உலகச் செய்திகள்


சிரியாவில் 45 இடங்களில் துருக்கிப் படையினர் தாக்குதல்!!!

தாய்லாந்து குண்டு வெடிப்பில் மூவர் பலி!!!

வடகொரியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்!!!




சிரியாவில் 45 இடங்களில் துருக்கிப் படையினர் தாக்குதல்!!!

22/01/2018 சிரியாவிலுள்ள குர்திஷ் இராணுவக் குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதலின் ஒருபகுதியாக வடக்கு சிரியாவினுள் துருக்கியின் தரைப்படையினர்  நுழைந்து  தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வை.ஜி.பி. என்று அறியப்படும் குர்திஷ் குழு துருக்கியின் தென் எல்லையிலுள்ள அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கிவருகின்றது. இப்பிராந்தியத்திலிருந்து குர்திஷ் இராணுவக் குழுவை வெளியேற்றும் நோக்கில் துருக்கி  இராணுவம் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
மேற்படி பிராந்தியத்தின் 45 இடங்களில் தரைவழி மற்றும் விமானத் தாக்குதல்களை நேற்று  நடத்தியதாகத் துருக்கி இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
குர்திஷ் இராணுவக் குழுவை பயங்கரவாதியென்று கூறிவரும் துருக்கி தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் குர்திஷ் இராணுவக் குழுவினருக்குத் தொடர்புள்ளதாகவும் நம்புகிறது.
இதேவேளை தனது பகுதியிலிருந்து துருக்கியப் படையினரை விரட்டியுள்ளதாகக் கூறியுள்ள குர்திஷ் குழுவினர் இதற்குப் பதிலாக துருக்கி எல்லைப் பகுதியில் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக மோதலில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில் குர்திஷ் இராணுவக் குழு முக்கிய பகுதியாக உள்ளது.
குர்திஷ் குழுவை மிக விரைவாக ஒழிக்க துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் உறுதியளித்துள்ளார். ஆனால்இ பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுக்கத் துருக்கி தனது படையினரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.  நன்றி வீரகேசரி










தாய்லாந்து குண்டு வெடிப்பில் மூவர் பலி!!!

22/01/2018 தாய்லாந்தின் யால மாகாணத்திலுள்ள சந்தையில் இன்று இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளுடன் பொருத்தி வைக்கப்பட்ட குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ள பொலிஸார், இந்தக் குண்டு வெடிப்புக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லையெனவும் கூறியுள்ளனர்.  நன்றி வீரகேசரி









வடகொரியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டம்!!!

22/01/2018 தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா சார்பான குழுவினர் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
தென்கொரியாவின் தலைநகர் சியோலிலுள்ள மத்திய ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
தென்கொரிய பழமைவாத விமர்சகர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் உருவப்படத்தை தீயிட்டு எரித்துள்ளனர்.
தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்க வடகொரியா விரும்பிய நிலையில் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் கலந்துரையாடல் நடைபெற்றுவருவதுடன் ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் வடகொரியா சார்பாக 22 விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளதுடன், ஒத்திகை பார்ப்பதற்காக வடகொரியா சார்பான கலைக்குழுவொன்று தென்கொரியாவுக்கு நேற்று வருகை தந்துள்ளது.
இச்சூழ்நிலையிலேயே குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் வடகொரியா சார்பான குழுவினர் பங்கேற்க எதிர்ப்புத் தெரிவித்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.  நன்றி வீரகேசரி







No comments: