பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - ---யசோதா தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி

















சிவத்திரு நவநீத கிருஸ்ணபாரதியார்

விழா நாயகனான நவநீத கிருஸ்ணபாரதி அவர்களைப்பற்றிச் சிறப்புரை   ஆற்றுவதற்குத் திருமதி கலையரசி சின்னையா அவர்கள் மேடைக்கு அழைக்கப்பெற்றார்.

 



                     









திருமதி கலையரசி சின்னையா

"யாழ். சர்வகலாசாலையிலே சிரேட்ட விரிவுரையாளராகப் பணிபுரிந்து இளைப்பாறியவர் இவர். தனது பேச்சுத் திறனால் தமிழர்களிடையே ஒரு தனி இடத்தைப் பெற்று விளங்கிய இவர் வித்துவான் வேந்தனார் அவர்களின் மகளாவார்"  என்று விழாவின் தொகுப்பாளர் திருமதி சரோஜாதேவி அறிமுகப்படுத்தனார்.

 











திருமதி சரோஜாதேவி சுந்தரலிங்கம்

 


 

 

 






கலாவித்தகர்  கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் அவர்கள்   பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கிறார்

இவரைக் கலாவித்தகர்  கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் அவர்கள்   பொன்னாடை போர்த்திக் கௌரவித்ததும் திருமதி கலையரசி சின்னையா அவர்கள் தனது சிறப்புரையை ஆரம்பித்ததார் 

திருமதி கலையரசி சின்னையா அவர்களளின் சிறப்புரை:-




 

 

 







'இன்றைய    சான்றோர் விழாவை நடத்திக்கொண்டிருக்கின்ற மதிப்புக்கு உரிய டாக்டர் பாரதி அவர்களே!  மற்றும் இங்கு குழுமியிருக்கின்ற அன்பர்களே! இந்த மேடையில் நான் நிற்கும்பொழுது ஒரு புல்லரிப்புடன்தான் இங்கு வந்துள்ளேன். சான்றோர் விழாவை  இவ்வளவு காலமாக இவ்வளவு சிறப்பாக இந்த வயதிலே நடத்திவருகின்ற பாரதி ஐயா அவர்களுக்கு முதற்கண் என் தாழ்மையான வணக்கம்!. இன்று எங்கள் முன்னால் ஆசியுரை வழங்கிய என் அன்புக்குரிய பாலம் இலட்சுமணன் அம்மா அவர்களுக்கும் வணக்கம்! ஈழவள நாட்டிலே எத்தனையோ சேவைகளைச் செய்து - எங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்து - இங்கு வந்து தன்னுடைய நாத்தழும்பேறும் வண்ணம் எல்லோருடைய செவிகளையும் மகிழ்வித்து வைத்துக்  கொண்டிருக்கின்ற - நாங்கள்  பெற்ற ஒரு பெரும் பேறாகக் கருதுகின்ற செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் ஐயா அவர்களுக்கும் வணக்கம்! இங்கு வந்திருக்கின்ற அறிஞர் பெருமக்கள் எல்லோருக்கும் எனது அன்பைத் தெரிவித்துக்கொண்டு இன்றைய சான்றோராகிய நவநீதகிருஷ்ண பாரதியார் அவருடைய இந்தச் சான்றோர் விழாவிலே என்னைப் பேசும்படி கேட்டபொழுது எனக்கு முதலில் நினைவு வந்தது எனக்கும் அவருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கின்றதோ  என்றுதான்.நினைத்தேன். ஏன் நான் இதைக் கூறுகின்றேன் என்றால் நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது  -இப்பொழுது உங்கள் முன்னர்  சிற்றுரை வழங்கிய சிறுமிக்கு எத்தனை வயதோ எனக்குத் தெரியாது. எனக்கு வயது எட்டு ஒன்பது! எங்களுடைய வீட்டிலே குடும்பப் படங்களுடன் ஒரு பெரிய படமும் போட்டிருந்தது. எனக்கு அதை என்னவென்று  வாசித்து விளங்கத்தக்க தெளிவு இல்லை.    

கனக்க எழுதப்பட்டிந்தது. எனது தந்தையாரிடம் கேட்டேன் என்னவென்று.   '1947ஆம் ஆண்டில் எங்கள் திருமணம் நடந்த பொழுது எனக்கு வழங்கப்பட்ட மங்கலப் பாட்டு. இதைப் பாடியவர் நவநீதகிருஷ்ண பாரதியார" என்று எனது தந்தை சொன்னார். இன்று அந்த வாழ்த்துப் படம் இல்லை. ஆனால், பாடல் நினைவில் இருக்கின்றது. இன்னும் நான் உங்கள் முன் நிற்கும்போது அந்தத் தோற்றம்! நாங்கள் எந்த வீடு மாறினாலும் அந்தப் படம் எனது தந்தையின் வீட்டிலேதான் இருந்தது.

 

சின்ன  வயதிலே எனது ஆசிரியர்களின் பெயர்கள் எல்லாம் தெரியமுன் நவநீதகிருஷ்ண பாரதியார் என்ற நீண்ட பெயர்தான் என் நினைவிலே நின்றது. தொடர்ந்து நான் இந்தியாவிலே உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்குப் போனபொழுது அங்கு பேராசிரியராக இருந்த சுப்பிரமணியம் அவர்கள்,  ஒரு கருத்தரங்கிலே¸ "உலகியல் விளக்கத்தைப்பற்றி நீங்கள் பேசுங்கள்" என்று சொன்னார். அன்று நான்   பல்கலைக்கழகத்திலே விரிவுரையாளராக இருந்தாலும் அன்றுதான் நான் சாமிநாதர் நூலகத்திலே இருந்த உலகியல் விளக்கத்தைப் பார்த்தேன். அங்கு ஓர் ஆய்வுக் கட்டுரை வாசித்தேன். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பரமேசுவராக் கல்லூரி நூற்றாண்டு விழாவிலே கட்டுரை வேண்டுமென்று கேட்டார்கள்.  உடனே நினைவுக்கு வந்தது நவநீதகிருஷ்ண பாரதியார்தான். அந்தச் சான்றோரை வணங்கி இந்த விழாவிலே சிற்றுரை வழங்கிய செல்வி மிகவும் அழகாக அவரைப்பற்றிச் சொன்னார். பாரதி அவர்கள் பெரியோர்களாகிய எங்களுக்கு மாத்திரம் அல்லாமல் இந்தச் சின்னக் குழந்தைகளினது மனதிலேயும் அந்தப் பெயரைப் பதியவைக்கத்தக்க வகையிலே இப்படி அவர்களுக்கு இடம் கொடுப்பது எனக்கு என் சிறு வயதிலே அவருடைய பெயர்  எப்படிப் பதிந்ததோ அதுபோல் இன்று பேசிய இந்தச் சின்னக் குழந்தையின் மனதிலும் அவர் வளர்ந்தாலும் அவருடைய பெயர் நிலைத்திருக்கும்.  அதற்கு அந்தக் குழந்தைக்கு நான் வாழ்த்துத் தெரிவிக்கின்றேன்!.

இன்று நாங்கள் சான்றோராகக் கொண்டாடிக்கொண்டிருக்கின்ற நவநீதகிருஷ்ண பாரதியார் அவர்கள் எம்மைவிட்டு மறைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்று நாங்கள் நினைத்துப் பார்க்கின்ற பொழுது அவர் வாழ்ந்த காலம் --- அதாவது அவர் இந்தியாவிலே பிறந்து வளர்ந்து இலங்கைக்கு வந்த அந்தக் காலம் பிரித்தானியர்களின் ஆட்சியிலே இலங்கை நலிவுற்று  - மொழி இழந்து - சமயம் இழந்து இருந்தது. இந்தக் காலகட்டத்திலே, ஆறுமுக நாவலர் தோன்றிச் சமயத்தையும் தமிழையும் வளர்க்கப் பாடுபட்டார். அந்தப் 19ஆம் நூற்றாண்டிலே எமது தமிழகத்துக்கும் ஈழத்துக்குமான தொடர்பு என்றும் இல்லாத வகையிலே அதிகமாக இருந்தது. இங்கே எத்தனையோ சான்றோர்களைப் பாரதி அவர்கள் உங்களுக்கு அறிமுகப் படுத்தினார்கள். அதிலே சில நீங்கள் பார்க்கலாம். ஆறுமுகநாவலர்¸  அச்சுயந்திரத்தின் வசதி  19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே கிடைத்தபொழுது நூல்களை.வெளியிடுவதற்கும்¸ கிறித்தவ மிசனரிமார்களிடம் இருந்து சைவப் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கும் பாடசாலைகளை - அச்சுயந்திர சாலைகளை அமைத்த பொழுது இந்தியாவுக்கும் இலங்கைக்குமான தொடர்பு கூடியது. அவர் வழியிலே எத்தனையோ புலவர்கள். சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் ….வர்த்தமானி  என்ற பத்திரிகையை நடத்துவதற்காக இந்தியாவுக்குச் சென்றார். அங்கேயே எத்தனையோ பட்டம் பெற்று நூல்களைப் பதிப்பித்து அங்கேயே தன் வாழ்நாளைக் கழித்தார். வடகோவை சபாபதி அவர்கள் நாவலருடைய பாடசாலையிலே தலைமை ஆசிரியராக இருப்பதற்காகச் சிதம்பரம் சென்றவர். அங்கே திருவாவடுதுறை ஆதீனத்திலேயே நாவலர் என்ற பட்டத்தையும் பெற்று அங்கு பல பணிகளையுஞ் செய்து அங்கேயே மறைந்தார். அடுத்ததாக வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அம்பலவாண நாவலர் என்பவர் அதே வகையிலே ஒரு வர்த்தகராலே அழைத்துச் செல்லப்பட்டுச் சமயப் பிரசங்கங்கள் செய்து அங்கேயே ஆறுமுக நாவலர் பெயராலே பல மடங்களை நிறுவி அங்கேயே வாழ்க்கையைக் கழித்தார். காசிவாசி செந்திநாத ஐயர்……. இப்படி ஈழத்திற்கும் தாய் நாடான தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு வலுத்ததுபோல 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அது மற்ற விதமாக வந்தது. அதாவது தமிழகத்திலிருந்து ஈழத்துக்கு வரத் தொடங்கினார்கள். இதற்குப் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஏற்பட்ட அந்தப் பழையதொடர்பு காரணமாக இருந்திருக்கலாம். 20ஆம் ஆண்டு முற்பகுதியிலே ஈழத்துக்கு வந்த இந்திய அறிஞர்களிலே முதன்மையானவர் நவநீதகிருஷ்ண பாரதியார்!. இவரை அழைத்து வந்தவர் சேர். பொன். இராமநாதன் அவர்கள் என்பதை அந்தச் சிறுமி கூறிச் சென்றார். அதாவது கிருஷ்ணபுரம் மாவட்டத்திலே உள்ள இடத்திலே பிறந்தவர். இந்தியாவிலேயே வளர்ந்து அங்கேயே பெரும் புலவர்களிடம் கல்விகற்று -  நான் கூறியது கூறல் என்ற குற்றத்துக்கு உள்ளாவேனோ தெரியாது.  அந்தச் சிறுமி சொன்னாள். அவருடைய ஆளுமைக்கு அடிப்படையாக அமைந்தது - அவர் நற்றிணைக்கு உரை எழுதிய சின்னத்தூர் நாராயணசாமியிடம் இலக்கியத்தைப் படித்தார். தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய அரசன் சண்முகனாரிடம் இலக்கணத்தைப் படித்தார். திருவாவடுதுறை ஆசிரியராக இருந்தபோதும் திருவாவடுதுறை ஆதீனத்திலே அம்பலவாண தேசிகரிடத்திலே திருக்குறள் ஆலோசனைத் துணைவராக இருந்து எல்லா அறிவையும் பெற்றார். அந்த வகையிலே தமிழ் அறிவும், வடமொழி அறிவும், தமிழ்ப் பற்றும், சமயப் பற்றும் உடையவராக விளங்கிய இந்த நவநீதகிருஷ்ண பாரதியாரின் அறிமுகம் சேர். பொன். இராமநாதன் அவர்களுக்கு உ.வே.சாமிநாத ஐயரின் தொடர்பாற் கிடைத்தது. சேர். பொன். இராமநாதன் அவர்கள்.13ஆவது வயதிலிருந்து தனது படிப்பை இந்தியாவிலே படித்தவர் இந்திய அறிஞர்களுடன் தொடர்பு உடையவர். இலங்கையிலே நாவலர் வழியிலே நின்று கல்லூரிகளை அமைக்கவேண்டும் சைவத்தையும் தமிழையும் வளர்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்த அந்தப் பெரியார்  அந்த நோக்கத்திலேயே பெண்களுக்காக இராமநாதன் கல்லூயை இலங்கையிலே அமைக்க வேண்டும் என்ற அந்த நோக்கத்திலே ஆசிரியர்களை - பெண் அதிபர்களை எல்லா நாடுகளிலிருந்தும் எடுத்தார்கள். ஆங்கிலப் பெண்மணிகள் அதிபர்களாக வந்தார்கள். வடமொழி - தமிழ் படித்த அசிரியர்கள் வந்து சேர்ந்தார்கள். அந்த வகையிலே சுவாமிநாத ஐயருடைய ஆலோசனையின் பேரில் நவநீதகிருஷ்ண பாரதியாரை இராமநாதன் கல்லூரியினுடைய தலைமைத் தமிழ்ப் பண்டிதராக 1917ஆம் ஆண்டு அழைத்து வந்தார். அப்பொழுது நவநீதகிருஷ்ண பாரதியாருக்கு வயது 28. அந்தச் சிறுமி கூறியதுபோல அவர் மறைந்த ஆண்டு 1954. இந்த 37 வருடங்கள் ஈழ நாட்டிலே மாவிட்டபுரத்திலே இருந்து, தன்னை ஒரு ஈழத்துத் தமிழனாகக் கூறித் தமிழ்ப் பணி செய்தவர்தான் இந்த நவநீதகிருஷ்ண பாரதியார். 1918ஆம் ஆண்டிலிருந்து 22ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணம் மருதநாமடத்திலே இருந்த இராமநாதன் கல்லூரியிலே தமிழ் ஆசிரியராகக் கடமை ஆற்றினார். நான் முன்பு சொன்னதுபோல அதாவது இந்தியாவிலிருந்து 20ஆம் ஆண்டிலிருந்து அறிஞர்கள் வரத்தொடங்கினார்கள் என்று. விவரித்துச் சொல்வதற்கு நேரமில்லை. இரண்டாவதாக வந்தவர் கோதண்டராம நடேசையர் என்பவர். ஒரு வர்த்தக நோக்கமாக வந்து மலையகத்திலே மலையக மக்களுக்காகச் சேவைசெய்து, அரசியலில் ஈடுபட்டுத் தனது வாழ்நாளைக் கழித்தார்.

 

மூன்றாவதாக,1922ஆம் ஆண்டு வந்தவர்தான் சு . நடேசபிள்ளை. அவர்கள்.  அவரைச் சேர். பொன். இராமநாதன் அவர்கள் உ வே சுவாமிநாத ஐயருடைய தொடர்பினாலே கண்டு அவரை நடேசன் என்று அழைத்து, ஈழநாட்டிற்கு வரவழைத்து, பரமேசுவராக் கல்லூரியினுடைய அதிபராகவும், தனது மருகனாகவும் ஏற்றுக்கொண்டார். 22ஆம் ஆண்டுதான் இராமநாதன் அவர்கள் ஆண்பிள்ளைகளுக்காகப் பரமேசுவராக் கல்லூரியியை கட்டுவித்தார். இந்த நடேசபிள்ளை அவர்கள்,   பரமேசுவராக் கல்லூரியிலே அதிபராகப் பதவியேற்றார்.    அந்த இடத்திலே இந்த நடேசபிள்ளைக்கும் நவநீதகிருஷ்ண பாரதியாருக்கும் இடையிலான தொடர்பு கூடியது.

நான் ஏற்கனவே கூறியதுபோல அவர் வாழ்ந்த காலத்திலே தமிழ்மொழி வெறுக்கப்பட்டு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலம். ஐந்து ஆண்டுகள் இராமநாதன் கல்லூரியிலும், தொடர்ந்து 13 ஆண்டுகள் பரமேசுவராக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றிய பின்னர்

1935ஆம் ஆண்டு அவர் ஒரு கட்டுரை எழுதினார். உண்மையிலேயே அந்தக்  கட்டுரையை நான் வாசித்தபோது ஒரு தமிழ் உணர்வுள்ள ஆசிரியரின் மனம் எப்படி இருக்குமென்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடிந்தது.

அந்தக் கட்டுரையிலே அவர் சொல்லுகின்றார்! "நான் திரும்பத் திரும்ப இந்த இலக்கியங்களைப் படித்துப் பிரயோசனமில்லை. அதாவது  கழுதை பொதிசுமந்து களைத்ததுபோலத்தான் களைக்கவேண்டும். பொருள் வருவாயும் இல்லை.  ஆனபடியால் நான் கடவுள் நம்பிக்கையோடு இருந்தேன். அப்படி இருந்த என்னை ஈழகேசரி ஆசிரியர், தனது ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதித் தருமாறு கேட்டிருந்தார். நான் எதைப்பற்றி எழுதுவது? இயற்கையைப் பற்றி எழுதுவதா? இலக்கியத்தைப் பற்றி எழுதுவதா?ஏனென்றால் அவருக்கு ஒரு எண்ணம் வந்துவிட்டது. இந்தத் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகிறதே! இதை எழுதி என்ன பிரயோசனம் என்று! கடைசியாக அவர் சொல்லுகின்றார் "நான் எழுதினேன். ஆங்கிலக் கல்லூரிகளும் தமிழ்மொழிக் கல்வியும் என்று". அவருடைய ஆக்கங்களைப் படித்துப் பார்க்கும் போது தெரியும். அவர் சுவையாகச் சில விடயங்களைச் சொல்லுவார். அவர் ஒரு மரபுவழிக் கவிஞர். மரபு வழியைப் போற்றுபவர். என்றாலும் அவருடைய உரை நடையிலோ கவிதைகளிலோ சில நளினங்களை நாங்கள் காணலாம். அதிலே அவர் சொல்லுவார்! "இங்கே ஆங்கிலக் கல்லூரிகளிலே தமிழ் மொழிக்குக் கொடுக்கப்படுகின்ற நேரம் குறைவு! காற் பங்கு!. பரீட்சைக்குக் கொடுக்கப்படுகின்ற புள்ளியும் மிகக் குறைவு. அப்படி இருக்கின்ற பொழுது இந்த அரசாங்கத்தார் அதிபர்மார் கனக்கக் கொடுத்து  இலக்கண இலக்கியங்களைப் பாடத்திட்டத்திலே கனக்கப் போட்டுவிட்டார்கள். அப்படியானால் நாங்கள் இவை எல்வாவற்றையும் கரைத்து அரைத்துச் சாம்பாராக்கி மிளகு இரசமாக்கிக் கொடுக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

 

"இப்படி விருப்பும் வெறுப்பும் வரத்தக்கதாக எழுதுவது ஒரு புலவருடைய கொள்கை அல்ல. ஆனாலும் உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டும் என்ற தன்மை புலவருக்கு உண்டு. ஆனபடியால் நான் இப்படிச் செய்துவிட்டேன்". அந்தக் கட்டுரையிலே அவருக்கு எதிர்ப்பும் இருந்திருக்கலாம் போல இருக்கின்றது. ஏனென்றால் 'எங்களுக்கு ஒரு ஊதியமும் இல்லை. ஆனால் பொறாமை என்ற அணிகலன்களை நாங்கள் அணிந்துகொள்ளலாம்' என்று அந்தக் கட்டுரையிலிருந்து பார்க்கும்போது நினைக்கத் தோன்றுகின்றது. இப்படியாக அந்தத் தமிழ்மொழிக் கல்வியிலே இருந்தாலும் அவருடைய மாணவர்கள் அவருடைய படிப்பினாலே உந்தப்பட்டவர்கள் அவரை மிகவும் மரியாதையாக நடத்தியவர்கள். இப்படியான ஒரு நிலையிலே 1936 ஆம் ஆண்டு  சு  நடேசபிள்ளை அவர்களின் முயற்சியினாலே ஆரிய திராவிட பாசா விருத்திச் சங்கம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. உங்களுக்குத் தெரியும். வடமொழியையும் தமிழ் மொழியையும் வளர்க்கவேண்டும் என்பதற்காக அது தொடங்கப்பட்டது. அந்தக் காலத்திலே சோமசுந்தரப் புலவர்¸ பண்டிதமணி கணபதிப்பிள்ளை¸ வித்துவான் கணேசையர் முதலான பெரியவர்கள் எல்லாம் - அறிஞர்கள் எல்லாம் இருந்தார்கள். இவர்கள் எல்லோருமாக ஆரம்பிக்கப்பட்ட அந்த ஆரிய திராவிட பாசா விருத்திச் சங்கத்திலே சேர்ந்தார்கள். அது 21ஆம் ஆண்டு ஆரம்பத்திலே ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு 36 ஆம் ஆண்டு நடேசபிள்ளை அவர்கள் யாழ் பரமேசுவராக் கல்லூரியிலே ஒரு பண்டித ஆசிரிய கலாசாலையை ஆரம்பித்தார். ( விழா வர்ணனை தொடரும்…..)

                                                                                                                                                           ------  யசோதை

No comments: