இலங்கைச் செய்திகள்

* சிங்களப் பயணிகளால் மிரட்டப்பட்ட தமிழ்ப் பயணிகள் மீது படையினர் கடும் தாக்குதல் பரந்தனில் சம்பவம்

* பொது நலவாயப் போட்டிக்காகப் பெருந்தொகையை செலவிட்டும் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை நிதியை விரயமாக்கிவிட்டது அரசு; ஐ.தே.க.

* எதை நோக்கிப் போகிறது யாழ்ப்பாணக் குடாநாடு


சிங்களப் பயணிகளால் மிரட்டப்பட்ட தமிழ்ப் பயணிகள் மீது படையினர் கடும் தாக்குதல் பரந்தனில் சம்பவம்
Tuesday, 15 November 2011

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு தனியார் பஸ்ஸில் சென்றுகொண்டிருந்த பயணிகள் நேற்று திங்கட்கிழமை பரந்தனில் இராணுவத்தினரால் மிக மோசமாக தாக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பஸ் சாரதி, நடத்துனர், உரிமையாளர் உட்பட பல பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

பரந்தன் சந்தியில் நேற்றுக் காலை 10 மணியளவில் இந்த பஸ் தென்பகுதி பயணிகளின் பஸ்ஸை விலத்திச் செல்லும் போது ஏற்பட்ட சிறு விபத்தினால் அவர்கள் தமிழ்ப்பயணிகளைக் கடுமையாக மிரட்டித் தாக்கவும் முயன்றுள்ளனர்.


பின்னர் அங்கிருந்து சென்ற அவர்கள் அருகிலுள்ள இராணுவ முகாமில் தம்மை தமிழ்ப்பயணிகள் தாக்க வந்ததாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பதினைந்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தமிழ்ப் பயணிகளை சிங்களத்தில் மிக மோசமாக ஏசியதுடன் மிகக் கடுமையாகவும் தாக்கியுள்ளனர்.

பஸ்ஸை சுற்றிச்சுற்றி ஓடுமாறு நடத்துனரும் சாரதியும் பணிக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தில் சாரதியான அ.கலியுகவாணன் (வயது 34), நடத்துனர் சு.குமாரசிங்கம் (வயது 33) பஸ் உரிமையாளர் நா.சற்குணராஜா (39 வயது) ஆகியோரும் பயணிகளும் படுகாயமடைந்தனர்.

இதன் பின்னர் இராணுவத்தினர் தமிழ்ப் பயணிகளையும் பஸ்ஸையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸாரும் தமிழ்ப் பயணிகளிடம் எதுவித புகார்களையும் கேட்காது படையினர் செய்ததை நியாயப்படுத்தி நடந்து கொண்டதாகப் பயணிகள் தெரிவித்தனர்.

இதேவேளை இச்சம்பவம் குறித்து ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் எம்.பி.யுமான க.கனகரத்தினத்தின் கவனத்துக்குப் பயணிகளால் கொண்டு வரப்பட்டது.

இதனை முல்லைத்தீவு அரச அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தால் ஏ9 பாதையூடாகப் பயணம் செய்யும் தமிழ்ப்பயணிகள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

நன்றி தினக்குரல்


பொது நலவாயப் போட்டிக்காகப் பெருந்தொகையை செலவிட்டும் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை நிதியை விரயமாக்கிவிட்டது அரசு; ஐ.தே.க.

Tuesday, 15 November 2011

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கு மாத்திரம் அரசாங்கம் பத்துக்கோடி ரூபாவை செலவிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ளது.


நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நிலையில் இவ்வளவு பெரிய தொகைப் பணம் வீண்விரயமாகும். நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் ஐ.தே.க.விசனம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பாக மேலும் விளக்கமளித்த பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்ததாவது;

நாடு அண்மைக்காலமாகப் பாரிய பொருளாதார நெருக்கடிச் சவாலை எதிர்கொண்டிருக்கின்றது. உள்ளூராட்சித் தேர்தல்களை முடித்த கையோடு எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டணங்களையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை அதிகரிப்பு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்கிடையில் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்போதைக்குத் தேர்தல்கள் எதுவும் நடைபெற வாய்ப்புகள் இல்லாததால் அரச காணிகளைப் பொறுப்பேற்கும் தீர்மானத்தை எடுத்திருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் கம்பளையில் நடந்த கூட்டமொன்றின் போது பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருந்தார். அவர் அதனைத் தெரிவித்து ஒருவாரம் கூட கடப்பதற்குள் பறிமுதல் சட்டமூலத்தை அரசு கொண்டுவந்து நிறைவேற்றிவிட்டது.

இன்றைய அரசாங்கம் நாட்டில் நல்லாட்சியொன்றைத் தவிர ஏனைய அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றது. யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டதன் பின்னர் புதுமைகள் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். மக்களின் அந்த எதிர்பார்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிப்பதற்கு மட்டுமே 100 மில்லியன் ரூபாவை செலவிட்டிருப்பதோடு சுமார் 250 பேர் கொண்ட குழுக்கள் இதற்காக வெளிநாடு சென்று செயற்பட்டு வந்தன. ஆனால், பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டவில்லை. அதுமட்டுமன்று இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்த 40 ஆயிரம் கோடி ரூபாவைச் செலவிட அரசு தயாராகவிருந்தது என்று அமைச்சர் ரஞ்சித் சியம்பாலப்பிட்டிய தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு கோடிக்கணக்கில் செலவிடத் தயாராகும் அரசு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவோ, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவோ முடியவில்லை. பொருட்களின் விலைகளைக் குறைக்க இயலவில்லை.

தற்போது இலங்கையின் விளையாட்டுத்துறை கேலிக்கூத்தாகியுள்ளது. இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் கொள்ளையடிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாடு எந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டாலும் அரச தரப்பினர் தம்மை வளர்த்துக்கொள்வதற்காகப் பல்வேறு சட்டமூலங்களை நிறைவேற்றி வருகிறது எனவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

நன்றி தினக்குரல்


எதை நோக்கிப் போகிறது யாழ்ப்பாணக் குடாநாடு

Tuesday, 15 November 2011

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்றுவரும் வன்முறைகள், கலாசார சீர்கேடுகள் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்துவதாகவே உள்ளன. அதிபர் கொலை, பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் போதைவஸ்துப் பாவனை, யாழ்.நகரின் மூலை முடுக்குகளில் இடம்பெறும் விபசார நடவடிக்கைகள், புற்றீசல்கள் போல் வெளிக்கிளம்பும் மதுபானசாலைகளென அரங்கேறிவரும் சம்பவங்கள் தொடர்பில் தமிழர்களாகிய யாராலும் கவலைப்படாதிருக்க முடியாது. கலாசாரத்திற்கும் கட்டுப்பாட்டுக்கும் பண்பாட்டுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த யாழ்.குடாநாட்டு மண்ணுக்கு தற்போது ஏற்பட்டுவரும் அவப்பெயரின் பின்னணி குறித்து தீவிரமாக ஆராயப்பட வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டுள்ளதென்பதை யாராலும் மறுக்க முடியாது.


குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை நாட்டுவதாக அரசு கூறிக்கொண்டிருந்தாலும் அங்கு வேலியே பயிரை மேயும் சம்பவங்களும் அதிகளவில் நடக்கின்றன. மதுபானசாலைகள், விபசாரம், போதைவஸ்துப் பொருட்கள் விநியோகம் என சகலவிடயங்களும் எந்தவித கட்டுப்பாடோ, தட்டுப்பாடோ இன்றி முன்னெடுப்பதற்குத் தேவையான அந்தரங்க அனுமதிகள் வழங்கப்படுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்.கல்விச் சமூகமே அதிர்ச்சியடையக் கூடிய வகையில் வரணிகரம்பைக் குறிச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் சுப்பிரமணியம் தயாபரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதற்கு அவரின் சில அசாதாரண பழக்கமே காரணமென யாழ்.பொலிஸாரால் உடனடியாகக் காரணம் கண்டுபிடிக்கப்பட்டதே தவிர இன்றுவரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அடுத்ததாக யாழ்.நகரிலுள்ள பிரபல பாடசாலைகளைச் சேர்ந்த 15 மாணவர்கள் போதைவஸ்து பாவித்த குற்றச்சாட்டில் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவலமும் நடந்தேறியது. அதுமட்டுமன்றி குடாநாடு இதுவரை சந்தித்திருக்காத வகையில் திருணமாகாத பெண்களின் கருக்கலைப்பு வீதமும் யாழ்.வைத்தியசாலை வட்டாரத் தகவல்களின் படி பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவேயுள்ளது.

இதுவரை யுத்தத்தினதும் புலிகளினதும் பிடியில் இருந்த மக்கள் இப்போது தான் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றனரென அரசாங்கம் கூறி வருவது இதைத்தானோ என்ற சந்தேகத்தையே தற்போதைய சம்பவங்கள் ஏற்படுத்தியுள்ளன. யாழ்.குடாநாட்டுக்கான போதைப் பொருள் விநியோகத்தில் படைவீரர்கள் சிலர் ஈடுபட்டிருந்தமை வெளிப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அதனைவிட வெளிநாட்டுப் பணப்புழக்கமே குடாநாட்டு இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதற்குக் காரணம் என்றும் சில தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இன்னும் சிலரோ குடாநாட்டில் அப்படி எதுவும் பெரிதாக கலாசார சீர்கேடுகள் இடம்பெற்றுவிடவில்லை. ஒரு காதல் ஜோடி சந்தித்துக் கதைப்பதைக் கூட கலாசார சீர்கேடென செய்திகள் வெளியிடும் அநாகரிகமான செயல்களில் சில ஊடகங்கள் ஈடுபடுகின்றனவென்ற குற்றசாட்டுகளைக் கூறுகின்றன. ஆனால், நடக்கும் சம்பவங்கள் சாதாரணமானவையாகத் தெரியவில்லை. கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம் என்பவை ஒருவருக்குத் தானாகவே வரவேண்டிய விடயங்கள். இவற்றை யாரும் யார் மீதும் திணிக்க முடியாது. அந்த வகையில் கலாசாரத்தின் இலக்கணமாய்த் திகழ்ந்த யாழ்.குடாநாட்டின் நற்பெயரைப் பாதுகாக்கும் பொறுப்பு இன்றுள்ள இளைஞர், யுவதிகளின் கைகளிலேயே உள்ளது. 30 வருட யுத்தத்தில் தமிழ் மக்கள் உயிர், உடைமைகளை இழந்தனர், சொந்த நிலத்தை இழந்தனர், உரிமைகளை இழந்தனர். ஆனால், எந்தவொரு கட்டத்திலும் எமது கலை, கலாசாரம், பண்பாடுகளை இழக்கவில்லை. ஆனால் யுத்தம் முடிவடைந்து ஒரு சில வருடங்களுக்குள்ளேயே நாம் கலை, கலாசாரங்களை இழக்கும் நிலைக்கு வந்து விட்டோம் என்றால் இதற்கு யார் பொறுப்பு என்பதை சிந்தித்தறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. யுத்த காலத்தில் சாதிக்க முடியாதவற்றை சமாதான காலத்தில் சாதிக்க முயற்சிப்பவர்களின் வலைகளில் இளைஞர், யுவதிகள் விழுந்து விடக்கூடாது என்பதே எமது பிரார்த்தனை.

நன்றி தினக்குரல்











No comments: