இலங்கைச் செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு 

இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையே வீசா விலக்களிப்பு ஒப்பந்தம்

சுற்றுலா வளர்ச்சிக்கு “Pekoe Trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்

யாழில் 14 ஆவது வர்த்தக கண்காட்சி

அனுபவமில்லாத ஒருவரை ஜனாதிபதியாக நியமித்து நாட்டை மீள ஆபத்துக்குள் தள்ள முடியாது

வடக்கிற்கு செல்லும் 73,000 புத்தகங்கள் அதில் எனது புத்தகமும்!



இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு 

- எம்.ஏ. சுமந்திரனை விட 47 வாக்குகள் பெற்று வெற்றி

January 21, 2024 1:52 pm 0 comment

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 321 பேர் வாக்களித்தனர்.

தலைவர் பதவிக்காக போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு 184 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு 137 வாக்குகளும் அளிக்கப்பட்டது.புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

பிரபாகரன் டிலக்‌ஷன் – யாழ்ப்பாணம் - நன்றி தினகரன்




இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையே வீசா விலக்களிப்பு ஒப்பந்தம்

– பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம்

January 20, 2024 4:24 pm 

– இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு எத்தியோப்பியா பிரதமர் வாழ்த்து

அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் நேற்று (19) உகண்டாவின் கம்பாலா நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதாவிற்கும் (Mariam Chabi Talata) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையில் 2012 இல் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து தலைவர்கள் கலந்துரையாடினர்.

மேலும், பருத்தி ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள பெனின் குடியரசு, பருத்தித் தொழிலில் முதலீடு செய்வதற்கான இலங்கையின் ஆடைத் துறைக்கான வாய்ப்புகளை சுட்டிக்காட்டிய பெனின் உப ஜனாதிபதி, அதற்காக இலங்கை முதலீட்டாளர்களை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு வீசா விலக்கு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கைக்கும் பெனின் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இரு நாடுகளின் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன் வீசா பெறாமலேயே முப்பது (30) நாட்கள் வரை நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கும் தங்கியிருப்பதற்கும் இந்த ஒப்பந்தம் மூலம் வசதிகள் வழங்கப்படுகின்றன.

இலங்கைக்கான வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் பெனின் குடியரசு சார்பாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் (Olushegun Adjadi Bakari ) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இலங்கை – பெனின் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய பரிமாணத்திற்கு கொண்டு வருவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் உருவாக்கப்படக்கூடிய புதிய பொருளாதார வாய்ப்புகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெனின் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட்க்கும் (Abiy Ahmed) இடையிலான சந்திப்பொன்றும் நேற்று இடம்பெற்றது.

இலங்கையின் விரைவான பொருளாதார மீட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய தலைமைத்துவதற்கு வாழ்த்து தெரிவித்த எத்தியோப்பிய பிரதமர், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, விவசாயம் மற்றும் ஆடைத் தொழில்துறை உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதுடன் புதிய முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.


நன்றி தினகரன்   






சுற்றுலா வளர்ச்சிக்கு “Pekoe Trail” திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும்

- சுமார் 300 கிலோமீட்டர் தூர சுற்றுலாப் பாதையை அமைக்க எதிர்பார்ப்பு

January 20, 2024 2:35 pm 

– நிலவும் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்வு பெறுங்கள்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள “Pekoe Trail” திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

“Pekoe Trail” திட்டத்தின் கீழ், சுமார் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றுலாப் பாதை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இத்திட்டம் உலகளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளதாகவும், இலங்கையின் தேயிலை தொழில்துறையின் வளர்ச்சிக்கு இது பெரும் உறுதுணையாக அமையும் எனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட Pekoe Trail குழு விளக்கமளித்தது.

இலங்கையை இதுவரை சுற்றுலாத் தலமாகக் கருதாத சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு இத்திட்டம் உதவும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இங்கு உரையாற்றிய சாகல ரத்நாயக்க, இலங்கைக்கு மிகவும் முக்கிய திட்டமான இந்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே இத்திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் எனவும் இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமானது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

அதற்கிணங்க, இத்திட்டம் தொடர்பில் பிரதேச தோட்டக் கம்பனிகள் மற்றும் ஏனைய துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அரச பெருந்தோட்டம், தொழில்முயற்சி மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் எம். எம். எஸ். எஸ். பி யாலேகம, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், Pekoe Trail குழு உறுப்பினர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 





யாழில் 14 ஆவது வர்த்தக கண்காட்சி

January 19, 2024 1:02 pm 

யாழில் 14 ஆவது சர்வதேச வர்த்தக சந்தை இன்று (19) ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் காலை 10:30 மணிக்கு ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி நாளைய மறுதினம் (21) வரை நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கெங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தினர், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். விசேட நிருபர் - நன்றி தினகரன் 





அனுபவமில்லாத ஒருவரை ஜனாதிபதியாக நியமித்து நாட்டை மீள ஆபத்துக்குள் தள்ள முடியாது

January 19, 2024 8:53 am 0 comment

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

 அனுபவமில்லாத ஒருவரை ஜனாதிபதியாக நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்துக்குள் தள்ள முடியாது என ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு, நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவது சிறந்தது என்பதே தமது தனிப்பட்ட நம்பிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரபல தொழிலதிபரான தம்மிக்க பெரேரா ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாக அவரே தெரிவித்து வருவதாகவும், அது தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பொதுஜன பெரமுன கட்சியானது பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவுடன் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்தவித இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான பேச்சுவார்த்தை அவருடன் நடத்தப்பட்டதாகவும் நான் அறியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் 





வடக்கிற்கு செல்லும் 73,000 புத்தகங்கள் அதில் எனது புத்தகமும்!

இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவுயிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள்...

January 18, 2024 5:35 pm 

இலங்கை விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவையிட்டு யாழில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன…

அந்த வகையில்,

– 73 பாடசாலைகள் புனர்நிர்மாணம்
– 73,000 புத்தகங்கள் நன்கொடை
– 73,000 மரக்கன்றுகள் நடுகை

போன்ற திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

73,000 புத்தகங்கள் நன்கொடை திட்டத்தில், நீங்களும் வடபுல மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கலாம்…   நன்றி தினகரன் 






No comments: