இலங்கை இந்திய செய்திகள்



இலங்கைப் பிரச்சினைகளில் அவசரம் காட்ட முடியாது! இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு


[ புதன்கிழமை, 29 யூன் 2011]

இலங்கைப் பிரச்சினைகளில் அவசரம் காட்ட முடியாதெனவும் மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடன்தான் எதையும் அணுக வேண்டும் எனவும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் இன்று அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தான்- சீனா- பங்களாதேஷ் ஆகிய அண்டை நாடுகளுடனும் அவ்வாறான போக்கினை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர்- ராகுல் காந்தி பிரதமராக எந்த தடையும்- சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


நன்றி தமிழ்வின்

சகல பாடசாலைகளிலும் 6 வருடங்களில் ஆங்கில மொழியில் உயர்தர பாடங்கள் உயர் கல்வி அமைச்சர் தெரிவிப்பு


Thursday, 30 June 2011
இன்னும் 6 வருடங்களில் பாடசாலைகளில் உயர் தர பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிக்க எதிர்பார்த்துள்ளதோடு 3 வருடங்களில் பல்கலைக்கழக கற்கை நெறிகளை ஆங்கில மொழியில் மாத்திரம் கற்பிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாக உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் இராணுவ பொறியியல் சேவை தொழிற் பயிற்சி கல்லூரியில் தலைமைத்துவ பயிற்சியை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிபெற்றுள்ள புதிய மாணவர்களை கடந்த திங்கட்கிழமை சந்தித்தபோதே உயர்கல்வியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;

வருடத்திற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி மூன்று அல்லது நான்கு வருடங்களில் வெளியேறிச் செல்கின்றனர். இவர்களில் பலருக்கு தொழில் கிடைப்பதில்லை இதற்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் ? உயர்கல்வி அமைச்சு, பல்கலைக்கழகங்களுமே பொறுப்பு கூற வேண்டும். இதனால் இனி வரும் காலங்களில் பட்டம் பெற்று வெளியேறிச் செல்லும் எந்த மாணவனும் தொழில் தேடி அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதற்கு இடம்கொடுக்கப்படாது.

இனிவரும் காலங்களில் பல்கலைக்கழக கல்வியைப் பெற்று வெளியேறிச் செல்லும் போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழிலுக்கான கேள்விகள். நிறைந்தவர்களாகவே இவர்கள் செல்வார்கள் இதற்காக பல்கலைக்கழக பாடநெறிகளை ஆங்கில மொழிக்கு மற்ற வேண்டும். இதன்போது பிரச்சினைகள் எழலாம். ஆனால் இவ்வாறு செய்யயாமல் முடியாது. சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வியைப் பெற்றுக் கொண்டு நாம் நினைப்பதையும் செய்யவும் முடியாது. உலகத்துடன் இணைந்து செல்லவும் முடியாது.

இதனால் கற்கை நெறிகளை ஆங்கிலத்திற்கு மாற்றியே ஆகவேண்டும். இதன் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பான ஆங்கில கல்வியை புகட்டமுடியும். இதன் பின்னர் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறி செல்லும் போது எவருக்கும் ஆங்கில மொழி பிரச்சினையென்பதே இருக்காது. இதற்கு மாணவர்களின் பங்களிப்பு அவசியமாகவுள்ளது.

இதனால் எதிர்வரும் ஆறு வருடங்களில் சகல பாடசாலைகளிலும் உயர்தர மாணவர்களுக்கு பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிப்பதற்கு நாம் எதிர்பார்த்துள்ளதோடு அடுத்த மூன்று வருடங்களில் பல்கலைக்கழகங்களின் கற்கை நெறிகளை சிங்களம், தமிழ் மொழிகளில் நடத்தாமல் அவற்றை ஆங்கில மொழியில் கற்பிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு செய்யாமல் நாம் எப்போதும் உலகத்தை வெல்லப் போவதில்லை என தெரிவித்தார்.

நன்றி தினக்குரல்


கொழும்புயாழ்ப்பாணத்திற்கான சாதாரண பஸ் கட்டணம் 379 ரூபா அரைசொகுசுக் கட்டணம் 569 ரூபா
 30 June 2011 

நாளை முதல் பஸ் கட்டணங்கள் 7.6 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ள நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கட்டண விபரங்களை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
bus
தற்போது முதல் 18 ரூபா வரையான கட்டணங்கள் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.20 ரூபா முதல் 34 ரூபா வரையான கட்டணங்கள் இரண்டு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் 35 ரூபாவிலிருந்து 47 ரூபாவரையான கட்டணங்கள் 50 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போது அறவிடப்படும் 50 முதல் 60 ரூபா வரையான கட்டணங்கள் 4 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.61 முதல் 75 ரூபா வரையான கட்டணங்கள் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான சேவையில் ஈடுபடும் பஸ் கட்டணங்களின் படி கொழும்புக்கும் கண்டிக்குமிடையிலான சொகுசு பஸ் சேவைக்கட்டணம் 245 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அதேவேளை சாதாரண சேவைக்கு 121 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

கொழும்புக்கும் மன்னாருக்குமிடையிலான சாதாரண கட்டணம் 290 ஆகவும்,அரைச்சொகுசு 435 ரூபாவாகவும் சொகுசு பஸ் கட்டணம் 580 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான சாதாரண பஸ் கட்டணம் 379 ரூபாவாகவும் அரைச்சொகுசு கட்டணம் 569 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கும் நுவரரெலியாவுக்குமிடையிலான சாதாரண கட்டணம் 167 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கொழும்புக்கும் வவுனியாவுக்குமிடையிலான சாதாரண பஸ் கட்டணம் 244 ரூபாவாகவும் அரைச்சொகுசு 366 ரூபாவாகவும் சொகுசு கட்டணம் 490 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கும் மன்னாருக்குமிடையிலான 15/4 மார்க்க சாதாரண கட்டணம் 297 ரூபாவாகவும் அரைச்சொகுசு 446 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.கொழும்புக்கும் ஹட்டனுக்குமிடையிலான சாதாரண கட்டணம் 126 ரூபாவாகவும் அரைச்சொகுசு 189 ரூபாவாகவும் சொகுசு 255 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.கொழும்புக்கும் பதுளைக்குமிடையில் சாதாரண கட்டணம் 242 ரூபாவாகவும் 363 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கதிர்காமத்துக்கும் கொழும்புக்குமிடையிலான சாதாரண பஸ் கட்டணம் 446 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான சாதாரண பஸ்கட்டணம் 148 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.கொழும்புக்கும் பருத்தித்துறைக்குமான சாதாரண கட்டணம் 366 ரூபாவாகவும் அரைச்சொகுசு 549 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.வவுனியாவுக்கும் திருமலைக்குமிடையிலான சாதாரண கட்டணம் 103 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்.கொழும்புக்குமிடையிலான சொகு சேவையின் கட்டணம் 1120 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

நன்றி தினக்குரல்


தென்னிலங்கையில் தொழில் வாய்ப்பைக் காட்டி தமிழ் பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக வெளிவந்த செய்தி : மெல்லுகின்றவாய்க்கு அவலாகும் அபலைப் பெண்கள் !


- நமது யாழ் நிருபர்


maruthanaiபடம் - மருதானையில் பொலிசாரால் இளம் பெண்கள் விடுவிக்கப்பட்ட விடுதி

வடக்கு கிழக்கைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 9 பெண்கள் கொழும்பில் மருதானைப்பகுதியிலிருந்த விடுதியொன்றில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பரிதாபச் செய்தி இவ்வார யாழ் பத்திரிகைகளில் பிரதான செய்தியாக வெளிவந்திருந்தது. இவர்களுள் 8 பெண்கள் 16-24 வயதிற்குட்பட்டவர்களெனவும் அவர்களுள் இருவர் 18 வயதிற்குக் குறைந்தவர்களெனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகள் தெரிவித்திருந்தன. அத்துடன் பொலிஸ் தகவல்களை மேற்கோள்காட்டி, இவர்களுள் இருவரைப்பற்றி மட்டும் மேலதிக விபரங்களையும் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன. இதன்படி இவர்கள் இருவரும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அபலைகள் எனவும், முகவர் ஒருவரினால் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மோசடி செய்யப்பட்டு கொழும்பிற்குக் கூட்டிவரப்பட்டு ஏமாற்றப்பட்டவர்களெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச் செய்தி, சமூக ஆர்வலர்களினால் ஒரு அபாய அறிவிப்பாகக்கருதப்பட்டு; இந்நிலைமைகளைக் கட்டுப்படுத்தி களைந்தெறிவதற்கான நடவடிக்கைகளில் கவனம்கொள்ள வைத்துள்ளது.

இதற்கிடையில் இந்தச் செய்தியுடன் கொழும்பிற்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சட்டப்படியாக வேலைவாய்ப்புகளைத் தேடிச்செல்லும் பெண்களின் நிலைமைகளை பொதுமைப்படுத்தும் இன்னொரு அபாய நிலைமை இப்போது தோன்றியுள்ளதாக மகளிர் மற்றும் இளம் மகளிர் முன்னணி அமைப்பாளர் திருமதி அகலியா சுட்டிக்காட்டியுள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், இந்தச் செய்தி பத்திரிகைகளில் பிரபலமாக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக தொழில் முகவர்கள் ஊடாக முயற்சிகள் செய்து தோல்வியடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பிவந்த பெண்கள் சிலர் தமது ஊரவர்களினால் சொல்லொணா மன உழைச்சலுக்கு உள்ளாகிவருவதாகவும், இது மிகவும் கொடூரமானது எனவும் குறிப்பிட்டார். இவர்களது நிலைமைகளே இப்படியிருக்கையில், உண்மையில் பாதிக்கப்பட்ட அப்பாவிப்; பெண்கள் தமது ஊர்களுக்குத் திரும்பிவரும்போது எதிர்கொள்ளப்போகும் பரிதாப நிலைமைகளை எண்ணிப்பார்ப்பது அச்ச மூட்டுவதாக உள்ளதாக அவர் ஆதங்கப்பட்டார்.

எமது சமூகத்தின் இந்த அவல நிலைமையை மாற்ற சமூக அக்கறையுள்ள அனைவரும் முன்வரவேண்டுமெனவும், இதற்குக் காரணமான எமது சமூகப் பிரகிருதிகளை மகளிர் மற்றும் இளம் மகளிர் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இவ்விடயம்பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அவர், வன்னியிலிருந்த அப்பாவி மக்களின் அவலங்களை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் வெறும் அரசியல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அக்கறையுடன் அணுகி அவை உருவாவதற்கான ஊற்றுமூலங்களைக் கண்டுபிடித்து அவற்றை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டுமென தெரிவித்தார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்விகற்கும் சில மாணவிகள் கருக்கலைப்புச் செய்துகொண்டதாக பொதுக் கூட்டங்களில் பகிரங்கமாகவே பேசப்பட்டவை பிரசுரமாவதை மிகவும் பொறுப்புணர்வுடன் தவிர்த்த ஊடகங்கள், இச் சம்பவத்தைமட்டும் பெட்டிச் செய்திகளாக்கி வெறும் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துவது தவறு எனக் குறிப்பிட்டார். இயக்கத்தில் சேர்ந்திருந்து தற்போது இலங்கை அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட பல இளம் பெண்களை அவர்களது குடும்பங்களோ அல்லது தமிழ் சமூகமோ அரவணைக்காத அவலநிலை தொடர்ந்து இருந்துவருகிறது. இவைபற்றி இப் பிரதிநிதிகள் கவலைப்பட்டதில்லை. இது தவிர பொருளாதார நீதியாக அவலநிலையிலுள்ள இந்தப் பெண்களின் அபாயகரமான நிலைமையையிட்டு பல அறிக்கைகள் வெளிவந்தும், இந்த அரசியல்வாதிகளோ அல்லது ஊடகங்களோ இவர்கள்பற்றி பெரிதும் அலட்டிக் கொண்டதில்லை. இந் நிலையில் இச் செய்தியைமட்டும் வெறும் பிரச்சாரத்திற்காகப் பிரசுரித்து சமூக மட்டத்தில் கீழ் நிலையிலுள்ள சகல பெண்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குவது கண்டிக்கத் தக்கது எனக் குறிப்பிட்டார்.


நன்றி தேனீ




No comments: