இலங்கைச் செய்திகள்

 நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்துவதற்கு ஆர்வம்


நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு

த.தே.கூட்டமைப்பு தலைவர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இனங்களையும் சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வோம் − இரா.சம்பந்தன்

“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர கவனத்தைச் செலுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்று, (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுவித்தல், குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஆரம்பித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைத்தல், காணாமற்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்

தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மக்களின் நோக்கங்களையும் நிறைவேற்றி, நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்த முடியுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது தமது எதிர்பார்ப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இதன்போது தெரிவித்தார். நாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையிலிருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகுமென இரா. சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை, கிழக்கு சுவிட்சர்லாந்தாக மாறுவதை காண விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்தார்.

நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் எதிர்கால நடவடிக்கைகள், நீண்டகாலமாக பயிர்ச் செய்யப்பட்ட காணிகளை விடுவித்தல், காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தல், புதிய அரசியலமைப்பு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதன் பின்னர் அதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுதல், வடக்கு – கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், சமல் ராஜபக்ஷ, அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் ஸ்ரீதரன், சாணக்கியன் ராசமாணிக்கம், தவராஜா கலையரசன், செல்வம் அடைக்கலநாதன், எஸ். நோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.   நன்றி தினகரன் 




புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்துவதற்கு ஆர்வம்

வடக்கு அபிவிருத்திக்கு முதலிடவும் அழைப்பு

புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றிருந்தது.

நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி, விக்டோரியா நுலாந்திடம் விளக்கமளித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், கனடா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவில் உள்ள பசுமைத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தவும் இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டில் கல்வி வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்திய உதவிச் செயலாளர், தனியார் துறையினரின் பங்களிப்புடன் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த ஆர்வமாக உள்ளதாகவும், வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 






No comments: