![](https://2.bp.blogspot.com/-ESL6dKT_pIA/XN5Hjcgw8rI/AAAAAAAAs4M/VszGnCLoeb4LtUF4Sv1rcRmZyF9OvGyqQCK4BGAYYCw/s320/%25E0%25AE%259A%25E0%25AF%2586.%2B%25E0%25AE%2595%25E0%25AE%25A3%25E0%25AF%2587%25E0%25AE%259A%25E0%25AE%25B2%25E0%25AE%25BF%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg)
2008 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன். சென்னையிலிருந்து ஒரு
இலக்கிய அமைப்பிடமிருந்து கடிதம் வந்தது. அதில் தமிழகத்தில் வதியும் மூத்த
எழுத்தாளர் செ.கணேசலிங்கன் அவர்களுக்கு 75 வயது பிறந்துவிட்டது. அதனை முன்னிட்டு
இலக்கிய நண்பர்கள் இணைந்து அவருக்கு பவளவிழா நடத்தவிருக்கின்றோம். அந்த விழாவில்
வெளியிடுவதற்கு ஒரு மலரைத் தயாரிக்கின்றோம். நீங்களும் கணேசலிங்கன் பற்றிய கட்டுரை
ஒன்றை எழுதி அனுப்பவேண்டும். விரைவில் எதிர்பார்க்கின்றோம். – என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
![](https://3.bp.blogspot.com/-n685kHn_Jb4/XN5H5BuiSnI/AAAAAAAAs4Y/bpfoO-O-SNkouaa74uleW_wbj7eUF0fbgCK4BGAYYCw/s200/%25E0%25AE%25A8%25E0%25AF%2580%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%259F%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25AF%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg)
“ பிறப்பதும் இறப்பதும் – வயதுகள் கடப்பதும் இயற்கை – ஆனால் – வாழ்வை அர்த்தமுடன் கடப்பதுதானே உன்னதம். எதுவுமே வேண்டாம் உங்கள் அனைவரதும் அன்பு மாத்திரம் போதும் “ எனச்சொல்லி அன்புக்கட்டளை இட்டேன். – என்று இரத்தினச்சுருக்கமாக பதில் தந்தார்.
மலருக்கான கட்டுரைகளையும் கணேசலிங்கனுக்குத் தெரியாமலேயே சேகரிக்கவும் தொடங்கினர். எப்படியோ இத்தகவலை அறிந்துகொண்டு மறுத்துவிட்டார் இந்த வித்தியாசமான மனிதர்.
![](https://2.bp.blogspot.com/-q1pVc8qFlFE/XN5ICbaIDSI/AAAAAAAAs4g/V8rZQ-VQH6s1LskRiAEaW3YAi-2PpzdjQCK4BGAYYCw/s320/%25E0%25AE%259A%25E0%25AE%259F%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581.jpg)
கருத்தை இலக்கியத்தோடு மட்டும் வைத்துக்கொண்டு முற்போக்கு – பிற்போக்கு பேதமற்ற நட்புறவைச் சகல எழுத்தாளர்களோடும் கொண்டுள்ள ஒரு – சிலவேளை ஒரே ஒரு ஈழத்து எழுத்தாளர் கணேசலிங்கன் – என்று இலக்கு – என்னும் இதழ் 1996 ஆம் ஆண்டு இவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது.
“ கணேசலிங்கனின்
குமரன் இதழ்களைப்படித்தே அரசியல் அறிவுபெற்றேன் “ என்று ஒருசந்தர்ப்பத்தில் கவிஞரும் இலக்கிய
ஆர்வலருமான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மறைந்த அஷ்ரப் குறிப்பிட்டிருக்கிறார்.
“ எனக்கு நல்லதொரு
நண்பராக மாத்திரமன்றி மூத்த சகோதரனாகவும் இருப்பவர் கணேசலிங்கன் “ என்று ஒரு நேர்காணலில் பதில்சொல்கிறார்
இயக்குநர் பாலுமகேந்திரா.
இன்றும் இலக்கிய உலகில் பேசப்படும் சரஸ்வதி இதழின் ஆசிரியர்
விஜயபாஸ்கரன் – கணேசலிங்கனின் திருமணத்திற்காக இலங்கை வந்து வாழ்த்தினார். அவரது
வருகையின் மூலம் இலங்கை – தமிழக
எழுத்தாளர்கள் மத்தியில் ஆரோக்கியமான உறவு மலர்ந்தது “ என்று சொன்னார்
எஸ்.பொன்னுத்துரை.
![](https://3.bp.blogspot.com/-n9zYIN_vnv8/XN5IMFjSiKI/AAAAAAAAs4s/1YhEmXYPlbQzJKk3ZHvrOHJoxIbsdkuXACK4BGAYYCw/s320/%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25A9%25E0%25AF%258D..jpg)
“ தஞ்சாவூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்தவிடத்தில் எதிர்பாராத விதமாக மரணமடைந்த டானியலின் மறைவுச்செய்தி அறிந்தவுடன் சென்னையிலிருந்து ஓடோடி வந்து சகல வேலைகளையும் பொறுப்பேற்று முன்னின்று செய்தார் கணேசலிங்கன். “ என்று பிரான்ஸில் வதியும் எழுத்தாளரும் டானியலின் சகாவுமான இளங்கோவன் கூறுகிறார்.
Report
this ad “ செ.யோகநாதன்
சென்னையில் இருதய நோயால் பாதிக்கப்பட்டபோது சொந்தச் சகோதரனைப் பராமரிப்பது போன்று
அக்கறையுடன் கவனித்துக்கொண்டவர் தோழர் கணேசலிங்கன் “ என்று சொன்னார் தாமரை இதழின் முன்னாள்
ஆசிரியரும் தமிழ்நாடு மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் துணைச்செயலாளருமான மகேந்திரன்.
![](https://1.bp.blogspot.com/-7YN-zOWa7Xk/XN5IfMXQqZI/AAAAAAAAs48/Wzs0SsK4XvkTnoh6c98yKi5jZVSbTjYdQCK4BGAYYCw/s320/%25E0%25AE%259A%25E0%25AE%25B2%2B%25E0%25AE%25AA%25E0%25AE%25AF%25E0%25AE%25A3%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B1%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D..jpg)
“ இலங்கையின் மூத்த எழுத்தாளரும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கீதத்தை இயற்றியவருமான அ. ந. கந்தசாமி கொழும்பில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளையில் அவரைப் பராமரித்தவர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் கணேசலிங்கன் . மற்றவர் கலைஞர் லடீஸ் வீரமணி “ என்பது இலங்கை இலக்கிய வட்டாரத்தில் உலாவும் தகவல்.
இந்த அரிய தகவல்கள் ஒருபுறம் இருக்கட்டும் , மல்லிகை ஜீவா சொல்கின்ற செய்தி உண்மையிலேயே எம்மையெல்லாம் நெகிழச்செய்கிறது. வியப்பூட்டுகிறது.
அப்பொழுது ஜீவா யாழ். கஸ்தூரியார் வீதியில் ஜோஸப் சலூனை
நடத்திக்கொண்டிருந்த காலம். யாழ். பரமேஸ்வராக்கல்லூரியில் அக்காலப்பகுதியில்
படித்துக்கொண்டிருந்த கணேசலிங்கன், மாலை வேளையில் அங்கே வருவாராம். ஜீவாவுடன்
உரையாடிக்கொண்டே தரையில் சிந்திக்கிடக்கும் தலைமயிர்க்குவியல்களை
தும்புத்தடியினால் கூட்டிப்பெருக்கி அவ்விடத்தை சுத்தம் செய்வாராம்.
பாட்டாளிவர்க்க சர்வதேசியத்தை எழுத்திலும் மேடையிலும் மாத்திரம் சொல்லாமல் இதயசுத்தியோடு வாழ்ந்தும் காட்டியவர் இந்த தொண்ணூறு வயதும் கடந்துள்ள மனிதநேய வாதி.
கார்ல் மார்க்ஸ் நுற்றாண்டு விழா கொழும்பில் கொண்டாடப்பட்ட
காலகட்டத்தில் அதன் அமைப்புக்குழுவில் இணைந்து இயங்கியவர் கணேசலிங்கன்.
விழாச்செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டபோது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து
யோசித்துக்கொண்டிருக்கையில் பல ரூபாய் நாணயத்தாள்களை எடுத்துக்கொடுத்து செலவுக்கு
வைத்துக்கொள்ளுங்கள். மேலும் தேவைப்பட்டால் சொல்லுங்கள் என்றாராம் கணேசலிங்கன்.
அவர் அன்று வழங்கிய நன்கொடையில் ஆயிரம்ரூபாவுக்கும் மேலிருக்குமாம் என்று எனது நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான தனபாலசிங்கம் ஒரு தடவை சொன்னார்.
அவர் அன்று வழங்கிய நன்கொடையில் ஆயிரம்ரூபாவுக்கும் மேலிருக்குமாம் என்று எனது நண்பரும் மூத்த பத்திரிகையாளருமான தனபாலசிங்கம் ஒரு தடவை சொன்னார்.
இச்சம்பவத்தினால் சற்று அதிர்ந்துபோன தோழர் என்.
சண்முகதாஸன் “ தன்னிடம் இருந்திருந்தால் கூட
அப்படி தூக்கிக்கொடுத்திருக்கமாட்டேன் “
என்று சக தோழர்களிடம் சொன்னாராம்.
கம்யூனிஸம் – மார்க்ஸிஸம் பேசுபவர்கள் சரியான நெஞ்சழுத்தக்காரர்கள். கடினமான போக்குக்கொண்டவர்கள் என்பதுதான் பொதுவான அபிப்பிராயம்.
இந்தப்பதிவை எழுதும் எனக்கும் ஒரு கால கட்டம்வரையில் அந்த அபிப்பிராயம்தான்!
கம்யூனிஸம் – மார்க்ஸிஸம் பேசுபவர்கள் சரியான நெஞ்சழுத்தக்காரர்கள். கடினமான போக்குக்கொண்டவர்கள் என்பதுதான் பொதுவான அபிப்பிராயம்.
இந்தப்பதிவை எழுதும் எனக்கும் ஒரு கால கட்டம்வரையில் அந்த அபிப்பிராயம்தான்!
பேராசிரியர் கைலாசபதியின் மறைவின்போதுதான் (1982) கணேசலிங்கனின் மென்மையான - நாமெல்லோருமே நெகிழ்ந்துபோகும் உள்ளத்தை
புரிந்துகொள்ள முடிந்தது. பேராசிரியரின் எதிர்பாராத மறைவினால் நாம் உறைந்துபோயிருந்தபோது
கணேசலிங்கன் மாத்திரம் கதறிக்கதறி அழுதுகொண்டிருந்தார்.
மரணச்சடங்கிற்கு முதல் நாளிரவு இலங்கை வானொலியில்
ஒலிபரப்பான விசேட இரங்கல் நிகழ்ச்சியில் நண்பர் நுஃமானுடன் சேர்ந்து அஞ்சலி உரை
நிகழ்த்திய கணேசலிங்கன், வானொலிக்கலையகம்
என்றும் பாராமல் வானலைகளில் கருத்துக்கள் பரவுகின்றன என்ற பிரக்ஞையுமில்லாமல்
அழுது அரற்றிக்கொண்டே உரையாற்றியது இன்றும் எனது நினைவுகளில் சஞ்சரிக்கிறது.
சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பல சிறுகதைகள் , கட்டுரை – விமர்சன நூல்கள் – சிறுவர் இலக்கியம் – பயண இலக்கியம் என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்குத்தந்துள்ள கணேசலிங்கனின் தற்போதைய வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு புத்தகம் என பிறந்தது முதல் இன்று வரையில் அதிகம் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் இந்த அமைதியும் தன்னடக்கமும் மிக்க சாதனையாளர் என்ற முடிவுக்கு வரமுடியும்.
மூத்த அறிஞர் மு.வரதராசனும் (மு.வ) இவரது நெருங்கிய நண்பர்.
மு.வ. மறைந்தபின்பு அவரது நினைவாகவும் ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அச்சிலே வெளிவந்த இத்தனை நூல்களும் எத்தனை ஆயிரம்
பக்கங்களைக்கொண்டவை என்ற ஆராய்ச்சியில் நாம் ஈடுபடத்தேவையில்லை.
2007 ஆம் ஆண்டு இந்தியாவில் சாகித்திய அகடமி விருது பெற்ற
நீலபத்மநாபனைப்பற்றிய தகவல்களைப் பதிவு செய்து அவரது நேர்காணலை வெளியிட்ட குமுதம் – தீராநதி – நீலபத்மநாபன் எழுதி
அச்சில் வெளிவந்த பக்கங்கள் மொத்தம் 6467 என்று பதிவு செய்கின்றது.
Report
கணேசலிங்கன் இச்சாதனையை
முறியடித்திருப்பார் என நிச்சயமாகச் சொல்ல முடியும்.
இவரது நீண்ட பயணம் நாவல் குறிப்பிடத்தகுந்ததொன்று. ஈழத்து தமிழ்நாவல் இலக்கிய வளர்ச்சியில் இந்நாவலே முதன்மையிடம் பெறுகின்றது எனச்சொல்கிறார் கலாநிதி செ. யோகராசா.
இவரது நீண்ட பயணம் நாவல் குறிப்பிடத்தகுந்ததொன்று. ஈழத்து தமிழ்நாவல் இலக்கிய வளர்ச்சியில் இந்நாவலே முதன்மையிடம் பெறுகின்றது எனச்சொல்கிறார் கலாநிதி செ. யோகராசா.
இக்கருத்து விமர்சனத்துக்கும் விவாதத்திற்குமுரியது. என்றபோதிலும் கூட செ.க.வின் நீண்டபயணம் நாவல் அவரது எழுத்துலக நீண்டபயணத்தின் தொடக்கத்தில் ஆழமாகப்பதியப்பட்ட ஒரு மைல்கல் என்பதில் அபிப்பிராய பேதமிருக்காது.
செவ்வானம் நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது. இந்நூல்குறித்து வெங்கட்சாமிநாதன் மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற சிறு நூலை எதிர்வினையாக எழுதினார். 1973 இல் பூரணி காலாண்டிதழ் இதனை மறுபிரசுரம் செய்தது. நுஃமான் இதற்கு எதிர்வினையாக நீண்ட கட்டுரைத்தொடரை மல்லிகையில் எழுதினார். அதற்கு மு.பொன்னம்பலம் மல்லிகையிலேயே எதிர்வினை எழுதினார். இவ்வாறு ஆரோக்கியமான விமர்சன கருத்துப்பரிமாறல்களுக்கு வழிகோலிய மூலவர் செவ்வானம் படைத்த கணேசலிங்கன் என்பது இலக்கிய உலகின் பழையசெய்திதான்.
எனினும் இப்படியும் எமது தமிழ் இலக்கியப்பரப்பில்
நிகழ்ந்திருக்கிறது என்ற தகவலையும் இச்சந்தர்ப்பத்தில், புதிதாக எழுதவந்துள்ள இளம் ஆக்க இலக்கிய
வாதிகளுக்கும் இளம் விமர்சகர்களுக்கும் தெரிவிக்கின்றேன்.
பேராசிரியர் கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கை
1976 இல் நடத்தியபொழுது சமர்ப்பிக்கப்பட்ட
பல கட்டுரைகளில் கணேசலிங்கனின் நாவல்கள்தான் அதிகம் பேசுபொருளாக இருந்தன.
ஆய்வரங்கு நிறைவுபெற்றதும் நண்பர் டானியல் தமது இல்லத்தில் அனைவருக்கும் இராப்போசன
விருந்து வழங்கினார்.
இந்த நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கில் கணேசலிங்கனும் கலந்துகொண்டிருந்தால் மிகவும்
சிறப்பாகவிருந்திருக்கும் என்று கைலாசபதியிடம் அந்த விருந்தின்போது
குறிப்பிட்டேன்.
உண்மைதான். அவரது செவ்வானம் நாவலிற்குத்தான் நான் நீண்ட முன்னுரை எழுதினேன். அவர்
இங்கு வரக்கூடிய சூழ்நிலை இல்லை. அதனால் வரவில்லை. எனினும் அவர்பற்றி நாம் இங்கு
நிறையப்பேசுகின்றோம். அந்தவகையில் அவர் மிகுந்த கவனிப்புக்குள்ளான நாவலாசிரியர்
என்று கைலாஸ் சொன்னார்.
சர்வதேசப்புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா (இலக்கியத்திற்காக நோபல் பரிசு
பெற்றவர்) இலங்கை வந்த சமயம் அவரை வரவேற்கும் எழுத்தாளர்களின் கூட்டத்திற்கு தலைமைதாங்கிச்சிறப்பித்த
பெருமையும் கணேசலிங்கனுக்குண்டு.
கமல்ஹாஸன் நடித்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான கோகிலா (கன்னடம்)
திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் இயங்கியிருக்கும் கணேசலிங்கன் – தமிழக சினிமா உலகின் கோலங்களை தமது
கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் என்ற நாவலில் சித்திரித்துள்ளார்.
நான் வதியும் அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகப்பிரவேசப் பரீட்சைக்கு தமிழும் ஒரு
பாடம்.
தமிழ்மொழிப்பாடப் பரீட்சைக்கு தோற்றும் பல மாணவர்களுக்கு பெண்கள் தொடர்பாக வரும்
நேர்முக – எழுத்துப்பரீட்சைகளுக்கு
கணேசலிங்கனின் பெண்ணடிமை தீர என்ற நூல் உசாத்துணையாகப்பயன்பட்டது என்ற புதிய
தகவலையும் இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன்.
( தொடரும்) -- ( நன்றி: ' நடு' இணைய
இதழ் - பிரான்ஸ்)
No comments:
Post a Comment