இலங்கைச் செய்திகள்

அமைச்சுப் பதவியிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்

நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்று முதல் முற்றுப்புள்ளி

யாழில் ஜெய்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்

ஜெயிலானி வழிபாட்டுத்தலத்தின் நுழைவாயில் அழிப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்

ஜப்பானிய தற்காப்புப் படையின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவு

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

வெடிபொருள் வைத்திருந்த சம்பவம்; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை



அமைச்சுப் பதவியிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்

அமைச்சுப் பதவிகளிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்-Cabinet Reshuffle-Wimal Weerawansa and Udaya Gammanpila Removed from their Ministerial Portfolios

- விமலின் அமைச்சு எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு
- கம்மன்பிலவின் அமைச்சு காமினி லொக்குகேவுக்கு
- ஒரு சில அமைச்சுகளில் அதிரடி மாற்றம்

ஜனாதிபதியினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர்  பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில அமைச்சுகளில் மாற்றம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47 (II) (ஆ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கு அமைய குறித்த இருவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, ஒரு சில அமைச்சுக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, உதய கம்மன்பில வகித்த அமைச்சு, காமினி லொக்குகேவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், விமல் வீரவன்சவின் அமைச்சு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  • காமினி லொகுகே - எரிசக்தி அமைச்சர் (முன்னர் மின்சக்தி)
  • பவித்ரா வன்னியாராச்சி - மின்சக்தி அமைச்சர் (முன்னர் போக்குவரத்து)
  • எஸ்.பி. திஸாநாயக்க - கைத்தொழில் அமைச்சர் (முன்னர் அமைச்சு பதவி இல்லை)

குறித்த மூவரும் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் கலந்துகொண்டார்.

அமைச்சுப் பதவிகளிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்-Cabinet Reshuffle-Wimal Weerawansa and Udaya Gammanpila Removed from their Ministerial Portfolios

அமைச்சுப் பதவிகளிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்-Cabinet Reshuffle-Wimal Weerawansa and Udaya Gammanpila Removed from their Ministerial Portfolios

அமைச்சுப் பதவிகளிலிருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில நீக்கம்-Cabinet Reshuffle-Wimal Weerawansa and Udaya Gammanpila Removed from their Ministerial Portfolios




நாட்டிலும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு நேற்று முதல் முற்றுப்புள்ளி

நாட்டில் நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு நேற்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதன்படி நேற்றைய தினம் நாடு முழுவதுமுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது.

அதேவேளை, கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 118 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.லை அதிகரித்துள்ளதால், விலையை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தம்மிடமுள்ள மேலதிக 30 மில்லியன் மசகு எண்ணெய் பீப்பாய்களை உலக சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக சர்வதேச வலு சக்தி முகவர் நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்) - நன்றி தினகரன் 





யாழில் ஜெய்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்

வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி (Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti) எனப்படும் தொண்டு நிறுவனத்தால் நடாத்தப்படும் ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம் யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதுதொடர்பான சந்திப்பொன்று, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , பகவான் மகா வீரர் சஹயட சமித்தி (Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti) தொண்டு நிறுவனத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சதீஷ் சி மேத்தா ஆகியோருக்கிடையில் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது.  

இச்சந்திப்பில் யாழ் மாவட்டத்தில் இச்சேவை முகாமை நடாத்துவது தொடர்பிலும், Jaipur Foot நிறுவனத்தின் கிளையொன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

கடந்த 35வருடங்களாக 1.2மில்லியன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றிவரும் இந்நிறுவனம் தற்போது இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்துள்ளது. அதனடிப்படையில் கடந்த பெப்ரவரி 02ம் திகதி தொடக்கம் எதிர்வரும் மார்ச் 05ம் திகதி வரை கம்பஹா மாவட்டத்தில் ஜெய்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம் இடம்பெற்றுவருகிறது.  

இந்நிலையில், வடக்கில் போரினால் அங்கங்களை இழந்த மற்றும் இதர காரணங்களால் அங்கங்களை இழந்த வறுமைப்பட்ட மக்களை கருத்திற்கொண்டு ஜெய்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம், யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் பயனாளிகள் தமது பதிவுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும்.    நன்றி தினகரன் 





ஜெயிலானி வழிபாட்டுத்தலத்தின் நுழைவாயில் அழிப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்


ஜெயிலானி வழிபாட்டுத்தலத்தின் நுழைவாயில் அழிப்புக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்-Condemned Joint Statement-Dafthar-Jailani-Demolished

- நாசதாரிகளை கைது செய்ய கோரிக்கை

முஸ்லிம்களின் பழைமை வாய்ந்த வணக்கஸ்தலமான ஜெயிலானி இனந்தெரியாத சக்திகளால் நாசமாக்கப்பட்டதற்கு உலமா சபை, முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் மீடியா போரம், YMMA உள்ளிட்ட பல முஸ்லிம் அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.

இதனுடன் தொடர்புள்ள நபர்களை கைது செய்து தண்டிக்குமாறும் இவ்வாறான தொல்பொருள் முக்கியமான இடங்களை அழிப்பதை தடுக்குமாறும் அவை கோரியுள்ளன. சுமார் 26 அமைப்புகளின் கையொப்பத்துடன் இது தொடர்பில் நேற்று கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்படுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தப்தர் ஜெயிலானியை அழிக்க முயன்றவர்களை கண்டறிந்து கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவை கோரியுள்ளன.

முஸ்லிம்களின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஜெயிலானி குறித்து பல ஆய்வாளர்கள் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். அத்தகைய இடம் நாசதாரிகளால் அழிக்கப்பட்டுள்ளதை அனுமதிக்க முடியாது எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. (பா)

நன்றி தினகரன் 






ஜப்பானிய தற்காப்புப் படையின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவு

ஜப்பானிய தற்காப்புப் படையின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவு-Two Japan Maritime Self-Defense Force Ships Arrive in Colombo

ஜப்பானிய தற்காப்பு கடற் படையின், மைன்ஸ்வீப்பர் பிரிவு ஒன்று (Minesweeper Division One) கப்பலான ‘URAGA’, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இன்றையதினம் (02) ‘HIRADO’ எனும் கப்பல் வந்தடைந்துள்ளது.இந்தப் போர்க்கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்கப்பட்டன.

ஜப்பானிய தற்காப்புப் படையின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவு-Two Japan Maritime Self-Defense Force Ships Arrive in Colombo

குறித்த ஜப்பானிய தற்காப்பு கடற் படையின் முதலாவது கண்ணிவெடி அகற்றும் படையின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NOGUCHI Yasushi செயற்படுகிறார். கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த Minesweeper Tender போர்க் கப்பலான 'URAGA' ஆனது, 141 மீற்றர் நீளம் கொண்டது என்பதுடன் அது 130 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதன் கட்டளை அதிகாரியாக தளபதி KONDO Koji உள்ளார். Minesweeper Ocean வகை போர்க்கப்பலான 'HIRADO' வின் நீளம் 67 மீற்றர் என்பதுடன் அது 55 பேரைக் கொண்டுள்ளது. அதன் கட்டளையிடும் அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் ITO Akira செயற்படுகின்றார்.

ஜப்பானிய தற்காப்புப் படையின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைவு-Two Japan Maritime Self-Defense Force Ships Arrive in Colombo

இரண்டு போர்க்கப்பல்களும் பெப்ரவரி 28ஆம் திகதி கொழும்பு கடற்கரையில் இலங்கை கடற்படையின் Sindurala கப்பலுடன் கூட்டு கடற்படை பயிற்சியில்  வெற்றிகரமாக ஈடுபட்டதன் பின்னர், இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

மேலும், கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஜப்பானிய தற்காப்பு கடற்படையின் போர்க்கப்பல்கள் தொடர்பான விடயங்கள் தற்போது அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய  மேற்கொள்ளப்படுவதுடன், அக்கப்பல் மார்ச் 03ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 





வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு-ITAK-TNA Party Vavuniya District Office Opening

தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிலையில் முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவினால் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு-ITAK-TNA Party Vavuniya District Office Opening

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் குறித்த அலுவலகம் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சிறீதரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு-ITAK-TNA Party Vavuniya District Office Opening

இதன்போது மாணவர் ஒருவருக்கு வழங்குவதற்காக துவிச்சக்கரவண்டியொன்று தமிழரசுக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினரொருவரால் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஓமந்தை விஷேட நிருபர் - நன்றி தினகரன் 




வெடிபொருள் வைத்திருந்த சம்பவம்; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

2009ஆம் ஆண்டில் அக்குரெஸ்ஸை கொடபிட்டிய ஜும்ஆ பள்ளிவாசல் மீலாதுந் நபி நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலின் போது....

- சந்தேகநபருக்கு எதிராக குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் மேலும் பல வழக்குகள்

வெடி பொருளை தனது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவராக கருதப்படும் முத்தப்பன் என்பவரின் கீழ் செயற்பட்ட புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் சிலர் குறித்த காலப்பகுதியில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாரிய அளவான தாக்குதல்களை முன்னெடுத்தமை தொடர்பில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, தாக்குதலுக்காக பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த அதிசக்திவாய்ந்த குண்டுகள், தற்கொலைத் தாக்குதல் அங்கிகள் தகவல் பரிமாற்ற உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவு உறுப்பினரான தங்கவேலு நிமலன் எனும் சந்தேகநபருக்கு எதிராக தற்போது ஒருசில நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வழக்குகளில், 2011ஆம் வருடத்தில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளின் முடிவில், RDX வெடிமருந்து அடங்கிய அதி சக்திவாய்ந்த இரண்டு கிலோ கிராம் வெடிபொருளை தனது உடைமையில் வைத்திருந்தமை அல்லது கட்டுப்பாட்டில் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தங்கவேலு நிமலன் எனும் விடுதலைப் புலி அமைப்பின் குறித்த உறுப்பினருக்கு கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

அதற்கமைய,

  • 2007 மே 28ஆம் திகதி, இரத்மலானை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் பயணித்த ட்ரக் வாகனத்திற்கு குண்டு தாக்குதலை மேற்கொண்டு அவர்களை கொலை செய்ய முயற்சித்த சம்பவம்.
  • 2009 பெப்ரவரி 07 ஆம் திகதி, வடமேல் மாகாண சபை தேர்தல் வேளையில், குருணாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் அப்போதைய ஜனாதிபதி பங்குபற்றிய பொதுக்கூட்டத்தில் மேடைக்கு அருகில் குண்டு வைத்து அதனை வெடிக்க வைத்து ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சித்த சம்பவம்.
  • 2009 மார்ச் 10ஆம் திகதி அக்குரஸ்ஸை,  கொடபிட்டிய பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்தாரியினால், அமைச்சர் ஒருவர் மற்றும் 46 பேரை கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் 14 பேரை கொலை செய்த சம்பவம்.
  • 2009 ஓகஸ்ட் 05ஆம் திகதி மாகாண சபை தேர்தல் வேளையில், பதுளை பிரதேசத்தில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் குண்டுவெடிப்பை மேற்கொண்டு அப்போதைய ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம்.

உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நன்றி தினகரன் 


No comments: