இமைகள் கண்களுக்கு பாதுகாப்பானது. ஆனால், கண்களுக்குத்தெரிவதில்லை.
இமைகளைப்பார்க்க கண்ணாடிதான் தேவை.
அதுபோன்று நாமறியாத பல அரிய பக்கங்களை தெரிந்துகொள்வதற்கு யாராவது
எழுதிவைத்துச்சென்ற பதிவுகள்தான் உதவுகின்றன. அதனால் அந்தப்பதிவாளர்கள் காலத்தின்
கண்ணாடியாகத்திகழுகிறார்கள்.
நான் வசிக்கும் மெல்பனில் ஒரு வாசகர் வட்டம்
இயங்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை வாசகர் வட்டத்தின் சந்திப்பு கலை,
இலக்கிய சுவைஞர்களின் இல்லத்தில்
நடக்கும். இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்பவர் திருமதி சாந்தி சிவக்குமார். இவர் தமிழ்நாட்டிலிருந்து அவுஸ்திரேலியா
மெல்பன் வந்து, தனது குடும்பத்தினருடன்
இருபது வருடங்களுக்கும் மேலாக வசிக்கிறார். கலை, இலக்கிய ஆர்வலர்.
குறிப்பிட்ட மெல்பன் வாசகர் வட்டத்தில் ஒருநாள், ஜெயகாந்தன் மறுவாசிப்பு அரங்கு நடந்தது.
அந்த நிகழ்ச்சி முடியும்வேளையில், சாந்தி,
வருகை தந்திருந்தவர்களிடம் "உனக்குப்படிக்கத்தெரியாது" என்ற தமிழகத்தின்
வாசல் பதிப்பகம் வெளியிட்ட கமலாலயன் எழுதிய நூலைத்தந்து, "இதனைத்தான் அடுத்த வாசகர் வட்டத்தில்
கலந்துரையாடவிருக்கிறோம்." என்றார்.
ரயிலில் திரும்பும்போதே படித்துக்கொண்டுவந்தேன். அதன்
பக்கங்களும் வழியில் தென்படும்
ரயில்நிலையங்களைப்போன்று கடந்து
கொண்டிருக்கையில், எனது நினைவில்
வந்துகொண்டிருந்தவர்கள் வடமராட்சி கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகர்
( அமரர் ) கா. சூரன் அவர்களும் அவரது சுயசரிதையை பதிப்பித்த எனது இனிய நண்பர் (அமரர்)
ராஜஶ்ரீகாந்தனும்தான்.
கமலாலயன்
பதிப்பித்திருக்கும் நூலின் நாயகி மேரி மெக்லியோட் பெத்யூன் அமெரிக்காவில் தென் கார்லோனியாவில் மெய்ஸ்வேலி என்ற கிராமத்தில் 1870 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் திகதி கறுப்பின
அடிமைகளின் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்திருக்கிறார்.
இலங்கையில்
வடமராட்சியில் கரவெட்டி கிராமத்தில் கா. சூரன் அவர்களும், 1881 ஆம் ஆண்டு
ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி ஒரு அடிநிலை மக்களின் குடும்பத்தில் பிறந்திருக்கிறார்.
மேரி
மெக்லியோட் பெத்யூன் 1955 இலும் கா. சூரன் 1956 இலும் மறைந்திருக்கிறார்கள்.
கமலாலயன் பதிப்பித்திருக்கும் நூலுக்கும் ராஜஶ்ரீகாந்தன் பதிப்பித்திருக்கும்
நூலுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளை என்னால்
காணமுடிந்தது. அந்த நூல்களில் இடம்பெறும் ஆளுமைகளை ஒப்பீடு செய்வதல்ல எனது நோக்கம்.
மேரி
பிறந்த குடில் அங்கு காட்சியகமாகியிருக்கிறது.
சூரனின் சிலை கரவெட்டியில் அவர் உருவாக்கிய கல்விச்சாலையின் முன்றலில்
காட்சியளிக்கிறது. மேரியின் குடிலையும்
அவரது வாழ்வையும் பணிகளையும் விக்கிபீடியாவில் விபரமாகத்தெரிந்துகொள்ள
முடிந்திருப்பதுபோன்று சூரன் பற்றியும் விக்கிபீடியாவில் எமது தலைமுறையினர்
அறியமுடிகிறது.
ஆனால்,
மேரி மேற்குலகில் கொண்டாடப்பட்டவாறு எங்கள் தேசத்தின் சூரன் எம்மவர் மத்தியில் நாடளாவிய ரீதியில்
கொண்டாடப்பட்டாரா? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது...!? மேரி மெக்லியோட் பெத்யூன்
அமெரிக்காவுக்கு வெளியே அயல்நாடுகளிலும் கொண்டாடப்படுகிறார்!
படிப்பறிவே
இல்லாமல் பருத்தி வயல்களுக்கு வேலைக்குச்சென்றுவந்திருக்கும் சிறுமி மேரி, ஒருநாள்
அந்தப்பண்ணை வீட்டின் முன்னால் நின்றாள்.
அது அவளது தாய் பாட்ஸியை அடிமையாக விலைக்கு வாங்கிய பண்ணையாரின் வீடு. அந்தவீட்டிலிருந்த வெள்ளை இனத்து சிறுமிகள் இவளை
விளையாட அழைக்கின்றனர். ஆனால், முன்வாயிலால் கறுப்பின அடிமையான சிறுமி
மேரிக்குச்செல்லமுடியாது. பின்வாசல் வழியாக மேரி அழைக்கப்படுகிறாள். அந்த வீட்டின் உட்புறத்தோற்றம் கண்டு மேரி
வியக்கிறாள். அவளுக்கு எல்லாமே புதியதாகவும் புதுமையாகவும் இருந்தன. அந்த வீட்டின் மேசையில் இருந்த வண்ணமயமான ஒரு
புத்தகத்தை கண்டுவிட்டு, அதனை ஆவலோடு
எடுத்துப்பார்க்கிறாள்.
அதனைப்பார்த்துவிடும்
அந்த வீட்டின் வெள்ளை இனத்துச்சிறுமி, அருகே ஓடிவந்து மேரியின் கையிலிருந்த
அந்தப்புத்தகத்தை பறித்து, "அதனைத்தொடாதே
உனக்குப் படிக்கத் தெரியாது" என்கிறாள்.
மேரி
விதிர்விதிர்த்துப்போகிறாள். அங்கிருந்து அழுதுகொண்டே தன்வீடு வந்து, தனக்கு நேர்ந்த அவமானத்தை பெற்றோரிடம் சொல்லி
தானும் அத்தகைய புத்தகங்கள் படிக்கவேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறாள்.
"
நாங்கள் அவர்களின் அடிமைகள். எமக்கு அவர்கள்தான் எஜமானர்கள். அவர்களின் பருத்தி
வயல்களில் வேலை செய்தால்தான் எமக்கு உணவு தருவார்கள். எமக்குப்படிக்கமுடியாது
மகளே" என்கின்றனர் பெற்றோர்கள்.
இவ்விடத்தில்தான்
சூரன் சுயசரிதை நூலின் முன்னுரையில்
பேராசிரியர் கா. சிவத்தம்பி, பதினாறரைப்பக்கங்களில் எழுதியிருக்கும் நீண்ட
குறிப்புகள் என்னைப்போன்ற வடக்கிற்கு
அப்பால் மேற்கிலங்கையில் பிறந்து வாழ்ந்திருக்கும் வாசகனுக்கு பல அதிர்வூட்டும்
செய்திகளைத்தருகின்றன.
யாழ்ப்பாண
சமூகத்தின் தேசவழமைச்சட்டத்தின் பிரகாரம் மேல்சாதி என்றழைக்கப்படும் வெள்ளாளருக்கு
அடிமை - குடிமை சேவகம் செய்பவர்களின்
தொழில் தொடர்பான வேறுபாடுகளை காண்பிக்காமல், அவர்கள்
அனைவருமே Slaves (அடிமைகள்) தான்
என்று (ஆங்கில வடிவத்தில்)
பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
18 ஆம்
நூற்றாண்டில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்களோ,
அவ்வாறே அதே நூற்றாண்டு காலப்பகுதியில்
இலங்கை வடபகுதியில் வாழ்ந்த அடிநிலை
மக்கள் நடத்தப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் தென் கார்லோனியாவில் பிறந்த
மேரி, அடிநிலை மக்களின் விடிவெள்ளியாக தோன்றியிருப்பதுபோன்று இலங்கையில்
வடமராட்சியில் பெரியார் சூரன் அதே காலப்பகுதியில் பிறந்து, தனது சமூகத்தின்
எழுச்சிக்காக குறிப்பாக கல்வி மறுமலர்ச்சிக்காக மேரி மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்கு
ஒப்பான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.
ஒரே
காலப்பகுதியில் இவர்கள் இருவரும் பிறந்தும் மறைந்துமிருந்தாலும், ஒருவர் பற்றி ஒருவர் அறியாமல் அவர்
அமெரிக்கக்கண்டத்திலும் இவர் ஆசியாக்கண்டத்திலிருந்தும் தத்தம்
சமூகத்தினருக்காக, அம்மக்கள் எதிர்நோக்கிய கண்டங்களை
கடந்துசென்றிருக்கிறார்கள்.
சூரன்
தான் கடந்து வந்த கரடுமுரடான பதையை தனது சுயசரிதையில் எழுதிவைத்திருந்தமையால்,
அவரது பேரன் ஏகாம்பரம் ரவிவர்மாவிடமிருந்து அந்த
ஒடிந்து நொருங்கும் நிலையிலிருந்த
மூலப்பிரதியை பெற்று பதிப்பித்திருக்கிறார் ராஜஶ்ரீகாந்தன். 2004 இல் இந்த
நூல் எமக்கு வரவாகின்றது.
மேரி
மெக்லியோட் பெத்யூன் தொடர்பாக
ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் கிடைத்திருக்கும் ஆவணங்கள் சான்றாதாரங்கள் மற்றும்
ஒளிப்படங்கள் அனைத்தையும் உசாத்துணையாகக்கொண்டு சென்னையில் வசிக்கும்
கமலாலயன், வாசல் பதிப்பகம் ஊடாக உனக்குப்படிக்கத்தெரியாது நூலை 2011 இல் வரவாக்கியிருக்கிறார்.
மேரியின்
வாழ்வில் அவளது கனவுகளை நனவாக்க பலர் வருவதுபோன்று சூரனின் வாழ்விலும் பலர்
வருகின்றனர். இருவருமே சவால்களையும் சந்திக்கின்றனர்.
தாய்தோனா என்ற
பிரதேசத்தில் கறுப்பினக்குழந்தைகளுக்கு ஒரு பாடசாலையை அமைப்பதற்காக மேரிக்கு
கிடைத்ததோ அங்கிருந்த கடற்கரையில் பொது மக்கள் குப்பைகொட்டும் இடம்தான். கையில்
ஒரு டொலர் 50 சதத்துடன்தான் அந்தப்பணியை தொடங்கியிருக்கிறார்.
சுவாமி
ஞானப்பிரகாசருடன் நேரிலும் கடிதம் மூலமும் வாதாடும் சூரனை வழியில் சந்திக்கும் சில
மேல்சாதியினர், " எங்கை பார்ப்போம்... சித்தமணி வைத்தியன்ரை
சைவப்பள்ளிக்கூடத்துக்குள்ளே போ பார்ப்போம்" என்று சவால் விடுகின்றனர்.
"உனக்குப்படிக்கத்தெரியாது" என்று மேரியிடம் சொன்னவளோ ஒரு ஒரு வெள்ளையினச்சிறுமி. அது அவளது சூழல்
அவளிடம் உருவாக்கிய அறியாமை என்று கருதினாலும்,
வடமராட்சியில் படித்த மேல்தட்டு வர்க்க பெரியமனிதர்கள் , " எங்கே
உன்னால் எங்கள் பள்ளிக்கு வரமுடியுமா..? எனக்கேட்டிருப்பதானது அறியாமை அல்ல
ஆணவம்தான்.
இத்தனைக்கும்
அமெரிக்க மேரியைப்போன்று ஆரம்பக்கல்வி மறுக்கப்பட்டவர் அல்ல சூரன். இவர் தனது
ஐந்தாம் வயதில் தமது வீட்டருகேயுள்ள நுகவிலென்றழைக்கப்படும் உவெல்சியன் மிஷன்
பாடசாலையில் கற்றவர். அங்கு ஐந்தாம் வகுப்பு சித்தியடைந்திருக்கிறார்.
அதன்பின்னர், கரவெட்டி மேற்கிலும் கிழக்கிலும் மேல்வகுப்புகள் இருந்தும் அவரது
சமூகப்பிள்ளைகள் உள்ளே புகமுடியாது, கல்வியை நிறுத்தியிருக்கிறார்.
பல
பால்யகால விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்டிருந்த சூரன், வகைவகையான பட்டங்கள் பறக்கவிடுவதிலும் தேர்ந்த கலைஞனாக
மிளிர்ந்திருக்கிறார். தச்சுத்தொழிலும் தேர்ச்சிபெற்று ஆலயங்களுக்கு சப்பரம்
செய்வது முதல், மரத்தில் உருவச்சிலை வடிக்கும் கலையும் கைவறப்பெற்றிருக்கிறார்.
இருபத்திரண்டு
வயதில் மாமிசம் உண்பதை
தவிர்த்திருக்கிறார். சைவசமயியானதன் பின்னரும், கரவெட்டி தேவமாதா கோயிலுக்கு
மாதாவின் சிலை வைப்பதற்கு அழகான சுருவக்கூடு செய்துகொடுத்துள்ளார். ஆனால்,
சூரன்தான் அதனைச்செய்து தந்திருப்பதாக வெளியில் தெரியவேண்டாம் என்று
சொல்லியிருக்கிறார் ஒரு கிறிஸ்தவ வேளாளர்.
எப்படி
இருக்கிறது இந்தக்கதை...?
எனக்கு
இந்தப்பக்கத்தை படித்தபோது, " மேல்சாதி தாய்க்கு பால் சுரப்பது வற்றியதும்,
வீட்டு வேலைக்கு வரும் அடிநிலைப்பெண் அவள் குழந்தைக்கு பாலூட்டிய கதையை"
மூத்த எழுத்தாளர் கே. டானியல் முன்பே சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது. ஆனால்,
அந்தப்பெண்தான் பாலூட்டியது என்ற தகவல் வெளியே தெரியக்கூடாது அந்த சீமாட்டிக்கு!
இவ்வாறு
அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சூரன் வந்திருந்தாலும் குறைந்தபட்சம்
ஐந்தாம்வகுப்புவரையுமாவது ஒரு பாடசாலைக்குச்செல்லும் சந்தர்ப்பம் அவருக்கு
வாய்த்திருந்திருக்கிறது.
ஆனால்,
அமெரிக்க கறுப்பின அடிமைக்கு பிறந்த குழந்தை மேரிக்கு அந்த வாய்ப்பு தொடக்கத்தில்
மறுக்கப்பட்டிருந்தாலும், எதிர்பாராதவகையில், மிஸ்வில்சன் என்ற வெள்ளை இனத்துப் பெண்ணொருத்தி பருத்தி வயலுக்கு செல்லத் தயாராய் நின்ற
அந்த அடிமைகளின் முன்னால் வந்து "
இங்குள்ள கறுப்பினக் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றை அமைத்து பாடம் சொல்லிக்கொடுக்க வந்துள்ள ஆசிரியர் என்று தன்னை அறிமுகப்படுத்துகிறாள்.
அன்றிலிருந்து
மேரியின் கனவு நனவாகத்தொடங்குகிறது. ஆர்வத்தோடு பாடசாலை செல்கிறாள். கிடைத்த
வாய்ப்பை நன்கு பயன்படுத்துகிறாள். அவள் வீட்டில் பருத்திக்காட்டில் உழைப்பதற்கு
அவர்களுக்கு உதவிய குதிரையும் இறக்கிறது. அதனால் மற்றும் ஒரு குதிரை வாங்குவதற்கு
பணம் தேவை. அந்தத்தேவையை பூர்த்தி செய்தால் மேரியின் மேல் படிப்பு தடைப்படும்.
மீண்டும்
அவள் வாழ்வில் வசந்தம் வீசுகிறது.
எதிர்பாராத
நிகழ்வுகளின் சங்கமம்தானே வாழ்க்கை!
மற்றும்
ஒரு வெள்ளை இனமாது அவளது கல்விக்கான செலவுகளை பொறுப்பேற்க முன்வருகிறாள். வடகரோலினாவில் இயங்கும்
கறுப்பினக்குழந்தைகளுக்காக இயங்கும்
ஒரு கல்லூரிக்கு மேரி வருகிறார்.
அங்கு
தனது அயராத முயற்சியால் படித்து முடித்து
1907 ஆம் ஆண்டில் கறுப்பினக்குழந்தைகளுக்காகவே ஒரு பாடசாலையை தொடங்குகிறார்.
எனினும் அதற்காக அவருக்கு கிடைத்த இடமோ ஒரு குப்பைமேடுதான். குப்பையிலும்
குண்டுமணி துளிர்க்கும் என்பார்கள்.
அவ்வாறு
மேரியின் பாடசாலையின் வளர்ச்சிக்காக பலரிடம் கையேந்தி அதனை முன்னேற்றுகிறார்.
எங்கள்
சூரனும் முதலில் தனது சமூகத்துப்பிள்ளைகளுக்காக ஒரு கொட்டில் பாடசாலையை
உருவாக்குகிறார். அதனைக்கட்டுவதற்கு சிலர் பனைமரங்கள் தந்துதவுகிறார்கள்.
பதினெட்டு முழத்தில் ஓர் கொட்டகை அமைத்து இரண்டடி உயரத்தில் குட்டிச்சிவரும்
வைத்து எட்டு வாங்கு ஒரு மேசையுடன் அந்தப்பாடசாலை தொடங்குகிறது. உள்ளுரிலும்
வெளியூரிலும் இருக்கும் அன்பர்கள் உதவுகின்றனர்.
தனது
பாடசாலைக்கும் தேவைகள் இருப்பதனால் மேரி
பெத்யூன் பல பரோபகாரிகளிடம் கையேந்துகிறார். அத்துடன் ரயில் பாதையில் வேலை
செய்யும் தொழிலாளர்களுக்கு சாப்பாடு சமைத்துக்கொடுத்து அதில் கிடைக்கும் சொற்ப
வருமானத்தையும் தனது பாடசாலையின் தேவைக்கு பயன்படுத்துகிறார்.
ஜேம்ஸ் எம். காம்பிள் என்ற பிரமுகரை ஒரு
செய்தித்தாளின் ஊடாக அறிந்துகொண்டு அவரிடம் உதவி கேட்டுச்செல்கிறார் மேரி. அவரோ
மேரியின் பாடசாலையை பார்க்கவேண்டும் எனச்சொல்லி ஒரு நாள் வருகிறார். வந்தவர் " எங்கே உமது பாடசாலை?"
எனக்கேட்கிறார். "
"அது
எனது மனதில் இருக்கிறது" எனச்சொல்லி குப்பைமேட்டின்
மீது உருவாக்கப்பட்ட அந்த மோசமான கட்டிடத்தை காண்பிக்கிறார் மேரி. அங்கே ஆசிரியரின் மேசையாக இருப்பது ஒரு
மரப்பெட்டிதான். கருணையுள்ளம் கொண்ட மனிதரான காம்பிள், பல வழிகளில் உதவுகிறார். அந்தச் சந்திப்பு முதல் அங்கு "பார்வையாளர்
தினம்" அனுசரிக்கவும் மேரி ஏற்பாடு செய்கிறார்.
சிறுதுளி
பெருவெள்ளமாக அந்தப்பாடசாலை முன்னேறுகிறது.
இவ்வாறு
தானும் வளர்ந்து தனது இனத்துக்குழந்தைகளையும் கல்வியில் வளர்த்து அவர்கள் வாழ்வில்
விடிவெள்ளியாகத்தோன்றிய மேரி மெக்லியோட்
பெத்யூன், பின்னாளில் பெத்யூன் குக்மேன் கல்லூரியையும் அமைத்து வழிநடத்தி, அதனை பல்கலைக் கழகமாகவும் வளர்த்தெடுத்தார்.
அவர் ஒரு குப்பை மேட்டில் விதைத்த விதை விருட்சமாய் எழுந்துநிற்கிறது, 1955 மறைந்த அவரது நினைவுகளுடன்.
தேவரையாளி
இந்துக்கல்லூரியின் நிறுவனர் பெரியார் சூரனின் சரிதையிலிருந்து, மேரிபெத்யூனின்
வாழ்க்கையை இனம்காண்பதா, அல்லது மேரி பெத்யூனின் வாழ்விலிருந்து பெரியார் சூரனை
அடையாளம் காண்பதா என்ற சிந்தனை இரண்டு நூல்களையும் மீண்டும் மீண்டும் வாசித்தபோது
வந்தது.
அதற்காகவே
குறிப்பிட்ட வாசகர் வட்டத்தின் சந்திப்புக்குச்செல்லும்போது சூரன் சுயசரிதையையும்
எடுத்துச்சென்று வந்திருந்தவர்களிடம் அறிமுகப்படுத்தினேன்.
அங்கிருந்தவர்களில்
அதிகமானவர்கள் தமிழகத்தைச்சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இலங்கையின் வடமராட்சியில்
பிறந்த பிரபாகரனை தெரிந்தளவுக்கு வடமராட்சியும் தெரியாது. அதனால் சூரனையும்
தெரிந்திருக்க நியாயமில்லை.
சூரனின்
பேரன் ஏகாம்பரம் ரவிவர்மாவும் ராஜஶ்ரீகாந்தனும் இல்லையென்றால் நாமும்
அந்தப்பெரியாரின் வாழ்வையும் போராட்டங்களையும் பணிகளையும் சாதனைகளையும்
தெரிந்துகொண்டிருந்திருக்கமாட்டோம்.
இந்நூலில்
" இரட்டை முட்கிரீடங்களைச் சுமந்த
நமது பெரியார் சூரன் எனும் சுந்தர நாயகன்" என்னும் தலைப்பில் ராஜஶ்ரீகாந்தன்
எழுதியிருக்கும் முன்னுரையின் வாயிலாக தேவரையாளி இந்துக்கல்லூரியில் வெளியிடப்பட்ட
சூரன் நினைவுமலர், கல்கி எழுதியிருக்கும் இலங்கையில் இரண்டு வாரம் தொடர்கட்டுரை,
தெணியான் எழுதியிருக்கும் கட்டுரைகள், பேராசிரியர் சிவலிங்கராஜா , கவிஞர் காரை செ.
சுந்தரம்பிள்ளை ஆகியோரின் ஆய்வு நூல்கள், பேராசிரியர் கா. சிவத்தம்பியின்
கட்டுரைகள், டானியல் தனது தண்ணீர் நாவலிலும் மல்லிகை ஜீவா தனது சுயசரிதையிலும்,
த.கலாமணி " எம்மவர்கள்"
கட்டுரைத்தொகுதியிலும் சூரனைப்பற்றி பதிவுசெய்திருக்கும் தகவல்களையும்
தெரிந்துகொள்கின்றோம்.
சூரன்
ஒரு போராளியாகவும் திகழ்ந்திருக்கும் செய்தியும் தெரியவருகிறது.
வதிரியில்
அண்ணமார் கோவிலில் நடந்த அடுபலியிடுதலை தடுப்பதற்காக பலிபீடத்தின் மீது தனது தலையை
வைத்து, ஆட்டை வெட்டுவதற்கு முன்னர் தனது தலையை வெட்டுங்கள் என்று குரல் எழுப்பி
மிருக பலியிடலை தடுத்திருக்கிறார்.
மேரி
பெத்யூன் தன்னை ஒரு போராளியாகக் காண்பிக்காமல் அன்றைய சூழலை புரிந்துகொண்டு
வெள்ளையினத்தவரில் நிறவேற்றுமை பாராட்டாத கருணை உள்ளங்கொண்டவர்களுடன்
இணக்கமாகப்பேசி காரியங்களை சாதித்திருக்கிறார்.
ஆனால்,
அன்றைய வடமராட்சி சூழலின் பின்னணியில்
ஒருபுறம் சாதுரியமாக நடந்த மதமாற்றம் - மறுபுறம் மேட்டுக்குடி வெள்ளாளரின்
அடக்கு முறை- இவை இரண்டுக்கும் இடையே
இரட்டை முட்கிரீடங்களை சுமந்துகொண்டு களமாடியிருக்கிறார்.
அமெரிக்காவில்
மெரிபெத்யூனின் பெயரைச்சொல்லும் பெத்யூன் குக்மேன் பல்கலைக்கழகம் போன்று , இலங்கையில்
வடமராட்சியில் தேவரையாளி இந்துக்கல்லூரி பெரியார் சூரனின்
பெயரைச்சொல்லிக்கொண்டிருக்கிறது.
இந்த
இரண்டு நூல்களையும் மீண்டும் படித்து முடித்தபோது எனக்கு மெல்பனில் பல
வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நடன அரங்காற்றுகை நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
அதில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த
நடனக்கலைஞர்கள் அனைவரும் பார்வையை பிறவியிலேயே இழந்தவர்கள்.
அதியற்புதமாக
அபிநயம் பிடித்து ஆடி ரசிகர்களை கவர்ந்தார்கள்.
செவிப்புலன் மூலம் ராகம், தாளம் அறிந்து
அதற்கேற்றவாறு அபிநயத்தோடு ஆடினார்கள்.
நாம் வியந்தோம். இறுதியில்
அவர்களுக்கு பரிசுகள் வழங்கும்வேளை வந்தபோது அவர்கள் ஒவ்வொருவரையும் கைத்தாங்கலாக
அழைத்துவந்து மேடையில் நிறுத்தி பரிசுகளை கொடுத்தார்கள்.
அவர்கள் ஆடும்போது எந்த இடத்தில்
நிற்கவேண்டும். எப்போது எத்தகைய வடிவமும் அபிநயமும் காண்பிக்கவேண்டும் முதலான
சங்கதிகள் அனைத்தும் பயிற்சியினால் பெற்றவை.
அவர்களில் ஒரு கலைஞர் தனது ஏற்புரையில்:
" வாழ்க்கையில் மூன்று விடயங்கள் முக்கியம். அவை, கனவு (Dream) - போராட்டம் (Struggle) - வெற்றி (
Success). எனச்சொன்னார். இவை மூன்றையும் நாம் மேரிபெத்யூனிலும் பெரியார்
சூரனிலும் காண்கின்றோம்.
(நன்றி: இலங்கை ஜீவநதி சித்திரை
இதழ்)
letchumananm@gmail.com
No comments:
Post a Comment