இதய வீணை - - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 1972ம் வருடம் எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த படங்களுள்


திருப்புமுனையாக அமைந்த படம் இதய வீணை.இந்த படத்தின் துவக்கவிழாவில் கலந்து கொண்டு படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தவர் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆவர்.அவர் தலைமை தாங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தில் எம் ஜி ஆர் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தார்.ஆனால் இதய வீணை படம் 72ன் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் திகதி வெளிவந்த போது எம் ஜி ஆர் தி மு காவில் இருந்து விலக்கப்பட்டு , அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார்.


இவ்வாறான அரசியல் சூறாவளிக்கு மத்தியிலேயே இதய வீணை

படம் வெளியானது . படத்தை தயாரித்தவர்களுள் ஒருவர் ஆனந்த விகடன் வார இதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய எழுத்தாளர் மணியன்.இவர் விகடனில் எழுதிய பல தொடர் கதைகள் வாசகர்களின் வரவேற்பை பெற்றது.அதே போல் இவர் எழுதிய வெளிநாட்டு பயணக் கதைகளும் வாசகர்களின் ஆதரவை ஈட்டியது . எம் ஜி ஆர் தனது சொந்த படமான உலகம் சுற்றும் வாலிபனை ஜப்பானில் படமாக்கிய போது அங்கு படப்பிடிப்புக்கான பல வசதிகளை செய்து உதவியவர் மணியன்.இதனால் எம் ஜி ஆருக்கு நெருக்கமானவர் ஆனார்.அதே போல் வசனகர்த்தாவாகவும்,கவிஞராகவும்,ஜோசியராகவும் விளங்கிய விளங்கியவர் வித்துவான் வே லட்சுமணன்.இவரும் எம் ஜி ஆருக்கு மிக நெருக்கமானவர்.இவர்கள் இருவருக்கும் உதவ வேண்டும் என்ற நல் எண்ணத்தில் எம் ஜி ஆர் அவர்களை படத் தயாரிப்பாளர் ஆக்கி,அவர்களின் படத்தில் நடிக்கவும் செய்தார்.மணியன் விகடனில் எழுதிய நாவலே இதய வீணை என்ற பேரில் படமானது.


சிறு வயதிலேயே பெற்றோரால் வீட்டை விட்டு துரத்தப் படும் சுந்தரம் எப்படியோ காஷ்மீர் சென்று வழிகாட்டி ஆகிறான்.அங்கு சுற்றுலா வரும் கல்லூரி மாணவிகள் மத்தியில் தன் தங்கையை சந்திக்கும் அவன் தான் யார் எண்டு சொல்லாமலே அன்பை பொழிகிறான்.மாணவிகளுடன் சென்னை திரும்பும் சுந்தரம் தன் தங்கை நளினி இங்ஜினியர் கிரியை காதலிப்பதை அறிந்து அவர்களின் திருமணத்துக்கு உதவுகிறான்.நளினியின் சினேகிதி விமலாவுக்கும் அவனுக்கும் இடையே காதல் அரும்புகிறது.ஆனால் இடையில் ஏற்படும் சம்பவங்கள் சுந்தரம் நளினி வாழ்வில் புயலை கிளப்புகிறது.சுந்தரம் அவற்றை எவ்வாறு சமாளித்தான் என்பதே மீதி கதை.

மணியன் எழுதிய கதைக்கு சொர்ணம் வசனங்களை

எழுதினார்.இமயத்தின் அழகை கேளுங்க சொல்லுகிறேன்,ஆனால் இதயத்தின் அழுகையை மட்டும் கேட்காதீங்க,பொய் பல்லக்கில் வருது,உண்மை கால் உடைந்து கிடக்குது போன்ற வசனங்களில் அவரில் பேனா பளிச்சிட்டது .படத்தின் பாடல்களை வாலி,புலமைப்பித்தன் இருவரும் எழுதினார்கள்.காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்,ஆனந்தம் இன்று ஆரம்பம்,திருநிறைச்செல்வி மங்கையற்கரசி ,பொன் அந்தி மாலை பொழுது ஆகிய பாடல்கள் பெரும் ஹிட்டானது.படத்துக்கு எம் எஸ் வி அல்லது கே வி மகாதேவன் இசையமைக்கவில்லை.அவர்களுக்கு பதிலாக சங்கர் கணேஷ் இருவரும் இசையமைத்தனர்.இறுதி சண்டைக்கு காட்சியின் பின்னணி இசையாக வீணையை பயன்படுத்தி தூள் பரப்பியிருந்தனர்.சங்கர் கணேஷ் இருவருக்கும் இதய வீணை புகழை தந்த படமாக அமைந்தது.

எம் ஜி அருக்கு ஜோடி மஞ்சுளா.அழகு பதுமையாக வருகிறார்.அவருக்கும் சேர்த்து நளினிக்கியாக வரும் லட்சுமி நடிக்கிறார்!இவருக்கு ஜோடி சிவகுமார்.உருவத்திலும்,நடிப்பிலும் முதிர்ச்சி தெரிந்தது.நம்பியார் தான் வில்லன் ஆனால் வழக்கமான நடிப்பு.இவர்களுடன் மனோகர்,ஜி சகுந்தலா,சி ஐ டி சகுந்தலா,தேங்காய் சீனிவாசன்,ஐசரி வேலன்,பூர்ணம் விஸ்வநாதன்,சச்சு,ஆகியோரும் நடித்தனர்.

திரையுலகை விட்டு பத்தாண்டுகளுக்கு மேலாக விலகியிருந்த எம் ஜி ஆரின் அண்ணண் எம் ஜீ சக்கரபாணி இந்த படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு மறு பிரவேசம் செய்தார்.


படத் தொகுப்பை எம் உமாநாத் கவனித்தார்.சண்டை காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.ஏ சண்முகத்தின் ஒளிப்பதிவு கஷ்மீர் அழகை அள்ளி வழங்கியிருந்தது.கிருஷ்ணன் பஞ்சு இருவரும் படத்தை தொய்வின்றி டைரக்ட் செய்திருந்தனர்.72ம் ஆண்டு அரசியல் சலசலப்புக்கு மத்தியில் வெளியான பிள்ளையா பிள்ளை,இதய வீணை இரண்டு படங்களையும் இயக்கி அவற்றை வெற்றி படமாக்கிய பெருமை அவர்களை சார்ந்தது.

புதுக் கட்சி தொடங்கிய எம் ஜி ஆருக்கு ரசிகர்,மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை அளக்கும் விதமாக வெளிவந்த இதய வீணை வெற்றி படமாகி எம் ஜி ஆரின் மக்கள் செல்வாக்கையும் நிரூபித்தது!


No comments: