முறையாமோ ! - எம் . ஜெயராமசர்மா


       தோல்கொடுத்துப் பால்கொடுத்து தோழ்கொடுக்கும் விலங்குகளை
        வாழ்வெல்லாம் மனிதவினம் வசைபாடல் முறையாமோ 
        விலங்குகளோ தம்பாட்டில் இருக்கின்ற வேளைதனில்
        வேணுமென்று மனிதன்சென்று வீண்தொல்லை கொடுப்பதேனோ ! 

       பசுவந்து தன்பாலை கறவென்று சொன்னதில்லை
       மான்வந்து தனைக்கொன்று தின்னென்று சொன்னதில்லை
       ஆனைவந்து மனிதனிடம் அடிமையாக்கச் சொன்னதுண்டா 
       ஆனாலும் மனிதன்சென்று அத்தனையும் செய்கின்றான் !

       காட்டிலே வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு வந்தபின்பும் 
       காட்டையே அழிப்பதற்குக் காரணந்தான் தெரியவில்லை
       காட்டிலே இருக்கின்ற விலங்குகளை அழித்தொழிக்க 
       நாட்டிலே இருப்பார்க்கு யார்கொடுத்தார் அதிகாரம் ! 

      அரசியலும் தெரியாது ஆட்சியிலும் ஆசையில்லை 
      அலைபாயும் மனங்கூட அவற்றுக்குக் கிடையாது 
      நிலபுலனும் சேர்க்காது நிம்மதியும் இழக்காது
      வனமதிலே தன்பாட்டில் வசிக்கிறது விலங்கினமோ ! 


      சிங்கத்தைப் பிடிக்கின்றான் சிறுத்தையையும் பிடிக்கின்றான்
      வெங்கரிகள் தனைநாளும் விரட்டியே பிடிக்கின்றான்
      காட்டிலே இருப்பவற்றை நாட்டுக்கே கொண்டுவந்து
      காட்சிப் பொருளாக்கிக் காசெடுத்து நிற்கின்றான் !

      வேட்டையெனும் பெயராலே காட்டையே கலக்குகிறீர்
      விலங்குகளைக் கொன்றுவிட்டு வீறாப்பும் பேசுகிறீர்
      காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களே 
      நாட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாட யார்வருவார் ! 

     மிருகவதை கூடாது எனச்சொல்லும் சட்டமெலாம்
     வேட்டையாடும் வெறியர்களை விட்டுவைத்தல் எப்படியோ
     காட்டைவிட்டு வந்தபின்பும் காருண்யம் தொலைத்துவிடின் 
     நாட்டிலே வாழுவதில் நம்வாழ்வு உயிர்ப்பெறுமா ! 

    குரங்கென்றும் கழுதையென்றும் கரடியென்றும் திட்டுகிறோம்
    நாயென்றும் மாடென்றும் நரியென்றும் நகைக்கின்றோம் 
    மிருகமாய் இருந்தாலும் இவைதிட்டை நினைப்பதுண்டா
    மனிதராய் இருக்கும்நாம் திட்டுவது முறையாமோ ! 

image1.JPG
எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் ... அவுஸ்திரேலியா

       
      




      



No comments: