.
""சுராங்கனி"
என்ற பைலாப்பாடலுக்கு நாற்பது வயசுக்கு மேலிருக்கும் ஆனால் அந்தப் பாடலை
எங்கே கேட்டாலும் நான்கு நாட்களுக்கு முன் பிறந்த குழந்தை கூடத் தொட்டிலில்
இருந்து பைலா ஆட்டம் ஆடும். அந்த அளவுக்குப் பெரும் புகழ்பெற்ற இந்தப்
பாட்டுக்குச் சொந்தக்காரர் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E.மனோகரன் அவர்கள்.

பாடகராக,
நடிகராக துடிப்போடு உலகெங்கும் ஓடியோடி ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில்
மிதக்கவைக்கும் தன் இசைப்பயணத்தைத் தொடர்ந்து வரும் மனோகரன் அவர்கள்
அவுஸ்திரேலியாவுக்குப் பல தடவைகள் வந்திருந்தாலும் எட்ட இருந்து அவரை
ரசித்துப் பார்க்கும் கடைக்கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். 2010 இல்
அவுஸ்திரேலியாவின் பேர்த், மெல்பன் நகரங்களோடு சிட்னிக்கும் வந்து தன்
பைலாப்பாடல்களால் கலக்க வந்திருந்த இவரை நேற்று வானொலிக் கலையகத்தில் நேரே
சந்தித்துப் பேசி மகிழ ஒரு வாய்ப்புக் கிட்டியது.
ஆண்டாண்டுகாலமாகப்
பழகியவர் போன்று இயல்பாகப் பேசி , நகைச்சுவைத்துக் கலகலப்பான ஒரு மாலை
நேரத்தை வானொலி ரசிகர்களுக்கும் எங்களுக்கும் அவர் ஏற்படுத்தி விட்டார்.
நெடு நாள் ஆசையாக அவரை வானொலிப் பேட்டி காணும் ஆசையில் ஒரு பாதியாக இந்தப்
பேட்டி அமைந்து விட்டது.
அவர்
தந்த இந்த கலகல பேட்டியைக் கேட்டுப்பாருங்கள், பேச்சோடு பாடியும் ஆடியும்,
தன் ரசிகர்களோடு பழைய நினைவுகளை இரைமீட்டும் ஒரு பைலாப் பேட்டியாக அமைந்து
விட்டது இது.
பேட்டி முடிந்ததும் “என்ர குஞ்சு எவ்வளவு வடிவாத் தமிழ் கதைக்குது” என்று கன்னத்தைக் கிள்ளி விட்டார். அந்தப் பாசத்தை மறவேன்.
இதற்கு
முன் தொண்ணூறுகளில் மெல்பர்னில் அவரை ரசிகனாகச் சந்தித்து ஓட்டோகிராப்
வாங்கிய போது பேரைக் கேட்டு விட்டு “தமிழர்களைக் காக்கும் பெயருக்கு
வாழ்த்து” என்று அவர் எழுதித் தந்ததை இன்னமும் கைப்பட வைத்திருக்கிறேன்.
போய் வாருங்கள் ஏ.ஈ.மனோகரன் அண்ணா 
A.E.மனோகரன் அவர்களது பிரபலமான பாடல்களில் சில
சுராங்கனி சுராங்கனி
அன்பு மச்சாளே எந்தன் ஆசை மச்சாளே
சில சில பாவையர்
மால்மருகா எழில் வேல்முருகா நீயே
பிரண்டி, பியர், விஸ்கி போடாதே
பறந்து வந்து பாடுகின்றேன்
சிறு சின்னஞ்சிறிய என் வயதினிலே
No comments:
Post a Comment