25/10/2019 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சுதந்திரபுரம் கிராம பகுதியில் மனித எலும்பு எச்சங்கள் கடந்த 20 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இந்த மனித எச்சங்களை முல்லைத்தீவு நீதிமன்றின் அனுமதியுடன் நீதவான் முன்னிலையில் மீட்க்கும் நடவடிக்கைகள் இன்று (25)முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுதந்திரபுரம் கிராம பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் ஒருபகுதியில் மண்எடுத்து மறுபகுதியில் கொட்டியபோது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கடந்த (20.10.19) அன்று அடையாயம் காணப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு கடந்த சில நாட்களாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
மனித எச்சங்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார், சட்டமருத்துவ அதிகாரி றெகான்கேரத்,சட்ட வைத்திய நிபுணர் இளங்கோவன், காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர்கள் மிராட்றஹீம், க.வேந்தன்,பிரதீபா புண்ணியமூர்த்தி மற்றும் தடயவியல் பொலீசார் முன்னிலையில் மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 
முதல் கட்டமாக மேல் வெளிப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மேலும் குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.