Published By: Digital Desk 2
22 Jun, 2025 | 11:55 AM
மத்திய கிழக்கு பெரும்பாலும் பதற்றமுள்ள பகுதியில் ஒன்றாகவே இருந்துள்ளது. சமீபத்தில் தீவிரமடைந்த ஈரான் –இஸ்ரேல் போரின் நிலை அந்தப் பதற்றத்தை மீறி ஒரு புதிய ஆபத்தான கட்டத்திற்குள் நம்மை இழுத்து செல்கின்றது. இஸ்ரேல் மீது மேற்கொண்ட வரலாற்றிலேயான நேரடி இயங்குதிரைகள் மற்றும் அதற்கான பதிலடி தாக்குதல்களின் பின்னணியில் இப்போர் நிலைமை வெறும் இடைக்கால முரண்பாட்டைவிட அதிக ஆபத்தானதாக மாறியுள்ளது. மனிதாபிமான பாதிப்புகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதன் பொருளாதார தாக்கங்களும் கடுமையானவையே. குறிப்பாக, எரிபொருள் இறக்குமதியையே சார்ந்து இயங்கும் இலங்கை போன்ற நாடுகளுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாகும்.
போரின் தொடக்கக் காரணங்கள் என்ன?
2024 ஏப்ரலில், இஸ்ரேல் சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தை விமான தாக்குதலின் மூலம் குறிவைத்தது. இதில் ஐ.ஆர்.ஜி.சி.யின் உயர் அதிகாரிகள் பலியாகினர். இதைத் தொடர்ந்து ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது 300 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அனுப்பி தாக்கியது. பெரும்பாலான தாக்குதல்கள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் தடுக்கப்பட்டன. இருப்பினும், ஈரான் இப்போது நேரடியாக தலையீடு செய்யத் தயார் எனும் செய்தியை இது வெளிப்படையாகக் கூறியது.
இந்த தாக்குதலுக்குப் பதிலாக இஸ்ரேல், ஈரானின் விமானப்படைத் தளங்கள் மற்றும் உள்நாட்டு இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்கியது. இந்நிலையில் சவூதி அரேபியா, துருக்கி, எகிப்து போன்ற நாடுகள் அருகில் கண்காணிக்கின்றன. அமெரிக்கா, இதற்கிடையில் பாரசீக வளைகுடாவில் தனது இராணுவத்தை அதிகரித்துள்ளது.
உடனடி பொருளாதார தாக்கங்கள்
ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைதலின் தாக்கம் இலங்கையில் ஏற்படுத்தக்கூடிய பொருளாதார விளைவுகளை நாம் ஆழமாக பரிசீலிக்க வேண்டிய நேரத்தில் உள்ளோம். இலங்கையின் பொருளாதாரம் எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ளது. அத்துடன், அரசும் மக்களும் சமீபத்திய நிதி மற்றும் பணவீக்க சவால்களில் இருந்து மீள முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த கட்டத்தில் ஒரு பெரிய மத்திய கிழக்கு போர் மேலும் அபாயகரமான சூழலை உருவாக்கும்.
• எண்ணெய் விலையின் உயர்வு: ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் உலக எண்ணெய் சந்தையில் முக்கியமான பங்களிப்பாளர்களாக உள்ளன. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக சுமார் 20 சதவீதத்துக்கும் மேற்பட்ட எண்ணெய் கொண்டு செல்லப்படுகின்றது. போர் மேலும் தீவிரமடைந்தால் இந்த வழித்தடங்கள் தடுக்கப்படுவதால் சர்வதேச எண்ணெய் விலைகள் கடுமையாக உயரக்கூடும். இது இலங்கையின் எண்ணெய் இறக்குமதி செலவுகளை பெரிதும் அதிகரிக்கச் செய்யும்.
• போக்குவரத்து துறையின் தாக்கம்: இலங்கையில் பொதுமக்கள் மற்றும் தொழில்துறை இரண்டும் பெற்றோல், டீசல், மற்றும் எரிவாயு மீது சார்ந்துள்ளன. எண்ணெய் விலை உயர்வால்:
தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கும்.
போக்குவரத்து கட்டணங்கள் உயர்வால், பொதுமக்கள் வாழ்வித்திறன் பாதிக்கப்படும்.
உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியச் சேவைகள் அடங்கிய லொஜிஸ்டிக் (Logistic) செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
• மின் உற்பத்தி மற்றும் கட்டணங்கள்: இலங்கை பன்முக மின் உற்பத்தி அமைப்பினைக் கொண்டிருந்தாலும் அனல் மின் நிலையங்கள் (மூலம் மின் உற்பத்தி முக்கிய பங்காற்றுகின்றன. இந்த நிலையங்கள் இறக்குமதியை பெற்ற எரிபொருட்கள் மீது சார்ந்துள்ளதால், எண்ணெய் விலை உயர்வால்:
மின் உற்பத்தி செலவு அதிகரிக்கும்.
இது நேரடியாக மின்சாரம் கட்டண உயர்விற்கு வழிவகுக்கும்.
• தொழில் துறையின் செலவுகள் மற்றும் போட்டித்திறன்: தொழில் துறையில் உற்பத்தி, போக்குவரத்து, மின் பயன்பாடு போன்ற அனைத்து அம்சங்களும் நேரடியாக எண்ணெய் விலை மீது சார்ந்துள்ளன.
செலவுகள் உயரும் போது, தொழில்நுட்பமிக்க நிறுவனங்கள் கூட ஊக்கமின்றி செயல்படக்கூடும்.
ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள எம்முடைய ஏற்றுமதித் துறைகளுக்கு இது மிகப் பெரிய பின்னடைவாகும்.
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) கடுமையாக பாதிக்கப்படக்கூடும்.
• பொருளாதாரத்திலும் நாணய மதிப்பிலும் தாக்கம்: இறக்குமதி செலவுகள் அதிகரிக்கும் போதே, கொடுப்பனவுகளின் இருப்பில் (Balance of Payments) மேலும் அழுத்தம் உருவாகும். இது:
• ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி,
• பணவீக்க வளர்ச்சி,
• இலங்கை மத்திய வங்கிக்கு மீண்டும் அட்டவணை மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம்
போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
ஈரான் – இஸ்ரேல் போர் என்பது இலங்கைக்கு தொலைவிலுள்ள ஒரு வெளிநாட்டு சிக்கலாக தோன்றலாம். ஆனால், இப்போரினால் ஏற்படப்போகும் பொருளாதாரத் தாக்கம் நம் நாட்டின் நிதிசார்ந்த அனைத்து அடுக்குகளிலும் ஆழமாக களையிருக்கும். எனவே, இப்போதே நம் அரசாங்கம் எரிபொருள் பாதுகாப்பு உத்தியோகபூர்வ திட்டங்களை தீட்ட வேண்டும். மாற்று சக்தி மூலோபாயங்களை விரைவாக முன்னெடுக்க வேண்டும். மற்றும் நவீன எண்ணெய் வாங்கும் ஒப்பந்தங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது போல உள்ளூர் கொள்கை முடிவுகள் இல்லாமல் இருந்தால், இந்த சர்வதேச நெருக்கடி இலங்கை மக்களின் நாளைய வாழ்க்கையை இன்னும் கடினமாக்கும்.
• தகுந்த வெளிநாட்டு நாணயக் கொள்கை - உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான நாணயங்களை நாடுவதால் அமெரிக்க டொலர் பலமாகி வருகின்றது. இது இலங்கை ரூபாயை மேலும் பாதிக்கக்கூடும். ஏற்கெனவே கடன் செலுத்தல், இறக்குமைச் சார்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய வங்கி சிக்கனமான பரிமாற்றக் கொள்கையை பின்பற்ற வேண்டியுள்ளது.
• சர்வதேச வர்த்தக பாதைகள் பாதிப்பு - வணிக கப்பல் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்படுவதால் கப்பல் காப்பீட்டுத் துறைகள் விலை உயர்த்தியுள்ளன. இது இறக்குமதி செலவுகளை மேலும் உயர்த்தும். இலங்கைக்கு இது ஒரு சவாலும் வாய்ப்புமானது. மத்திய கிழக்கு துறைமுகங்கள் பாதிக்கப்பட்டால், கொழும்பு துறைமுகம் மாற்றுப் போக்குவரத்துக்குத் தளமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது.
1. Brent Crude எண்ணெய் விலை மாற்றங்கள் (2020–2025)
2. இலங்கை ரூபாய் மற்றும் அமெரிக்க டொலர் பரிமாற்ற விகிதம்
3. கொழும்பு பங்கு சந்தை (ASPI) குறியீட்டு நிலை
மூலதன சந்தை மற்றும் முதலீட்டாளர்களின் பதில்கள்
• உலகளாவிய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்தைக் கண்டன.
• டெல் அவிவ் பங்குச் சந்தை சரிந்தது மற்றும் மத்திய கிழக்கு இறையாண்மை பத்திரங்கள் கூர்மையான வருமான ஏற்ற இறக்கங்களைக் கண்டன.
• இலங்கையின் கொழும்பு பங்கு சந்தை கலந்த மதிப்பீடு காட்டியுள்ளது
o எரிசக்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பங்குகள் உயர்ந்துள்ளன.
o ஆனால் சுற்றுலா, விமானப் போக்குவரத்து மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
• இந்தியா-மத்திய கிழக்கு இடையிலான முதலீடுகளையும் தாமதப்படுத்தும் அபாயம் உள்ளது. இலங்கையின் "இந்தியப் பெருங்கடல் தளவாட மையம்" என்ற கனவுகளும் இந்த சூழ்நிலையால் பாதிக்கப்படலாம்.
பாதிக்கப்படும் இலங்கைத் துறைகள்
• சுற்றுலா: மத்திய கிழக்கு நாட்டுப் பயணிகள், ஹஜ் போன்ற தீர்த்தயாத்திரைகளுக்கான பயணிகள் குறைவாக இருக்கலாம்.
• ஆடையியல் துறை: மேற்கு நாடுகளின் நுகர்வோர் செலவுகள் குறைவதன் காரணமாக, இலங்கை உற்பத்தி ஏற்றுமதி குறைவடையும் அபாயம் உள்ளது.
• கட்டடப்பணிகள்: கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வதால், தற்போதைய திட்டங்கள் தாமதிக்கலாம்.
இக்கட்டான சூழலில் உள்ள வாய்ப்புகள்
• தேயிலை மற்றும் வேளாண்மை ஏற்றுமதி: உலகளவில் பிற ஏற்றுமதி நாடுகள் பாதிக்கப்படும்போது, இலங்கை வேளாண்மை ஏற்றுமதிக்குப் புதிய சந்தைகள் உருவாகலாம்.
• புதிய ஆற்றல் முயற்சிகள்: இந்தச் சூழல் இலங்கைக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் முதலீடு செய்ய உந்துதல் அளிக்கின்றது.
• வெளிநாட்டுப் பணம் அனுப்புதல்கள்: எண்ணெய் விலை உயர்வால், வளைகுடா நாடுகளின் வருமானம் உயரும். இதனால் இலங்கை வேலைத் தொழிலாளர்கள் அனுப்பும் பணப்பரிவர்த்தனை உயரும் வாய்ப்பு உள்ளது.
அரசியல் மற்றும் பொருளாதார பரிந்துரைகள்
1. எரிபொருள் கையிருப்பு மேம்பாடு: இந்தியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுடன் இணைந்து எண்ணெய் கையிருப்புகளை உருவாக்க வேண்டும்.
2. இராஜதந்திர முயற்சிகள்: சார்க் மற்றும் பிம்ஸ்டெக் வழியாக இலங்கை தன்னிச்சையான நாட்டு என்ற அந்தஸ்தைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும்.
3. இறக்குமதி பல்துறைபடுத்தல்: மத்திய கிழக்கு நாடுகளை மட்டுமல்லாது, இந்தியா, ரஷ்யா, ஆபிரிக்கா போன்ற பிற நாடுகளிடமிருந்தும் எண்ணெய் இறக்குமதி முயற்சிகள் செய்ய வேண்டும்.
4. வெளிநாட்டு நாணயக் கண்காணிப்பு: மத்திய வங்கி ரூபாயை பாதுகாப்பதற்கான திடமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
5. மையக் கடல்சார் உட்கட்டமைப்பு வளர்ச்சி: கொழும்பு துறைமுகம் ஒரு மாற்று ‘லொஜிஸ்டிக் ஹப்’ ஆக செயல்பட புதிய முதலீடுகளை ஈர்க்க முயல வேண்டும்.
“மேம்படுத்த வேண்டிய பரிந்துரைகள்”
ஈரான்–இஸ்ரேல் போர் தீவிரமடைதலின் பொருளாதார தாக்கங்களை அதிகமாக உணர்ந்த இலங்கை, தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு உயர் நிலை நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டியுள்ளது. உலகளாவிய பங்கு சந்தைகளில் நிலவும் மாற்றங்கள், தாக்கங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக் குறைவு, இலங்கையின் பங்குச் சந்தையை நேரடியாக பாதிக்கக்கூடியது. இதனுடன், எரிபொருள் மற்றும் உற்பத்திச் செலவுகள் உயர்வதால், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) கடுமையாக சிக்கிக்கொள்ளும் அபாயத்தில் உள்ளன.
இவர்களுக்கென குறுகிய கால வட்டியில்லா கடன்கள், நிவாரண திட்டங்கள், மற்றும் உள்கட்டமைப்புச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். வெளிநாட்டு பரிமாற்ற விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க, முன்னோக்கிய பரிமாற்ற ஒப்பந்தங்கள் மற்றும் நிதி அபாய முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வுகள் வணிகர்களுக்கிடையே விரிவாக அறிவு ஊட்டப்பட வேண்டும். இதோடு, நாட்டின் ஆற்றல் தன்னிறைவுக்கு வழிவகுக்கும் உள்ளூர் சூரிய ஆற்றல் போன்ற மாற்றுத்திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும். இறக்குமதி மாற்று திட்டத்தின் மூலமாக எண்ணெய் சார்ந்த பொருட்களில் பெருமளவில் தங்கி இருக்காமல் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கக் கூடிய உத்தியோகபூர்வத் தீர்வுகள் அரசாங்கம் வகுப்பது அவசியமாகியுள்ளது.
மேலும், இலங்கை தனது அரசியல் நடுநிலைமையை வலுப்படுத்தி, சர்வதேச சமாதான முயற்சிகளில் ஒரு நிர்பந்தமற்ற ஒத்துழைப்பு நாடாக தன்னை நிலைநிறுத்த வேண்டும். இது உலக நாடுகளிடமிருந்து நம்பிக்கையையும் பொருளாதார ஒத்துழைப்புகளையும் ஈர்க்கும். அத்துடன், இந்தப் போர் சுருக்கமான ஒரு மோதல் அல்ல, இது நீண்ட காலமான நிலையான அச்சுறுத்தலாக மாறும் என்பதை உணர்ந்து, இலங்கை தனது தேசிய நிதிக்கொள்கை, பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் வணிக உத்திகளை மறுசீரமைக்க வேண்டியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் போரின் தீவிரமடைதல் வெறும் மத்திய கிழக்கு பிரச்சினை அல்ல. இது உலகளாவிய பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் பரவலாகப் பாதிக்கும். இலங்கை இன்று இந்த அதிர்வுகளை உணர ஆரம்பித்துள்ளது. இருப்பினும், திறந்த பார்வையும், வினைத்திறன் மிக்க அரசாங்க நடவடிக்கைகளும், சரியான முதலீடுகளும் இருந்தால் இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக மாற்றவும் இலங்கைக்கு முடியும். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment