இலங்கைச் செய்திகள்

.

வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளினால் ஆர்ப்பாட்டம்

நீதியில்லையேல் நிரந்தர சமாதானமில்லை- இலங்கை குறித்து பிரிட்டன்

பிரதமரின் பிரதி பிரதானியாக அமிர்தநாயகம்

சர்வதேச நெருக்கடிகளுக்கான பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவுக்கு விஜயம்

நெளுக்குளத்தில் வாள்வெட்டு தாக்குதல் : படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்

கனடா செல்ல முயற்சித்த 26 இலங்கையர்களுக்கு நேர்ந்தது என்ன?



வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகளினால் ஆர்ப்பாட்டம்

03/04/2019 வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று காலை 9 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.






இதுவரை வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2019 ஆம் ஆண்டுக்கான  வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி










நீதியில்லையேல் நிரந்தர சமாதானமில்லை- இலங்கை குறித்து பிரிட்டன்

03/04/2019 இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பொதுச்சபையில் உரையாற்றுகையில் ஜெரமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்
இலங்கையில் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் காணப்பட்டதை விட நல்லநிலை காணப்படுகின்றது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்
எனினும் இடம்பெற்ற தவறுகளிற்காக நீதி வழங்கப்படாத பட்சத்தில் பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதேவேளை பொதுச்சபையில் உரையாற்றியவேளை ஆசிய பசுவிக்கிற்கான பிரிட்டனின் அமைச்சர் மார்க்பீல்ட் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்திற்கு இலங்கை இணை அணுசரனை வழங்கியதை பாராட்டியுள்ளார்.
சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கும் அதேவேளை மிகவும் வேகமான முன்னேற்றம் அவசியம் எனவும் மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் குறித்த தங்கள் கடப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கையை கேட்டுக்கொள்வோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
இலங்கையில் உண்மையான முன்றேம் ஏற்படுவதை பார்ப்பதற்கு பிரிட்டன் ஆவலாக உள்ளது எனவும் மார்க்பீல்;ட் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 










பிரதமரின் பிரதி பிரதானியாக அமிர்தநாயகம்

02/04/2019 பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதி பிரதானியாக பிரதீப் அமிர்தநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிரித்தானியாவில் பட்டய நிறுவமொன்றில் சந்தைப்படுத்தல் பிரிவு, பத்திரிகை, விளம்பரம் மற்றும் நிர்வாகத் துறைகளில் 30 ஆண்டு கால அனுபவமுடையவர்.
அதேவளை ஒரு ஊடகவியலாளராகவும் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் அவர் 2015 ஆம் ஆண்டு முதல் மக்கள் லீசிங் அண்ட் பினான்ஸ் துணை தலைவராக இருந்ததுடன் கொழும்பு மேற்கு றோட்ரிக் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் அனுர பண்டாரநாயக்க அறக்கட்டளையின் பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.  நன்றி வீரகேசரி 













சர்வதேச நெருக்கடிகளுக்கான பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவுக்கு விஜயம்

02/04/2019 சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் (ICG) இலங்கைக்கான திட்ட பணிப்பாளர் அலன் கீனன் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவுக்கு நேற்றைய தினம் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.
 முல்லைத்தீவில் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த மேற்படி குழுவினர் அவர்களின் தற்போதைய போராட்ட நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.
40ஆவது ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மீண்டும் இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா சபை கால நீடிப்பை வழங்கியுள்ளதன் மூலம் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளை ஏமாற்றியுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தம்மை ஏமாற்றும் செயற்பாட்டையே மேற்கொண்டு வருவதனால் தாம் விரைவில் தமது உறவுகளை தேடி அலைந்து களைத்து இறந்துபோக வேண்டிய நிலைமைகள் ஏற்படும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்படி குழுவினரிடம் தெரிவித்தனர்.
அதன் பின்னர்  762 நாட்களாக போராடிவரும் கேப்பாபுலவு மக்களை சந்தித்து அவர்களின் நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதிக்கும் சென்று பலவேறு மக்களுடன் கலந்துரையாடியதுடன் இடங்களையும் பார்வையிட்டனர்.  நன்றி வீரகேசரி 












நெளுக்குளத்தில் வாள்வெட்டு தாக்குதல் : படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்

02/04/2019 வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வியாபார நடவடிக்கைகளுக்காக தட்டாங்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது நெளுக்குளம் சந்திக்கு அருகே வைத்து அதிகாலை 3.00 மணியளவில் முகத்தினை மறைத்துக்கொண்டு பற்றைக்குள் பதுங்கி நின்ற இருவர் அவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.
வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் தட்டாங்குளம் பகுதியினை சேர்ந்த 27வயதுடைய  நபரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் இரு கால் மற்றும் வலது கையில் பாரிய வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் யாழ்ப்பாணத்தினை தொடர்ந்து வவுனியாவிலும் வாள் வெட்டு கலாச்சாரம் தொடங்கியுள்ளமை பொதுமக்கள் இடையே பாரிய அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.  நன்றி வீரகேசரி 











கனடா செல்ல முயற்சித்த 26 இலங்கையர்களுக்கு நேர்ந்தது என்ன?

06/04/2019 கனடா செல்ல முயற்சித்த 26 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொண்டபோது
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கனகபுரம் பிரதேசத்தில் உள்ள  வீட்டில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
விசா இன்றி கனடா செல்ல முயற்சித்தவர்களே என பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. 
குறித்த சந்தேக நபர்கள் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   நன்றி வீரகேசரி 









No comments: