்ற ஒரு குழுவினரின் வழக்கு இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கடத்தலுக்கு உதவி புரிந்த நால்வரையே தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.    
நன்றி வீரகேசரி







  மதுபானசாலை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
By Farhan
2012-11-14
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு (வேடர்குடியிருப்பு) பிரதேசத்தில்; முடக்கொடி எனும் இடத்தில் புதிய மதுபானசாலை திறப்பதை கண்டித்து இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி சிலை முன்பாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதி ஊடாக, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச் சென்றனர்.

'மண்முனைப்பற்றில் இன்னுமொரு மதுபானசாலை திறக்க அனுமதி வழங்க வேண்டாம்", 'வேண்டாம் வேண்டாம் மதுபானசாலை வேண்டாம்" '7வது மதுபானசாலை வேண்டாம்", 'நிறுத்து நிறுத்து அனுமதியை நிறுத்து", "மண்முனைப்பற்று மதுபானசாலைகளின் மாநகரமா?", 'மண்முனை மண்ணிலே 7 மதுபானசாலைகள் வேண்டுமா?' போன்ற வாசகங்களுடன் சுலோகங்களை ஏந்தி கோசம் எழுப்பினர்.

ஆர்பாட்டக்காரர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் புதிய மதுபானசாலை திறப்பதை தடைசெய்யுமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.


 நன்றி வீரகேசரி


 இராணுவ நினைவுத்தூபிக்கு உகண்டா ஜனாதிபதி மரியாதை



Share

-
இலங்கை இராணுவத்தில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்காக பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு உகண்டா ஜனாதிபதி யோவரி ககுடா முசவேனி இன்று புதன்கிழமை மரியாதை செலுத்தினார்.
(படங்கள்: ஜே.சுஜீவகுமார்)
-
-
-
-
-
நன்றி வீரகேசரி





பரிதியின் மரணம்: இன்னும் ஏன் இந்த கொலை வெறி?
- என்.சத்தியமூர்த்தி
parithi-mordவெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக, இலங்கை தமிழர் பிரச்சினையில் சர்வதேச சமூகம் ஒரு முடிந்த முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, பிரான்சு நாட்டு தலைநகர் பரிஸில் அரங்கேறிய 'பரிதி'-யின்; கொலை, அவர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அரங்கேறியது துர்பாக்கியமே. புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல், என்ன தான் இனப்போரில் காணாது போனாலும், விடுதலை புலிகள் இயக்கத்தின் மாறுபட்ட குழுக்களை சார்ந்தவர்களின் தான்தோன்றி தனமும் 'கொலை வெறி' மட்டும் இன்னமும் அடங்கவில்லை என்பதனையே இது காட்டுகிறது.
பரிதி மற்றும் ரீகன் என்ற பெயர்களில் நடமாடி வந்த மதீந்திரனின் புனை பெயர் மகாத்யமே அவனது கடந்த காலத்தை நினைவு கூறும். சர்வதேச சமூகத்திற்கோ, அது விடுதலை புலிகள் இயக்கத்தின் நடைமுறை வழித்தடம் இன்னமும் மாறிவிடவில்லை என்பதை நினைவு கூறும். அதிலும் குறிப்பாக, தென் ஆசிய பெயர்களை கடித்துக் குதறி துப்பும் மேலைநாட்டு இராஜதந்திரிகளுக்கு சிறிய புனை பெயர்கள் இலகுவாக அமைந்திருக்கலாம். ஆனால், அந்த நாடுகளின் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு அதுவே ஒரு எச்சரிக்கை மணியான அமைந்துவிடும். அந்த விதத்தில் மதீந்திரனின் புனை பெயர்களே, தற்போது அந்த அதிகாரிகளை விடுதலை புலிகள் இயக்கத்தினர் குறித்த தங்களது பழைய ஏடுகளை தூசி தட்ட தூண்டியிருக்கும்.
இவ்வாறு நடக்கும் பட்சத்தில், அதன் பாதிப்பு, புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல. அவர்களில் பலரும் இன்னமும் நம்பி இருக்கும் 'இனப் பிரச்சினை'-க்கான தீர்வில் சர்வதேசத்தின் பங்களிப்பும் காணாமல் போய்விடும். இதற்கான விலையை, இலங்கையில் தங்கிவிட்ட தமிழ் சமுதாயமும் கொடுக்க வேண்டிவரும். 'பழைய குருடி, கதவை திறடி' என்ற கதையாக, சர்வதேசமும், இனப்பிரச்சினையை, விடுதலை புலிகள் இயக்கத்திற்கு எதிரான தீவிரவாதத்திற்கான உலகளாவிய போராட்டத்தின் ஒரு பகுதியாகவே மீண்டும் பார்க்கத் தொடங்கி விடும். பரிதியின் படுகொலை இதற்கு ஒர் அச்சாரமே.
இனப்போர் முடிந்த காலகட்டத்தில் இருந்து, விடுதலை புலிகள் இயக்கம், இலங்கையை போலவே, தங்களது நாடுகளிலும் இல்லாமலே போய்விட்டது என்றே சர்வதேச சமூகம் கருதி வருகிறது. தங்கள் நாடுகளில் வாழும் விடுதலை புலிகள் இயக்கத்தவரில் யாரும் போரில் இறந்து விடவில்லை என்றாலும், சில மாத காலங்களுக்குப் பிறகு அவர்களுக்கும் இயக்க சிந்தனைகள் வெகுவாக குறைந்து விடும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது.
அந்த வகையில் இனப்பிரச்சினை குறித்து தங்கள் நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் அரசியல் ரீதியாக, சமாதானப் பாதையில் தங்களது சர்ச்சைக்கு அப்பாற்பட்ட கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்கு அவர்கள் யாரும் எதிரியல்ல. ஆனால், அதுவே தனி நாடு கோரிக்கை என்றோ, அதற்கு தீவிரவாத முறைகளே ஒரே வழி என்றோ புலம் பெயர் தமிழர்களில் சிலர் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதாக அந்தந்த நாடுகள் கருதினால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் தமிழ் சமுதாயத்திற்கு பலன் அளிக்காது. மாறாக, பிரச்சினையாகவே முடியும்.
பரிதியின் மரணம் குறித்த பத்திரிகை செய்திகள் கூறும் சில கருத்துக்கள் சர்வதேச சமூகத்தை மேலும் சிந்திக்க வைக்கும். பரிதி ஒரு பிரான்ஸ் நாட்டு பிரஜை என்ற விதத்தில், அவரது கொலையாளிகளின் பின்புலம் குறித்து அந்த நாட்டு காவல் துறையினர் கவலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பரிதியோ மற்றவர்களோ, பிரான்ஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலை புலிகள் இயக்கத்தின் வழக்கமான முறையில் 'வரி' வசூலித்து வந்திருந்தால், அதில் கட்டயாயப்படுத்தப்பட்ட புலம்பெயர் தமிழர்களுக்கும் தலைவலி திருகுவலியாக மாறிவிடும்.
வழக்கமாக காரில் பயணம் செய்யும் பரிதி, சம்பவம் நடந்த சமயத்தில், தனது கார் பழுதானதால், பேரூந்தில் பயணிக்க நிற்கும் போதே கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, அவரது பழக்கவழக்கங்களை கொலையாளிகள் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள் என்று நம்பவும் இடம் இருக்கிறது. அது மட்டுமல்ல. அந்த கார் பழுதானது என்பது இயற்கையில் நடந்தேறியதா, அல்லது அதுவும் கொலையாளிகளின் கைவரிசையா, என்பதும் பரிஸ் நகர காவல் துறையினரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
முதலில் துப்பாக்கியால் சுடப்பட்ட பரிதி இறந்து விடாமல், சாலையில் விழுந்து துடித்திருக்கிறார். அதனை பார்த்த கொலையாளிகள், தங்களது மோட்டர் சைக்கிளில் சில அடிகளாவது திரும்பி வந்து, அவரை மீண்டும் சுட்டு, அவரது மரணத்தை உறுதி செய்திருக்கிறார்கள். இது ஏதோ, ஆத்திரத்தில் நடந்த அவசரக் கொலை அல்ல. திட்டமிடப்பட்டு நிகழ்ந்தேறிய படுகொலை. ஏன் இந்த கொலை வெறி என்பதற்கான பதிலும் பரிஸ் பொலிஸாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
இதற்கிடையில், பரிதியின் மரணத்திற்கு இலங்கை அரசின் இரகசிய குழுக்களே காரணம் என்ற விதத்தில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அரசு இதனை மறுத்துள்ளது. அதை விட முக்கியமான கேள்வி ஒன்று உள்ளது. இனப்போர் முடிந்த பின்னர், பரிதியின் மீது இது முதல் தாக்குதல் அல்ல. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கடைசியில் அதே பரிஸ் நகரில் பரிதி தாக்கப்பட்டுள்ளார்.
இன்று பரிதியை கொலை செய்தது இலங்கை அரசின் கும்பல் என்றால், கடந்த வருட தாக்குதலை மேற்கொண்டதும் அதே கும்பலா? என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு பதில் கிடைக்காத பட்சத்தில், இது புலம்பெயர் விடுதலை புலிகள் இயக்கத்தினருக்குள்ளே என்றுமே தீராத சகோதர யுத்தத்தின் புதிய வெளிப்பாடே என்று கருத வேண்டும். அவ்வாறான பட்சத்தில், பழிவாங்கும் கொலைகள் தொடர்ந்து நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன என்று புலம்பெயர் தமிழர்கள் நம்பலாம். அந்த தாக்குதல்கள் பாரிஸ் நகரத்துடனோ, அல்லது பிரான்ஸ் நாட்டுடன் நின்று விடுமா, அல்லது பிற நாடுகளுக்கும் பரவுமா என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விடயம்.
இது இவ்வாறானால், விடுதலை புலிகள் இயக்கம் குறித்த சர்வதேச சமூகத்தின் நியாயமான கவலைகளும் கடல் கடந்து பல்வேறு நாடுகளையும் வியாபித்து விடும். அந்த தருணத்தில், 'நாங்கள் அப்போதே சொன்னோம், கேட்டீர்களா?' என்று இலங்கை அரசு, சர்வதேச சமூகத்திடம் கெக்கலிக்கும். அப்போது, கடந்த காலங்களைப் போலவே, இப்போதும் விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயரால் இலங்கை அரசு இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கு புதுப்புது அர்த்தங்கள் கற்பிக்கும் வேளையில், அது சர்வதேச சமூகத்திற்கும் பழகிப் போன விடயமாகவே தெரியும். இதற்கும் அப்பால் சென்று விடுதலை புலிகளின் தீவிரவாதத்திற்கும் அவர்களுடைய ஆளுமை தொடங்கிய காலகட்டத்திற்கு முந்தைய ஆயுத புரட்சிக்கும் இடையே 'ஆறு வித்தியாசங்கள் காண்க' என்ற புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாராரின் முயற்சி, தொடக்கம் இல்லாமலே முடிந்து விடும்.
நன்றி: தமிழ்மிரர்


தமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும் மதீந்திரன்; புலிகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தில் பலியானார். (1)
 -   டி.பி.எஸ்.ஜெயராஜ்
parithi youngparithiதமிழீழ விடுதலை புலிகளின்(எல்.ரீ;ரீ.ஈ) பிரான்சிய தலைவரான நடராஜா மதீந்திரன்; கடந்த நவம்பர் 8 ந்திகதி வியாழக்கிழமை இரவு  உந்துருளியில் வந்த இனந்தெரியாத கொலைகாரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 49 வயதான பரிதி என்கிற பெயராலும் அழைக்கப்பட்ட மதீந்திரன்; எல்.ரீ;ரீ.ஈ யின் முன்னணி அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழவிற்கு(ரி.சீ.சீ) தலைவராக இருந்தார்.
ஸ்ரீலங்காவில் புலிகளின் அங்கத்தவராக பணியாற்றியபோது ரீகன் என்கிற இயக்கப் பெயரால் அழைக்கப்பட்ட மதீந்திரன்;,பரீசிலுள்ள 341, பைரனீஸ் வீதியிலுள்ள, ரி.சீ.சீ அலுவலகத்துக்கு முன்னால் வைத்து இரவு சுமார் 9.20 மணியளவில் கொல்லப்பட்டார்.
பிரான்சிலுள்ள ஊடகங்கள் வெளிப்படுத்தும் தகவல்களின்படி பரிதி என்கிற மதீந்திரன்; அல்லது ரீகன் என்றழைக்கப் படுபவர், தனது வீட்டுக்குச் செல்வதற்காக ரி.சீ.சீ அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது, உந்துருளியில் வந்த இரண்டு மனிதர்கள் வெகு சமீபத்தில் வைத்து அவரைச் சுட்டுள்ளார்கள்.ஒரு துப்பாக்கி குண்டினால் காயமடைந்த மதீந்திரன் அங்கிருந்து ஓடுவதற்கு முயற்சி செய்திருக்கிறார், ஆனால் அருகிலிருந்த பேரூந்து நிறுத்துமிடத்தில் அவர் கீழே விழுந்து விட்டார்.
அந்த உந்துருளி கொலைகாரர்கள், தலைக்கவசம் அணிந்து தங்கள் முகத்தை மறைத்து முகமூடி அணிந்திருந்தார்கள். கீழே விழுந்த மதீந்திரனை நோக்கித் திரும்பிய  அந்த இருசக்கர வண்டி அவருக்கு அருகில் வந்து அவருக்கு மிக நெருக்கமான தூரத்தில் வைத்து மீண்டும் இரண்டு முறை அவரை நோக்கித் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து ஓடி மறைந்தது. மதீந்திரன்; தலத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறது,மற்றும் மருத்துவ ரீதியான வார்த்தைகளில் சொல்வதானால் மருத்துவ மனையில் அனுமதிக்கும்போது உயிரிழந்திருந்தார்.அவரது உடலை மூன்று ரவைகள் துளைத்திருந்தன. கொலையை விசாரணை செய்யும் பிரான்சிய காவல்துறையினர் எல்.ரீ;ரீ.ஈ யின் இரு பிரிவினருக்கு இடையில் உள்ள உள்ளக மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என எண்ணுகிறார்கள்.
எல்.ரீ;ரீ.ஈ யின் முன்னாள் அதியுயர் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனால் பிரான்சிலுள்ள இயக்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட மதீந்திரன்;, பிரான்சிலுள்ள எல்.ரீ;ரீ.ஈயின் பெரும்பாலான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பெரும் பகுதிக்கு தலைமையேற்றிருந்தார்.
பரிதி என்கிற மதீந்திரன்; பிரான்சிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழவிற்கு(ரி.சீ.சீ) அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளர் அல்லது இணைப்பாளர் ஆக கடமையாற்றி வந்தார். எனினும் அவர் முன்பு கைது செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதின் காரணமான சில சட்டப் பிரச்சினைகளினால்  அவர் மரணமடைந்த அந்த நேரத்தில் உத்தியோகபூர்வமாக அவர் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை, ஆனால் உத்தியோகபூர்வமற்ற முறையில் அவர் எல்.ரீ;ரீ.ஈயின் தலைவராக கடமையாற்றி வந்தார்.
வெளிநாட்டிலுள்ள ஏனைய புலித் தலைவர்களைப் போலில்லாது பரிதி ஒரு வண்ணமயமான வரலாற்றை தனது பின்புலமாக கொண்டிருந்தார். மேற்கில் பாதுகாப்பாக குடியேறிய பின்னர் தங்களை புலிப் போராளிகள் என்று அழைத்துக் கொள்ளும் மற்றவர்களைப் போன்ற ஒருவரல்ல பரிதி. ஸ்ரீலங்கா யுத்த களங்களில் புலிகளின் இரும்புக் கவசம் போல முழுதாக தன்னை அர்ப்பணித்துப் போராடிய எல்.ரீ;ரீ.ஈ அங்கத்தவர்.
நடராஜா மதீந்திரன்; ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியின் ஒரு பாகமாகிய யாழ்ப்பாண கரையோர தீவாகிய நாரந்தனையை பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர், அங்கு அவர் தனது க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தாலும் பல்கலைக்கழக அனுமதியை பெறத் தவறிவிட்டார்.
1983 ஜூலை தமிழர் எதிர்ப்பு நிகழ்ச்சி இடம்பெற்றபோது, உணர்ச்சி பெருக்கில் பொங்கி எழுந்த சில எண்ணிக்கையான தமிழ் இளைஞர்கள் பல்வேறு தமிழ் இயக்கங்களில் இணைந்தார்கள். மதீந்திரன்; தன்னை எல்.ரீ;ரீ.ஈயில் இணைத்துக் கொண்டார். மதீந்திரன் இந்தியாவில் ஆயுதப் பயிற்சி பெற்ற இரண்டாவது குழுவில் ஒருவராவர். மதீந்திரன்;,பானு மற்றும் ஐடியாஸ் வாசு போன்றவாகளுடன் இணைந்து வட இந்திய மாநிலமான ஹிமாச்சால் பிரதேசத்தில் பயிற்சி பெற்றவர்.
றீகன்
மதீந்திரன் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகனின் பெயரை தனது இயக்கப் பெயராக மேற்கொண்டார். எனினும் அவர் தனது பெயரை எழுதும் போதும்போது ஜனாதிபதியின் பெயரில் இருந்ததைவிட ஆங்கில எழுத்தான ஒரு ‘ஏ’ யை நீக்கியே றீகன் என்கிற தனது பெயரை எழுதிவந்தார். பயிற்சியின் பின்னர் சில காலம் தமிழ் நாட்டில் மௌனமாக இருந்த பின்னர் றீகன் என்கிற மதீந்திரன்; ஸ்ரீலங்காவின் வடபகுதிக்கு திரும்பினார்.
மன்னார் மாவட்ட தளபதி விக்டரின் கீழ் றீகன் கடமையேற்றுக் கொண்டார். விக்டர் கொல்லப்பட்டதும் மற்றும் இரண்டு இராணுவத்தினர் உயிருடன் கைதிகளாக பிடிக்கப்பட்ட பிரசித்தி பெற்ற அடம்பன் போரில் றீகனும் பங்கேற்றிருந்தார். விக்டரின் மரணத்தின் பின்னர் மன்னார் மாவட்ட எல்.ரீ;ரீ.ஈ தலைமையை ராதா பொறுப்பேற்றார், றீகன் அவரின் கீழும் பணியாற்றினார்.
1987ல் முன்னாள் யாழ் மாவட்ட தளபதி சதாசிவம்பிள்ளை கிருஸ்ணகுமார் என்கிற கிட்டு ஒரு குண்டுத் தாக்குதலில் அகப்பட்டு ஒரு காலை இழந்த பின்னர் ராதா யாழ்ப்பாணத்துக்கு நகர்ந்தார். றீகனும் ராதாவுடன் யாழ்ப்பாணத்துக்குச் சென்றார்.1987ல் நடைபெற்ற வடமராட்சி நடவடிக்கைக்கான போரில் றீகன் காயமடைந்தார்.
ஜூலை 29,1987 ல் இந்திய – இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டு அமைதி நிலவியபோது றீகன் சிகிச்சைக்காக தமிழ் நாட்டுக்குச் சென்றார். அவரது முழங்காலின் பின்பக்க மேற்புறத்தில் காயம் ஏற்பட்டதின் விளைவாக அவரது பெரோனியல் நரம்பு பழுதடைந்தது. இது பாத விழுகை எனும் நோயின் நிலைக்கு அவரை கொண்டு சென்றது.
இந்த நிலையை ஒருவகை ஊனம் எனலாம்,பலமற்ற பாதங்கள் காரணமாக நடப்பதற்கு சிரமம் ஏற்படலாம். பாத விழுகை ஏற்பட்ட நபர்கள் கணுக்காலுக்கு மேல் தங்கள் பாதங்களை உயர்த்த முடியாமலிருக்கும். இந்த நிலமை காரணமாக  காற் பெருவிரல்களை நிலத்திலிருந்து விடுவிப்பதற்காக  அந்த நபர் பாதிக்கப்பட்ட தனது பாதத்தை உயரத் தூக்க வேண்டியிருக்கும்.
றீகன் தமிழ் நாட்டிலிருந்தபோது சென்னையிலுள்ள எல்.ரீ;.ரீ.ஈ அலுவலகத்துக்கு பொறுப்பாக இருந்த கஸ்ட்ரோவுடன் தங்கியிருந்தார். அதன் காரணமாக அவர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். 1987ல் எல்.ரீ;.ரீ.ஈக்கும் இந்திய இராணுவத்துக்கும் இடையில் யுத்தம் வெடித்தபோது,தமிழ் நாட்டிலிருந்து அநேக எல்.ரீ;.ரீ.ஈ அங்கத்தவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்கள். 1989ல் இந்திய அதிகாரிகளால்  இந்தியாவிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் யாவரும் ஸ்ரீலங்காவுக்கு கொண்டு வரப்பட்டார்கள். அவர்களில் 82 பேர்கள் காங்கேசன்துறையில் தடுத்து வைக்கப்பட்டார்கள். றீகன் என்றழைக்கப்படும் மதிதரனும் அவர்களில் ஒருவர்.
1990 களில் இந்திய இராணுவம் முற்றாக வாபஸ் பெறப்பட்டதும் தடுத்து வைக்கப்பட்டிருந்த சகல எல்.ரீ.ரீ.ஈ யினரும் விடுதலை செய்யப்பட்டார்கள். ரணசிங்க பிரேமதாஸவினால் பேச்சுக்கள் மூலம் உருவாக்கப்பட்ட சமாதானம் குறுகிய காலமே உயிர் வாழ்ந்தது, அது ஜூன் 1990 ல் சீர்குலைந்து முழு அளவிலான போர் வெடித்தது.
காயமடைந்தது
இந்தச் சமயத்தில் றீகன் வட பகுதி தீவகப் பிரதேசங்களின் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றிருந்தார்.அவரது பிராந்திய அரசியற் பொறுப்பாளர் கஸ்ட்ரோ. 1990 ஆகஸ்ட் செப்ரம்பர்  காலப் பகுதிகளில் இராணுவம் எல்.ரீ.ரீ.ஈ யினை தீவகப் பகுதியில் இருந்து விரட்டியது மற்றும் கடற்படை இணைந்து நடத்திய  ஒப்பறேசன் மேஜர் என்கிற குறியீட்டுப் பெயருடைய இந்தத் தாக்குதலில் றீகன் மீண்டும் காயமடைந்தார்.
அவர் தமிழ் நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக வேண்டி இரகசியமாக படகுப் பயணம் ;செய்து இந்தியாவுக்கு சென்றார். அவர் அங்கு பல மாதங்கள் தங்கியிருந்தார். அப்போதுதான் எல்.ரீ.ரீ.ஈ முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை 1991 மே 21ல் கொலை செய்தது. அதனால் அங்கு பலமான தேடுதல் நடைபெற்றது. றீகன் கேரளாவுக்கு நகர்ந்து ஒரு மட்டுபடுத்தப்பட்ட அளவில் தன்னை வெளிப்படுத்தாமல் சமாளித்து வந்தார்.
ராஜீவின் மறைவுக்கு பின் உருவான நிலமைகளின் மாற்றங்களினால் விரக்தியுற்ற றீகன் இயக்கத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். அவர் தலைமையுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டு தனது சொந்த முயற்சிகளின் துணையினால் பிரான்சை அடைந்தார். அவர்  பிரான்சிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ கிளைகளுடன் எந்தவித தொடர்புகளையும் ஏற்படுத்தாது அங்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தன்னை வெளிக்காட்டாமல் வாழ்ந்தார்.
அந்தக் கட்டத்தில்தான் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ  பிரதி தலைவர் கோபால்சாமி மகேந்திரராஜா என்கிற மாத்தையா, பிரபா – பொட்டு அம்மான் ஜோடியினரால் காட்டிக் கொடுத்தல் குற்றம் சாட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டார். பின்னர் அவர் கொல்லப்பட்டார். எல்.ரீ.ரீ.ஈ உடன் கருத்து வேறுபாடு கொண்ட பிரான்சிலுள்ள சிலர் மாத்தையாமீது மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பரீசில் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். றீகனும் இதில் சம்பந்தப் பட்டிருந்தார்.
அப்போது எல்.ரீ.ரீ.ஈ யின் சர்வதேச பேச்சாளராக இருந்த லோறன்ஸ் திலகர் பிரான்சை தளமாகக் கொண்டியங்கி வந்தார். றீகனின் தொடர்பினைப்பற்றி ஸ்ரீலங்காவிலுள்ள தலைமையிடம் திலகர் முறைப்பாடு செய்தார்.இதன் விளைவாக றீகன் தனக்கு பாதுகாப்பின்மை உள்ளது எனக்கருதி பரீசை விட்டு வெளியேறியிருந்தார். அதன்பின்னர் அவர் எல்.ரீ.ரீ.ஈ அரசியலில் எந்தவித தொடர்பும் கொள்ளாது தனியான ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்கினார்.
பரீசிலிருந்து இந்த ஒதுங்கியிருப்பு பயனுள்ள ஒன்று என்று நிரூபித்தது. சில வருடங்களின் பின் குற்றமற்ற றீகன் குடியுரிமை பெற்று பிரான்சிய கடவுச்சீட்டுக்கு உரித்தாளியானார்.
ஒஸ்லோவின் அனுசரணையுடன் நடைபெற்ற யுத்த நிறுத்தம் 2002ல் அமைதி நிலையை ஏற்படுத்தியது. மதீந்திரனுக்கு இப்போது ஸ்ரீலங்காவுக்கு அதுவும் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டிலுள்ள வன்னிக்கு விஜயம் செய்ய ஆசை ஏற்பட்டது. அவர் தன்னுடைய பழைய தோழர் கஸ்ட்ரோவை தொடர்பு கொண்டார்,அவர் எல்.ரீ.ரீ.ஈ தலைமையிடம் அனுமதி பெற்று பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை பெற்றுக் கொடுத்தார்.
டேசன்
மதீந்திரன் என்கிற றீகன் பின்னர் பிரான்சிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு பயணமானார். அவர் சில நாட்கள் கிளிநொச்சியில் தங்கியிருந்தபோது எல்.ரீ.ரீ.ஈ காவல்துறை தலைவரான பாலசிங்கம் மகேந்திரன் என்கிற நடேசனைச் சந்தித்தார். றீகனுடன் பேசும்பொழுது அவர் ஒரு பிரான்சியப் பிரஜை என்பதை நடேசன் அறிந்து கொண்டார்.
வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ நிருவாகத்தின் பொறுப்பு, கேபியிடமிருந்து கஸ்ட்ரோவிடம் கைமாறியிருந்தது.தனது முறைக்கு கஸ்ட்ரோவும் தற்போது கடமையிலிருந்த கிளை அலுவலர்கள் கேபியின் வ்pசுவாசிகள் என அவர் நினைத்தபடியால் அவர்களை  நீக்கி வந்தார். பிரான்சிலிருந்த எல்.ரீ.ரீ.ஈ தலைவரான மனோ என்கிற வேலும்மயிலும் மனோகரன் என்பவரும் நீக்கப்பட்டிருந்தார். அதனால் பிரான்சில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனிடம் பிரான்சிற்கு பொறுப்பானவராக றீகனை நியமிக்கலாம் என நடேசன் ஆலோசனை தெரிவித்திருந்தார். கஸ்ட்ரோவும் அதை ஏற்றுக் கொண்டிருந்தார். றிகன் எல்.ரீ.ரீ.ஈ யிலிருந்து விலகிய சந்தர்ப்பம் மற்றும் மாத்தையா எதிர்ப்பு சுவரொட்டி அரங்கம் போன்றவற்றை பொருட்படுத்தாது றீகன்தான் அதற்கு பொருத்தமானவர் என்று பிரபாகரன் எண்ணினார்.
நடேசன் மற்றும் கஸ்ட்ரோ ஆகியோர் றீகனைச் சந்தித்து அந்த வாய்ப்பை  வழங்கினார்கள், ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மதீந்திரன் தயங்கினார். பின்னர் அவரது முன்னாள் தோழர்கள் மற்றும் மூத்த தோழர்களான பானு மற்றும் ஜெயம் ஆகியோரும் மதீந்திரனை சந்தித்து அதனை  ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கும்படி அவரிடம் கேட்டுக் கொண்டனர். எனினும் றீகன் அந்த அழைப்பை நேரடியாக பிரபாகரனிடமிருந்தே கேட்க விரும்பினார்.
ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு றீகன் பிரபாகரனை நேருக்கு நேர் சந்தித்தார். பிரபாகரன் அந்த வாய்ப்பை அவருக்கு நேரடியாகவே வழங்கியபொழுது மதீந்திரனால் அதை மறுக்க முடியவில்லை. அவர் அதை ஏற்றுக்கொண்டு பிரான்சின் புதிய எல்.ரீ.ரீ.ஈ தலைவரானார்.
இளங்குமரன் மற்றும் தமிழேந்தி ஆகியோரின் முயற்சியினால் எல்.ரீ.ரீ.ஈ  தனது இயக்தின் அங்கத்தவர்கள் மற்றும் கலைச் சொற்களின் பெயர்களை தமிழாக்கம் செய்துகொண்டிருந்தது. எனவே மதீந்திரனை திரும்பவும் இயக்கத்துக்குள் உள்வாங்கியபோது அவரது இயக்கப் பெயரான றீகன் என்பதை சூரியன் என்கிற பொருள்படும்; பரிதி என மாற்றம் செய்யப்பட்டது.
(தொடரும்) நன்றி தேனீ 



 
ஐ.நா. தனது பொறுப்பை சரிவர செய்யவில்லை: பான் கீ மூன்
By General
2012-11-15

லங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது ஐ.நா. தனது பொறுப்பை சரிவர செய்யவில்லை என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கை பிரித்தானியாவின் சார்ள்ஸ் பெற்றியினால் நேற்று பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயற்படுத்தவில்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் சர்வதேச மக்களிடம் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை அற்றுப் போகாதிருக்க, போதிய அளவு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.          நன்றி வீரகேசரி








  யாழ்.- கொழும்புக்கான புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
By Priyarasa
2012-11-15

யாழ்ப்பாணம் - கொழும்புக்கான புகையிரதப்பாதை புனரமைக்கும் வேலைகள் யாழ். குடாநாட்டில் ஆரம்பமாகியுள்ளன. இந்த திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு சுமார் பத்துமாத இடைவெளியின் பின்னர் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

தற்போது கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு முன்னாள் தண்டவாளங்கள் கொண்டுவரப்பட்டு பொருத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகளவான நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு பாதை அமைக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.         நன்றி வீரகேசரி






  திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் கைது
By Kapila
2012-11-15 13:19:07
புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு அவுஸ்திரேயாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்று இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் பகல் 12.10 மணியளவில் வந்த குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கை குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இவர்கள் அனைவரும் பெருபான்மை இனத்தைச் சேர்ந்த ஆண்களாவர். இவர்கள் மாத்தறை 5, கம்பஹா 1, களுத்துறை 3, புத்தளம் 14 மற்றும் அம்பாறை 9 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

  நன்றி வீரகேசரி

No comments: