நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் !

 




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்   …..  அவுஸ்திரேலியா 


வள்ளுவம் படிப்போம் வள்ளலார் படிப்போம்
பட்டினத் தடிகள் பாட்டையும் படிப்போம்
நாலடி படிப்போம் நல்லுரை படிப்போம்
தேனார் திரு  வாசகம் படிப்போம்

மூலரைப் படிப்போம் மூதுரை படிப்போம்
சீலமாம் அடியார் திருமுறை படிப்போம்
கம்பனைப் படிப்போம் கவிமணி படிப்போம்
பாரதி பாரதி தாசனைப் படிப்போம்

படிப்போம் படிப்போம் பலதும் படிப்போம்
படித்ததை மனதில் பக்குவப் படுத்துவோம்
படித்ததை படித்த நிலையிலே விட்டிடா
படித்ததை  வாழ்வுக்குப் படிக்கல் லாக்குவோம் 

முன்னவர் நமக்காய் எழுதிக் குவித்தார்
முது சொம்மாக நிறைந்தே இருக்கு
எடுக்க எடுக்க எமக்கே பயனே
எடுத்துப் படித்தால் இமயமாய் உயருவோம்

வாழ்வின் தத்துவம் வண்ணமாய் சொன்னார்
வரம்பைக் கட்டிக் காத்தார் வாழ்வினை
வழுக்கி வீழா காத்திட முனைந்தார்
நினைத்துப் பார்க்கையில் நெஞ்சம் நிறையுது 

கையைப் பிடித்து அழைத்துச் சென்று
கடமை கண்ணியம் காட்டி நிற்கிறார்
அறத்தை உணர்த்தி அன்பை உணர்த்தி
ஆண்டவன் நினைப்பை அகத்தில் பதிக்கிறார்

நூல்களைப் படிப்போம் நுண்மாண் கருக்களை
வாழும் வாழ்வுக்கு வழியாய் கொள்ளுவோம்
மனத்தின் மாசை அகற்றும் மருந்தாய்
நினைத்துப் படிப்போம் நிமலனும் மகிழுவான் 

No comments: