உலகச் செய்திகள்

.
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி

இந்தோனேஷியாவில் பூமியதிர்ச்சி

மஞ்செஸ்டரில் இன்னுமொரு இந்திய மாணவன் சடலமாக மீட்பு

ஈரான் கார் குண்டுவெடிப்பில் அணு விஞ்ஞானி பலி

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 20 பேர் பலி

10/1/2012

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் கைபர் பழங்குடியினர் பகுதியில் உள்ள சந்தையொன்றில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 29 பேர் பலியானார்கள். இதில் மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிரக்கில் குண்டு வெடித்தது.

இதனால் டிரக்கில் அமர்ந்திருந்த அனைவரும் பலியானார்கள். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நன்றி வீரகேசரி



இந்தோனேஷியாவில் பூமியதிர்ச்சி

11/1/2012

இந்தோனேஷியாவில் இன்று அதிகாலை வேளை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஆச்சே பகுதியிலேயே ரிச்டர் அளவுகோலில் 7.3ஆக இது பதிவாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் பின்னர் அது வாபஸ் பெறப்பட்டுள்ளது.கரையோரப்பகுதியில் வாழும் மக்களை அப்பகுதியை விட்டும் வெளியேறுமாறு கேட்கப்பட்டிருந்தது.கடந்த 2004 ஆம் ஆண்டு இதே பகுதியில் பூமியதிர்ச்சி ஏற்பட்டு சுனாமியால் பல உயிர்கள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

மஞ்செஸ்டரில் இன்னுமொரு இந்திய மாணவன் சடலமாக மீட்பு


கவின் 11/1/2012

பிரித்தானியாவில் கடந்த 2 ஆம் திகதி காணாமல் போன இந்திய வம்சாவளி மாணவரான குர்தீப் ஹேயரின் உடல் நேற்று மஞ்செஸ்டரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது..

மஞ்செஸ்டர் நகரினூடாகப் பாயும் ஆற்றுப் பகுதியொன்றிலேயே ஹேயரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேர்மிங்ஹாமைச் சேர்ந்த குர்தீப் அந்நாட்டு பல்கலைக்கழகமொன்றில் வியாபார முகாமைத்துவம் பயிலும் மாணவராவார்.

இவர் புதுவருட கொண்டாட்டங்களுக்காக கடந்த 31 ஆம் திகதி வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

எனினும் அதன் பின்னர் இவர் தனது நண்பர்களோடு மஞ்செஸ்டரிலேயே தங்கியுள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி அதிகாலை 2.15 மணியளவில் இரவு விடுதியொன்றில் இருந்து திரும்பும் வழியில் காணாமல் போயுள்ளார்.

இதுதொடர்பில் இவரை விடுதியிலிருந்து ஏற்றி வந்த வாடகைக்கார் சாரதியைப் பொலிஸார் விசாரித்த போது குர்தீப் மஞ்செஸ்டரில் உள்ள ரசோல்ம் பகுதிக்கு செல்லுமாறும் பின்னர் பயணத்தில் இடை நடுவிலேயே இறங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணத்தில் சந்தேகத்திற்கு இடமான தடயங்கள் எதுவும் கிடைக்காததால் குர்தீப் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த அனுஜ் பித்வே என்ற மாணவர், கடந்த வருடம் டிசம்பர் 26ஆம் திகதி, மஞ்செஸ்டரில் வைத்துக்கொல்லப்பட்டார்.

அவரது உடல், லண்டனில் இருந்து புனேக்கு கொண்டு செல்லப்பட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி

ஈரான் கார் குண்டுவெடிப்பில் அணு விஞ்ஞானி பலி


சி.எல்.சிசில் 11/1/2012

ஈரானில் புதன்கிழமை காலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் அணு விஞ்ஞானியும் நட்டான்ஸ் யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் பணி புரிந்தவருமான முஸ்தபா அஹ்மடி ரோஷன்(32 வயது) கொல்லப்பட்டார். குறித்த காரின் சாரதியும் உயிரிழந்துள்ளார்.

தலைநகர் தெஹ்ரானின் வடக்கு வீதியில் இடம்பெற்ற இத்தாக்குதலில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

பலியான விஞ்ஞானி முஸ்தபா ஈரான் எண்ணெய்த் தொழிற்றுறை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமாவார்.

அண்மைய ஆண்டுகளில் ஈரானிய அணு விஞ்ஞானிகள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவும் இஸ்ரேலும் இவற்றைச் செய்வதாக ஈரான் குற்றம்சாட்டிய போதிலும் இரு நாடுகளும் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றன.

ஈரான் துணை ஜனாதிபதி முகமட் றீசா றஹிமி, "அஹமடி ரோஷன் மீதான தாக்குதல் மூலம் நாட்டின் அணுசக்தி திட்டத்தின் முன்னேற்றத்தை நிறுத்தி விட முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

அவர் இப்படுகொலை 'வெளிநாட்டு அரசு ஆதரவு பயங்கரவாதத்திற்கான ஆதாரம்' என வர்ணித்துள்ளார்.
நன்றி வீரகேசரி







No comments: