பாரிசு நகருக்கு வந்த ஒரு பேனா போராளி சொன்ன கதைகள் - துரைசிங்கம் - பிரான்ஸ்

.                               

பிரான்சில் முளைத்து பாரெல்லாம் தமிழ் பரப்பும் கோமகனின்நடுஇணைய இதழின்
ஏற்பாட்டில், கடந்த ஞாயிறன்று  நடந்த இலக்கியச்சந்திப்பில் அவுஸ்திரேலியாவில் வதியும் படைப்பிலக்கியவாதியும்  ஊடகவியலாளருமான முருகபூபதியின்  புதிய நூல் சொல்லத்தவறிய கதைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
 இலக்கியவாதியும் மொழிபெயர்ப்பாளருமான  வாசுதேவன்
தலைமையில் நடு ஆசிரியர் கோமகனின் ஆரம்ப உரையுடன்
கலந்துரையாடல் ஆரம்பமானது. பாரிசு படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள்
ஆர்வத்துடன் சபையை அலங்கரித்தனர்

எழுத்தாளர் முருகபூபதி ஊடகராக படைப்பாளியாக சமூக அக்கறையாளனாக புடம் போடப்பட்டவர்.  மேலும் மேலும் இவற்றில் துலங்கி வருபவர்.





1972
இல் ஆரம்பமான இவரது ஊடகப்பயணம் பல நெருக்கடிகள் ஆபத்துகளை தாண்டி பயணிக்கிறது. இலங்கையில் 1987 இற்கு முன்னர்  யுத்த காலத்தில் ஊடகர்கள் எதிர்கொண்ட அத்தனை பிரைச்சினைகளுக்கும் முகம் கொடுத்தவர் .  இதனை  அவர் எழுத்தில் பல வடிவங்களில் பதிவு  செய்திருந்தாலும் பாரிஸில் நிகழ்ந்த  சந்திப்பில் நேரடியாக அவரது வாயிலிருந்து வார்த்தைகளாக அந்தக்கதைகளை  உள்வாங்கி கொண்டோம்.

சிறுகதை, நாவல், கட்டுரை, இலக்கிய மடல், புனைவு சாராத இலக்கியம்,மொழிபெயர்ப்பு என  இதுவரையில்  இருபத்தியிரண்டு  நூல்களை இந்த எழுத்தாள பிரமா பிரசவித்துள்ளார் .
ஒரு குழந்தையை ஒரு தாய்  பிரசவிக்க பத்து மாதங்கள் ஆகும். ஆனால்,  இவரது இலக்கிய பிரசவங்கள்  சில நிமிடங்களிலேயே நிகழ்ந்து விடும்.  ஒவ்வொரு பிரசவத்தின் போதும் வலிகளை அனுபவிக்கும் தாயானவள் அடுத்த குழந்தை வேண்டாம் என்பளாம்.  படைப்புகளின்போது இவருக்கும் வலி, சுமைகள் இருந்தாலும் இவரது பேனா அடுத்த
படைப்புக்கு தயாராகும்.  அதனால் இவரை ஒரு பேனா போராளி எனவும் அடையாளம்
காணலாம். 


வீரகேசரி வாரவெளியீட்டில்  இலக்கிய பலகணி என்ற பத்தி எழுத்தினை ரஸஞானி என்ற
பெயரில் அன்று எழுதி வந்தார் . அந்த எழுத்துகள்தான் அவர் மீதான கவனிப்பை அன்றைய காலங்களில் எனக்குத்  தந்தது. அவரை சந்திக்கின்ற போது ரஸஞானி பிறந்த கதையை அறிய வேண்டும் என்றிருந்தேன்.
இலங்கையில்    இவரைக்கண்டேன், கதைத்தேன், பழகினேன் அது மட்டும் அவரது மொழியில்
மறந்த கதை யாகிவிட்டது.
பாரிஸ் சந்திப்பில் இவர் தனது அனுபவங்களை படைப்புகளை வாழ்வியலை பற்றி  எல்லோருடனும் மனம்விட்டு பேசினார். 1987 இல் கங்காரு நாட்டு சரணாலயத்தில் தஞ்சமடைந்த இந்த எழுத்துப் பறவையை
புகலிடத்தில் சிறகு முளைத்து பறக்க வைத்தது பிரான்சு மண் என்பதை நன்றியுடன்
நினைவு கூர்ந்தார்.
  “ ஓசை மனோ, ஈழநாடு குகநாதன், தமிழன் காசிலிங்கம் ஆகியோரின் ஊடகங்களில் சிறகு விரித்து பறந்தேன்   என்றார்.
பேப்பர் பேனாவைத் தவிர தனக்கு எதுவும் தெரியாதுஎன்று வெளிப்படைத்தன்மையுடன்
கூறிய இவர்,  சமூகத்துக்காக பேசுவதும் சமூகத்தை பேசவைப்பதும் படைப்பாளிகளின்
பணி. பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்க வேண்டும்என்றார். இதற்கு உதாரண புருசராக  இவரே  செயற்படுகிறார். முன்மாதிரியாகிறார்.



இலங்கையில் நீடித்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வறுமை நிலையை உணர்ந்து அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் உழைத்து வருகிறார். தனது நண்பர்களின் உதவியுடன் இந்த திட்டத்தை நடைமுறை படுத்துகிறார்.
1988
இல் அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர் கல்வி நிதியம் என்ற தன்னார்வ  தொண்டு நிறுனத்தை  உருவாக்கி இலங்கையில் வடக்கு – கிழக்கில்  பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு  உதவும் கல்வி பணியை  தொடருகிறார்.

இதுரையில்  சுமார்  மூவாயிரம்  மாணவர்கள் இந்தத் திட்டத்தினால் பயனடைந்துள்ளனர் என்பது தெரியவருகிறது.   இவர்களில் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள்
 
பல்கலைக்கழக கல்வியையும் நிறைவு செய்துள்ளனர்.  பல மாணவர்கள் அரச  பணிகளில் இணைந்துள்ளனர்.  இந்த நிதியம் அவுஸ்திரேலியாவில் சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது . இவ்வாறு  முருகபூபதி கூறிய போது நாம் ஆச்சரியத்தில் மூழ்கினோம்.

மாணவ பராயத்தில் வறுமையின் நிறம் சிவப்பு என்பதை உணர்ந்தமையினாலேயே  புலம்பெயர்ந்த பின்னர்,
முருக பூபதி இந்த கல்வி மேம்பாட்டு பணியை முன்னெடுத்து வருகிறார்.

இவரது  புதிய  நூல்  சொல்லத்தவறிய கதைகள் நூல் அறிமுகம் செய்யப்பட்டபோது,  எழுத்தாளரும் பெண்ணியச்சிந்தனையாளருமான
சி.புஸ்பராணிக்கு முதலாவது பிரதி நூலாசிரியர் முருகபூபதியினால் வழங்கப்பட்டது. இலக்கிய வாதிகள் வி.ரி.இளங்கோவன்,  ஓசை மனோ,  ஊடகவியலாளர்
செ. செல்வரத்தினம் ஆகியோர் உட்பட பலர் பிரதிகளை பெற்றுக்கொண்ட பின்னர்,  தத்தமது கருத்துகளை கூறினார்கள்.

தமிழகம், இலங்கை, புகலிடம் முதலான தளங்களில்  சமகால  இலக்கியம் குறித்த உரையாடலும் இடம் பெற்றது. முருபூபதியின்  வாழ்வையும் பணிகளையும்  சித்திரிக்கும் 
ரஸஞானி ஆவணப்படத்தையும்  இந்த இலக்கிய சந்திப்பில் பார்வையாளருக்கு காண்பித்திருந்தால்,  முருகபூபதியை மேலும் அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்கும்.
எனினும்  இச்சந்திப்புக்கு முதல்நாள்   மற்றும்  ஒரு  நண்பர்கள்  வட்டத்தில்   நான் அந்த ஆவணப்படத்தை பார்த்தபோது முருகபூபதியின் பன்முக செயற்பாட்டையும்
புரிந்து கொண்டேன்.
              தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுடன் அவருக்குள்ள உறவும் தொடர்பும் ஆழமானது.  எல்லோருடனும் நட்பை பேணியவர் .  எவரையும் காயப்படுத்தாத
வார்த்தைகளின் சொந்தக்காரன்.
எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருப்பவர். அதனால்தான்
முருகபூபதி ஒரு ரோபோ என்று அவரது மனைவி ரஸஞானி ஆவணப்படத்தில்  கூறியுள்ளார். 

 “ஈழத்தமிழர்கள் எங்கிருந்தாலும் நிமிர்வுடன் நிற்பார்கள் என்பதை பாரிஸ் லாசப்பலுக்கு வரும் எவரும் புரிந்து கொள்வார்கள்  என்பதை அவர்  பூடகமாகவும்  தெரிவித்தார். இங்குள்ள தமிழரின் நிமிர்வையும் திமிரையும் கண்டு வியந்தார்.
பிரான்சிலுள்ள தமிழரின் சமூக பொருளாதார வாழ்வியல் ஆய்வு செய்யப்பட வேண்டும்.  அதற்காக  யாராவது  தேடலில் ஈடுபட வேண்டும்.  எனவும்
அடுத்த சந்ததியிடம்  வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் அதற்கான ஊக்குவிப்புகளை தொடங்க வேண்டும் எனவும் முருகபூபதி தனது உரையில் வலியுறுத்தினார்.
---0---

No comments: