கொழும்புத்துறை சமாதி திருக்கோயிலில் சிவ யோகசுவாமிகள் குரு பூசை பங்குனி ஆயிலியம் - 25 . 03 . 2021

                 உ

சிவயோகர் சுவாமிகளை

நினைவு கூருவோம்!

                              


சைவம் நலிந்த வேளையிலே

தழைக்கச் செய்து மெருகூட்டத்

தெய்வம் போல ஈழமதில்

சிவத்திரு யோகர் அவதரித்தார் 

 

என்றோ முடிந்த காரியமே

எல்லாம் முற்றும் உண்மை”யென்றும்

நன்றே குருவின் உபதேசம்

நாளும் சொல்லிப் போதித்தார்.

 

  'அதுஅப் படியே ! உள்ளதைக்காண்"

ஆர் அறி வாரோ “நாமறியோம்”

முதுமொழி யானவிவ் மந்திரங்கள்

முகிழ்த்திடும் பொருள்கள் விளக்கிடுவார்.

 

பொல்லாப் பொன்றும் இல்லை”யென்றார்

புலனை அடக்கச் சிவத்தியானம்

வெல்லும் நல்வழி சொல்லிவைத்தார்

விருப்பொடு ‘மௌனமாய்  இரு’வென்றார்.

 

 

   காலின் அடியிற் பூண்டிருக்கக்

 காணா தெங்கெலாம் அலையாதே!

 கூறுவேன் உன்னை நீயறிந்தால்

 கூத்துகந் தோனைக் கண்டிடுவாய்!”

 

ஒன்றாய் வேறாய் உடனாயும்

உயிர்கள் சிவப்பே றடைந்துய்ய

நின்றே நட்டம் பயில்வானின்

நீழல் சேர வழிசொன்னார்!

 

பக்குவ நிலையை நீயடைந்தால்

பரமனும் குருவாய்த் தோன்றிடுவான்

அக்கணம் இருந்துன் வினைகழைந்து

அடிக்கம லத்தினிற் சேர்த்திடுவான்.

 

அகல்விளக் காய்ப்பல் லாண்டுகாலம்

அஞ்ஞா னவிருள் நீக்கிடவே

பகலிர வாயருள் சொரிந்தயோகர்

பாதா ரவிந்தம் பராவிடுவோம்!

 


…..பல்வைத்திய கலாநிதி; பாரதி இளமுருகனார்



கொழும்புத்துறை சமாதி திருக்கோயிலில் சிவ யோகசுவாமிகள் குரு பூசை பங்குனி ஆயிலியம் - 25 . 03 . 2021 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

 

 

தவத்திரு யோகர் சுவாமிக்குக் கீர்த்தனை

                                              பல்லவி

சிவஞானம் பெற்றுயர்ந்து சிவத்துடனே கலந்துவிட்ட

தவயோகி சிவயோகர் தாளினைத் துதிமனமே!

                                                                                                (சிவஞானம்)

                                          அனுபல்லவி

 

புவனமொடு பொருள்உடலும் பொய்யான மாயையென்று

பவன்கழலைப் பற்றுதலே பற்றறுக்கும் எனவுணர்ந்து

                                                                                                          (சிவஞானம்)                   

                                           சரணம்

 

 தேவதூத னாகிச்சிவ சிந்தனையாம்; கனல்எழுப்பி

 வேதாகமம் வளர்த்தசிவ யோகர்புகழ் பாடிடவே

 காதலோடு கொழும்புத்துறைக் கண்ணனைய குருமணியாம்

 நாதனார்க்கு எடுக்கும்விழா நனிசிறக்க வாழியவே!

                                                                                                           (சிவஞானம்)

பொல்லாப்பு ஒன்றுமில்லை பொன்மொழியாய்க் கூறிநிற்பார்

எல்லாவும் எப்போதோ முடிந்ததென்று இயம்பிடுவார்

சொல்லரிய சொல்லாகச் ‘சும்மாஇரு’என்று சொல்வார்

செல்வோர்கள் சிறந்துவாழ அருள்வாக்கால் அர்ச்சிப்பார்

                                                                                                             (சிவஞானம்)

தவத்திரு யோகர் சுவாமி அவர்களுக்கு உலகசைவப் பேரவை (சிட்னி) சிட்;னி கலை இலக்கிய மன்றத்துடன் இணைந்து 2016 ஆண்டிலே எடுத்த விழாவிலே பாடப்பட்ட கீர்த்தனை.


இயற்றியவர் - பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்

No comments: