தமிழ் சினிமா


அறம்


Arammதமிழ் சினிமாவே எப்போதும் ஹீரோக்களின் பிடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் பல வருடம் அப்படித்தான் இருக்கும் போல. ஆனால், அத்தனை ஹீரோக்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். சோலோ ஹீரோயினாக மாயா, டோரா என்று மிரட்டிய இவர் அறத்திலும் மிரட்டினாரா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே அதிகாரத்தை மீறியதற்காக நயன்தாரா மீது ஒரு விசாரணை நடக்கின்றது. நயன்தாரா தன் விளக்கத்தை சொல்வதில் இருந்து படம் தொடங்குகின்றது.
சென்னைக்கு வெளியே தண்ணீருக்கே பல கிலோ மீட்டர் சென்று எடுக்கும் நிலையில் ஒரு கிராமம். ஒரு வசதியும் இல்லாமல் இருக்கும் இடத்தில் நயன்தாரா கலெக்டராக வருகின்றார்.
அந்த ஊரில் இருக்கும் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்துவிடுகின்றது. அதை தொடர்ந்து அந்த குழந்தையை வெளியே எடுக்க நயன்தாரா மற்றும் அந்த ஊர் மக்கள் எடுக்கும் பரபரப்பான முடிவே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

நயன்தாரா ஒன் மேன் ஆர்மி என்று சொல்வது போல் ஒன் Women ஆர்மி என்று சொல்லலாம், ஒவ்வொரு காட்சிகளிலும் மிரட்டுகின்றார். மக்களுக்காக தான் அதிகாரிகள், நாம் அவர்களுக்கு மரியாதை கொடுத்தால், அவர்கள் நமக்கு மரியாதை கொடுப்பார்கள் என்று இவர் பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்கில் விசில் பறக்கின்றது. இதே வேகத்தில் களத்திற்கு வந்தால் வேறு இடமும் நயன்தாராவிற்கு காத்திருக்கின்றது.
ராமசந்திரன் துரைராஜை தமிழ் சினிமா இன்னும் பல படங்களில் பயன்படுத்த வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும் இப்படத்தை பார்த்த பிறகு. அத்தனை யதார்த்தமாக தன் குழந்தையை இழுந்து தவிக்கும் காட்சியில் நடித்து அசத்தியுள்ளார். அதைவிட இவருடைய மனைவியாக வந்தவர் மிகவும் கவனிக்க வைக்கின்றார்.
காக்கா முட்டை சிறுவர்களும் இதில் நடித்துள்ளனர், அந்த படத்திற்கு பிறகு ஒரு தரமான கதாபாத்திரம். படத்தில் அரசாங்கத்திற்கு சாட்டையடியாக பல காட்சிகள் உள்ளது. ராக்கெட் எதற்கு விடுகின்றோம் என்றே தெரியாது, ஆனால், ராக்கெட் விட்டால் நாம் வல்லரசு ஆகிவிடுவோம் என்று நம்பும் மக்களை ஒரு பைட்ஸ் வடிவில் காட்டியது சூப்பர்.
இந்தியாவில் ஆழ்துளை கிணற்றால் பல குழந்தைகள் இறந்துள்ளனர். இதில் கணக்கில் வந்தது ஒரு சில தான், ரூ 800 கோடி செலவில் ராக்கேட் விடும் நாம், இன்னும் ஆழ்துளையில் விழுந்த குழந்தையை காப்பாற்ற கையிறை பயன்படுத்துகின்றோம் என்பதை ஒரு கேரக்டர் கிண்டலாக கேட்பது நகைச்சுவை என்றாலும் யோசிக்க வேண்டிய விஷயம்.
படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை குழந்தைக்கு என்ன ஆகும், எடுப்பார்களா, மாட்டார்களா? என ஆடியன்ஸிடமும் பதட்டத்தை உருவாக்கியதில் கோபி கண்டிப்பாக ஒரு இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார். அதே நேரத்தில் குழந்தைக்கு ஆக்சிஜன் குறைகின்றதோ, இல்லையோ என்று பார்க்கும் நமக்கும் குறைந்துவிடும் போல, அந்த அளவிற்கு காட்சிகளை படம்பிடித்துள்ளனர்.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் வறண்ட கிராமத்தை கண்முன் அப்படியே கொண்டு வந்துள்ளார், ஜிப்ரானின் இசையும் ரசிக்க வைக்கின்றது. பாடல்கள் என்று தனியே இல்லாமல் படத்தோடு வருவது கூடுதல் பலம்.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம் மற்றும் வசனங்கள்.
நயன்தாரா இவரை நம்பி இனி எத்தனை கோடி பட்ஜெட் படங்கள் வேண்டுமானாலும் கொடுக்கலாம், அப்படி ஒரு ஸ்கிரீன் பிரசன்ஸ்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, ஜிப்ரானின் பின்னணி இசை.
இவர்களை எல்லாம் விட ராமசந்திரன் அவருடைய மனைவி மற்றும் ஊர் மக்கள் எல்லோரின் யதார்த்த நடிப்பு.

பல்ப்ஸ்

சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.


மொத்தத்தில் இன்றைய ‘பவர் பாலிட்டிக்ஸுக்கு’ ஒரு சாட்டையடி, அறம் வெல்லும்.


நன்றி  CineUlagam


No comments: