ஆவலுடன் செயற்படுவோம் ! - எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண்


இலக்கியமும் இலக்கணமும்
     இங்கிதமாய் அமைந்தமொழி
வழக்கொழிந்து போகாமல்
     வாழுகின்ற தெங்கள்மொழி
நிலத்திலுள்ள மாந்தரெல்லாம்
      நிம்மதியாய் வாழுதற்கு
நீதியொடு வாழ்வியலை
      நீக்கமறச் சொன்னமொழி  !

அகத்திணையும் புறத்திணையும்
     அமைகின்ற வகையினிலே
ஆழமாய் கருத்துக்களை
       அனைவருக்கும் சொன்னமொழி
நிலத்தியல்பை வாழ்க்கையொடு
      இணைத்திடவே இலக்கியத்தை
நெஞ்சமெலாம் பதியவைக்க
       நிறையவே தந்தமொழி  !

பக்தியினை இலக்கியமாய்
     பாரினிலே தந்தமொழி
பலநாட்டார் வியந்துநிற்க
    குறள்தந்த பசுமைமொழி
திருவாசகத் தேனை
    உருகிற்குத்  தந்தமொழி
திசையெல்லாம் புகழ்பரப்பி
      நிற்குதிப்போ பெருமையுடன் !

ஆண்டவனின் அருள்பெற்ற
    அன்னைத் தமிழ்மொழியை
அரியணையில் ஏற்றிவைத்து
     ஆட்சிமொழி ஆக்கவேண்டும்
அழகுதமிழ் உலகெங்கும்
     அனைவரிடம் சேர்வதற்கு
ஆர்வமுடன் இணைந்தொன்றாய்
    ஆவலுடன்  செயற்படுவோம் !


No comments: