மண்வாசனை...கோண்டாவில். - ஹேமா

.


என்தேசம்.என் ஊர்.

மண் வாசனை அந்தப் புழுதியைச் நாசிக்குள் நுகர்ந்தபடி எழுத நினைக்கிறேன்.கண்ணுக்குக் குளிர்ச்சியாக கிராமுமல்லாமல் நகரமும் அல்லாத ஊர் என் கோண்டாவில்.தோட்டங்கள் சூழ குளிர்ந்த காற்றோடு எப்போதும் கலகலவென்றிருக்கும் அன்று.
காலைப்பொழுது விடிகை மிக ரம்யம்.கோயில் மணியோசை பரவசமாக்க பறவைகளின் காலைக் களிப்பு ஆனந்திக்கும் எங்களையும் சேர்த்து.பறப்பின் படபடப்பும் குஞ்சுக்கு இரை தேடிக் கொடுத்தலும் காலைக்காட்சியின் ஒரு பகுதி.அதிகாலை 4 மணிக்கே கிடுகு வண்டில்களின் டக்டக் சத்தமும் அதை இழுத்துச் செல்லும் காளைமாடுகளின் கழுத்து மணி ஜல்ஜல் ஒசையும் நித்திரையைக் கலைத்தாலும் அந்தத் தாளக்கட்டு ரசனையோடு இசையும்.

இதைவிட மற்றைய ஊர்களில் கேட்கமுடியாத ஒரு விஷேசம் என் ஊரில்.அதாவது நாதஸ்வர தவில் கலைஞர்கள் கூடுதலாக வாழும் இடம் எங்களூர்.அவர்களின் காலைப் பயிற்சியும் ஒரு காலைக்காட்சியாகியிருக்கும்.அதிகாலை 4-5 மணிக்கே தங்கள் கலைகளைப் பயிலும் மாணவர்கள் சாதகம் பண்ணத் தொடங்கிவிடுவார்கள்.ஆரம்பப் பயிற்சியாளர்கள் ஸ்வர சரளி வரிசை தொடக்கம் அலங்காரம் கீதம் வரை தாளம் போட்டுச் சத்தமாகப் பாடுவார்கள்.குரல் வளம் தெளிவாகும் என்பார்கள் இதனால்

நாதஸ்வரப் பயிற்சியாளர்கள் நாதஸ்வரத்தின் அடிப்பகுதித் துவாரத்தைத் துணியால் அடைத்துவிட்டு கீழ் சுருதியில் வாசித்துப் பழகுவார்கள்.தவில் பழகுபவர்கள் தவில்போன்ற அமைப்பிலுள்ள கட்டையில் கைக்கிளி என்று சொல்லப்படும் சிறு கைக்கட்டையால் அடித்துப் பழகுவார்கள்.அதில தொம் தொம் தகா தொம் தொம் திகுதகா என்கிற சொல் டக் டக் என்றே கேட்கும்.மார்கழி மாதக் குளிரில் எழும்பியிருந்து பழகும் இவர்களைவிட நித்திரை கலைந்து கிடப்பவர்களுக்கே கோபம் கோபமாக வரும்.இதனாலேயே இவர்களுக்கென்று தனியாகச் சின்னக் குடில் செய்து கொடுத்திருப்பார்கள்.தூரத்து ஊர்களிலிருந்துகூட பயிற்சிக்காகவே இங்கு வந்து தங்கியிருப்பார்கள் சிலர்.மாலைக்காட்சியிலும் இவர்களது நிகழ்வு தொடரும்.
பூவோடு கூடிய நாருக்கும் மணமுண்டாம்.இதை ஏன் சொல்கிறேன் என்றால் எனது பக்கத்துஊர் இணுவில்.இங்கேதான் எம் பாரம்பரியக் கலை கலாசாரங்கள் நிறைந்திருக்கின்றன.இணுவிலின் பக்கம் என்பதாலோ என்னவோ கோண்டாவிலும் கலைக்கூடம்தான்.நானும் அதே இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவள்தான்.ஆகவே எனக்குத் தெரிந்தமட்டில அகில இலங்கைப்புகழ் நாதஸ்வர தவில் கலைஞர்கள் இங்குதான் 3-4 தலைமுறையாக வாழ்வதாக அறிகிறேன்.காலம் சென்ற வி.ஏ.பாலகிருஷ்ணன் அவர்களும் இங்குதான் வாழ்ந்தார்.இன்னும் புகழ்பெற்ற வரிசையில் நாதஸ்வரத்தில் வெள்ளிவிழாக்கண்ட வி.கே கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்களும்.தற்போது கானமூர்த்தி அவர்கள் காலம் சென்றுவிட்டார்.இன்னும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நல்ல தவில் மிருதங்க வயலின் வித்வான்களும் இங்கு இருக்கிறார்கள்.இருந்தார்கள்.எம் வாழ்வின் அவலத்தான் இந்தத் தொழிலிலும் தாக்கம் இருக்கிறது.
இவர்களைவிட ஆரூடம் சொல்பவர்கள்,சமய சிவாச்சாரியர்கள்,கோபுர சிற்பவேலை,நகைகள் செய்பவர்கள்,மரச் சிற்பங்கள் தளபாடங்கள் செய்பவர்கள்,மூலிகை மருத்துவர்கள் என்று நிறைவான அறிஞர்கள் கலைஞர்கள் நிறைந்த ஊர் எனது ஊர்.
என் ஊரின் மண் சிவப்பு நிறமாக இருக்கும்.இதுவும் இணுவில் மண்ணின் பாதியே என்றுதான் சொல்லவேண்டும்.கோண்டாவிலின் முழுப்பகுதியும் சிவப்பு மண் இல்லை.இணுவில் பகுதியைத் தொடும் எல்லைப்பகுதியின் கொஞ்சத் தூரம் மட்டுமே செம்மண்ணாக இருக்கும்.ஒரு நாளைக்கு 2-3 தரம் தலை கழுவிக் குளிக்க வைத்து அம்மாவிடம் அடி வாங்கிய நினவுகள் நிறையவே இந்தச் செம்பாட்டு மண்ணால்.கோண்டாவில் தமிழ்க்கலவன் பாடசாலை.
ஆனால் இதில் பயிர்களின் செழிப்பும் வளர்ச்சியும் அதிகம்.முக்கியமாக மிளகாய் புகையிலை.மிள்காய் புகையிலைக்குக் கோண்டாவில் பெயர்பெற்ற இடமாகும்.

புகையிலையைக் கருவாகக்கொண்டு நிறையச் சுருட்டு ஆலைகள் அதை நடாத்தும் முதலாளிகள் தொழிலாளர் என்று பெரும் பணக்காரரும் இங்கு.நான் அன்று இருந்தபோது வி.பி.ஆர் என்கிற பீடி ஆலை பெயர்பெற்றதாக இருந்தது.
இங்குள்ள சுருட்டு முதலாளிகள் கொழும்பு மலைநாட்ட்டுப் பகுதிகளில் தங்கள் வியாபாரத்தை நன்கு நடாத்தி வந்தார்கள்.1983 யூலைக் கலவரத்தின் பின் இதற்கும் கொஞ்சம் பின்னடைவே என்பார்கள்.நானும் இந்தத் தோட்டங்களுக்குப் மரக்கறி வாங்கப் போயிருக்கிறேன்.வரப்புப் பகுதியில் முளைத்திருக்கும் பலகீரையை எங்களையே பிடுங்கிப் போகச் சொல்வார்கள்.குண்டுக் குண்டாய் நிலம் முட்டிக் காய்த்திருக்கும் கத்தரிக்காய்.வான் பார்க்க நீளம் நீளமாய் நீட்டிமுளைத்திருக்கும் வெண்டைக்காய்.பொலிந்து தொங்கும் பயற்றங்காய்.பாம்புக்குக் கல் கட்டித் தொங்கவிட்டதுபோல புடலங்காய்.ஊடலில் புகுந்திருக்கும் முளைக்கீரை பொன்னாங்காணி என்று தனித் தனிப்பாத்தியில் பசுமையாய் குளிர்ச்சி தரும்.பருப்புக் கலந்து சமைக்கும் பலகீரை எனக்கு மிகவும் பிடிக்கும்.முருங்கை மரமில்லா வீடுகளே இல்லை என்பேன் அப்போ.வாழை மரங்கள் குட்டிகளோடு தென்னை பப்பா எலுமிச்சை என் வீட்டுத்தோட்டமும் வெருளியும் இருப்பார்.அது அந்தக் காலமாகிவிட்டது.நினைவுகள் மட்டும் காலமாகாமல்.
அடுத்து இனிப்பது எங்களூர்க் கிணற்றுத் தண்ணீர்.பக்கத்து ஊர்களில் இருந்துகூட வந்து தண்ணீர் எடுத்துப் போவார்கள்.விரைவாக பருப்போ அரி்சியோ வெந்துவிடும் என்பார்கள்.அதுவும் மண்பாத்திரத்தில் சமைத்தால் இன்னும் சுவை என்பார்கள்.
இன்னும் கோண்டாவில் உப்புமடச்சந்தி சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (கே.கே.எஸ்) காங்கேசந்துறை வீதியில் சக்தி வாய்ந்த தெய்வமாகும்.வருடத்தில் ஒரு தரம் 10 நாடகள் திருவிழாக் கோலம் காணும் இந்தக்கோவில் ஊரும்தான்.கோண்டவிலை ஒட்டி நந்தாவில் அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது இங்கு திருவிழா ஆடம்பரமும் அட்டகாசமும்.அழகான கேணியும் ஒன்று இங்கு தாமரை மிதக்க.திருவிழாக்கள் கலகலவென்று தெருக்களும்,வீடும் சுத்தமாக இருந்தாலும் அப்பா அம்மாவுக்கு எங்களால் கஸ்டமான நாட்களாகவே இருக்கும்.பாடசாலை போக அடம்பிடிப்போம்.ஐஸ்கிறீம்,கச்சான்,பலூன்,காப்பு,மாலை ஏதோவொன்றுக்கு எப்போதும் அடிபோடுட்டு அடிவாங்காத நாள் இருக்காது.கோண்டாவில் புகையிரத வீதியிலும் ஒரு காளிகோவில்.மீண்டும் வருமா மறைந்த இழந்த அந்த நாட்கள்.கண்கள் மட்டுமே கலங்கிறது தூசே இல்லாத சுத்தமான நாட்டிலும்.
நந்தாவில் என்று சொலப்படுகிற இடம் கோண்டாவிலின் நடுப்பகுதியை பள்ளம் கொண்டதாய் அலங்கரிக்கிறது.நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் நிறைந்த தோப்புப் பகுதி.இங்கு மரமேறும் சிலரது வீடுகள் தவிர வீடுகள் இல்லை.காதலர்கள் சந்திக்கும் மறைவான பூங்காபோல.சிறுவர்களின் பந்தாடலுக்கு பரந்த பெருவெளி.இளைஞர்களின் சீட்டாட்டம் கள்ளுக் குடியலின் ஆரம்பப் பயிற்சியும் இங்குதான்.பாடசாலை போகாமல் படம் பார்க்கப்போக புத்தங்களைப் பாதுகாக்கும் இந்த நந்தாவில்.
என் அண்ணா இன்னொரு சொந்தமான அவர் வயதுள்ள சிநேகிதரோடு படம் பார்க்கப்போய் காளிகோவில் ஐயா பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சொல்லி,தவில் வாரினாலே அந்தப் படத்தின் பாட்டு வரிகளைச் சொல்லிச் சொல்லியே அடி வாங்கினதும் ஞாபகம் வருது.

இங்கு மழைக்காலங்களில் வெள்ளம் ஒரு ஆளை முழுதாக மூடுமளவிற்கு முட்டி வழியும்.சிலசமயங்களில் நீர் நிரம்பி பெரும் தெருவைத் தாண்டும்.மழைநீர் நிரம்பும் காலங்களில் சிடைச்சித் தாவரம் நிறைய வளர்ந்திருக்கும்.தவளையின் இசையோ இரவு இரவாகப் பெரும் கச்சேரிதான்.மீன்கள்,வால்பேத்தைகள் போத்தல்களில் பிடித்து வைத்துக்கொண்டு மீன் வளர்க்கிறோம் என்போம்.பனை மரத்தைப் பாதியாகப் பிளந்து வள்ளம் போலாக்கி தூண்டில் வைத்து மீனும் பிடிப்பார்கள்.
நான் பாடசாலைக்கு நடந்தே போய் வந்திருக்கிறேன்.ஓ...மழைக்காலம் அது பெரிய சந்தோஷம்.தண்ணீருக்கு கல் எறிந்து விளையாடி வீட்டுக்குப் பிந்தியே போய் வெள்ளைச்சட்டை நனைந்து அடி வாங்கி வலிப்பது எங்களுக்குத்தானே தண்ணீருக்கு இல்லையே.தூணில் கட்டி வச்சு கண்ணுக்கு மிளகாய் பூசப்பட்ட காலமும் இருக்கு இந்த நந்தாவில் வெள்ளத்தால்.காலில் சிரங்கு குரங்காய் மாறி....பிறகென்ன !

சிவகுமாரன்.

கோண்டாவில் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று பிரித்தே சொல்கிறார்கள்.எனது ஊர் கோண்டாவில் மேற்கு.கிழக்குக் கோண்டாவில் பலாலி போகும் பெரும் தெருவில் தின்னவேலியோடு சேர்ந்தது.அங்கு முக்கியமாக பல்தொழில்நுட்பக் கல்லூரியும்,பல்கலைக் கழகமும் இருக்கிறது.சிறப்பாக எங்கள் சிவமுமாரன் பிறந்து வளர்ந்த ஊர்.ஒரு நாள் தனியாக யாழ்ப்பாணம் போய் பாலாலி கோண்டாவில் பேரூந்தில் ஏறி என் கோண்டாவிலைக் காணவில்லையென்று தெருவில் நின்று அழுதது ஞாபகம் வகிறது.
எங்களூரில் பனை,தென்னை,மா,பலா,புளி,நாவல்,நெல்லி மற்றும் பூக்கள் பொலியும் மரங்களுக்குக் குறவேயில்லை.என் தங்கை பாடசாலை போகும் வழியில் நாவற்பழக்காலங்களில் நாவல் மரத்தடியில் காலம் கழித்துவிட்டு வீட்டுக்குப் பிந்தியே வருவாள்.அம்மா கேட்டால் ஏதாவது பொய் சொல்லுவாள்.வாய் மட்டும் நாவலாய் மாறியிருக்கும்.பிறகென்ன மாட்டிக்கொண்டு நல்ல அடிதான்.நாவல்மரம்,புளியமரம் சுற்றுவதால் அடிக்கடி படிப்பைக் குழப்பிகொள்வாள்.
எங்களூரில் இந்து,கிறீஸ்தவ,முஸ்லிம் மக்களென ஒற்றுமையாய் சந்தோஷமாய்த்தான் இருந்தோம்.இப்போ நினைத்தாலும் மனம் ஏங்குகிறது.இன்று யாரோ எவரெவரோ எங்கெங்கோ.என் அழகு கலைந்த வீட்டு முற்றம் எனக்காய் காத்திருக்குமோ.துளசிச்செடி ஒற்றைக்கோட்டுக் கோலத்துக்காய் கருகாமல் இருக்குமோ.சாகுமுன் என் ஊரைப் பழைய அழகோடு காண்பேனா.திரும்பவும் எல்லோரையும் காண்பேனா.என் இறப்பாவது என் மண்ணில் நடக்குமா.இப்போதைக்கு இல்லை என்பதே பதிலானாலும் நம்பிக்கையோடு நடப்போம்.எதிர்காலத்திற்காவது பாதை வெட்டி வழி சமைப்போம் !
9 வருடங்களுக்கு முன் வானொலிக்காக எழுதினது.மாற்றம் செய்யாமல் அப்படியே
 
Nantri: santhyilnaam-blogspot

No comments: