உலகச் செய்திகள்


தீபாவளி பண்டிகைக்காக செம்மஞ்சள் நிறத்தில் ஜொலித்த 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம்

 பிரிட்டனில் டிசம்பரில் தேர்தல்

தாய்லாந்து நாட்டில் “தாய்” மொழியில் உருவெடுத்த திருக்குறள்

 குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை

மாலியில் இடம்பெற்ற கொடூர தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் பலி!


தீபாவளி பண்டிகைக்காக செம்மஞ்சள் நிறத்தில் ஜொலித்த 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம்

30/10/2019 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பிரபலமான, 'எம்பயர் ஸ்டேட்' கட்டடம், செம்மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள, எம்பயர் ஸ்டேட் கட்டடம், பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.
கடந்த, 1970 வரை, உலகின் மிக உயர்ந்த கட்டடம் என்ற பெருமை, இதற்கு இருந்தது. அதற்கு பின், உலகின் பல்வேறு பகுதிகளில், இதை விட உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டு விட்டன. 
நியூயார்க் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டடத்தில், 102 மாடிகள் உள்ளன; 1,454 அடி உயரம் உடையது. அமெரிக்காவின் முக்கிய நாட்கள், முக்கிய பண்டிகைகளின் போது, இந்த கட்டடத்தில், பல வண்ணங்களில் மின் விளக்குகள் ஜொலிக்கும்.
இந்  நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒக்டோபர் 27 ஆம் திகதி, எம்பயர் ஸ்டேட் கட்டடம், செம்மஞ்சள் நிறத்தில் ஜொலித்தது.   நன்றி வீரகேசரி 











 பிரிட்டனில் டிசம்பரில் தேர்தல்  

பிரிட்டனில் வரும் டிசம்பர்  மாதம் தோ்தல் நடத்துவதற்கு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை வழங்கத் தயாராக இருப்பதாக முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளா கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவர்  ஜெரிமி கார்பின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தினால், அதனை வரவேற்கத் தயராக இருப்பதாக நான் தொடா்ந்து கூறி வருகிறேன்.
எனினும், பிரெக்சிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுடன் தொடர வேண்டிய வர்த்தக உறவு தொடர்பான ஒப்பந்தம் எதுவுமே இல்லாமல், அந்த அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறாது என்பதை உறுதி செய்தால் மட்டுமே, டிசம்பா் மாதம் தோ்தல் நடத்துவதற்கு எங்களது கட்சி ஆதரவு அளிக்கும்.
பிரெக்சிட்டுக்கான காலக் கெடுவை ஜனவரி 31-ஆம் திகதி வரை நீட்டிக்கு ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் திங்கள்கிழமை முடிவு செய்தனர் .
அதன் காரணமாக, ஒப்பந்தம் இல்லாமலேயே பிரெக்சிட் நிறைவேறுவதற்கான கட்டாயம் நீங்கிவிட்டது. இதன் மூலம், பிரெக்சிட் ஒப்பந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, ஒப்பந்தத்துடன் கூடிய பிரெக்சிட்டை உறுதி செய்துவிட்டு, டிசம்பா் மாதம் தோ்தல் நடத்த பிரதமர்  போரிஸ் ஜோன்ஸன் முயன்றால், அதற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.
அந்தத் தேர்தலில், பிரிட்டன் இதுவரை சந்தித்திராத உண்மையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான தீவிர பிரசாரத்தை மேற்கொள்வோம் என்று அந்த அறிக்கையில் ஜெரிமி கார்பின் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வரும் டிசம்பர்  மாதத்தின் எந்தத் திகதியில் தோ்தல் நடத்துவது என்பதில் பிரதமருக்கும், எதிா்க்கட்சியினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அந்த மாதத்தின் 12-ஆம் திகதியில் தோ்தல் நடத்துவதற்கு போரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார் . எனினும், முன்கூட்டியே 9-ஆம் திகதியில் தோ்தல் நடத்த வேண்டும் என்று தொழிலாளா் கட்சியும், பிற எதிா்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடா்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜோன்ஸன் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தினாா். அதுதொடா்பான விவாதத்துக்குப் பிறகு இன்னும் சில நாள்களில் அந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படும். அதன் பிறகு, டிசம்பா் மாதத்தின் எந்தத் திகதியில் முன்கூட்டியே தோ்தல் நடைபெறவுள்ளது என்பது தெரிய வரும்.  நன்றி வீரகேசரி 











தாய்லாந்து நாட்டில் “தாய்” மொழியில் உருவெடுத்த திருக்குறள்

02/11/2019 உலகப் பொதுமறையான திருக்குறளை தாய்லாந்து நாட்டு “தாய்” மொழியில் இன்று வெளியிடப்படுகிறது.
தாய்லாந்தின் பேங்கொங் நகரில் ஆசியான் – இந்தியா உச்சி மாநாடு  இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி “தாய்” மொழியில் திருக்குறளை வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் மோடியுடன்  தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான்னும் கலந்து கொள்கிறார். உலக முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளை தாய்லாந்து மொழியில் வைத்தியர் சுவிட் மொழிபெயர்த்துள்ளார்.
இவர் மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் பல்வேறு நூல்களையும் மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை

02/11/2019 பணிப்பெண்களை சமூக ஊடங்கள் மூலம் அடிமைகளாக விற்க முயன்ற நபர்களை விசாரணைகளிற்கு வருமாறு குவைத் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பிபிசியின் அராபிய செய்தி பிரிவு  பணிப்பெண்கள் அடிமைகளாக  சமூக ஊடகங்கள் மூலமாக விற்கப்படுவதை அம்பலப்படுத்திய பின்னரேகுவைத் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அடிமை சந்தை குறித்த அப்ஸ் காணப்படுவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.
பணிப்பெண்கள் மாற்றம் ,பணிப்பெண்கள் விற்பனைக்கு போன்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக  பணிப்பெண்களை அடிமைகளாக விற்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பிபிசிதெரிவித்துள்ளது.
பிபிசி இதனை அம்பலப்படுத்தியதைதொடர்ந்து இந்த வகை விளம்பரங்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடபோவதில்லைஎன  தெரிவிக்கும் சட்ட ஆவணமொன்றில் சந்தேகநபர்களை கைச்சாத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிபிசி தன்னுடன் தொடர்புகொண்ட பின்னர் இந்த விளம்பரங்களை அகற்றிவிட்டதாக இன்ஸ்டகிராம் தெரிவித்துள்ளது.
பணிப்பெண்களை அடிமைகளாக விற்கும் நோக்கத்துடன்  புதிய விளம்பரங்கள் வெளியாவதை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக  இன்ஸ்டகிராம் தெரிவித்துள்ளது.
பிபிசி குறிப்பிட்ட சட்டவிரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தியதன்பின்னர் பலர்இவ்வாறான விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளனர்.
பிபிசியின் தகவலில் இடம்பெற்றுள்ள  16 வயது யுவதியை விற்பனை செய்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண்ணை விசாரணை செய்து வருவதாக  குவைத் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பிபிசிகுறிப்பிட்ட காவல்துறைஅதிகாரியையும் விசாரணை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 










மாலியில் இடம்பெற்ற கொடூர தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் பலி!

03/11/2019 மாலியின் வடகிழக்குப் பகுதியில் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 53 இராணுவ வீரர்கள் உட்பட மொத்தமாக 54 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாலியில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்தி சம்பவமானது மேனகா பிராந்தியத்தில், இன்தெலிமான் என்ற இடத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ முகாம்களுக்கு புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும், தற்கொலை குண்டுகளை வெடிக்கச் செய்தும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  நன்றி வீரகேசரி 







No comments: