அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை


இலங்கையில் நீடித்த போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் தகவல் அமர்வுகளும் நிதிக்கொடுப்பனவு மற்றும் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வுகளும் இலங்கையில் இம் மாதம் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நடைபெற்றன.
நீடித்த போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததைத்தொடர்ந்து, காலத்துக்குக்காலம், கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில் 2010 ஆம் ஆண்டு முதல் மேற்குறித்த நிகழ்வுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில் 2010 - 2011 - 2014 - 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றவாறு இந்த ஆண்டும் ( 2019 ) இலங்கையில் கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களின் ஒன்றுகூடல்கள் இடம்பெற்றன.

போர் முடிவுற்றபின்னர் நடைபெற்ற ஐந்தாவது நிகழ்வு இம்முறை யாழ்ப்பாணத்திலும் - முல்லைத்தீவு விசுவமடுவிலும் - வவுனியாவிலும் - கல்முனை பெரியநீலாவணையிலும் - கம்பஹா மாவட்டத்திலும் நடைபெற்றன.
யாழ்ப்பாணத்தில்
 02-03-2019  சனிக்கிழமை முற்பகல் 10 .00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையில் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில்,  கல்வி நிதியத்தின் வடபிரதேச தொடர்பாளர் அமைப்பான யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையம் ஒழுங்குசெய்த மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வு இந்த அமைப்பின் தற்போதைய தலைவர்   திரு. க. சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்வில்,  யாழ். அரச அதிபரின் சார்பில் யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ். நீக்கிலாப்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
கல்வி நிதியத்தின் பரிபாலன சபையினரின் சார்பில் திருவாளர்கள் முருகபூபதி, இராஜரட்ணம் சிவநாதன், நடனகுமார் ஆகியோர் பங்கேற்றனர். லண்டனிலிருந்து வருகை தந்திருந்த இலங்கையில் மாணவர் நலன்களை கவனித்து வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சிவன் அறக்கட்டளையின் தலைவர் திரு. கணேஷ் வேலாயுதம் அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
மாணவர்கள் மற்றும் பாதுகாவலர்களான தாய்மார் உட்பட ஆசிரியர்கள் மற்றும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய அலுவலர்கள் இந்நிகழ்வில் திரளாக கலந்துகொண்டார்கள்.
மாணவர்களின் சார்பில் செல்விகள் சஞ்சீகா பாஸ்கரன், தரணிக்கா, ராகவி, ஜூலியாள், செல்வன்கள் மலரவன், தமிழினியன், பிரணவன் ஆகியோரும் பெற்றோரின் சார்பில் தாய்மார் திருமதி தர்மினி மகிந்தன், மங்கையற்கரசி பாஸ்கரன் ஆகியோரும் உரையாற்றினர்.
திருமதி எஸ். நீக்கிலாப்பிள்ளை திருவாளர்கள்  க. சுசீந்திரன்,  முருகபூபதி, இராஜரட்ணம் சிவநாதன், கணேஷ் வேலாயுதம் , நல்லையா உதயகுமார் ஆகியோர் தமது உரைகளில் கல்வியின் முக்கியத்துவம் மாணவர்களின் தலைமைத்துவம், பொறுப்புணர்வு, எதிர்காலம் குறித்த சிந்தனைகள் தொடர்பாக வலியுறுத்திப்பேசினர்.
கல்வி நிதியம் இந்த ( 2019 ) ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய படிவத்தை மாணவர்கள் எவ்வாறு பூர்த்தி செய்து தரவேண்டும் என்பது தொடர்பான விளக்கமும் தரப்பட்டதுடன், G.C.E (O/L) G.C.E ( A/L) பரீட்சைகளுக்கு தோற்றவிருக்கும், மற்றும் இந்த ஆண்டு தோற்றிய மாணவர்களுடனான பிரத்தியேக சந்திப்பும் கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.
குறிப்பிட்ட தரங்களில் பரீட்சை முடிந்த பின்னர், பெறுபேறுகள் (Results) வரும்வரையில் மாணவர்கள் ( சுமார் நான்கு  மாதங்கள்) மேற்கொள்ளவேண்டிய பயிற்சிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மாணவர்களுக்கான 2019 முதல் காலாண்டுக்கான ( ஜனவரி - பெப்ரவரி - மார்ச் ) நிதிக்கொடுப்பனவை நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் வழங்கினார்கள். இதனையடுத்து மதியபோசன விருந்துபசாரம் நடைபெற்றது. யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தைச்சேர்ந்த திரு. இன்பரூபன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
முல்லைத்தீவில்
03 -03-2019 ஆம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவு விசுவமடு சனசமூக நிலையத்தில் வன்னிப்பிரதேச மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும் யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் அலுவலர் திரு. இன்பரூபன் தலைமையில் நடைபெற்றது.
திரு. பாஸ்கரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது. இறுதிக்கட்ட போரினால் நேரடியாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச்சேர்ந்த மாணவர்களும் தாய்மாரும்  இந்த ஒன்றுகூடலில் கலந்துகொண்டதுடன், தமது சமகால பிரச்சினைகளையும் எடுத்துரைத்தனர். இம்மாணவர்களுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.
வவுனியாவில்
03-03-2019 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள எமது கல்வி நிதியத்தின் தொடர்பாளர் அமைப்பின் பணிமனை வளாகத்தில்  ( Voluntary Organization for Vulnerable Community Development    (VOVCOD)  Marakkarampalai Road, Nelukkulam) மாணவர் ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும் நடைபெற்றது. இம்மாணவர்களுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான முதல் காலாண்டு நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.
மாணவர்கள் தமது சுயஆற்றலை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தினர்.
கல்முனையில்
05-03-2019 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  முற்பகல் 10.00 மணிக்கு அம்பாறை மாவட்டத்தில்,  கல்முனை பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் மாணவர் ஒன்றுகூடலும் நிதிக்கொடுப்பனவும் வித்தியாலய அதிபர் திரு. ந. கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு பிரதேச சமூகப்பணியாளர் திரு. த. கோபாலகிருஷ்ணனும் கல்வி நிதியத்தின் உதவிபெற்று இந்த வித்தியாலயத்தில் பயின்று கிழக்கு பல்கலைக்கழகம் பிரவேசித்து பட்டதாரியான செல்வி கே. ஹர்சினியும் ( உதவிய அன்பர்:  திருமதி தமயந்தி சோமஸ்கந்தன்) வித்தியாலயத்தின் பிரதி அதிபர் திருமதி த. சந்திரசேகரம், சீர்மிய ( Counselling Teacher)  ஆசிரியை திருமதி சுபாஷினி கிருபாகரன் திருமதி புலேந்திரன்  மற்றும் ஆசிரியர்கள் திருவாளர்கள் சுதர்சன்,  சதீஸ்குமார், ஆகியோரும் உதவிபெறும் மாணவர்களின் தாய்மாரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இம்மாணவர்கள்  மத்தியிலும்  நடப்பாண்டிலிருந்து அறிமுகமாகும் ஒரு பக்கத்தில் அமைந்த மாணவர் முன்னேற்றக்குறிப்புகளை பதிவுசெய்யும் புதிய படிவம் குறித்த தகவல் அமர்வு நடத்தப்பட்டது.  இம்மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவும் வழங்கப்பட்டது.
கம்பஹா மாவட்டத்தில்
09-03-2019 ஆம் திகதி சனிக்கிழமை கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் இக்கல்லூரியில் பயிலும் கல்வி நிதியத்தின் உதவி பெறும் மாணவர்களுக்கான நிதிக்கொடுப்பனவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி கல்லூரி அதிபர் திரு. என். புவனேஸ்வரராஜா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முருகபூபதி, இராஜரட்ணம் சிவநாதன் உட்பட கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர்பொது மக்களும் கலந்துகொண்டனர்.
பிரான்ஸ் நாட்டில் வதியும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவி திருமதி சிவலிங்கராஜா ராணிமலர் அவர்கள்,  தனது தந்தை ( அமரர் ) செல்லையா அவர்களின்  ஞாபகார்த்தமாக குறிப்பிட்ட   மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினார். அவரது சார்பில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்பர் திரு. மைக்கல் குறிப்பிட்ட பரிசுப்பொதிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்வி நிதியத்தின் உதவிபெற்று பல்கலைக்கழகம் சென்று,  பட்டதாரியாகி இதே கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றும் செல்வி வி. லோஜினியும் தற்போது நுவரேலியா மாவட்டத்தில் பிரதி கல்விப்பணிப்பாளராக பணியாற்றும் செல்வி பாமினி செல்லத்துரையும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி:
* யாழ்ப்பாணம் அரச அதிபர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தை கல்வி நிதியத்தின் நிகழ்ச்சிக்காக வழங்கி உதவிய யாழ். அரச அதிபர் திரு. நா. வேதநாயகன் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நீக்கிலாப்பிள்ளை மற்றும் சிவன் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் திரு. கணேஷ் வேலாயுதம் உட்பட பத்திரிகையாளர்கள். யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலைய அலுவலர்கள்

*  யாழ்ப்பாணம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திரு. க. சுசீந்திரன் தலைமையில் இயங்கும் அலுவலர்கள்,
*  வவுனியா VOVCOD தொடர்பாளர் செல்வி நிரோஷினி,  ஆசிரியைகள் செல்வி புனிதமலர் சுப்பையா, திருமதி லதா பாலன்
* கல்முனை பெரியநீலாவணை விஷ்ணுவித்தியாலய அதிபர் திரு. கமலநாதன் மற்றும் ஆசிரியர்கள்,
* நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி அதிபர் திரு. என். புவனேஸ்வரராஜா மற்றும் ஆசிரியர்கள்,
*  இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் ஊடாக மாணவர்களுக்கு உதவிவரும் அன்பர்கள்
அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.
முருகபூபதி
தலைவர்
இலங்கை மாணவர் கல்வி நிதியம் - அவுஸ்திரேலியா
--> ---------------0--------------------0---------------------0-----------------0----------------






No comments: