பனித்திரையில் அவள் முகம் - செ .பாஸ்கரன்

.

இன்று சிட்னியில் பனிப்புகார் நிறைந்த காலை காரோடி செல்லும்போது மனதில் எழுந்த கவிதை ( 03.04.2019)
பனித்திரை மூடிய பட்டு மெத்தை
வீதியெங்கும் விரிந்து கிடக்க
வானமும் பூமியும் தழுவிக் கொண்டன
முகம் பார்க்க முடியாத
புகார் குவியல்கள்
அருகே சென்று
அவள் முகம் பாரென
ஆதவனும் விலகிக் கொண்டான்
வானம் இறங்கி வந்தது
பூமியின் அழகில் மயங்கி நின்றது
வார்த்தைகள் வெளிவராத
மனதின் துடிப்பு
கண்கள் பேசின
கதைகள் ஆயிரம்
மூடிய இதழ்கள்
திறந்து கொண்டன
முளுவதும் நனைந்த
சுகத்தில் திளைத்தன
நாணம் மேலிட
விலகிக் கொண்டன
திரை விலகாத
பனிப்புகார்கள்
பாதையின் பார்வையை
மறைத்து நின்றது
புகார்களை கடந்து
என் மனத்திரையில்
கண்கள் விரிந்து கொள்ள
அவள் சிரித்தாள்
அவள் நினைவுகள்
இனிமையாய் இளமையாய்...






No comments: