அரைகுடத்தின் நீரலைகள் - வித்யாசாகர்!!

.
அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள்.
இனிப்பாகவும்
கசப்பாகவும்
புதுசாகவும்
பழமை குறையாமலும்
வாழ்வின் முதல் படியிலிருந்து
கடைசிப் படி வரையிலும்
அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள்.


அவர்களை உறவென்று
சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில்
சிநேகமாய் ஒரு பூவும் -
மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!!
----------------------------------------------------------------



2

ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும்
நான்கு வீடுகள்
வீட்டில் நான்கு மனிதர்கள்
மனிதர்களின் ஈர விழிகளில் பல
ஏக்கங்களும் கண்ணீருமே இருந்தன;

முடிவில் கூடத் தெரிவதில்லை மனிதனுக்கு
பிறந்ததன் -
பின் இறப்பதற்கான நிர்பந்தமும்,
பழகியதன் - பின்
பிரிவதன் அசாராதன ரணமும்!!

----------------------------------------------------------------

3
சட்டக் கல்வி
மருத்துவம்
எந்திரவியல்
விஞ்ஞானம்
எல்லாம் வெங்காயமும் இருக்கிறது;

மனிதத்தைத் சொல்லித் தர
அல்லது வாழ்ந்துக் காட்ட
மனிதர்களிங்கே வெகு குறைவு,
நிறைவில் நான் கூட முழுமையாக இல்லை!!

----------------------------------------------------------------
 
4

பிறந்த குழந்தைக்கு
பெயர் வைக்கமுடிகிறது;
தமிழில் அல்லது
அவரவர் தாய் மொழியில்
வைப்பது பற்றி -
தெருவில் போகும் நாய்கூட
வருத்தப் பட்டுக் கொள்ளவில்லை.

நாய் ஏன் படனும் -
மனிதர்களே படுவதில்லை!!
----------------------------------------------------------------
5

பிச்சை எடுக்கிறார்கள்
வயோதிகர் அனாதையுற்றுத்
திருகிறார்கள்,
தெருவெல்லாம் கால்வாய் நீர்
கால்நனைத்து நோய்பரவிப் போகிறது,

எவனோ பேர் சொல்லிச் சம்பாதித்துக் கொள்ள
நிறைய கிராமங்கள் பட்டணமாகி விட்டன,
நல்லவன் கெட்டவனாகவும்
கெட்டவன் நல்லவராகவும் மாறி மாறித் திரிகின்றனர்,
மனிதர்களின் அசிங்கமுகம் ஆங்காங்கே
நாற்றமாகத் தெரிந்தாலும் -
இந்த இளைஞர்களை நம்புகிறது எம் தேசம்!!

- வித்யாசாகர்

No comments: