சிட்னியில் சித்திரைத் திருவிழா 2019


தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சிட்னியில் உருவாக்கப்பட்டு தமிழரது ஆதாரக்கலைகளை புலம்பெயர் சூழலிலும் தான் தொடங்கிய  தினம்தொட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மொழி மற்றும் கலைகளுக்கான ஆக்கபூர்வமான செயற்பாட்டைச் செய்து வருகின்றது. 

இந்த ஆண்டு எட்டாவது ஆண்டாகத் தனது சிட்னியில் சித்திரைத் திருவிழா எனும் பெருநிகழ்வை சிட்னியின் Blacktown Leisure Centre எனும் பெரும் உள்ளரங்கத்தில் நாள் முழுக்க தமிழர்களின் கொண்டாட்டமாக நிகழ்த்தியது. முன்னைய ஆண்டுகளைவிட ஒருபடிமேலே சென்று அரங்கம் நிறைந்த மக்களின் பேராதரவோடு கொண்டாடி மகிழ்ந்தது.

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் அனகன் பாபுவுடன் கழக உறுப்பினர்கள் சக நிகழ்ச்சித் தொகுப்பாளர் மகேஸ்வரன்  பிரபா, ஶ்ரீதரன் திருநாவுக்கரசு மற்றும் காந்திமதி தினகரன் ஆகியோர் நிகழ்வைத் திறம்பட நடத்தி முடித்தனர்.

தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் என்ற அமைப்பின் வழியாக இந்த ஆண்டு கிராமிய மண்ணின் அடையாளமாகத் திகழும் விஜய் டிவி புகழ் மக்களிசை இணையர்  செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி மதுரை மண்ணின் மரக்கால் ஆட்டக் கலைஞர் மதுரை கோவிந்தராஜ் மற்றும் இந்திய கிராமியக்  கலைஞர்கள்  அணி சேர்க்க, இவர்களோடு நம் சிட்னி மக்களும் சளைத்தவர்கள் இல்லை என்னுமாற் போல சிறுவர் முதல் பெரியோர் வரைகி ராமியநடனங்கள், தெம்மாங்குப் பாடல்கள் என்று அரங்கேற்றி சபையோரை வசீகரித்தனர். காலை 10 மணி முதல் மாலை 6 வரை மிகுந்த உற்சாகத்தோடு.

சிட்னியின் சமூக அமைப்புகள், வானொலிக் கலையகங்கள், மக்களுக்குப் பயனுள்ள தேவைகளைக் கொடுக்கும் வர்த்தக நிறுவனங்களின் அங்காடிகள், விதவிதமானஉணவுஅங்காடிகள், சிறுவருக்கான விளையாட்டுக் காட்சிகள் என்று அந்தச்சூழலே ஒரு கொண்டாட்டத்துக்கானமையமாக இருந்தது.

கடந்த ஆண்டு சாதித்த ஆஸ்திரேலியத் தமிழர்களைக் "Australian Tamil Acheivers Award" கெளரவித்தது மனம் திறந்து பாராட்ட வேண்டிய ஒரு செயல். MasterChef சசி செல்லையா, ஆசிரியை யசோதை செல்வகுமாரன், டாக்டர் சுப்பராம் சுந்தர், சட்டவாளர் சந்திரிகா சுப்ரமணியன், செல்வி லஷ்மி லோகதாசன்,  ஆகிய பல்துறைச் சாதனையாளர்கள் இந்தஅங்கீகாரத்தைப்பெற்றனர்.

ஆஸ்திரேலியாவின் பாராளுமன்றப் பிரமுகர்கள் மற்றும் ஏனைய முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வந்து கலந்து சிறப்புச் சேர்த்தனர்.

சிட்னியில் சித்திரைத் திருவிழா வழியாக  எட்டு  வருடங்களாகத் தாய்த் தமிழகமும், ஈழத் தமிழகமும் இணைந்த பொதுவான தமிழ் விழாவாக நாம் எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கும் போது இது நமது தமிழருக்கான பொதுவான விழாவாகப்பார்க்க முடிகின்றது, அத்தோடு மற்றைய சமூகமக்களும் அதிகம் கலந்து கொண்டு நம் கலையரங்கத்தைப் பார்த்துரசித்தது பெருமிதமானதொரு நிகழ்வு.

இந்த ஆண்டு சிட்னியில் சித்திரைத் திருவிழாநிகழ்வின் தலைவராக அமைந்து வெகுசிறப்பானதொரு நிகழ்வை நடத்திக்காட்டிய திரு.அனகன் பாபு அவர்களுக்கும், சிட்னி தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் அத்துணை உறுப்பினர்களுக்கும் சிட்னி மக்கள் சார்பில் நாம் நன்றி என்ற சொல்லை மட்டும் பகிராது ஒவ்வொரு ஆண்டும் கரம் கொடுப்போம் இது நமக்கான விழா என்று உறுதி கொண்டு ஆதரவளிப்போம். நம் கலைகளினூடாகத் தமிழை வாழவைக்கும் இம்முயற்சி போற்றித் தொடரவேண்டியது.

கானாபிரபா



No comments: