இலங்கைச் செய்திகள்

 தமிழர்கள் பேரம் பேச வேண்டிய தருணம் இதுவே

பசில் ராஜபக்ஷ கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

ஒற்றுமை, புரிந்துணர்வுடன் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும்

நெருக்கடி சூழல் கடந்து செல்ல ஒன்றிணைவோம்

வளமான எதிர்காலத்துக்கு புது வருடம் வழி வகுக்கட்டும்

 நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்



தமிழர்கள் பேரம் பேச வேண்டிய தருணம் இதுவே

- காணாமல் போனவர்களின் உறவுகள்

பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

தமிழ்புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் அவர்களால் நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

Missing Persons-Vavuniya-Sri Lanka

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்கள், சிங்கள இளைஞர்களின் புரட்சியின் மீது கொண்ட காதல், தமிழர்களுக்கு எந்த விடிவையும் கொண்டு வராது. அது தமிழர்களின் துன்பங்களை ஒழிக்காது, ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும்.

"கொழும்பில் ஒற்றுமை" என்ற பெயரில், இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்களில் இருந்து விடுபடுவதற்கு சிங்கள சிந்தனைக் குழுவின் உத்தியாக கூட இது இருக்கலாம். வடக்கு கிழக்கில் எந்தவொரு தமிழர்களும் அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதார ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை இன்று பலவீனமாக உள்ளது, உணவுஇல்லை, பணம்இல்லை, பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இது மற்ற நாடுகளுக்கு சந்தைப்பங்கை இழக்கிறது. இலங்கையால் வெளிநாட்டு கடனை செலுத்த முடியவில்லை. இலங்கையின் எதிர்காலம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற பணக்கார நாடுகளில் தங்கியுள்ளது.

எனவே தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் பொது வாக்கெடுப்பு அல்லது சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி இந்த நாடுகளிடம் கேட்க வேண்டும். தமிழர்களுக்கான நிரந்தரத்தீர்வை எட்டுவதற்கு, இந்த நாடுகள் இலங்கையுடன் பேரம்பேச இதுவே சிறந்த தருணம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

அல்லது அவர்களின் எம்.பி. பதவிகளை இராஜினாமா செய்வதற்கான கிளர்ச்சியை முன்னெடுத்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுடன் தமிழர்கள் சார்பில் வாதாடக்கூடிய சில புதிய துணிச்சலான இளைஞர்களை கொண்டுவர வேண்டும்.

ஓமந்தை விஷேட நிருபர்  - நன்றி  தினகரன் 






பசில் ராஜபக்ஷ கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக் சுகவீனமுற்று, நாரஹேன்பிட்டியில் உள்ள லங்கா ஹொஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் எம்.பியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சகோதரருமான, பசில் ராஜபக்ஷவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    நன்றி தினகரன் 






ஒற்றுமை, புரிந்துணர்வுடன் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும்

புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார மற்றும் உலகளாவிய நெருக்கடியான நிலைமையில், வரலாற்றில் மிகப் பெரிய சவாலை இலங்கையர்களாகிய நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒற்றுமையுடனும், சரியான புரிந்துணர்வுடனும் நாம் அதனை வெற்றிகொள்ள வேண்டும். சவால்களுக்கு முகம் கொடுப்பதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஏராளம். எமது அரசாங்கத்தின் மூலம் தற்போதைய நெருக்கடியான நிலையிலிருந்து மக்களின் இயல்பு வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது பதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ், சிங்கள புத்தாண்டுப் பிறப்பை புதிய எதிர்பார்ப்புகளுடன் வரவேற்பது பழங்காலத்திலிருந்தே இடம்பெறும் நமது பாரம்பரியமாகும். இந்த ஆண்டும் அந்த எதிர்பார்ப்புகளுடனும், புதிய நம்பிக்கைகளுடனும் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறோம்.

புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு. குழந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியைப் பாதுகாத்துக் கொடுப்பதில் நீங்கள் அதிக அக்கறை செலுத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

அதேபோன்று, புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுபவிப்பதற்காக தமது பிள்ளைகளுடன் இணைவதற்கான வாய்ப்பை இழந்த, விசேட கடமைகளில் ஈடுபட்டு இருப்பவர்களைப் போன்று, வெளிநாடுகளிலிருக்கும் அனைவரினதும் அர்ப்பணிப்பை நினைவுகூருகிறேன்.

மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ், சிங்கள புத்தாண்டுப் பிறப்பை புதிய எதிர்பார்ப்புகளுடன் வரவேற்பது பழங்காலத்திலிருந்தே இடம்பெறும் நமது பாரம்பரியமாகும். இந்த ஆண்டும் அந்த எதிர்பார்ப்புகளுடனும், புதிய நம்பிக்கைகளுடனும் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாடுகிறோம்.

புத்தாண்டின் உண்மையான உரிமை நமது குழந்தைகளுக்கே உண்டு. குழந்தைகளுக்கு புத்தாண்டு தினத்தின் மகிழ்ச்சியைப் பாதுகாத்துக் கொடுப்பதில் நீங்கள் அதிக அக்கறை செலுத்துகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

அதேபோன்று, புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுபவிப்பதற்காக தமது பிள்ளைகளுடன் இணைவதற்கான வாய்ப்பை இழந்து, விசேட கடமைகளில் ஈடுபட்டு இருப்பவர்களைப் போன்று, வெளிநாடுகளிலிருக்கும் அனைவரினதும் அர்ப்பணிப்பை நினைவுகூருகிறேன்.

மலர்ந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன் என்றும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.     நன்றி தினகரன் 





நெருக்கடி சூழல் கடந்து செல்ல ஒன்றிணைவோம்

 Thursday, April 14, 2022 - 6:00am

பிரதமர் மஹிந்த புதுவருட வாழ்த்து

 புதிதாக பிறக்கும் இத் தமிழ் சிங்கள புத்தாண்டில் நம் நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாகக் கொள்வதே அனைவரது எதிர்பார்ப்பாகும். நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையரின் தொன்மைமிகு பாரம்பரியமான தமிழ், -சிங்கள புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

துன்பத்தை வென்று மகிழ்ச்சியையடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ்-சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும்.

விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று சமூக-கலாசார மதிப்புகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றுமொரு தலைமுறைக்கு கடத்தும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தமிழ் சிங்கள ஆதிக்குடிகளின் தொன்மைவாய்ந்த மரபுகளை நினைவுபடுத்துகிறது.

இந்தச் சவால் மிகுந்த காலகட்டத்தில் எதிர்பாராத விதமாக நாம் அனைவரும் முகம் கொடுத்த, கொடுத்து வரும் துன்பங்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு தேவையான எதிர்கால திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே செயற்படுத்தி வருகின்றது.

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இப்புத்தாண்டு அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.     நன்றி தினகரன் 






வளமான எதிர்காலத்துக்கு புது வருடம் வழி வகுக்கட்டும்

புதுவருட செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழல் முடிவுற்று, வளமான அமைதியான, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாளைய நாள் பிறந்து, கனவுகள் நனவாக பிரார்த்திக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  அவர் வெ ளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யுகத்தில் மாபெரும் கலாசார நிகழ்வாக கருதப்படும் தமிழ், சிங்கள புத்தாண்டு அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சுபீட்சமான புத்தாண்டாக அமைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூரிய பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு செல்வதே சிங்கள, தமிழ் புத்தாண்டு பிறப்பாக கருதப்படுகிறது. சிங்கள மக்களைப் போன்று தமிழ் மக்களின் பாரம்பரிய சூரிய நாட்காட்டியின் முதல் நாள் உதயமாகுவது ஏப்ரல் மாதத்திலாகும். இரு வேறு மதங்களை உருவாக்கிக் கொண்ட இரு இனத்தவர்கள் ஒன்றோடு ஒன்றாக கொண்டாடும் அபூர்வமான கொண்டாட்டமாக சிங்கள, தமிழ் புத்தாண்டை அடையாளப்படுத்த முடியும்.

இந்நாட்டு மக்கள் சித்தரை மாதத்தை சுபீட்சமான மாதமாக கருதுகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மக்கள் நீண்டகாலமாக வெகு விமர்சையாக சிங்கள, தமிழ் புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

இருப்பினும், கடந்த இரு வருடங்களுக்கு முன்பிருந்து, எங்கள் நாட்டில் தமிழ், சிங்கள புத்தாண்டு பிறந்தது பூமியின் குரலில் அல்ல. மாறாக, கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என்ற அறிவுறுத்தல்களின் குரலிலேயே பிறந்தது.செழிப்பு நிறைந்த பாடத்தை கற்றுத்தரும் சிறப்பான புத்தாண்டு, இம்முறை, எங்கள் குடிமக்களை சுத்தமான உணவை சமைக்கும் தயக்கத்துக்குள் தள்ளிவிட்டே பிறந்துள்ளது.

பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மிக ஆபத்தான நிலைக்கு முழு நாடு தள்ளப்பட்டுள்ள நிலையில், எங்களுடைய மக்களின் சாதாரண வாழ்க்கைத்தரம் அசாதாரண முறையில் சவாலுக்குள்ளாகியுள்ளது.

தன்னிறைவுப் பொருளாதாரம் நிறைந்த நாடாக இருந்த எங்கள் நாடு, இன்று கண்ணீர் சிந்தும் தேசமாக மாறியுள்ளதுடன், முழு குடும்பமும் மகிழ்ச்சியாக, அமைதியாக மற்றும் நிம்மதியாகவும் புத்தாண்டை கொண்டாடும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளது.ஒருபுறம் மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் அலைக்கழிக்கப்படுவதுடன், மறு பக்கத்தில் இந்நாட்டு இளைய தலைமுறையினர் வீதிக்கு இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அண்மைகால வரலாற்றில் நாடாக நாம் எதிர்கொள்ளும் மிக மோசமான சூழ்நிலையின் விளிம்பிற்கு நாம் வந்துள்ளதுடன், நல்லதொரு எதிர்கால தலைமுறையினரின் கனவை நனவாக்கும் நோக்கில் எங்கள் நாட்டு மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். காலத்துக்கு காலம் பரிணமித்த மனித நாகரீகம், கலாசாரம் என்பன மனிதனை முழுமைப்படுத்தியுள்ளதுடன், அவர்களின் தேசியத்திற்கு உரித்தான கலாசார கொண்டாட்டங்களின் ஊடாக, அவர்களை நேர்மையான பாதையில் அழைத்துச் செல்கிறது. சிங்கள, தமிழ் புத்தாண்டும் இவ்வாறான பெறுமதியான விழுமியங்கள் நிறைந்த நிகழ்வாக திகழ்கிறது.

மகத்தான தியாகங்களை செய்த மக்களை மீண்டும் மீண்டும் தியாகம் செய்ய கூறுவதை விட, நடைமுறையில் ஆட்சியாளர்கள் அந்த செயற்பாட்டை முன்னெடுப்பது மிக அவசியமானது என்பதை சுட்டிக்காட்டுவதுடன், இந்த நெருக்கடியான சூழல் முடிவுற்று, வளமான அமைதியான, நல்லிணக்கம் மற்றும் செழிப்பு நிறைந்த நாளைய நாள் பிறந்து, கனவுகள் நனவாக பிரார்த்திக்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.    நன்றி தினகரன் 






நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்


இலங்கையின் அனைத்து வௌிநாட்டு கடன்களையும் மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இலங்கைக்கு பொறுப்புள்ள நிலுவையில் உள்ள கடன்களை செலுத்துவதை உரிய கலந்துரையாடல் மூலம் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பணமாகவோ அல்லது பொருட்கள், சேவைகளாகவோ வெளிநாட்டு நாணயங்களில் பெற்றுக் கொண்ட கடன்களே இவ்வாறு மீள் செலுத்துவது இடைநிறுத்தப்படுவதாக, நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடனான பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்துடன் இணைந்தவாறு மேலதிக நடவடிக்கைகள் இடம்பெறுமென, அமைச்சு தெரிவித்துள்ளது.   நன்றி தினகரன் 






No comments: