பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 17


சிவந்தமண்

1969ம் ஆண்டு பொருட்செலவுடன் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்று சித்ராலயாவின் சிவந்தமண்.  பிரபல கதாசிரியரும் டைரக்டருமான ஸ்ரீதர் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். 69ம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளிவந்தது.

இந்தப்படம் உருவாவதற்கு சில ஆண்டுகளுக்கு முன் இதே கதையை எம்.ஜி.ஆரின் நடிப்பில் அன்று சிந்தியரத்தம் என்ற பெயரில் கறுப்பு வெள்ளைப் படமாக ஸ்ரீதர் தயாரிக்கத் தொடங்கினார். இதே காலகட்டத்தில் புதுமுக நடிகர்களை போட்டு கலரில் காதலிக்க நேரமில்லை படத்தையும் ஸ்ரீதர் உருவாக்கினார். 

தன் படத்தை கறுப்பு வெள்ளையாகவும் புதுமுக நடிகர்களின் படத்தை கலரிலும் ஸ்ரீதர் உருவாக்குவது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை.  இதன் விளைவு அன்று சிந்தியரத்தம் படத்தில் நடிப்பதில் இருந்து எம்.ஜி.ஆர் ஒதுங்கிக் கொண்டார்.  அத்துடன் அப்படத்தின் தயாரிப்பும் நின்று போய்விட்டது.

இது நடந்து நான்காண்டுகள் கழித்து இதே கதையை மீண்டும் வண்ணப்படமாக ஸ்ரீதர் தயாரித்து டைரக்ட் செய்யத் தொடங்கினார்.  கதாநாயகனாக சிவாஜி ஒப்பந்தமானார். கதாநாயகியாக காதலிக்க நேரமில்லை புகழ் காஞ்சனா தெரிவானார். இவர்களுடன் நம்பியார், நாகேஷ் சாந்தகுமாரி, ரங்கராவ், ஜாவர் சீதா ராமன், சச்சு, முத்துராமன், என்று பலர் நடித்தார்கள்.
படத்திற்கு சிவந்தமண் என்று பெயரிடப்பட்டது.  நிறைய பொருட்செலவில் எடுப்பதினால் படத்தை வெளிநாடுகளிலும் படமாக்குவதற்கு ஸ்ரீதர் தீர்மானித்தார்.
அந்த வகையில் பாரிஸ், ரோம், லண்டன், ஆரிச் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் நகரங்களில் படமெடுப்பது என தீர்மானமானது.  அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக குறைந்த கலைஞர்களுடனேயே இந்த நாடுகளுக்கு ஸ்ரீதர் பயணமானார்.  

சிவாஜி மிகக்குறைந்த மேக்அப்புடனேயே வெளிநாட்டில் படமான காட்சிகளில் தோன்றினார். சிவாஜி காஞ்சனா இருவரையும் தவிர ஏனைய நடிகர்கள் அனைவரும் இந்தியாவிலேயே ஸ்டுடியோவில் நடித்தார்கள்.

வசந்தபுரி அரசை வெளிநாட்டு சக்திகளின் ஆதரவுடன் சதி செய்து கைப்பற்றிக் கொள்ள சர்வாதிகாரியான திவான் திட்டமிடுகிறான். அதற்காக சமஸ்தானத்தின் அரசரை காவலில் வைக்கிறார். இளவரசியையும் திருமணம் செய்ய முனைகிறான். தன்னை எதிர்க்கும் புரட்சியாளர்களை கேள்வி முறையின்றி கொன்று குவிக்கிறான். இதனை எதிர்த்து போராடும் பாரத்திற்கு இளவரசியும் உறுதுணையாகநிற்கிறாள்.  புரட்சியாளர்களுக்கும் சர்வாதிகாரிக்கும் இடையில் நடக்கும் போராட்டமே படம்!

சர்வாதியாக வில்லன் நம்பியார் நடித்திருந்தார் என்பதை விட பாத்திரமாகவே மாறியிருந்தார்.

புரட்சியாளராக சில காட்சிகளில் தோன்றும் முத்துராமன் ரசிகர்கள் மனதில் நிறைந்தார்.  காஞ்சனா நடிப்பையும் கவர்ச்சியையும் இணைந்து வழங்கியிருந்தார். நாகேஷீம் சச்சுவும் நகைச்சுவைக்கு பஞ்சம் வைக்கவில்லை.  பொலிஸ் தலைமை அதிகாரியாக வரும் ரங்கராவின் மிடுக்கான தோற்றம் மனதில் நிற்கிறது. ஜாவர் சீதாராமன் நிறைவாக செய்திருந்தார்.  பட டைரக்டரான தாதாமிராஸி வெளிநாட்டு பிரதிநிதியாக சில காட்சிகளில் நடித்திருந்தார்.


ஓளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் கைவண்ணம் படம் முழுதும் வியாப்பித்திருந்தது.  பம்பாயில் இருந்து வந்த சாந்திதாஸ் படத்திற்கான பிரம்மாண்டமாக அரங்குகளை அமைத்திருந்தார். அன்றும் இன்றும் மறக்கமுடியாத இசையை படத்திற்கு அள்ளி வழங்கியிருந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஒரு ராஜா ராணியிடம், பார்வை யுவராணி பொன்ரோவியம், பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ஒரு நாளிலே உருவானதே போன்ற பாடல்கள் கண்ணதாசனின் கவிவரிகளில் மிளிர்கின்றன.

சிவாஜியின் சாட்டையடிக்கு ஏற்ப காஞ்சனா ஆடும் பட்டத்துராணி பாடல் அதற்கான காட்சி எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலினிமை எல்லாம் ரசிகர்களை பரவசமாக்கின. இந்தப் பாடலுக்கு மட்டும் எம்.எஸ்.வி. 120 வாத்தியங்களை பயன்படுத்தியிருந்தார். கர்நாடக மேற்கத்திய, அரபிய இசை என பலவித இசையை விஸ்வநாதன் இப்படத்திற்கு வழங்கியிருந்தார்.

படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்தவர் எம்.ஜி.ஆரின் ஸ்டன்ட் மாஸ்டர் சியாம்சுந்தர். புரட்சித் தலைவராக படத்தில் நடித்த சிவாஜி வசனங்களில் மட்டுமன்றி முகபாவங்களினாலும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சிப் படுத்தினார்.  ஸ்ரீதரைப் பொறுத்த வரை சிவந்தமண் அவருடைய திரையுலக பயணத்தில ஒரு தடமாகும்!

50 ஆண்டுகளுக்கு முன் இப்படம் திரையிடப்பட்ட போது இலங்கை தமிழ் ரசிகர்கள் ஐரோப்பிய நாடுகளை படத்தில் பிரமிப்புடன் பார்த்து பார்த்து ரசித்தார்கள்.  சில ஆண்டுகளில் யுத்தம் தீவிரவாதம் காரணமாக இலங்கை சிவந்தமண் ஆனது. அதனைத் தொடர்ந்து இலட்சக் கணக்கான தமிழர்கள் லண்டன் சூரிச் பாரிஸ் என்று புலம் பெயர்ந்தார்கள். சிவந்தமண் படத்தில் பார்த்த இடங்களை நேரில் பார்த்து அங்கு வாழ்கிறார்கள்.  ஆனாலும் ஒரு காலத்தில் ஊரில் பார்த்த படமும் அனுபவமும் மறக்குமா!














No comments: