ஸ்வீட் சிக்ஸ்டி 10 - சாரதா- - - ச சுந்தரதாஸ்

 .

கணவன்,மனைவி இடையிலான தாம்பத்திய உறவை அடிப்படையாகக் கொண்டு தமிழில் ஒரு சில படங்களே வந்துள்ளன.அப்படி வந்த படங்களுக்கு முன்னோடியாக அமைத்த படம் என்று சாரதா படத்தை சொல்லலாம்.1962ல் வெளிவந்த இந்த படம் வழமையான தமிழ் படங்களில் இருந்து வேறுபட்டு சர்ச்சைக்குரிய கதையுடன்,ரசிகர்களின் ரசனையை எடை போடும் விதத்தில் அமைந்திருந்தது.


பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி தனக்கு கல்வி கற்பிக்கும் பேராசிரியர் திருஞானசம்பந்தத்தை திருமணம் செய்து கொள்கிறாள் பணக்கார பெண்ணான சாரதா.சுமுகமாக போகும் இல்வாழ்வில் எதிர்பாராத இடர் ஏற்படுகிறது.விபத்து ஒன்றில் சிக்கிக் கொள்ளும் சம்பந்தம் அதிலிருந்து உயிர் பிழைக்கிறான்.ஆனால் இனி மேல் தாம்பத்திய உறவில் அவன் ஈடுபடுவது அவனின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.இதனை உணர்ந்து தன் ஆசைகளை அடக்கிக் கொண்டு அவனிடம் இருந்து விலகி நிற்கிறாள் சாரதா.ஆனால் உண்மை அறியாமல் சம்பந்தம் அவளுடன் உறவு கொள்ள துடிக்கிறான்.பின்னர் உண்மை தெரிந்வுடன் சாரதாவுக்காக துடிக்கிறான்.துணிந்து ஓர் முடிவும் எடுக்கிறான்.

இப்படி அமைந்த கதையை எழுதிய கே எஸ் கோபாலகிருஷ்ணன் அதனை படத் தயாரிப்பாளரான ஏ எல் சீனிவாசனிடம் கூறினார்.அவருக்கு கதை பிடித்து விட்டது.ஆனால் அவரின் நண்பர்கள் சிலர் இந்த கதையை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்,இது விஷப் பரீட்சை என்று கூறி தடுத்தார்கள்.எம் ஜீ ஆரின் திருடாதே படத்தைத் தயாரித்து வெற்றி கண்டிருந்த ஏ எல் எஸ் அசரவில்லை.கே எஸ் ஜி சொன்ன கதையையே படமாக்கத் துணிதார். அதுமட்டுமன்றி கதையையும் வசனங்களையும் எழுதிய கே எஸ் ஜியையே படத்தின் இயக்குனராகவும் முதல்தடவையாக துணிந்து அறிமுகம் செய்தார்.

கவிஞர் கண்ணதாசனின் அண்ணனான ஏ எல் சீனிவாசன் கொடுத்த வாய்ப்பு கே எஸ் கோபாலக்கிருஷ்ணனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.அதன் பின் பல ஆண்டுகளாக அவர் பிரபல இயக்குநராகத் திகழ்ந்தார்.இயக்குனர் திலகம் என்ற பட்டமுமும் அவரை வந்தடைந்தது.




இப்படி உருவான சாரதா படத்தில் சம்பந்தமாக இலட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் நடித்தார்.அவரின் துணைவியான விஜயகுமாரி சாரதாவாக நடித்தார்.இருவரும் கதா பாத்திரத்துடன் ஒன்றிப் போய் உணர்ச்சிகரமாக நடித்திருந்தனர்.குறிப்பாக தாம்பத்ய உறவில் ஏற்றப்பட்ட சிக்கல் காரணமாக ஏற்படும் தவிப்பு,தாபம் என்பனவற்றை தங்கள் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்கள்.அதே சமயம் விரசம் இல்லாமல் காட்சிகளை அமைத்து கதா பாத்திரத்தின் தன்மை கெடாமல் டைரக்ட் செய்திருந்தார் கே எஸ் ஜி.

ஆனாலும் படத்தில் தங்கள் நடிப்பின் மூலம் முத்திரை பதித்தவர்கள் இன்னும் இருவர்.சாரதாவின் தந்தையாக வரும் எஸ் வி ரங்காராவும்,கல்லூரி முதல்வராக வரும் நாகையாவும் போட்டி போட்டு நடித்திருந்தனர்.ரங்காராவ் ஆத்திரப்படும் போதெல்லாம் மிக சாந்தமாக நாகையா அவரை சமாதானப் படுத்துவது அற்புதம்.அவர்கள் வரும் காட்சிகள் எல்லாம் அருமை.படத்தில் எம் ஆர் ராதாவுக்கு வழமையான வேடம்.தன் பாணியில் அதனை செய்திருந்தார்.படம் முழுவது அசோகன் சோகமாகவே வருகிறார்.அவருக்கு கிடைத்த பாத்திரம் அப்படி! இவர்களுடன் எம் வி ராஜம்மா,எஸ் வி சகஸ்ரநாமம்,புஷ்பலதா,எஸ் ராமராவ்,சந்தியா ஆகியோரும் நடித்திருந்தனர்.


அண்ணண் எடுத்த படத்தில் தம்பி எழுதிய பாடல்கள் சோடை போகுமா.ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ற பாடல் கண்ணதாசனின் கவிவளத்தை காட்டியது என்றால்,அதை படமாக்கிய விதம் ஒளி பதிவாளர் எம் கர்ணனின் திறமையைக் காட்டியது.கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்து முதல் முறையாக பஞ்சு அருணாசம் எழுதிய மணமகளே மருமகளே வா வா உன் வலது காலை எடுத்து வைத்து வா வா பாடல் 60 ஆண்டுகள் கழித்தும் திருமணங்களில் ஒலிக்கிறது.கே வி மகாதேவன் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி அமைந்தன.

சாரதா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மெஜெஸ்டிக் ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுத்த ஏ எல் சீனிவாசன் அதற்கு சாரதா ஸ்டூடியோ என்று பெயர் சூட்டினார்.டைரெக்ட் செய்த முதல் படத்திலேயே வெற்றி பெற்ற கே எஸ் கோபாலக்கிருஷ்ணன் பின்னர் பல வெற்றி படங்களை இயக்கி ஸ்டூடியோ அதிபருமானார்.

பிரபல நாவலாசிரியர் அகிலன் எழுதிய சினேகிதி என்ற நாவலின் சாயல் சாரதாவின்கதையில் உள்ளது என்று சொல்லப்பட்ட போதும் சாரதா பின்னர் ஹிந்தியிலும்தெலுங்கிலும்,கன்னடத்திலும் படமாக்கப்பட்டது.60 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த புதுமை சித்திரம் சாரதா.




No comments: