வேறு யாருமில்லை லெனின் மொறயஸ் - பகுதி 3 - ச சுந்தரதாஸ்


1960ம் ஆண்டுகளின் ஆரம்பம் தொட்டு இலங்கைத் திரையுலகில் புதிய கோஷம் ஒன்று உருவாகத் தொடங்கியது. அதுவரை காலமும் இந்தியாவில் இருந்தே படத்தின் டைரக்டர், இசையமைப்பாளர், பாடகர், பாடகிகள், ஒளிப்பதிவாளர் என்று பலர் இலங்கை வந்து சிங்களப் படங்களின் உருவாகத்தில் பணிபுரிந்து வந்தார்கள். இவர்களிடமே பல இலங்கைக் கலைஞர்கள் தொழில் பயின்றார்கள். ஆனால் இந்த நிலைக்கு எதிராக உள்ளுர்க் கலைஞர்களின் குரல்கள் மெல்ல் மெல்ல ஒலிக்கத் தொடங்கின. 

இலங்கையில் உருவாகும் சிங்களப் படங்களை இலங்கைக் கலைஞர்களே உருவாக்க வேண்டும் இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வரத் தேவையில்லை என்ற கோஷம் வலுப்பெறவே அவர்களின் வருகை படிப்படியாக குறையத்தொடங்கியது. உள்ளுர் கலைஞர்களே படங்களின் உருவாக்கத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். தமிழ் சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்த எம். மஸ்தான் மட்டும் இந்தியாவில் இருந்து இலங்கை வந்து சில ஆண்டுகள் தங்கியிருந்து சினிமாஸ் குணரத்தினம் தயாரித்த படங்களை டைரக்ட் செய்யலானார். 

இவருடைய உதவியாளராகவும் இவரிடம் ஒளிப்பதிவு நுணுக்கங்களை பயின்ற வாமதேவன் சினிமாஸ் தயாரித்த படங்களுக்கு ஒளிப்பதிவாளராக, மஸ்தானை தனது குருவாக ஏற்று பணியாற்றலானார். ஆனால் லெனின், வாசகம், ஆனந்தன் ஆகியோர் சிலோன் ஸ்டுடியோஸ் சம்பந்தப் படங்களிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். 


ராஜாபாலி மீண்டும் தனது அடுத்த படத் தயாரிப்பைத் தொடங்கினார். தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற கற்பகம் படத்தை சுதுதுவ (வெள்ளை மகள்) என்ற பெயரில் தயாரிக்கத் தொடங்கினார். இப் படத்தின் இயக்குனராக லெனின் பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்தப் படத்தின் உதவி டைரக்டராக எஸ். ஏ. அழகேசன் லெனினுடன் இணைந்து கொண்டார். ஏற்கனவே லெனினுடன் நாடகங்களில் பங்குபற்றிய அழகேசன் இப்படம் முதல் லெனினுடன் உதவி இயக்குனராகி, கதை வசனம் எழுதுவதிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். இவர்களுடைய இந்த கூட்டு பின்னர் பல ஆண்டுகளுக்கு பல படங்களுக்குத் தொடர்ந்தன. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது இடம்பெற்ற ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். படத்தில் ரொய் டி சில்வாவும், அசோக பொன்னம்பெருமவும் பங்கு பெறும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அசோக பொன்னம்பெரும தனது வசனங்களை பேசி நடிக்கும் போது ஒர் இடத்தில் வசனத்தை சற்று மாற்றி பேசிவிட்டார். இதனால் அர்த்தம் மாறிவிட்டது. இதனை கவனித்துக் கொண்டிருந்த நான் உடனே அதனை அசோகவிடம் தெரிவித்தேன். அதனை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களைவிட உனக்கு அதிகம் சிங்களம் தெரியுமா என்று சற்று இனக்காரமாக என்னிடம் கேட்டுவிட்டார். இதற்குள் அந்த இடத்தில் லெனின் வரவே அவரிடம் வசனத்தில் ஏற்பட்ட தவறு சொல்லப்பட்டது. லெனின் காட்சியை மீண்டும் எடுப்போம் என்றவுடன் அசோக உங்கள் இஷ்டம் என்று தயாரானார். ஆனால் மீண்டும் காட்சி படமாக்கப்பட்ட போது வசனத்தை சொதப்பினார். அவர் வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறார் என்பது லெனினுக்கு தெரிந்துவிட்டது. 

மீண்டும் காட்சி படமாக்கப்பட்ட போது அதேபோல வசனத்தில் தவறு விட சரி சரி எடுத்த வரை போதும் என்று லெனின் அந்தக் காட்சியை படமாக்குவதை நிறுத்திவிட்டார். பின்னர் அசோகவை ஒலிப் பதிவு கூடத்திற்கு அழைத்து அந்த வசனங்களை மட்டும் அவர் குரலில் காட்சிக்கு ஏற்ற, தொனியில் ஒலிப்பதிவு செய்து கொண்டார். அசோகவுக்கும் ஏனைய கலைஞர்களுக்கும் ஒரே குழப்பம். இவர் எவ்வாறு இந்தக்காட்சியை பூர்த்தி ஆக்கப்போகின்றார் என்று. 

ஆனால் லெனின் என்ன செய்தார் தெரியுமா? காட்சியை விட்ட இடத்தில் இருந்து ரொய் டி சில்வாவை மட்டும் வைத்து எடுத்தார். அசோக பொன்னம்பெரும வசனம் பேசும் போது கமரா ரொய் டி சில்வா மீதே இருக்கும். இதனால் காட்சியில் ரொய் டி சி;ல்வா மட்டுமே தெரிவார். அசோக தெரியமாட்டார். அவரினால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் மட்டுமே கேட்கும். இவ்வாறு அந்தக் காட்சியை படமாக்கி தான் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளர், டைரக்டர் என்பதை தனது முதல் படத்திலே நிரூபித்தார் லெனின். 

வசனத்தை சொதப்பிய நடிகருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், மீண்டும் மீண்டும் காட்சியை எடுத்து படச்சுருள்களை வீணாக்காமல் மிக சாதுர்யமாக லெனின் நிலைமை சமாளித்தது தயாரிப்பாளர் ராஜாபாலிக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. சுதுதுவ படம் ரசிகர்களையும் கவர்ந்தது.

ராஜாபாலி ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஒருவரை டைரக்டராக்குவதில் ஆர்வம் காட்டிவந்தார். முதலில் ஆனந்தன், பின்னர் லெனின் என்ற வரிசையில் அடுத்த படத்தின் டைரக்டர் அழகேசன் நீங்கள் தான் என்று என்னிடம் அடிக்கடி கூறுவார். ஆனால் திடீரென சுகவீனமுற்ற ராஜாபாலி காலமானது பலருக்கு அதிர்ச்சையும் கவலையும் தந்தது என்கிறார் அழகேசன்.

லேனினை பொறுத்த வரை ஒரு தரமான ஒளிப்பதிவாளராகத்தான் திகழவேண்டும் என்பதிலே ஆர்வமாக இருந்தார். ஆனால் அவரிடம் இருந்த ஆற்றல் அவரை டைரக்ஷன் துறைக்கும் இழுத்துச் சென்று சுதுதுவ வின் வெற்றிக்கு 1966ம் ஆண்டு வழிவகுத்தது. 







.







கொழும்பு மாநகர கட்டிடம் அழகாக உருவாக்கி இருந்த காலம் . எல்லோரும் வந்து அந்த அழகான கட்டிடத்தை ஆசை தீர பார்த்துச் செல்வார்கள். இந்தக் கட்டிடத்தில் ஒரு டுயட் பாடல் காட்சியை படமாக்கி சுது துவ படத்தில் இணைக்க வேண்டும் என்று லெனின் ஆவல் கொண்டார்.

ஒருநாள் இரவு அந்த அழகான வெள்ளை நிறக் கட்டிடத்திற்கு முன்னால் பாடல் காட்சி படமாக்கப் பட்டது. காட்சி படமாக்கப் பட்ட முறையை ரசிகர்கள் விரும்பி பாராட்டினார்கள் .

அதே போல் கே ஏ டபிள்யூ பெரேரா இயக்கிய பைசிக்கிள் ஹோரா  (சைக்கிள் திருடன்)  படத்தில் ஒரு பாடல் காட்சி, கொழும்பு நகரில் அந்தக் காலத்தில் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு அனுப்பப் படும். சைக்கிளில் வரும் ஒருவர் குறிப்பிட்ட வீடுகளுக்கு சென்று அவர்கள் தரும் உணவை சைக்கிள் கரியரில் ஒரு பெட்டியில் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சென்று கொடுக்க வேண்டும். 



இந்தத் தொழிலை அந்தக் காலத்தில் பலர் செய்து வந்தனர். இவர்கள் ஒரு கோஸ்டியாகச் சேர்ந்து பாடும் காட்சியை படமாக்க விரும்பி அதனை தனது படத்தின் ஒளிப்பதிவாளர் லெனினிடம் தெரிவித்தார்

லெனின் உடனே ஒரு கமராவைத் தன தோளிலே வைத்துக்கொண்டு தானும் ஒரு சைக்கிளில் அமர்ந்து கொள்ள மற்றொருவர் அதனை ஓட்டிச் செல்ல ஏற்பாடு செய்தார் . லெனினின் சைக்கிள் , காட்சியில் ஆடிப்பாடி நடிக்கும் நடிகர்களிடையே செல்ல தொழில் இருந்த காமராவினால் அருமையாக படமாக்கினார் லெனின் .
இந்தப் பாடல் காட்சி படத்திற்கு சிறப்புச் சேர்த்தது .

இவ்வாறு லெனினின் கரா வண்ணம் படத்திற்கு படம் சிறப்பாக வெளிப்பட்டது. இக்கால கட்டத்தில் தான் லெனினை நெறியாளராக மிளிரச் செய்யும் வாய்ப்பு அவரைத் தேடிவந்தது.

தாஸ் முகம்மத் என்ற பிரபல வர்த்தகர் அக்குரனையைச் சேர்ந்தவர் . இவர் கொழும்பில் தனது வர்த்தகங்களை மேட்கொண்டிருந்தார். 1968ம் ஆண்டளவில் ஒரு சிங்களப் படத்தை தயாரிக்க  வேண்டும் என்ற ஆவல் இவருக்கு உண்டானது.  உடனே தனது திரை உலக நண்பர்களுடன் சேர்ந்து அதற்கான செயலில் ஈடுபடலானார் .

சேக்முக்த்தார் என்ற இந்தி நடிகர் பட தயாரிப்பாளர், இவர்  1959ம் ஆண்டு தோஉஸ்தாத் என்ற படத்தைத் தயாரித்து அதில் தானும் நடித்திருந்தார். படத்தின் கதாநாயகனாக பிரபல நடிகர் ராஜ்கபூரும் நாயகியாக நடிகை மதுபாலாவும் நடித்திருந்தார்கள். ஆறு ஆண்டுகள் கழித்து மாடர்ன்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழில் தயாரித்தார்கள்.  படத்திற்கு இந்திப் படத்தின் தமிழாக்கமாக இருவல்லவர்கள் என்ற பெயரைச் சூட்டினார்கள். படத்தின் பெயரை தமிழாக்கிய போதும்  திரைக் கதையில் சில மாற்றங்களைச் செய்து விறுவிறுப்பைக் கூட்டியிருந்தார்கள்.

அப்போதுதான் அறிமுகமாகியிருந்த ஜெயசங்கர் கதாநாயகனாக நடிக்க நாயகியாக எல் விஜயலட்சுமி , மனோகர் தங்கவேலு ஆகியோரும் நடித்திருந்தார்கள். படத்திற்கு வேதா இசை அமைத்திருந்தார் பாடல் பெரும் ஹிட்டானது.

சிங்களப் படம் தயாரிப்பது என்று தீர்மானம் ஆனவுடன் தாஸ் முகம்மத் இருவல்லவர்கள் என்ற படத்தை உருவாக்குவது என்று முடிவு செய்தார். படத்தின் கதாநாயகனாக காமினி பொன்சேகாவும் நாயகியாக சந்தியா குமாரியும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். படத்தின் ஒளிப்பதிவை வி வாமதேவன் ஏற்றுக்கொண்டார்.
படத்தை டைரக் செய்யும் பொறுப்பு பந்துல குணசேகரவிடம் ஒப்படடைக்கப் பட்டது . படப்பிடிப்பு தொடக்கி சில காலத்துக் குள்ளேயே  தயாரிப்பளருக்கும் நெறியாளருக்ம் இடையே உரசல் ஏற்படத் தொடங்கிவிட்டது.  ஒரு கட்டத்தில் இரு வல்லவர்களில் யார் வல்லவன் என்ற பிரச்சினை தலை தூக்கிவிட்டது . விளைவு நெறியாளர் பொறுப்பில் இருந்து பந்துல குணசேகர விலகிக் கொண்டார் .

தொடரும்




No comments: