கண்ணகி வழிபாடு - பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
வைகாசித் திங்கள் கண்ணகி கோயில் உள்ள ஊர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு மாதம். வைகாசிப் பூரணையையொட்டிய எட்டுப் பத்து நாட்கள் அந்த ஊர்களெல்லாம் விழாக்கோலம் பூணும். ஆம்மன் கோயிலில் திருவிழா. ஊரிலே பெருவிழா. மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி உலா.

கிழக்கிலங்கையில் சிறப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்ணகிவழிபாடு மிகவும் பிரசித்திவாய்ந்ததும், பக்திமயமானதுமான வழிபாடாகக் காலம்காலமாக நிலவிவருகின்றது. அந்த வழிபாட்டு முறைகள் எப்படி நடைபெறுகின்றன என்பதைச் சொல்வதற்கு முன்னர், கண்ணகி வழிபாடு தொன்றிய வரலாறு பற்றிச் சிலவிபரங்களைத் தருவது இங்கு பொருத்தமெனப் படுகின்றது.

வழிபாடு தோன்றிய வரலாறு



கண்ணகி சிலப்பதிகாரத்தின் நாயகி என்பதும், கோவலனின் மனைவி என்பதும், பாண்டிய மன்னனுடைய கவலையினமான தீர்ப்பினால் கோவலன் கொலையுண்டான் என்பதும், கணவன் அநீதியாகக் கொல்லப்பட்டதால் துடித்தெழுந்த கண்ணகி பாண்டியனிடம் நீதிகேட்டு வாதாடி, கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தாள் என்பதும். அக்கணமே தான் தவறிழைத்தமையைத் தாங்கிக்கொள்ள முடியாத பாண்டிய மன்னன் அரியணையிலிருந்து மயங்கி வீழ்ந்து இறந்தான் என்பதும், அதுகண்ட பாண்டிமாதேவியும் அக்கணமே உயிரைவிட்டாள் என்பதும், இவ்வளவிற்குப் பிறகும் கோபம் தணியாத கண்ணகி மதுரையை எரித்தாள் என்பதும் பெரும்பாலும் எல்லோரும் அறிந்த பொதுவான விடயங்கள்.

பாண்டியனைத் தொடர்ந்து பாண்டிமாதேவி இறந்ததைக் கண்ணுற்ற கண்ணகி இறந்து கிடக்கும் பாண்டிமாதேவியை நோக்கிப் பின்வருமாறு கூறினாள்.

“கற்புள்ள பெண்கள் பிறந்த பூம்புகார் நகரிலேதான் நானும் பிறந்தேன். பாண்டிமாதேவியே! உண்மையில் நானும் ஒரு பத்தினியானால், உன்னைப்போல இப்போதே கணவனுடன் இறந்துவிட மாட்டேன். அரசை மட்டுமல்ல இந்த மதுரையையும் அழிப்பேன். எனது வஞ்சினத்தின் தன்மையை நீ காண்பாய்!” என்று கூறி அரண்மனையை விட்டு வெளியேறினாள். வேகமாக நடந்தாள். மதுரையை மூன்றுமுறை வலம் வந்தாள். தனது இடது மார்பைத் திருகி வீசி எறிந்தாள். மதுரை நகர் எரிந்தது.

“ பார்ப்பார். அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி என்னும் இவரைக் கைவிட்டு தீத்திறத்தார் பக்கமே சேர்க” என்று அக்கினியை ஏவினாள். மதுரை நகரெங்கும் புகை மண்டலம் சூழ்ந்தது.

பாண்டியனின் அரண்மனை பற்றியெரிந்து சாம்பலானது. வீதிகள் எல்லாம் கொழுந்து விட்டு எரிந்தன. படைவீரர்களும் தீக்கு இரையாகினர். யானைகளும் வெந்து கருகி மாண்டன. நகரைக் காத்து நின்ற பூதங்கள் நகரை விட்டு நீங்கின. நல்லவர்களை விட்டுவிட்டுத் தீயவர்கள் எல்லோரையும் தீ நெருங்கியது.

‘இந்த நகருக்குள் கிழக்கு வழியாக என் கணவருடன் வந்தேன். இப்போது மேற்கு வழியாக வெளியேறுகிறேன்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு கண்ணகி மதுரையை விட்டு வெளியேறினாள். எங்குமே தரித்து நிற்காமல் நடந்து கொண்டேயிருந்தாள். காடுகள், மேடுகள், பள்ளங்கள் எல்லாம் கடந்து சென்றாள். இரவென்றும் பகலென்றுக் கருதாமல் வைகைக் கரையோரமாக நடந்து சென்றாள். திருச்செங்குன்றம் என்னும் மலையை அடைந்தாள். அங்கே பூத்துக் குலுங்கிநின்ற வேங்கை மரம் ஒன்றின் அடியிலே அழுதுகொண்டே அமர்ந்தாள். மதுரையை எரித்த நாளிலிருந்த சரியாகப் பதினான்காம் நாள் கண்ணகி இவ்வுலகை நீத்துக் கோவலனுடன் வானுலகம் சென்றாள்.

“தெய்வம் தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்
தெய்வம் தொழுந்தகைமை திண்ணியதால் - தெய்வமாய்
மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாதர்க்கு விருந்து” ஆக வானுலகம் சென்றாள்.


திருச்செங்குன்றத்து வேங்கைமர நிழலிலே கண்ணகி அமர்ந்திருந்ததையும், அவள் வானுலகு சென்றதையும் அங்கே வாழ்ந்த குறவர்கள் என்று சொல்லப்படும் குன்றவர்கள் கண்டார்கள். கண்ணகியைக் தெய்வம் என்று போற்றினார்கள். மலைவளம் காண்பதற்காக அப்பகுதிக்குச் சென்றிருந்த சேர மன்னன் செங்குட்டுவனிடம் இதுபற்றி அவர்கள் எடுத்துரைத்தார்கள். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை அமைப்பதற்கு எண்ணினான். அந்த எண்ணம் அவனது மனதிலே நிலைபெற்றது.

இப்படியிருக்கையில், ஒரு திருமணவிழாவிலே வடநாட்டு ஆரிய மன்னர்கள் பலர் கூடியிருந்திருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்களது முன்னைய தலைமுறையினரான வடநாட்டு மன்னர்களைத் தமிழ் மன்னர்கள் போர்களிலே வென்று இமயமலையிலே தங்கள் கொடிகளை நாட்டியமை பற்றிப் பேச்சு எழுந்திருக்கிறது.

சேரமன்னன் நெடுஞ்சேரலாதன் ஆரிய மன்னர்களைச் சிறைப்பிடித்து இமயத்திலே கொடி பதித்திருக்கிறான். கரிகாற்சோழன் வடநாட்டின்மீது படையெடுத்துத் தன் புலிக்கொடியை இமயத்தில் எற்றியிருக்கிறான். “பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி” என்று அழைக்கப்பட்ட பாண்டிய மன்னனும் வடவரைவென்று இமயத்திலே மீன் கொடியை நாட்டியுள்ளான். இவ்வாறு தம்முன்னோர்களைத் தமிழ் மன்னர்கள் தோற்கடித்தமையையும், இமயத்திலே கொடி பொறித்தமையையும் பற்றி அவர்கள் உரையாடியிருக்கிறார்கள். அப்போது அங்கேயிருந்த கனகன். விஜயன் என்ற ஆரியமன்னர்கள் இருவர் தமிழ் மன்னர்களைப் பழித்துக் கதைத்திருக்கிறார்கள். “தமிழ் மன்னர்கள் இங்குவந்து தமது கொடிகளை நாட்டியபோது. நம்மைப்பொன்ற வீரர்கள் இங்கே இல்லைப்போலும்” என்று சொல்லி நகைத்திருக்கிறார்கள்.

இந்தவிடயத்தைக் கேள்வியுற்றான் சேரன் செங்குட்டுவன். அவனுக்குக் கடுங்கோபம் வந்தது. தமிழ் மன்னர்களை இழிவாகப் பேசிய அவர்களைத் தோற்கடித்து, இமயமலையிலே கண்ணகிக்குச் சிலைவடித்து, அதனை அந்தப் பகையரசர்களின் தலைகளிலே எற்றி வருவேன்” என்று சூழுரைத்தான். தமிழ் மன்னர்களைப் பழித்தமை மட்டும் அவனது கோபத்திற்குக் காரணமல்ல. தனது தந்தையின் வீரத்தை அவமதித்துவிட்டானே என்பதுதான் அவனுக்குக் கடும் சினத்தை மூட்டியது. ஆம்! இமயத்திலே கொடிபதித்த தமிழ் மன்னர்களிலே ஒருவர் அவனது தந்தை. இமய வரம்பன் என்று புகழப்படும் நெடுஞ்சேரலாதன் செங்குட்டுவனதும், இளங்கொவடிகளதும் தந்தையல்லவா? அதனால்தான் ஆரிய மன்னர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்பதிலே அவன் அவ்வளவு தீவிரம் கொண்டான்.

அவ்வாறே பெரும்படையுடன் சென்று, ஆரிய மன்னர்களை வென்று, கனகன் விஜயன் இரவரையும் சிறைப்பிடித்தான். இமயத்திலேயிருந்து செதுக்கியெடுக்கப்பட்ட கல்லிலே கண்ணகிக்குச் சிலை அமைப்பித்தான். பின்னர் தென்னாடு வந்தான். கண்ணகியின் சிலையைக் கங்கையிலே நீராட்டி, சிறைப்பிடிக்கப்பட்டிருந்த கனகன். விஜயன் என்னும் மன்னர்களின் தலையிலே அதனைச் சுமக்கச்செய்து வஞ்சிமாநகரை அடைந்தான். அங்கே நல்லதொருநாளில், “பத்தினிக்கோட்டத்திலே” கண்ணகியின் சிலையை நிறுவினான். பல்வேறு நாட்டு மன்னர்களும் அந்த விழாவிலே கலந்துகொண்டார்கள். கண்ணகியின் சிலையை நிறுவிய அந்த நந்நாளில் கனகன், விஜயன் உட்படச் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மன்னர்கள் அனைவரையும் விடுவித்தான். கண்ணகிக்குச் சிலை நிறுவிய விழாவிலே யார்யாரெல்லாம் வந்து கலந்துகொண்டார்கள் என்பதைச் சிலப்பதிகாரம் இப்படிச் சொல்கிறது:

அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும
பெருஞ்சிறைக் கொட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்

அப்போது இலங்கையின் மன்னனாக இருந்த கஜபாகு என்பவன் செங்குட்டுவனின் அழைப்பின் பேரில் கண்ணகிக்குச் சிலையமைத்த விழாவிலே கலந்துகொண்டிருக்கிறான். அவன்தான் இலங்கைக்குக் கண்ணகி வழிபாட்டினைக் கொண்டுவந்தவன். கி.பி. 178 இல், கண்ணகி விழாவிலே கலந்துகொண்ட கஜபாகு மன்னன் பொற்சிலம்பு, வெள்ளி மாம்பழம், சந்தனக்கட்டையினாலான கண்ணகி சிலை என்பவற்றைத் தன்னோமு கொண்டு வந்தான். முதன மு தலில், யாழ்ப்பாணத்தில், அங்கொணாமைக்கடவை என்ற இடத்திலே கண்ணகி வழிபாட்டை ஏற்படுத்தினான். அதன் பின்னர் கண்டியிலே பத்தினித் தெய்வத்திற்குக் கோயில் அமைத்தான். அங்கொணாமைக்கடவையைத் தொடர்ந்து வடமாகாணத்தில் பல இடங்களில் கண்ணகிக்குக் கோயில்கள் அமைந்தன. அச்செழு, அல்வாய், ஆனைக்கோட்டை, ஊரெழு, எருவில், எழுதுமட்டுவான், ஓமந்தை, கச்சாய், குடத்தனை, கோப்பாய், கோணவளை, நாவற்குழி, பளை, பன்றித்தலைச்சி, புதுக்குடியிருப்பு, மந்திகை, மட்டுவில், மண்டைதீவு, மயிலிட்டி, மாதளை, மிருசுவில், முகமாலை, வண்ணை, வற்றாப்பழை, வீமன்காமம் ஆகிய இடங்களில் கண்ணகி வழிபாடு நிலவியிருக்கிறது. ஆறுமுக நாவலரின் காலத்திற்குப் பின்னர் சில ஆலயங்களில் கண்ணகி என்றபெயர் மாற்றமடைந்து நாகபூசணி, நாச்சியம்மன், புவனேஸ்வரி, மீனாட்சி, இராஜராஜேஸ்வரி என்று வழிபாடு இயற்றப்படுவதாக ஆய்வாளர்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு

சேரநாடு என்பது இப்போதைய கேரளம். அதாவது மலையாள மொழியைப் பேசுகின்ற மக்கள் வாழும் மாநிலம். அந்தச் சேரநாட்டு மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் இடையே மிகுந்த தொடர்பு இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாகக் கிழக்கிலங்கை மக்களுக்கும், சேரத்தமிழர்களுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் நிலவியிருக்கின்றன. பண்பாட்டு பரிவர்த்தனைகள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றை உறுதிப்படுத்தக்கூடியவாறாகக் கிழக்கிலங்கை மக்களின் வாழ்க்கை முறையின் சிலகூறுகள் இப்போதும் அமைந்துள்ளதை அறியலாம். வீடு கட்டும் முறைகள், வீட்டைச்சுற்றிவரப் பச்சைப்பசேலென்ற தோட்டம், கிணற்றைச் சுற்றி கமுகுமரங்கள், பேச்சு வழக்கில் உள்ள மலையாளச் சொற்கள், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் இப்படிப்பல விடயங்களில் கிழக்கிலங்கை மக்களுக்கும் கேரளத்து மக்களுக்கும் இடையே ஒருமைப்பாடு உள்ளது. மலையாளம் மாந்திரீகத்திற்குப் பெயர் பெற்ற இடம். மட்டக்களப்பும் அப்படியே!

எனவே, கஜபாகு மன்னன் மூலமாகக் கண்ணகி வழிபாடு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு, ஆரம்பத்தில் இலங்கையின் எல்லாப் பாகத்திலும் நடைபெற்றிருந்தாலும், சேரத்தமிழ் நாட்டுக்கும், கிழக்கிலங்கைக்கும் இடையே நிலவிய பண்பாட்டுத் தொடர்பு காரணமாகக் கிழக்கிலங்கையில் அந்த வழிபாடு நிலைபெற்றுப்பரவி, வழக்கத்திற்கு வந்துவிட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது கண்ணகி வழிபாடு. அதே காலப்பகுதியில் இலங்கையிலும் பரவியது. திருகோணமலை மாவட்டத்தில் பறையன்குளம், பாலம்போட்டாறு, நீலாப்பழை, மலைமுத்தல், கந்தளாய் ஆகிய இடங்களில் அமைந்திருந்த கண்ணகிகோவில்கள் பின்னர் பத்தினிக்கோவில்கள் என்ற பெயரிலே மாற்றம் பெற்றன. இதனைப்போலவே பொலனறுவை மாவட்டத்தில் உள்ள தம்பன்கடவையில் இருக்கும் கண்ணகிகோயிலும் கண்ணகியை விட்டுவிட்டுப் பத்தினிக்கோவில் என்ற பெயரிலேயே வழிபாடியற்றப்படுகின்றது.

அம்பாறையும் இணைந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் தம்பிலுவில், பட்டிமேடு, காரைதீவு. பாணமை, வீரமுனை, அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிக்குடி, மகிழூர், எருவில், போரதீவு, மகிழடித்தீவு, ஈச்சந்தீவு, முனைக்காடு, கன்னங்குடா, செட்டிபாளையம். ஆரையம்பதி, மட்டுநகர,; பட்டிப்பழை, விடத்தல்முனை, வந்தாறுமூலை, வாழைச்சேனை முதலிய இடங்களிலே கண்ணணை அம்மன் ஆலயங்கள் உள்ளன.

கண்ணகை அம்மன் ஆலயங்கள் வருடத்தில் ஒருமுறை மாத்திரம் திறக்கப்பட்டு பூசைகள் நடாத்தப்படும். ஐவகாசி மாதத்தில் வரும் பூரணை நாளையொட்டி ஆலயம் திறக்கப்பட்டு எட்டு நாட்கள் முதல் பத்து நாட்கள்வரை விழா நடைபெறும். கண்ணகை அம்மன் கோயில்களில் நடைபெறும் பூசைகளையோ விழாக்களையோ திருவிழா என்ற சொல்லதில்லை. “சடங்கு” என்றுதான் சொல்வார்கள். சடங்கு நடைபெறும் காலங்கள் தவிர வருடம் முழுவதும் ஆலயம் பூட்டப்பட்டிருந்தாலும், மக்கள் ஆலயத்திற்குச் சென்று வெளிமண்டபத்தில் நின்று வழிபடுவார்கள். அக்காலங்களில் நேர்த்திக் கடன்செலுத்தப் பொங்கலிடுவதும் உண்டு.

ஓவ்வொரு வைகாசிப் பூரணை தினமன்றும் நடைபெறும் “குளுர்த்தி” எனப்படும் சடங்குதான் உச்சக்கட்ட விழாவாக இருக்கும். கோபங்கொண்ட கண்ணகியம்மனைக் குளிச்சிப்படுத்துவதாக அந்தச் சடங்கு அமைகின்றது. கண்ணகை அம்மன் கோயில்கள் எல்லாவற்றிலும் குளுர்த்திச் சடங்கு நடைபெறும். குளுர்த்தியின்போது குளுர்த்திப்பாடல் பாடப்படும். இனிமையான அந்தப்பாடலின் முற்பகுதி கண்ணகை அம்மனின் வரலாறு கூறும். பிற்பகுதி கோபம் தணிந்து குளிர்ந்தருளுமாறு அம்மனை வேண்டும். இந்த ஆலயங்களில் சடங்குகள் எனப்படும் விழாக்களை நடாத்துவதற்கான பொதுவான நடைமுறை ஒன்று எல்லா ஊர்களிலும் வழக்கத்தில் உள்ளது. அதாவது ஊர்மக்கள் பல குடிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள். வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே வழிவழியாக வந்துகொண்டிருக்கும் அந்த ஒழுங்கின்படி ஒவ்வொரு குடிமக்களுக்குமென ஒதுக்கப்பட்ட சடங்குகளை அவ்வந்தக் குடிமக்கள் செய்வார்கள்.

களுவாஞ்சிக்குடி கண்ணகி ஆலயம்

உதாரணமாகக் களுவாஞ்சிகுடிக் கண்ணகை அம்மன் ஆலயத்தை எடுத்துக்கொள்வோம். பின்வரும் ஒழுங்கில் சடங்குகள் செய்யப்படுகின்றன. அவற்றைவிட நேர்த்திக்கடன் சடங்குகள் என்று சில குடும்பத்தவர்களால் பலவருடங்களாகத் தொடர்ந்து செய்யப்படும் சடங்குகளும் உள்ளன.

ஆலயக்கதவு திறக்கப்படும் நாள் பகல் ஆலய பரிபாலன சபையினரால் வாஸ்து சாந்தி செய்யப்பட்டு, அன்றிரவு திருக்கதவு திறத்தல் சடங்கு குருக்கள்குடி மக்களால் செய்யப்படும். இரண்டாம் நாள் பகல் சடங்கு ஐயர் குடிமக்கள். இரவுச்சடங்கு அமரர் மா. பரமானந்தராசா குடும்பம். மூன்றாம் நாள் பகல் சடங்கு அமர் மா.சங்கரப்பிள்ளை குடும்பம். இரவுச்சடங்கு அமரர் நமசிவாயம் குடும்பம். நான்காம் நாள் பகல் சடங்கு விஸ்வநாதர் வம்சத்தினர். இரவு சின்னத்தம்பிக் குருக்கள் வம்சத்தினர். ஐந்தாம் நாள் பகல் சடங்கு அத்தியாகுடி மக்கள். இரவு கல்மடுக்குடி மக்கள். ஆறாம் நாள் கன்னிக்கால் வெட்டுச்சடங்கு வைத்தியனார் குடி மக்கள். இரவு தாலிகட்டுச் சடங்கு ஆலய முதன்மைக் குருக்களாக இருப்பவருடையது. ஏழாம் நாள் பகல் சிங்களக்குடி மக்கள். இரவு பட்டினக்குடி மக்கள். எட்டாம் நாள் பகல் சடங்கும் இரவுச்சடங்கும் சின்னக்கவுத்தன் குடிமக்களும், பெரியகவுத்தன்குடி மக்களும் இணைந்து செய்வர். மறுநாள் அதிகாலை திருக்குளுர்த்தியும் அதனைத் தொடர்ந்து திருக்கதவு பூட்டலும் இடம்பெறும். இரவு வைரவர் பூசை நடைபெறும். மேலும், ஆலயக்கதவு பூட்டப்பட்ட நாளிலிருநது; எட்டாம் நாள் தெளிவு சடங்கு என்ற ஒன்று இடம் பெறும். அமரர் பெரியதம்பிக் கங்காணியார் குடும்பத்தினரால் அது செய்யப்பட்டுவருகின்றது.

கலியாணக்கால் அல்லது கன்னிக்கால் வெட்டுச்சடங்கின் போது குடிமக்களில் ஒருவரின் வீட்டில் அதற்கெனக் குறித்து வளர்க்கப்பட்ட பூவரசு மரத்தின் கிளை கன்னிக்காலுக்காக வெட்டிக்கொண்டு வரப்படும். கன்னிக்கால் வெட்டுவதற்காக ஆலயத்திலிருந்து மேளதாள வாத்தியங்களுடனும். முள்ளுக்காவடி, பால்காவடி மற்றும் தீச்சட்டி முதலிய நேத்திக்கடன் செலுத்தும் பக்தர்களுடனும் ஊரே திரண்டு வீதிவலமாகச்செல்வதும், பின்னர் ஆலயத்திற்குத் திரும்பிவருவதும் எல்லோருக்கும் மகிழ்ச்சியான விழாவாக இருக்கும்.

கண்ணகை அம்மன் கோவில் கதவு திறப்பதற்கு முதல் நாளிலிருந்தே ஊர்முழுவதும் துப்பரவு செய்யப்படும். வீதிகள் கூட்டிப்பெருக்கி அழகுபடுத்தப்படும். ஊர்மக்கள் தாமாகவே அவற்றைச் செய்வார்கள். ஆலயக் கதவு திறக்கப்பட்ட நாளிலிருந்து ஊரில் மச்சம். மாமிசம் தவிர்க்கப்படும். வெளிநாடுகளில் உள்ள ஊர்மக்கள்கூட, ஊரில் கோயில் சடங்கு நடைபெறும் காலங்களில் பெரும்பாலும் மச்சம் மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்வார்கள். மாதவிலக்கு வந்த பெண்கள் பிற ஊர்களிலோ அல்லது ஊருக்கு ஒதுக்கப்புறமாகவோ உள்ள உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலோ சென்று தங்குவார்கள்.

கண்ணகை அம்மன் ஆலயக்கதவு திறக்கப்பட்டுவிட்டால் ஊர் முழுவதும் விழாக்கோலம் பூணும். எல்லோருடைய மனங்களிலும் மகிழ்ச்சி நிலவும். காலை. மதியம். மாலை. இரவு என்று எந்நேரமும் மக்கள் கோவிலுக்குப் போவதும் வருவதுமாக இருப்பார்கள். அங்கே கண்ணகி வழக்குரை காவியம் நாள் முழுவதும் பாடப்படும். அது காற்றோடு கலந்து ஊர்முழுவதையும் புனிதப்படுத்தும். பூசையின் போது ஊர்சுற்றுக்காவியம் பாடப்படும்.

ஏனைய ஆலயங்களைப் போலல்லாது கண்ணகை அம்மன் ஆலயத்தில் மக்கள் உண்மையான பயபக்தியோடு வழிபாடியற்றுவார்கள். அதாவது. வெறும் பக்தி மட்டுமன்றிப் பயம்கலந்த பக்தியோடு வணங்குவார்கள். வேண்டாத விவாதங்களிலே ஈடுபடுதல், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல். மது அருந்துதல் போன்றவற்றை மக்கள் தாமாகவே தவிர்த்துக்கொள்வார்கள்.

கடந்த சில வருடங்களாக இந்த ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது. ஆலயத்திற்க வரும் எல்லோருக்கும் மதிய உணவும், இரவு உணவும் இலவசமாகப் பரிமாறப்படுகிறது. அதற்கென அன்னதான மடங்கள் அன்பர்களால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயகாரரின் செலவில் இந்த அன்னதானம் நடாத்தப்படுகின்றது. ஆலயத்தின் அன்னதான மடத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து, வேறுபாடுகளை மறந்து. அம்மாளை நினைந்து உணவருந்துவதில் பக்திசார்ந்த ஒருவித திருப்தியை உணரமுடிகிறது.

ஓவ்வொரு சடங்கிலும் தாமரை மலர்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும். எங்கிருந்தென்றாலும் தாமரை மலர்களை கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள். முக்கனிகளும், சர்க்கரைப் பொங்கலும் படைக்கப்படும். அம்மன் கோவிலில் உள்ள நாகதம்பிரான் ஆலயத்தில் பால்பொங்கல் படைத்து வழிபாடியற்றப்படும். பழங்கள், தேன், சர்க்கரை முதலிய ஐந்துவகை இனிப்புப் பதார்த்தங்களின் கலவையான பஞ்சாமிர்தம் ஒவ்வொரு சடங்கிலும் அம்மனுக்குப் படைக்கப்பட்டுப் பூசையின் பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.

வணக்க முறைகளாக முள்ளுக்காவடி எடுத்தல், பால் காவடி எடுத்தல் அங்கப் பிரதட்சணம் செய்தல் என்பவற்றை ஆண்களும், தீச்சட்டி ஏந்துதல், மடிப்பிச்சை எடுத்தல் போன்றவற்றைப் பெண்களும் நிறைவேற்றுவார்கள்.

மடிப்பிச்சை எடுப்பது என்றால், பெண்கள் வீடுவீடாகச் சில வீடுகளுக்குச் சென்று பிச்சை கேட்பார்கள். வீட்டில் உள்ளவர்ககள் பெரும்பாலும் நெல்லைத்தான் பிச்சையிடுவார்கள். சிலர் அரிசி, தேங்காய், கற்பூரம் என்பவற்றையும் கொடுப்பதுண்டு. பிச்சையெடுத்தவர்கள் அவற்றையெல்லாம் அப்படியே ஆலயத்திற்குச் சென்று ஒப்படைப்பார்கள். அவ்வாறு சேர்ந்த நெல் ஆலயத்தில் குவிந்துகிடக்கும் அந்த நெல்லை குழுர்த்தியிலன்றிரவு உரலில் குற்றி அரிசியாக்கி குழுர்த்திப் பொங்கல் செய்யப்படும். அரிசியை ஊறவைத்து இடித்து மாவாக்கி ரொட்டி சுட்டெடுக்கப்படும். அது வைரவருக்குப் படைக்கப்படும். நெல் குற்றுவதில் கூட ஒழுங்குமுறையொன்று வழக்கத்தில் உள்ளது. குழுத்திச் சடங்கு செய்யும் குடிமக்களில் ஓவ்வொருவருடமும் யாருக்கு முதல் உலக்கை என்பது குறித்து ஒதுக்கப்படுகின்ற அந்த வழமையின் படி அந்த இரண்டு பெண்களிடம் ஆலயப்; பிரதம குரு உரிய பூசைகளுக்குப் பிறகு உலக்கையை வழங்குவார். அவர்கள் முதன்முதலில் நெல்குற்றத் தொடங்குவார்கள். பிறகு ஏனையவர்கள் நெல்குற்றலில் பங்கேற்பார்கள். அவ்வாறு நெல் குற்றுதல், மாவிடித்தல் எல்லாம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, காவடி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் என்பவை ஆலயத்தைச் சுற்றி நடைபெற்றுக்கொண்டிருக்கும். அலங்கார மேடையிலே கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அறிஞர்களின் சொற்பொழிவுகள் இடம்பெறும்.அம்மனுக்குச் சாத்தப்படும் பாளை விற்பனை இன்னொருபுறம் ஒலிபெருக்கி மூலமாக நடைபெறும். ஆண்களும் பெண்களும், சிறுவர்களும் நெற்றியிலே திருநீறு பூசி, சந்தனப் பொட்டிட்டு மகிழ்ச்சி பொங்க ஆலயவீதியெங்கும் நிறைந்திருப்பார்கள். ஆண்கள் பொதுவாக வேட்டி கட்டியிருப்பார்கள். சிலர் சட்டைபோடாமல் வேட்டியுடனும் இடுப்பில் கட்டிய சால்வையுடனும் இருப்பார்கள். அம்மன்கோயிலின் உள் மண்டபத்தினுள் செல்லும் ஆண்கள் மேற்சட்டை அணிவதில்லை.

இவ்வாறு காலங்காலமாகப் பேணப்பட்டுவரும் எத்தனையோ விடயங்கள் உள்ளன. அம்மன் கோவில் திறந்திருக்கும் காலம் அவ்வந்த ஊர்களுக்கு புதுவருடப் பிறப்பைப் போல ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து வரவேற்றுப் பக்தியோடு கொண்டாடப்படும் ஒரு பண்டிகைக் காலம். உண்மையில் அது ஒரு பண்பாட்டுக் கோலம்.


 கன்னிக்கால் வெட்டுவதற்கு அம்மாள் ஊர்வலமாகச் செல்லுதல்




 கன்னிக்கால் வெட்டுவதற்கு அம்மாள் ஊர்வலமாகச் செல்லுதல்




 வீதி நெடுகிலும் அலங்காரம்




 முள்ளுக் காவடி எடுக்கும் இளைஞர்கள்



 கன்னிக்கால் வெட்டப்படுவதற்கு முன்னர் பூசை செய்யப்படுகிறது.




 கன்னிக்கால் வெட்டப்படுகின்றது.




 காவடி எடுப்பதற்காக அலகு குத்துவதற்கும், முள்ளுப்பாய்ச்சுவதற்கும் கட்டுரையாளர் காத்து நிற்கிறார்.





திருக்குளுத்திச் சடங்கு நடைபெறுகிறது.








5 comments:

abiram said...

கண்ணகியின் மகிமையை உலகறியச் செய்த கட்டுரையாளருக்கு எனது வாழ்த்துக்கள்.

Anonymous said...

Thanks for making the world know about Kannaki.Sad that the most famous Kannaki amman temple at Thuraineelanai was not included in the list of Kannaki amman temples in Batticaloa.

Thuraiappah

Anonymous said...

இந்த ஆண்டு அம்மன் கோவில் சடங்குக்கு போன ஒரு உணர்வை இக்கட்டுரை எனக்கு ஏற்படுத்துகிறது
..............நிசாகரன்

Balasingam said...

thanks sri annan if you add ursuttukaviyam and kuluttipaddu it will be very nice but its ok

Anonymous said...

இது போன்று எமது கிராமத்தின் தொன்மைகள் சிறப்புகளை தங்களைப் போன்றவர்களால்தான் உலகறியச் செய்யமுடியும்.